Saturday, 17 December 2016

காதல்...காமம்.( 16.)

செல்லத்தாயியை பார்த்ததும் மாயக்காளுக்கு எங்கிட்டு இருந்து வந்ததோ  தெரியவில்லை. மூலையில் கிடந்த விளக்குமாரை எடுத்துக்கொண்டு  ''வாடி  என் சக்களாத்தி" என்றபடியே பாய, பதிலுக்கு செல்லத்தாயியும் " அதான்  வந்திருக்கேன்டி கெழட்டு சிறுக்கி " என்று எகிற ,கூட வந்திருந்த போலீஸ்காரர் ஒரு நொடி ஆடிப் போய்விட்டார்.

இப்படி ஒரு சிக்கல் வரும் என அங்கிருந்த மற்றவர்கள் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.வடிவேலுவினால் பெண்டாட்டியை  மட்டும்தான்  சத்தம் போட முடிந்தது.

"இந்தாளா...சும்மா கெடக்கிறியா...? நீயும் அவளுக்கு சமமா கூத்தடிக்கிறியா? சாதிமான் வீட்டுக்காரி மாதிரியா நடந்துக்கிறே? ரெண்டு சிறுக்கியும் அடிச்சிக்கிட்டு  நாறுங்கடி! ஊரு சிரிக்கட்டும்." என்ற வடிவேலு மகனை பார்த்து சத்தம் போடுகிறார்.

"டேய்..தங்கராசு...உன் ஆத்தாக்காரி ஆடுற ஆட்டத்த பார்த்தில்ல. செத்த நேரத்துக்கு முன்னாடி என்ன பார்த்து என்னென்னமோ கத்துனியே  ..இப்ப  இதுக்கு என்னடா சொல்றே?" என்று ஆத்திரப்பட்டதும் வந்திருந்த போலீஸ்காரருக்கு கோபம் வந்துவிட்டது.

"நிறுத்துங்கய்யா..." என்று சத்தம் போட்டவர்  செல்லத்தாயியை பார்த்தார்.

"ஏம்மா....ஸ்டேஷன்ல வந்து என்ன சொல்லி கம்ப்ளெய்ன்ட் கொடுத்தே?  இங்க வந்து ரகளை பண்றே..சும்மா கெட." என்றவர் வடிவேலுவை பார்த்தார்.

"அய்யா உங்க மேல இந்தம்மா புகார் கொடுத்திருக்கு. இன்ஸ்பெக்டர் ஐயா உங்களை கூட்டிட்டு வர  சொன்னாரு.வந்திங்கன்னா..." என்கிறபோதே குறுக்கிட்டான் தங்கராசு.

"இந்த தட்டுக்கெட்டவ சொன்னான்னு நம்பி ஒரு பெரிய மனுசனை ஸ்டேஷனுக்கு  கூப்பிடுவிங்களா....?"

"தம்பி வார்த்தையை விடாதிங்க. ஒங்க அய்யாவை பத்தி எங்களுக்கும் தெரியும். ஊருல பெரியமனுசன்.ஆனா இந்த பொம்பள கொடுத்திருக்கிற புகாரு சும்மா அடிதடி மாதிரி இல்ல.வெவகாரம் வேற மாதிரி தம்பி! இந்த பொம்பளைய பார்த்ததும் ஒங்கம்மா குதிச்ச குதியை பாத்திங்கல்ல.ஆனா  அந்த பெரிய மனுசனுக்கு இந்த பொம்பளைய பார்த்ததும் ஒரு மாதிரியா போனதையும் பார்த்தேன் தம்பி...நீங்களும் வேணும்னா ஸ்டேசனுக்கு  வாங்க" என்றவர் வடிவேலுவை பார்த்து "அய்யா போகலாமா?" என்றார்.

"அந்த சிறுக்கியோடு வரமுடியாது. அவளை கூட்டிட்டு போங்க. நான் வந்து சேர்றேன்"

ஒரு சிலுப்பு சிலிப்பிவிட்டு " வாரும்   அங்க வச்சுக்கிறேன் கச்சேரிய" என்றபடி செல்லத்தாயி கிளம்பினாள்.

