Friday, 9 September 2016

காதல்...காமம். (பகுதி ஐந்து.)

தல்லாகுளம் போலீஸ் நிலையம்.
இன்ஸ்பெக்டர் ராம்குமாருக்கு எதிர்பக்கமாக  சுவரோரம் நின்றபடி  வெள்ளியங்கிரி!

மனசுக்குள் டிராக்டர் ஓடினாலும் அதை மறைக்க எவ்வளவோ முயற்சிக்கிறான். முடியவில்லை. வேர்க்கிது.வேட்டியால் துடைத்துக் கொண்டான்.

ராம்குமார் கவனிக்காதது போல் காட்டிக்கொள்கிறார். அவரின் மனசு தங்கராசுவின் தற்கொலைக்கு இவன் எப்படி  காரணமாக இருக்கமுடியும்  என்பதை பலவிதமாக படம் பிடிக்கிறது. ஆனால் அந்த கோணத்தில்  அவரால்  விசாரிக்க முடியாது. அவன் குற்றம்  செய்தான் என்பதற்கு  எதை மோடிவ்  ஆக சொல்லமுடியும்?

''ஏலேய்! ஏன்டா இப்படி வேர்க்கிது.. அடிக்க கிடிக்க மாட்டேன்.உனக்கும் தங்கராசுக்கும்  என்ன பிரச்னை. அவங்கூட அடிக்கடி சண்ட போடுவியாம்ல?"

போட்டு வாங்கப் பார்த்தார்.

"அப்படியெல்லாம் இல்ல சார்! அவங்கூட சண்ட போட்டதில்ல. யாரோ  மூட்டி விட்ருக்காங்க.அத வச்சுக்கிட்டு  நீங்க கேக்கிறிங்க! அவன் எனக்காக எவ்ளோவோ விட்டுக் கொடுத்திருக்கான்.காசு பணம் பாக்கமாட்டான். நல்லவன் சார்.டூர் போனா என்னோட செலவெல்லாம் அவந்தான் பாத்துப்பான்.அவங்க வீட்ல நானும் செல்லப் பிள்ளயாதான் வளந்தேன்."

"நீதான் அவனோட தற்கொலைக்கு  காரணமாக இருந்திருக்கே! ஸ்ட்ராங்  எவிடென்ஸ்  இருக்கு. ஒழுங்கா ஒத்துக்கிட்டேன்னா  சின்னதா கேஸ போட்டு  தண்டனையை  கொறைக்கலாம்.இல்லேன்னா அடி உத  வாங்கி  வீணா ஒடம்ப ........!"

 "சத்தியமா......  எங்காத்தா மேல சத்தியமா சொல்றேன்   எனக்கும் அவன் சாவுக்கும்  சம்பந்தம் இல்ல எஜமான்!"

அவனது பயம் 'எஜமான்' என சொல்ல வைத்ததோ என்னவோ! படக் கென இன்ஸ்பெக்டர் காலில்  விழுகிறான்

'ச்சிய்! நாயே! எந்திரிடா! ஒன்னமாதிரி எத்தன கேடிப்பயலுகள  பாத்திருப்பேன்.
எங்கிட்டேயே ட்ராமா  போடுறியா? அடிச்சு சாவடிச்சு  ஆனை விழுந்தான் பள்ளத்துல வீசிருவேன். என்ன பொருத்தவர  இன்னொரு  சூசைட் கேஸ்.! மொத  ராத்திரி முடிஞ்சதும்  அவன் சூசைட் பண்றதுக்கு முன்னாடி அவன் உங்கூடதான் பேசிருக்கான்.என்ன சொன்னாங்கிறத மறைக்காம  சொல்லிடு!"

இன்ஸ்பெக்டர் ஒரு ஊகத்துலதான் அப்படி கேள்வியை போட்டிருக்கிறார் என்பது  அவனுக்கு தெரியவில்லை. தன்னை எப்படியாவது மாட்டவைக்கப் பார்க்கிறார் என்பது மட்டும் புரிகிறது.

ராம்குமாரும் அதுவரை அவன் மீது சந்தேகப்படவில்லை. அவரும் தனது திறமைகளை காட்டி எப்படியாவது  ஒரு க்ளு கிடைக்காதா என்றுதான் அடிக்கிறார். விசாரிக்கிறார்.

அப்போதுதான் அங்கு வந்த எஸ்.ஐ. சிதம்பரம் ஒரு வெள்ளைத்தாளை நீட்டினார்.

அதைப் படித்ததும்  ராம்குமாருக்கு கடுமையான கோபம்!

வெள்ளியங்கிரிக்கு. ஓங்கி விட்டார் ஒரு உதை!

'இந்த நாயை லீடிங் செயின் போட்டு லாக்கப்பில் தள்ளுய்யா!"

உதை பட்டவனுக்கு  உலகமே  சுற்றுவதைப் போல் இருந்தது.


.

Wednesday, 7 September 2016

ஸ்ருதி, நயனுடன் போட்டியிடும் காஜல் அகர்வால்!

வால்  அறுந்தாலும் உயிர் வாழும்  பல்லி மாதிரி ஆகியிருக்கிறார் காஜல் அகர்வால்.!