அங்கம்மா கிழவியின்  வாய் இப்பத்தான் திறக்குது. மகனை பார்த்து " யப்பா ..ஊருக்கு பெரியவன! அந்த சிறுக்கி பேசுனத பார்த்தா அவளுக்கு கைய கால  அமுக்கி விட்ருப்பே போலிருக்கு! இல்ல அதுக்கும் மேல தொண்டூழியம்  பண்ணிருக்கியா? அதான்  நத்தம் வீட்டை அவ பேருக்கு மாத்திருக்கே! ஒம் பொண்டாட்டி ஒனக்கு என்ன கொறை வச்சான்னு அந்த கூத்தியா கிட்ட அடங்கி கெடந்தியோ....வயசான காலத்தில இந்த கண்றாவியை எல்லாம் பாக்கணும்னு எனக்கு தலைல எழுதியிருக்கு!" என்று தனது இயலாமையை  சொல்லி புலம்புகிறாள்..

அதுவரை சும்மா இருந்த மாயக்காள் மறுபடியும் பொங்கினாள். " யத்தே...ஒம் பிள்ளைய அவ முந்தாணியில முடிச்சு வைக்கல.கொசுவத்தில சொருகி வச்சுக்கிட்டா.அதான் சொக்கிப் போயிருக்காரு. வயசான காலத்தில கூத்தியா கேட்டிருக்கு. அனுபவிக்கட்டும்"

எல்லாத்தையும் காதில் வாங்கிக் கொண்ட பெரிசு  துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டது.உள்ளுக்குள் நடுக்கம்.செல்லத்தாயி எதை சொல்லி புகார் கொடுத்திருக்காளோ என்கிற பயம்.அதை வெளிக்காட்டாமல் .......

''ராசு ...வாடா.!" மகனை கூப்பிட்டார் .

ஸ்டேஷனில்  செல்லத்தாயி போட்ட நாடகம் அப்பனையும் மகனையும் வெறி கொள்ள வைத்தது. நல்ல சமயத்தில் வெள்ளிங்கிரி வந்து சேர்ந்தான்!

அதை அடுத்த வாரம் பார்க்கலாம்.  இது உண்மை  சம்பவத்தின்  கற்பனை  கலந்த பதிவு, 


Friday, 9 December 2016

காதல்...காமம்...( 15. )

முந்தானையினால் கண்ணை துடைத்துக் கொண்டு மூக்கை சிந்தி வழக்கம் போல சுவரில் தடவினாள்.அது அவளது பழக்கம்.தை மாதம் பொங்கலுக்கு  வெள்ளை அடிக்கும்போது அந்த தடயங்கள் அழிந்துவிடும்.

வடிவேலுவுக்கு சற்றுத் தள்ளியே அமர்ந்தாள்.என்னதான் கோபத்தில் பேசினாலும் புருசனுக்கு மரியாதை கொடுக்கத் தவறுவதில்லை.

"மாயி..." சற்று அச்சமுடன் மனைவியை பார்த்தார்.

"ம்ம்"

"ஒங்களுக்கு  தெரியாம ஒரு காரியத்தை பண்ணிட்டேன். செல்லத்தாயிக்கி நத்தத்தில் உள்ள காரை வீட்டை எழுதி வச்சிட்டேன். அது எங்க ஆத்தாளுக்கு  சொந்தமானது. சும்மாதானே கெடக்கிதுன்னு விக்கிறதா சொல்லி  ஆத்தா கிட்ட பொய் சொல்லி பத்திரம்  மாத்தி கொடுத்திட்டேன். அத எங்க ஆத்தா முன்னாடி சொல்லி ....அதுக்கு என்ன தண்டனையோ கொடுங்க. ஏத்துகிறேன்."

"என்ன மனுசன்யா ....அந்த தட்டுவாணி என்னய்யா மருந்து வச்சா? இப்படி  கேடு கேட்ட காரியத்தை பண்ண எப்படிய்யா தைரியம்  வந்தது? ஆத்தாளும்  பேரனும் இப்ப வருவாங்க. அவங்களுக்கு சொல்லும்!"

"தப்புத்தான் மாயி!  கிறுக்குத்தனமா தப்பு பண்ணிட்டேன். என்னை பித்து  பிடிக்க வச்சிட்டாடி! இப்ப பிள்ளைய கொடுக்க வாய்யான்னு  வம்பு பண்றா!
என்ன பண்றதுன்னு தெரியல. தீர்த்துக் கட்டிடலாம்னு .......! ஆத்தாகிட்ட  சொல்லிட்டு  ஆக வேண்டியதை பார்க்கலாம்னுதான்....."

சொல்லி முடிப்பதற்குள் ஆத்தா அங்கம்மாவும் மகன் தங்கராசுவும் வந்து விட்டார்கள்.

"என்னப்பு  எதுக்கு ஆத்தாளை கூட்டிட்டு வரச்சொன்னே? பதறிப்போயி வந்திருக்கேனப்பு!" தூண் ஓரமாக உட்கார்ந்தாள்  "மகமாயி!" என்றபடி!

"இப்பத்தான் ஒன் மருமக கிட்ட சொன்னேன். அவ கிட்டயே கேட்டுக்க. மறுபடியும் சொல்றதுக்கு எனக்கு தைரியம் இல்ல!"

மறுபடியும் தோமுத்ரா கட்டிலில் ஏறி படுத்துவிட்டார்.

மாமியார்,மகனிடம் சொன்னதும் ஏகப்பட்ட  சண்டை! எதையும்  வடிவேலு காதில் வாங்கியதாக இல்லை. அவரை அறியாமலேயே  கண்ணீர் வடிகிறது.

''என்ன பாவம் பண்ணினேனோ இந்தாளுக்கு வந்து பிள்ளையா பெறந்திருக்கேன். கொன்னுட்டு ஜெயிலுக்கு போனாலும் தப்பில்ல. மனுசனா.? மாடுதான் எந்த பசுன்னு பாக்கிறதில்ல. இந்தாளும் அந்த ஜென்மம்தான்! கண்ட எடத்தில வாயை வச்சிருக்காரே! அப்பத்தா ஒன்னையும் ஏமாத்தி ஒன் சொத்தை  கூத்தியாளுக்கு எழுதி வச்சிருக்காரு..என்ன பண்ணலாம்னு சொல்றே?" எரிச்சலில் கத்துகிறான் தங்கராசு.

வந்து சேருகிறான் வெள்ளிங்கிரி!

"என்னடா...தெரு வரைக்கும் சத்தம் கேக்கிது. அப்படி ஏன்னடா குடி முழுகிப் போச்சு. கூத்தியா... சொத்துன்னு  கத்துறே? ஒங்க அய்யா  செல்லத்தாயியை வச்சிருக்காருங்கிறது ஊருக்கே தெரியுமே..அதை இப்ப ஏன் தலையில சொமக்கப்பார்க்கிரே? அவருக்கும் வயசாகிப்போச்சு.விடு கழுதைய! வெளையாடிட்டுப் போகட்டும்!" என்கிறான்.

"வெவரம் தெரியாம பேசாதடா! வீடே தீ பத்தி எரியிது. ஒன்னு இந்தாளு சாவனும். இல்லேன்னா அந்த பன்னாடை சிறுக்கி சாவனும். அதான் எங்க வீட்டு வெவகாரத்துக்கு தீர்வு" கொதிக்கிறான் தங்கராசு.

மற்றவர்கள் என்ன சொல்வது என்பது தெரியாமல்  தங்கராசுவை பார்க்கிறபோதுதான் வாசலில் வந்து நிற்கிறாள் தொடுப்பு செல்லத்தாயி! கூடவே போலீஸ்!

ஏடாகூடமாக ஏதோ நடக்கப்போகிறது என்பது மட்டும் தெரிந்தது!

உண்மைச்சம்பவத்தை  அடிப்படையாகக் கொண்டு  புனையப்படும்  தொடர். இனி அடுத்த வாரம்,



Sunday, 4 December 2016

காதல்...காமம். ( 14.)

அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் அப்படி ஒரு சண்டை நடக்கும் என்பதை தங்கராசு எதிர்பார்க்கவில்லை.

 பொன்னியை அவளது வீடு அருகில் விட்டுவிட்டு ஒரு முடிவுடன்தான் வீட்டுக்கு  வந்து கொண்டிருந்தான் .காலடி வைத்ததும் அவனின் காதில்  விழுந்ததது.......

"நாண்டுக்கிட்டு போகவாய்யா!"

அம்மா மாயக்காள் அதிர்ந்து பேசாதவள். இன்னும் சொல்லப்போனால்  புருசனின் முகம் பார்த்துக்கூட பேசமாட்டாள். பொதுவாக அந்தக்காலத்து மனுஷிகள் அப்படித்தான் வாழ்ந்தார்கள்.