எப்படியாவது மார்க்கெட்டை  நயன்தாராவுக்கு சமமாக கொண்டு செல்லவேண்டும் என்கிற  ஆசை அவருக்கு.! பாலிவுட்டில்  ஸ்ருதி ஹாசனை  வீழ்த்துகிற நோக்கத்துடன்  படை எடுத்துச் சென்ற  அவருக்கு பிரபல புத்தகம்  கேடயமாகி  இருக்கிறது.,அதனால்  வாலை இழந்து இருக்கிறார்.!

அரை நிர்வாணமாக  அட்டையில் பளபளக்கிறார். யார் கொடுத்த ஐடியாவோ தெரியவில்லை.

இப்போது  அவருக்கு பாலிவுட்டில் கை சரக்கை  காட்டிவிட வேண்டும் என்கிற ஆசைதான்  அதிகமாகி இருக்கிறது. பிகினியில் கலக்குவதற்கு  பாலிவுட்டிலா பஞ்சம்? இவரை விஞ்சுவதற்கு அழகிகள் அணிவகுத்து  நிற்கிறார்கள்.

ஆனால் காஜலை வைத்து  படம் எடுத்துக் கொண்டிருக்கிற  தமிழ்,தெலுங்கு  படத் தயாரிப்பாளர்கள்  'நாங்கள் என்ன பாவம் செய்தோம். எங்களுக்கும் அந்த  படுகவர்ச்சி காட்சியில் நடித்தாக வேண்டும் 'என்று நிபந்தனைகளை அள்ளிக் கொட்டியிருக்கிறார்கள்.

"ஆங்கில பத்திரிகையில் எந்த அளவுக்கு கவர்ச்சியை  கடை விரித்திருக்கிறிர்களோ  அதே அளவுக்கு சினிமாவிலும் நடிக்க வேண்டும்" என வற்புறுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.

அதை ஏற்றுக்கொண்டு  தமிழகத்தில் நடிக்க ஆரம்பித்தால்  அயிட்டம் டான்ஸ்  ஆடுகிற நடிகை என்கிற பெயர்தான் கிடைக்கும்  ஆபத்து இருக்கிறது.

என்ன செய்வது  ?

படு கவர்ச்சியை  பாலிவுட்டுக்கும் ,போர்த்திக் கொண்டு நடிப்பதை தமிழுக்கும் என  எல்லைக்கோடு  போட்டுக் கொள்ளலாமா  என யோச்சிப்பதாக சொல்கிறார்கள்.

தெலுங்கில் ஏற்கனவே  அயிட்டம் டான்ஸ் ஆடி அரை கோடி  சம்பளம் வாங்கிவிட்டதால்  அங்கு தனது நிபந்தனை  போணி ஆகாது என்பது  தெரியாதா? தமிழ் ரசிகன்தான்  ஏமாந்தவன் மிளகாய்  அரைக்க முடியும். ஏன் மண்டையில் தேங்காயே உடைத்தாலும் சும்மாதான் இருப்பான்.

Sunday, 4 September 2016

சூப்பர்ஸ்டார் கர்ணன்.அப்ப துரியோதனன் யாரு?

உலகமே  சினிமாவை சுத்தும் போது  நாமும்  சேந்து சுத்துனாதான் மருவாதி.! இல்லேன்னா  கூடைய போட்டு நம்மை  கவுத்திப் போட்ரும்!அதனால்தான் ஊரோடு நீயும் சேந்துக்கன்னு  எப்பவோ சில பெரிசுக சொல்லிட்டுப் போயிருக்கு, ஓலகத்தொடு ஒத்து போ!

ஒலகத்தில் உள்ள அழகிக  ஆயிரம் பேரை  அமெரிக்காவில்  உள்ள ஒரு பேப்பர் கணக்கு எடுத்திருக்கு, அதில என்ன  சிறப்புன்னா இந்தியாவை சேந்த ஒரு அழகியா  தீபிகா படுகோனே தான் செலக்ட்  ஆகியிருக்கு.

தமிழ்சினிமாவில் நாம்ப எவ்வளவோ பேரை நெனச்சு  ஜொள்ளு உட்ருக்கோம் பகல்லேயும் கனா கண்ட்ருக்கோம்.ஆனா வெள்ளைக்காரனுக்கு வடக்கத்தி பொண்ணுதான் ஒசத்தியா தெரிஞ்சிருக்கா! கஷ்டமா  இருக்குய்யா! நயன்தாரா  அழகியா தெரியலியா. காஜல தெரியலையா,அன்சிகா மொத்வானியை கூட  சேக்கலேங்கிரபோதுதான்  டவுட்டா இருக்கு,ஊழல் நடந்திருக்கும்னு!என்னவோ தெரியல..காமால கண்ணுக்கு  பாக்கிறதெல்லாம் மஞ்சளா  இருக்குமாமே! ஊழல் நமக்கு  பழகிப் போச்சுங்கிறதால இப்படியெல்லாம்   நெனைக்கிறேனோ?

இருக்கலாம்ங்க!