மகன் வந்தபிறகும் அவர்களது சண்டை தீரவில்லை.

"வயக்காட்டுக்கு போன ஆளு களை புடுங்க வந்தவ மேல ஆசைப்பட்டு கையை வச்சுப்பிட்டே...ஊர்ல நடக்காததா நடந்து போச்சுன்னு நானும்  சும்மா விட்டுட்டேன். சிறுக்கி மவ ஒன்னை சேலைக்குள்ள  சிக்க வச்சுருக்காங்கிறது  இப்பல்ல தெரியிது.! மூணு செண்டு நிலத்த வீடு கட்டிக்கன்னு கொடுத்த பாரு  அப்பவே ஒமரு கெரன்ட காலு  நரம்ப அறுத்து விட்டிருந்தா சவாரி கேட்டிருக்குமா? என்னத்தையா அவகிட்ட காணாதத கண்டுபிட்டே?"

மழையும் இடியும் ஒரு சேர தாக்கியதைப்போல்  கண்ணீரும் வார்த்தைகளும் கொட்டுகிறது.

தங்கராசுக்கு இப்பதான் கோபம் வந்தது.

'' சின்னாத்தா கொரங்கு பாடி போட்டு லவுக்கை போட்டிருக்கு. நீயும் போட்டிருந்தா வேலி தாண்டிருக்கமாட்டார்.இல்லையா அப்பு?"என்றான் அப்பனை பார்த்து.!

"மானங்கெட்ட பயலே..எவடா சின்னாத்தா? மானங்கெட்ட  அந்த மல்லாரியா ஒனக்கு சின்னாத்தா..வெளக்குமாறு பிஞ்சிரும்."

"பின்னே எப்படி சொல்லனும்ரே? இத்தனை நாளும் விட்டுத்தானே வச்சிருந்தே? அப்ப அவளை மொறை வச்சு நான் கூப்பிட்டதில என்ன தப்பு? தெரு நாயி நடு வீடு வரை வந்து நார வச்சிட்டு போயிடுச்சே!"

இப்பத்தான் திருவாயை திறக்கிறார் வடிவேலு. விட்டத்தையும் பார்க்க தைரியம் இல்லை. முகம் பார்த்து பேசவும் ஆண்மை இல்லை. சுவர்தான் அவரது பார்வையை தாங்கியது. ஆங்காங்கே காரை பெயர்ந்திருந்தது  அப்போதுதான் தெரிகிறது.

மெதுவான குரலில் "வச்சுக்கிட்டவன்னாலும் என் ரத்தமும் சேர்ந்திருக்குள்ள?
அவ்வளவு சீக்கிரமா அத்துவிட்ர முடியுமா?" என்றார்.

தங்கராசு அப்பனுக்கு எதிராக சேரை இழுத்துப்போட்டுக்கொண்டான்.

"உன்னால முடியாதுப்பு! ஒங்க ரெண்டு பேரையும் கொன்னு போட்டுட்டு ஆனை விழுந்தான் பள்ளத்தில போட்டுரவா? என்னால முடியும்.!" என்று கால் மேல் காலை போட்டுக்கொண்டவன் ஆத்தாளைப் பார்த்தான்.

"இந்தாத்தா..இந்த மனுஷன் இந்த அளவுக்கு எறங்கி இருக்கார்னா  பெருசா ஏதோ நடந்திருக்கு.கதவை தாப்பா போடு. சங்கருத்திடுறேன்." என்றபடி கோபமுடன் எழுந்தான்.

ஆத்தாளும் அப்பனும் இப்போது ரொம்பவே  பயப்பட்டனர். அதுவரை ஆவேசமாக இருந்தவள் அடங்கிப்போனாள். நிஜமாகவே  செய்து விடுவானோ?

வடிவேலு  ''வாடா வா. வந்து கொல்லுடா! பெத்த ஆத்தாளை  முண்டச்சி ஆக்கிட்டு ஜெயிலுக்கு போயிடு! செல்லத்தாயி வந்து சொத்தை அமுக்கிட்டு போகட்டும்!" என்று சுவரிடமே பேசுகிறார்.

"அப்ப ஒனக்கும் அவளுக்கும் என்ன பிரச்னை? அத சொல்லு. தீர்த்து வைக்கிறோம்." என்கிறான் மகன்.