சென்னை தண்ணிய குடிச்சு  வளந்த  ஆந்திரகாரு மோகன் பாபு  நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு திக்  பிரண்ட். .பாபு  படம்  பண சிக்கல்ல  மாட்டிக்கிட்டு முளிச்சபோது  பணம் கொடுத்து  உதவுனவர்  சூப்பர்தான்! அவர்  சென்னைக்கு  வந்து  தன்னுடைய  நெருங்கிய நண்பர் ரஜினிய சந்திச்சு  கட்டித்தழுவி  பாராட்டியிருக்கார். "ரஜினி  இந்த அளவுக்கு வளந்ததுக்கு   மனைவி லதாதான்  காரணம்னு  சொல்லிட்டு  ரஜினிய கர்ணனாகவும் தன்னை துரியோதனன் னு  சொல்லி  சிலித்திருக்கார்  .இந்த காலத்திலேயும்  இப்படிப்பட்ட  ஆளுங்க  இருக்காங்கிற போது  கடவுள்  இருக்கார்னு நம்பித்தான்  ஆகணும்,


Thursday, 1 September 2016

அன்னம்...எத்தனை நாளைக்குத்தான்....!

''அன்னம் ...இன்னும் எத்தனை நாளைக்குத்தான் வவுத்தை  காயப்போடுவே! பட்டினி கெடந்தா செத்தவன்  திரும்பவும்  வந்துருவானா...மனச  தேத்திக்க தாயி! அப்பனும் ஆத்தாளும் கெடந்து நொம்பல படுதுகள்ல! சாப்பிடு தாயி!"
.என்றபடியே  கும்பாவை  கொண்டுவந்தாள் வீட்டுக்கு  பெரிய மனுசி .அங்கம்மாள். வடிவேலுவை பெத்த மகராசி.அவள் பேசுகிறபோது தண்டட்டி அங்கிட்டும் இங்கிட்டுமாக  ஆடும்.காது கழுத்துவரை தொங்குகிறது.! ஒவ்வொரு  தண்டட்டியும் ரெண்டு பவுன் .அந்த காலத்தில் ஒரு பவுன் தங்கம் நூறு ரூபாய்தான்.இருந்தாலும்  அரிசிக்கு பஞ்சம். கல்யாணப் பத்திரிகைகளில் விருந்தினர்களுக்கு வேண்டுகோள் வைத்திருப்பார்கள். 'மறக்காமல் தங்கள் ரேஷன் கார்டை  கொண்டு வரவும்!"

அந்த காலத்து கஷ்டம் இந்த காலத்து மனுஷங்களுக்கு அவ்வளவாக தெரியாது.!பிள்ளைகளுக்கு தங்களது கொடிவழியையே சொல்லிக் கொடுக்காத பெரிய மனுசனுங்க  நாட்டு நிலவரத்தையா சொல்லியிருக்க போறானுங்க. போவட்டும் விடுங்க.நம்ம கதைக்கு வருவோம்.

 அங்கம்மாள்  சொன்னதை  அன்ன மயிலு கேட்டபாடில்லை. விட்டத்தை பார்த்தபடியே கண்ணீர் விடுகிறாள்.முத ராத்திரிக்கி   வச்ச முல்லைப்பூ இன்னும் வாடலய  பய மக்கா!.. சாந்தி  கழிஞ்சிருக்கான்னு  படுக்கையை  நோட்டம் கூட  பார்க்க முடியாதபடி  கலைஞ்ச கூந்தலோடு அந்த எடத்திலேயே  உட்கார்ந்து  இருக்காளே பாவி மக.! சந்தோசமா இருந்தியான்னு கூட கேலி பண்ணவும் முடியாம சிறுக்கி  இப்படி சீரழிஞ்சு கெடக்கிறாலேன்னு   வர்றவ போறவளல்லாம் மூக்கை சிந்தி சுவத்தில தடவி கண்ணீர் விட்டுட்டு போறாளுங்க.!

"ஆத்தா...அன்னமயிலு.....இந்த கோலத்திலேயே  இருந்தா  குடும்பத்துக்கு  ஆகாதுடி! எந்திரிச்சி பல்ல வெளக்கு! குளி!  மாத்து  துணிய கட்டிக்க!. காட்டுக்கு போயிருக்கிறவுங்க வந்திருவாங்க. .  ரெண்டாம் நாளு சடங்கு  நடக்கணும். மனச ஆத்திக்கிறத தவிர வேறு வழியில்ல.! எந்திரி!" என்றபடி அன்னத்தை  தூக்க வந்தாள், சின்னாத்தாக்காரி!

எங்கிட்டு  இருந்து அப்படி பலம் வந்துச்சோ ...சின்னாத்தாளின்  நெஞ்சில் தனது  இரண்டு கையையும் வச்சு  முழு வீச்சுடன்"போங்கடி தட்டுவாணிகளா!" என்று ஆங்காரத்துடன்த ள்ளிவிட்டாள் அன்னம்!கல்யாணம் நடந்த அன்னிக்கே தாலி அறுக்கிறோமே  என்கிற ஆங்காரம்.!. சற்று தள்ளிப்போய்  மல்லாக்க விழுகிறாள் சின்னாத்தா. மடேர் என்ற சத்தம்.! தொடர்ந்து  'எந்த சிறுக்கி எக்கேடு கெட்டா எனக்கென்ன?" என்ற சின்னாத்தாளின்  புலம்பல். !அந்த கலவரத்திலும் பெரியமனுஷி  அங்கம்மாவின் கண்களுக்கு  அது தப்பவில்லை. அன்னம் போட்டிருந்த ரவுக்கை  அவசர கோலத்தில் கிடந்தது. உள்பாடியின்  முன்பக்க முடிச்சு அவிழ்ந்திருந்ததை  பார்த்து விட்டாள்.! அந்த காலத்தில் ப்ராவுக்கு அவ்வளவு கிராக்கி இருக்கவில்லை.!. அன்னம் கையை உயர்த்தியபோது முந்தானை  நழுவி.வெள்ளை நிறத்தில் வெயில் தொடாத  பருவ அடையாளத்தை காட்டிவிட்டது.

'கன்னி  கழிஞ்சிருச்சு !" என்று மனசுக்குள் பொருமுகிறாள் ! என்ன பண்றது  விதின்னு சொல்லி கடனை  கழிக்கிற காரியமா  அது?

"என்னாங்கடி...இப்படி  ஆளுக்காளு  மசமசன்னு இருந்தா   காரியம்  நடந்திருமா..எந்திருச்சி  அவ, அவ  வேலைய பாருங்கடி! "என்று ஒருத்தி  சத்தம் போட்ட பிறகுதான்  சிலர் பெரு மூச்சுவிட்டபடி  எழுந்தார்கள்.

எழவு  வீட்டின் அடையாளம்  அழுத்தமாகவே   வடிவேலுவின் வீட்டில்  பதிந்திருந்தது.!

இன்னும் எவ்வளவோ  இருக்கிறது. அடுத்த வாரம்  படிக்கலாம்.


Saturday, 27 August 2016

காதல்.....காமம்...கல்யாணம்.( பகுதி .3.)

தல்லாகுளம் போலீஸ் ஸ்டேசன்  இன்று  இருப்பதைப் போல  அன்று  இருந்ததில்லை. கள்ளழகர் மண்டகப்படியில் தான் காவல் நிலையம் இயங்கி வந்தது. ஆற்றில்  அழகர்  இறங்கும்போது மண்டகப்படியாகவும்  மற்ற காலங்களில்  போலீஸ் ஸ்டேஷனாகவும் இருந்தது.

அன்று ஸ்டேஷனில்  ஏகப்பட்ட  பரபரப்பு. இன்ஸ்பெக்டர் ராம்குமாரின்  முன்பாக கைதிகளை  வரிசையாக நிறுத்தி இருந்தார் ஏட்டைய்யா.

துண்டை கக்கத்தில் இடுக்கியபடி சட்டை இல்லாமல் நிறுத்தப்பட்டவர்களின்    குற்றப்பட்டியலை  பெயர் விவரங்களுடன்  சொன்னார்.

'அய்யா...இவன் பேரு நரிமேடு  கொன்னவாயன்..! ராத்திரி பன்னெண்டு மணி  வாக்கில  அய்யர் பங்களா பக்கம்  முக்காடு போட்டுக்கிட்டு  சந்தேகப்படும்படி  இருட்டுக்குள்ள  ஒளிஞ்சிட்டிருந்தான். சந்தேகப்படுபடியாக நடந்ததை  நைட்  ரவுண்ட்ஸ் போன பெட்ரோல் பார்ட்டி கையும் களவுமா பிடிச்சிட்டாங்க. முக்காடு  கேஸ் போட்டிருக்கு."( அந்த காலத்தில்  முக்காடு கேஸ் பிரபலம். இதை ஒழித்தவர் காமராஜர்.)

'பெரிய பத்தினி மாதிரி மொகத்தை மறைச்சிட்டு நிக்கிறாளே ...அவ  என்ன பிராத்தலா? ரொம்பவும்தான் நடிக்கிறா?

"இல்லிங்க ஐயா...அம்மன் சந்நிதி ரூபி ஸ்டோர்ல ரெண்டு சேலையை  முந்தானைக்குள் ஒளிச்சு வச்சு  லாவிட்டு வந்தவ."

''இவள்லாம் திருந்த மாட்டாளுங்க.பிராத்தல் கேஸ்ல  போடு!.ஜெயிலுக்குள்ள போயி களி தின்னுட்டு வரட்டும் .கொழுப்பு  கொறையும்."

"மூஞ்சியை திருப்பிக்கிட்டு  நிக்கிற நாயே.. நேரா நில்லுடா "என்று  லங்கோடுடன்  நின்றவனை  பார்த்து இன்ஸ்  கத்தியதும் பரட்டை தலை  ரொம்பவும் பயந்து விட்டான்

  'உத்தரவுங்க எஜமான்" .

என்னவோ தெரியவில்லை. அவனை செல்லில் வைத்து புடைத்து எடுத்திருக்கிறார்கள்.உடம்பெல்லாம் கன்றிப் போயிருந்தது.