"அவளோடு வந்து ஒரு மாசம் குடும்பம் நடத்த சொல்றா...வவுத்தில வாரிசு  வளரனுமாம்.அதுக்குத்தான் அம்புட்டு சண்டை போட்டா!"

ஆத்தாளுக்கு முகம் சிவந்து போச்சு.

"பெத்த பிள்ள வளந்து மீசை முளைச்ச ஆம்பளையா நிக்கிறான். அவனை அந்த தட்டுவாணி கிட்ட அனுப்பி வைக்கவா. அவன் தருவான்யா பிள்ளையை! வெக்கமா இல்ல.இத சொல்ல ? அவ புருசன் கிட்ட படுத்து பிள்ள பெத்துக்க முடியாத பொட்டச்சிக்கு நீ பிள்ள வரம் கொடுக்க போறியாக்கும்! மொண்ணை  அருவாமனையில ...." என்றவளுக்கு  அதற்கு மேல் சொல்ல வார்த்தை வரவில்லை. பெத்த பிள்ளை பக்கத்தில நிக்கிறான்.

இப்போது ஒரு தீர்மானத்துக்கு வந்தவளாக  " நீ என்ன செய்வியோ ஏது செய்வியோ அந்த கேடு கெட்ட எடுபட்டவளை  வெளக்கி விட்டு பஞ்சாயத்து பண்ணிவிட்டுட்டு வீட்டுக்குள்ள காலை வையி. இல்லையா நிரந்தரமா அவ புருசன்கூட நீயும் ஒரு புருசனா  அவ கூடவே இரு.நானும் தாலிய அறுத்திட்டு நிம்மதியா என் பிள்ளைக்கு ஒருத்தியை தேடி கல்யாணம் பண்ணி வச்சிடுறேன்!" என்கிறாள்.

அதுநாள் வரை அவள் ஒருமையில் புருஷனை பேசியதில்லை.

தங்கராசுவுக்கு அம்மாவின் கோபம் புரிந்தது. ஆனால் அதுவே தீர்வாகிவிடுமா? குடும்பத்தின்  மானம் மரியாதை என்ன ஆவது? செல்லத்தாயியை வைத்துக் கொண்டிருப்பது ஊருக்கே தெரியும்.ஆனால்  அது பெருந்தனக்கார வீடுகளில் சகஜம்தான் என அன்றைய கால கட்டத்தில்  அறியப்பட்டிருப்பதால் அது கவுரவமாகவும் கருதப்பட்டது.

வடிவேலு  வேர் இழந்த மரம் மாதிரி பட்டென தரையில் உட்கார்ந்துவிட்டார்.
முழங்கால் மீது கையை வைத்தபடி !

"மாயி...பக்கத்தில வாடி! " என்று மனைவியை பக்கமாக வந்து அமர ஜாடை  காட்டிவிட்டு  மகனை பார்க்கிறார்.

"அப்பத்தாளை கூட்டிட்டு வா!" என்கிறார்.

அங்கம்மா வருங்கால சம்பந்தி செவனம்மாவின்  வீட்டுக்கு போயிருந்தாள்.

இன்னும்  வரும். ஒரு  உண்மை  நிகழ்வை  அடிப்படையாகக்கொண்டு புனையப்படும்  கற்பனை  கதை. 

கருத்துகள்  சொல்லலாமே! 

Sunday, 27 November 2016

வாழ நினைத்தால் வாழவா முடியாது?

கவர்ச்சிக்காக  இந்த பெண்ணின் படத்தை  இங்கு  பதிவு செய்யவில்லை.

அல்லது...

பார்,,பார் ,,இவ்வளவு அழகற்ற பெண்ணுக்கு  அழகு ராணி பட்டம்  சூட்டி  கிரீடம் அணிவித்திருக்கிற  அநீதியைப் பார் என்பதற்காகவும்  இந்த கர்ப்பிணிப் பெண்ணின் படத்தை காட்டவில்லை.

கவர்ச்சியோ, அழகு ராணி விருதோ  எதற்கும் இங்கு  இடம் இல்லை. இங்கு வலியுறுத்தப்படுவது  திண்மை.

சிங்கமே எதிர்வந்தாலும் மன வலிமையும்,சாதுர்யமும் இருந்தால் தப்பிக்கவும்  வழி கிடைக்கும் என்பதை சொல்வதற்கும்தான் இந்த பெண்மணியின் படத்தை வெளியிட்டிருக்கிறேன்.