"என்னய்யா...பூஜையை  பெருசா  போட்டிருக்கிங்க.பய செத்து கித்து போயிருந்தா  நாம்ப நாய் பட்ட பாடாஅலையனுமேய்யா! " என்று சத்தம் போட்டவர்  அந்த அக்யூஸ்ட்டை பார்த்து   "  எலேய்...என்னடா பண்ணித்தொலஞ்சே.இவ்வளவு  அடி தின்னிருக்கே" என்றபடியே  எழுந்து  அவனிடம் சென்றார்.

அவனுக்கோ பயம்தான்  அதிகமாகியது.

மிகவும் குனிந்தபடியே "சினிமா  தியேட்டர்ல  டிக்கெட்டு வித்தேன்  எஜமான்! வேற தப்பு தண்டா  எதுவும் பண்ணலிங்கய்யா!"என்று  அழுதான்.

"யோவ்  ஏட்டு! இவனை விட்ருங்கய்யா! பெருசா என்ன பண்ணிட்டான்னு  இம்பிட்டு அடி அடிச்சிருக்கிங்க?. ஊர்ல எம்பிட்டோ  பெரிய மனுசனுங்க  கண்ணுக்கு முன்னாடியே கொள்ளை  அடிக்கிறானுங்க. அவனுகளை  புடிக்க முடியிதா.? வவுத்துக்கில்லாம டிக்கெட் வித்து  பொளைக்கிறவன் எம்பிட்டு  சம்பாரிச்சிருவான்.? எழுதி வாங்கிட்டு விட்ருங்கய்யா!"

''எஸ் ..சார்." என்றபடி ஒரு சல்யூட்!

''தெப்பக்குளம்  சூசைட்  கேஸ்  விசாரணைக்காக  போறேன்அங்க   எஸ்.ஐ.யை வரச்சொல்லு!"

கிளம்பி சென்றார்.

வி சாரணை  ஆரம்பம்.
தங்கராசுவின்  பிரண்டு வெள்ளிங்கிரி,அய்யா வடிவேலு இருவரும் அன்றைய  ஆடுகள்.

முதல் நாளை விட இன்று இன்ஸ் ராம்குமாரின் விசாரணை  கடுமையாகவே இருந்தது.

"விசாரணைக்கு ஒத்துழைச்சா  ஸ்டேஷனுக்கு வரவேண்டியதாக இருக்காது.  தெரிஞ்ச  சங்கதியை  மறைக்காம சொல்லிடுங்க. உங்க பையன் தங்கராசுக்கு  கல்யாணத்தில  முழு சம்மதம் இருந்துச்சா? ராக்கடி கதையெல்லாம்  நம்ப  முடியாது.நானும் விசாரிச்சேன். உண்மைய சொல்லுங்க?"

"அய்யா எஜமான் ! அவனோட முழு சம்மதத்துடன்தான்  அன்னமயில கல்யாணம் பண்ணி வச்சோம்!"

"அப்ப ஏன்யா சூசைட் பண்ணிக்கிட்டான்?"

"அதான் அய்யா தெரியல.!"

"அப்ப பொண்ணு  அன்னமயிலுக்கு பிடிக்கலியா?"

"அந்த பொண்ணுக்கும் இஷ்டம்தானுங்க.!அவங்களையும்  விசாரிங்க. பொண்ணுக்கு  இஷ்டம்தான். இல்லேன்னா  கட்டி வைப்பாங்களா? எந்த அப்பனாவது  இஷ்டமில்லாதவனுக்கு  கட்டி வைப்பாங்களா? சொல்லுங்கய்யா?"

"அப்ப பர்ஸ்ட் நைட் முடியிறதுக்குள்ள ஏன்யா  செத்தான்? வீணா  அந்த பொண்ணை  மெடிகல் செக் அப் பண்ண வச்சிடாதிங்க.? ரூம்ல இருந்து  சண்டை போடுற சத்தமும் இல்லங்கிறீங்க.நிச்சயம் பொண்ணுக்கோ  உங்க மகனுக்கோ யாரோ ஒருவருக்கு இஷ்டம் இல்ல.அதனால்தான் பேருக்கு  கல்யாணம் பண்ணி வாழ்க்கையை கெடுத்திட்டிங்க. கடைசியா கேக்கிறேன்."என்றவர் இடியை ஏறக்கினார்.

"பையனுக்கு கஞ்சா பழக்கம் இருந்துச்சா. இல்ல லாட்ஜில் ரூம் போட்டு வியாபாரம் பண்றவங்களிடம் லேகியம் வாங்கி சாப்பிடுவானா?"

வடிவேலு வாய்விட்டு கதறிவிட்டார்." சாமீ....எம்புள்ளைக்கு  எந்த கெட்ட  பழக்கமும் இல்ல.தப்பா சொல்லி இந்த அப்பன் மனசில நஞ்ச வெதச்சிடாதிங்க!"

"அப்ப  உண்மைய சொல்லிடுங்க. விசாரனைன்னா  உண்மைய கொண்டார இப்படியெல்லாம் கேட்கத்தான்  செய்வோம்" என்றார் பக்கத்திலிருந்த  சப்- இன்ஸ்பெக்டர்.

"சரி...நீங்க வெளியில் இருங்க. இவனை விசாரிக்க வேண்டியிருக்கு" என்று  வெள்ளிங்கிரியை பார்த்தார்.

அவனும் சட்டைக்காலரை  பின்னுக்கு இழுத்துவிட்டுக்கொண்டு கேள்விகளை  எதிர்நோக்கினான்.
( இன்னும்  இருக்கு.)





















Sunday, 14 August 2016

காதல்....காமம்.( இரண்டு.)

தல்லாகுளம் சர்க்கிள் இன்ஸ்பெக்டர்  அலுவலகம்.

செத்துப்போன தங்கராசுவின்  குடும்பத்தினரும் புதுப்பெண் அன்னமயிலு  குடும்பத்தனரும் வெவ்வேறு வேப்ப மரங்களின்  நிழலில்  துக்கத்துடன்  அமர்ந்திருந்தனர்.விம்மி விடக்கூடாது என்பதற்காக சில பெண்கள்  முந்தானையின் சிறுபகுதியை பொட்டலம் போல் சுருட்டி வாயில் வைத்துக்  கொண்டிருந்தார்கள்.

இன்ஸ்பெக்டர்  ராம்குமார் ஜீப்பில் வந்து இறங்கியதும் ஸ்டேஷன்  பரபரப்பாகியது.

நாற்காலியில்  ராம்குமார்  உட்கார்ந்ததும் எஸ்.ஐ.சிதம்பரம்  ஸல்யூட் வைத்துவிட்டு  எதிராக இருந்த  நாற்காலியில் உட்கார்ந்து கொண்டார்.

ஏட்டய்யா பைலை வைத்துவிட்டு  'போஸ்ட்மார்ட்டம்  ரிப்போர்ட் வந்திருக்கு. சூசைடுய்யா" என்றார்.

'ரீசன் என்னன்னு என்கொயரி பண்ணியாச்சா  சிதம்பரம்?"

'பண்ணிட்டேன் சார். டூ சைடிலும் காரணம் தெரியலேன்னுதான்  சொல்றாங்க. மாப்பிள்ளையும் பொண்ணும் மீனாச்சியம்மன்  கோவிலில்  ஒருத்தரை ஒருத்தர்  பார்த்து சம்மதம் சொன்னபிறகுதான்  கல்யாணம் நடந்திருக்கு...."என்றார் எஸ்.ஐ.!

'அப்புறம் எதுக்கு பையன் தற்கொலை பண்ணிக்கணும்? பர்ஸ்ட்  நைட்ல  பிரச்னை இருந்திருக்குமோ? பொண்ணு சைடிலே கேட்டிங்களா? பல  ஆங்கிள்ல நாம்ப  போகணும் சிதம்பரம்?"

'போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்ல ஒரு முக்கியமான  இன்பர்மேஷன்  கெடச்சிருக்கு சார். ..........!"

'தட்  மீன்ஸ்  க்ளு?"

"எஸ் சார்....." என்றவர்  மெதுவான குரலில்  'பர்ஸ்ட் நைட்  நடந்ததுக்கான  சிம்ப்டமே  இல்லை சார்!"

'அப்படின்னா பெண்ணுக்கு  இஷ்டமில்லையா  இல்ல பையனுக்கு  ஆண்மை இல்லையா  இந்த ரெண்டுல  ஒன்னுதானேய்யா ரீசனா இருக்க முடியும்.?

"ஆமா சார்.!'

'பர்ஸ்ட்ல பொண்ணு சைடில விசாரிக்கவேணாம். பையன் வீட்ல விசாரிக்கலாம். இப்ப  மார்ச்சுவரியில  இருந்து  பாடியை  எடுத்திட்டு போகட்டும்."

"ஓகே சார்!"

தல்லாகுளத்தில் இருந்து  எர்ஸ்கின் மருத்துவமனை ( ராஜாஜி  மருத்துவமனை.) பக்கம்தான் என்பதால் அடுத்த அரை மணி நேரத்தில்  எல்லாவேலைகளையும்  விரைவாக  சிதம்பரம்  முடித்துக் கொடுத்தார்.

இரண்டாவது நாள் 

தத்தனேரி சுடுகாட்டிலிருந்து  வீட்டுக்கு வந்து  சேருவதற்கு  மத்தியானம் ஆகிவிட்டது. இன்ஸ்பெக்டர்  ராம்குமார்  மப்டியில்  இழவு   வீட்டில்  காத்திருந்தார். பிள்ளையை  இழந்து  துயரத்தில் இருப்பவர்களை  ஸ்டேஷனில்  வைத்து விசாரிப்பதில்  அவருக்கு விருப்பமில்லை.
துணையாக  எஸ்.ஐ.சிதம்பரம் மற்றும்  ஏட்டய்யா.

தனி அறையில் இருந்த அவர்களை தங்கராசுவின்  அய்யா வடிவேலு வந்து  பார்த்தார்.

"குடிக்கிறதுக்கு  காப்பி, கலரு கொண்டாரச் சொல்லட்டுமா ஐயா?" மகனை இழந்த  துக்கம் நெஞ்சை  அடைத்துக் கொண்டிருந்தாலும்  அதிகாரிகளை  வரவேற்ற பாங்கு  அவரது குடும்பத்தின்  உயர்வை காட்டியது.
 