ஆண்ட்ரியா கிராண்ட்ஸ் .இவளின் பெயர்.ப்ளோரிடா வை சேர்ந்தவள்.

2001-ல் இவளும் சகோதரன் கெண்டலும் பள்ளியில் இருந்து வீட்டுக்கு திரும்பினர், அம்மா அலுவலகம் சென்றுவிட்டதால் கையில் இருந்த சாவியினால்  வீட்டை திறந்து தம்பியுடன் சென்றுவிட்டாள்.

வீட்டுக்குள் ஒருவித வாசம்.மணம்.அது இன்னதென அறியவில்லை அந்த எட்டு வயது சிறுமி.

கிச்சனில் இருந்து வந்த அந்த வாசம் சமையல் கியாசிலிருந்து லீக் ஆகியதால் நுகரப்பட்ட மணம். சிறுவனும் சிறுமியும் அதை அறிந்திருக்கவில்லை.

அறைக்குள் சென்றதும் ஆண்ட்ரியா மின்சார சுவிட்சை போட்டாள்!

மறுநொடியே குண்டு வெடித்தைதைப்போன்ற பயங்கர சத்தம்!

இருவரும் தூக்கி வீசப்பட்டனர், ஆண்ட்ரியாவுக்கு மூன்றாவது டிகிரி தீக்காயம். அதாவது உடலில் எண்பத்திஐந்து சதவிகிதம் வெந்து போய்விட்டது.உயிர் பிழைக்க முடியாது என டாக்டர்கள் கை விரித்து விட்டனர். மாதக்கணக்கில் போராடினர். மரணவலியில் அனுதினமும்  அழுது கதறினாள். ஆனால் தாங்கிகொண்டாள். உயிர் பிழைப்போம் என நம்பினாள். அதுதான் அவளது தினசரி பிரேயராக இருந்தது.

கல்யாணம் செய்யக்கூடாது. செய்து கொண்டாலும் கர்ப்பம் தரிக்கக்கூடாது. அது உயிரை கொன்று விடும் என கடுமையாக எச்சரித்து அனுப்பினார்கள்  டாக்டர்கள்.

உயிர் மீது படுத்திருந்த யானையையே புரட்டிப்போட்டுவிட்ட ஆண்ட்ரியாவுக்கு முன்னை விட மன வலிமை அதிகமாகி இருந்தது. தன்னைப் போன்ற தீக்காயம் பெற்றவர்களுக்காக ஒரு காப்பகத்தை ஆரம்பித்தாள். கல்யாணமும் செய்துகொண்டு கரு தரித்தாள். தானும் தனது  கருவறையில் இருக்கும் குழந்தையும் நலமே என்பதை உணர்த்த இத்தகைய புகைப்படங்களை எடுத்து வெளியிட்டாள். விதம் விதமாக!

மருத்துவ உலகம் அவளை வியப்புடன் பார்க்கிறது!

வாழ நினைத்தால் வாழவா முடியாது?

அன்புடன்,
உங்களது,
குரங்கு.

Saturday, 26 November 2016

காதல்....காமம்..( 13.)

தங்கராசுவும் பொன்னியும் பஸ்ஸில் பக்கம் பக்கமாக அமர்ந்திருந்தனர்.

சிலைமான் செல்லும் பஸ். சிலைமானில் இறங்கி அப்படியே காலாற வைகை கரை ஓரமாக நடந்து ,,,கரையோரம் ஓடும் ஆற்று நீரில் கால் நனைத்து பிறகு மணலில் நடந்தால் குருமணலில் நடப்பது  சுகமாக இருக்கும்.!

இருவரும் ஆற்றின் நடுப்பகுதியில் அப்படியே படுத்து விட்டனர்.

"ராசு...ஆயுசு முழுசும் இப்படி சொகமாக இருக்க முடியுமா?"

"ம்..."

"சாயங்கால வெயில்..மணல் சூடு...ஒடம்புக்கு ஒத்தடம் கொடுக்கிற மாதிரி இருக்குல்ல?"

"ம்ம்"

" ஒன் நெஞ்சு மேல சாஞ்சு படுக்கணும் போல இருக்கு.,,! சுருட்ட முடியை  கோதணும்..மெல்ல ஒதட்டை கடிக்கணும்....இப்படி எவ்வளவோ  மனசில  இருக்கு...கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படியெல்லாம் ....தப்பா ராசு?"