''அதெல்லாம்  வேணாம்  வடிவேலு. விசாரிச்சோம் .ஒரே பையன்னு  சொன்னாங்க. கொஞ்ச வயசில அதுவும் பர்ஸ்ட் நைட்  முடிஞ்ச தடயமே  இல்லாம  பையன் தற்கொலை பண்ணிக்கிட்டது கொடுமையான  வேதனைதான்.எந்த குடும்பமும் தாங்கிக்க முடியாது.என்ன பண்றது.? எல்லாம் அந்த கடவுள்தான்னு  அவன் மேல  பாரத்தை போட்டு மனசை ஆத்திக்க வேண்டியதுதான்!" என்று ராம்குமார் சொன்னதும்  வடிவேலு உடைந்து போனார்.

''ஏன் ...எதுக்காக  பிள்ளை  இப்படி ஒரு முடிவுக்கு வந்தான்னே தெரியலய்யா! பொண்டாட்டிக்கு  ஆசை ஆசையா ராக்கடி வாங்கிட்டு வந்து எங்ககிட்ட  காமிச்சான். அவ கொண்டை போட்டு  ராக்கடியை  வச்சுக்கனும்னு ஆசைப்பட்டுத்தான்  வாங்கிட்டு வந்ததாக  சொன்னான்.நாங்கெல்லாம் சந்தோசப்பட்டு  கேலி பண்ணினோம். அப்படியெல்லாம்  ஆசைப்பட்ட பிள்ள..." இதற்கு மேல் பேச முடியாமல் கதறியழ ஆரம்பித்து விட்டார்.

சத்தம் கேட்டு உறவினர்கள்  கதவை தட்ட ஆரம்பித்து விட்டனர் .போலீஸ்  டார்ச்சர் பண்ணுகிறதோன்னு  பயம்.

ஏட்டய்யா  அவசரமாக கதவை திறந்தார்.

அறைக்குள்  வேகமுடன் பாய்ந்தவன்  வேறு யாருமல்ல  தங்கராசுவின்  பிரண்ட்  . வண்டியூர் தெப்பக்குளம்  வந்து கதறிய  அதே  ஆள்தான்!

"என்ன சார்.. டார்ச்சர் பண்றீங்களா? எழவு வீட்டுல பாடை கட்டுன பச்ச ஓலை வாசம் கூட இன்னமும் இருக்கு. சார்." என கொதித்தான்.

அவனை  அமைதிப்படுத்தி வெளியே தள்ளிய  வடிவேலு " மனுசத்தன்மையோடு  நடக்கிறாங்கடா.. சங்கதி தெரியாம வந்து  வார்த்தையை  கொட்டாதே  .எங்கிட்டாவது போய் தொலை "என்று  கோபத்தை காட்டினார்.

''யாருங்க அந்த பையன். ரொம்பவும்  சொந்தமோ?" இன்ஸ்பெக்டர் கேட்டார்.

"ஐயா பொறுத்துக்கணும். என் மவனோட நண்பன்.பேரு வெள்ளிங்கிரி. ரெண்டு பெரும் ஒன்னு மண்ணாத்தான் திரிவானுங்க! தங்கராசு  செத்துப்போனதை தாங்கிக்க முடியல" .

' சரி சரி  இருக்கத்தானே  செய்யும். இப்ப பொண்ணு  எங்க இருக்கு? "

"இங்கதான்  இருக்கு. அவங்க வீட்டுக்கு  போகமாட்டேன்னு சொல்லிட்டு பச்சத்தண்ணி பல்லுல படாம படுத்த படுக்கையா இருக்கு. பெத்தவங்களை பாக்க முடியாதுன்னு  சொல்லிடிச்சு.என் சம்சாரம்தான் துணையா  இருக்கா!" மறுபடியும்  விசும்பத்தொடங்கினார்.

இதற்கு மேலும்  விசாரிப்பது  முறையாகாது ...சற்று  இடைவெளி விடலாம் என்று ராம்குமார் முடிவெடுத்தார்.

---அடுத்த  ஞாயிறு....

.







Wednesday, 10 August 2016

வருத்தம்.......கல்யாணம்...காமம்.( பகுதி 1.)

சில நிர்பந்தங்கள்.அதுவும் உறவுகள் வழியாக!

குற்றப்பரம்பரை தொடர்  உனக்கு தேவையா...அதுவும்  உண்மையை  எழுதவேண்டுமா..வேண்டாம்.நிறுத்திவிடு......

இப்படி சில..!   மிரட்டல்கள் பல.!  இதனால் சில கேரக்டர்களை  மாற்றி சொல்லிய  பிழைகளும்  ஏற்பட்டது. !.வேண்டாமே  இந்த குழப்பம்.உண்மையை எழுதி சாதிக்கப் போவது என்ன?

அதனால் அந்த தொடரை  நிறுத்திவிட்டேன்.

மன்னிக்க...!.

புதியது ஒன்று  பூக்காமால்  போகுமா?

முன்னொரு  காலம். ஆவணி  மாதம்.

வண்டியூர் மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் ஆணின் பிணம்.! வேடிக்கை  பார்க்க சிலைமானிலிருந்தும்  சைக்கிள் கட்டி வருகிறது கூட்டம்.! அந்த காலத்தில் கண்மாய் ,குளம்தான்  தற்கொலை செய்து கொள்வதற்கு  வசதியாக  இருந்தது போலும். குடும்பச்சண்டைகள்தான் பெரும்பாலும் இம்மாதிரி தண்ணீரை தேடி வந்தன .புருசனுடன் சண்டை போட்டு அவசரத்தில்  முடிவெடுக்கும் பெண்கள்  உத்திரத்தில்  தொங்கி  விடுவார்கள்.அல்லது அரளி விதையை அரைத்துக் குடித்து விடுவார்கள்.

ஏட்டையாவும் ஒரு போலீசுக்காரரும்தான் முதலில்  ஸ்பாட்டுக்கு வந்தவர்கள்.

'ஏட்டய்யா! பட்டு வேட்டி பட்டு சட்டையோடு மெதக்கிறான்! அவனுக்கு  என்ன நோக்காடோ?  என்ன வேசாடோ....கொஞ்ச  வயசு மாதிரி  தெரியிது. தரையில போட்டாதான் யாரு என்னங்கிறதுன்னு தெரியும்." என்ற போலீஸ்காரர் சில  இளவட்டப் பயலுகளை  மிரட்டி  பிணத்தை கரைக்கு  கொண்டுவந்தார்.

சட்டைப்பை , இடுப்பு மடிப்பில் கடுதாசி எதுவும் இருக்கிறதா  என்கிற வழக்கமான  சோதனைகளை முடித்த போலீஸ்காரர்  'தடயம் எதுவும் இல்லை ஏட்டையா..பாடில காயமும் கிடையாது.இது கண்டிப்பா தற்கொலைதான்" என்கிற முடிவுக்கு வந்தார்.

'பாக்கிறதுக்கு பெரிய எடத்து பிள்ளையாட்டம் தெரியிது.'என்று பிணத்தை ஒரு பார்வை பார்த்த ஏட்டையா கூட்டத்தையும்அப்படியே ஒரு  நோட்டம் விட்டார்,

''யோவ்...யாருங்கிற  அடையாளம் தெரியிதாப்பா..தெரிஞ்சவங்க தைரியமா  சொல்லுங்கப்பா ...சாட்சி அது ,இதுன்னு டேசனுக்கு  கூப்பிடமாட்டம்." என்று ஊக்கம் கொடுக்கிறார் ஏட்டையா!

'சார்...எங்க பக்கத்து  ஆளு மாதிரி தெரியல.டவுனுக்குள்ளதான்  விசாரிக்கனும்!" என்கிறான் கூட்டத்திலிருந்த ஒருவன்.

'நல்லா பாத்து சொல்லுங்கப்பா...பெரியாஸ்பத்திரிக்கு போயிட்டா  அறுத்து  தச்சுப்பிடுவானுங்க."என்கிற எச்சரிக்கையுடன்   ஆஸ்பத்திரிக்கு எடுத்துப் போகிற வேலைகளில்  எறங்கிவிட்டார் ஏட்டைய்யா.

அப்போது....

வாயிலும் வயிற்றிலும்  அடித்துக் கொண்டு வாடகைக்காரில் வந்து இறங்குகிறது   ஒரு கூட்டம்.

கூட்டத்தை பிளந்துகொண்டு வந்த ஒரு எளந்தாரி "மாப்ளே  இப்படி  மோசம்  பண்ணிட்டியடா..."என்று  கதறி அழ ,கூட வந்திருந்த  உறவுகளும் அங்கேயே வட்டமாக அமர்ந்து  ஒப்பாரியை தொடங்கிவிட்டது.

'நேத்திக்கிதான் கல்யாணம் நடந்துச்சு. மொதலிரவுக்கு பெறவு விடிஞ்சி பாத்தா  மாப்ளைய   காணாம். பொண்ணோ மயங்கிக் கிடக்கு. பொண்ணை  பிரைவேட்  ஆஸ்பத்திரியில  சேத்திருக்கு.மாப்ள இங்க  பொணமா கெடக்கிறான்.என்ன நடந்ததுன்னு  தெரியாம பொண்ணு வீட்ல  ரெண்டு  வீட்டு சனமும் கதறிக்கிட்டு கெடக்கு."

அந்த இளந்தாரிதான்.முதல் தகவலை ஏட்டைய்யாவுக்கு சொல்கிறான்.

'நீ பிள்ளை வீடா,பொண்ணு  வீடா?"

ஏட்டையா விசாரணையை தொடங்கினார்.

'நான்  தங்கராசுவின்  பிரண்டு.! பேரு அழகரு.ரெண்டு பேருக்கும் ஒரே  ஊருதான் .ஊமச்சிகுளம்."

'சரி .. மத்ததை  டேசனுக்கு வந்து ஐயாகிட்ட  சொல்லிடு" என்ற ஏட்டைய்யா  அப்போதுதான்  அங்கு வரும்  எஸ்.ஐ.க்கு  வெறப்பா ஒரு  ஸல்யூட் அடித்தார்.
-----
 வருகிற  ஞாயிறு  இதன் இரண்டாம்  பகுதி.