இது வரை ம்ம் கொட்டிவந்த தங்கராசுக்கு இப்போதுதான் சுருக்கென இருந்தது.

"பொன்னி..இம்பிட்டு நேரம் என்ன சொன்னே?"--உண்மையிலேயே அவனது நினைப்பு எல்லாம் அங்கு இல்லை. வீட்டை சுற்றியே இருந்தது. பொன்னி 'தப்பா ராசு?' என்று கேட்டதும்தான்  சூழலை உணர்கிறான்.

பொன்னி கோபப்பட்டதிலும் தப்பில்லை.

"நாசமா போறவனே....இம்பிட்டு நேரமும் என் ஆசைகளை மனசு விட்டு சொல்லிருக்கேன்.அதெல்லாம் காதுல ஏறலியா...எந்த நெனப்புலடா...இங்க  என்ன கூட்டிட்டு வந்தே? கல்யாணத்துக்கு பெறகும் இப்படித்தான் இருப்பியா..உனக்கு என் நெனப்பே இல்லியா...? ஒன் வயசுக்கு இப்படி ஒருத்தி  தனியா வந்தா என்னன்ன தோணனும்? எனக்கே என்னவோ..எவ்வளவோ  தோணுது..ஒனக்கு அந்த ஆசையே வரலியா? மரக்கட்டையாடா நீ?"

இப்படியெல்லாம் பேசுகிறாள். அவனோ முதுகில் ஒட்டியிருந்த  மணலை தட்டிக்கொண்டு அமர்கிறான்.

"நெறைய இருக்கு பொன்னி! சத்தியமா சொல்றேன்.நான் நல்லா தூங்கி ரொம்ப நாளாச்சு." என்றதும் அவளும் எழுந்து உட்கார்ந்தாள்!அவன் எதையோ  நினைத்து மனதை குழப்பியபடி படுத்திருந்திருக்கிறான் என்பது புரிகிறது.

பாசமுடன் கன்னங்களை கைகளால் தாங்கிக்கொண்டு அவனை உற்றுப் பார்க்கிறாள்.''என்ன ஆச்சு ராசு? பிரச்னையா?"

"ப்சு...!"

அவனுடைய உதடுகளில் அழுத்தி முத்தமிட்டாள்.  அப்படியே மணலில் சாய்ந்துவிட்டனர். முதன் முதலாக அவளது மார்பின் மென்மையின் சுகம்!

அவளது மூச்சுக்காற்றின் வெப்பம். யாரும் பார்க்கவில்லை என்கிற தைரியம். அவள் வெகு நேரம் உதடுகளை விடவில்லை.

விருப்பமில்லாமல் அவளது பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட தங்கராசு தயங்கியபடியே பேசுகிறான்.

"பொன்னி..உன்னை இங்கே கூட்டியாந்ததுக்கு காரணம் இருக்கு....ஆனா சொல்றதுக்கு தைரியம் வரல! அதான் ஊமைச்சாமியாரா கெடக்கிறேன்!"

"நம்ம கல்யாணத்துக்கு எதிர்ப்பு சொல்றாங்களா?"

"இல்ல. எங்கப்பனின் தொடுப்பு  செல்லத்தாயி நேத்து வீட்டுக்கு வந்து எங்கத்தாளை அடிச்சுப்போட்டு போயிட்டா...எங்கப்பன் பேச்சு மூச்சு காட்டல. எதுக்காக அவ வந்தா..என் ஆத்தாள அடிச்சா...ஒண்ணுமே புரியல பொன்னி!"

"கூத்தியாளுக்கு அம்புட்டு தைரியம்னா ....பெருசா ஏதோ ஒன்னு இருக்கு ராசு.
கண்டுபிடிக்கலாம்...! கவலைப்படாதே...நானும் தொணையா இருக்கேன்.
எந்திரி.."

தங்கராசுவும் பொன்னியும் கரையை நோக்கி நடந்தனர்.!

இன்னும் வரும். உண்மைச்சம்பவத்தின்  புனைவு.

Thursday, 10 November 2016

காதல்...காமம்.( 12.)

"என்னத்த சொன்னாரு...எல்லாம் பழைய குப்பைதான்" என்றபடியே திருப்பி  படுத்துவிட்டார்  வடிவேலு.

"என்னமோ பண்ணுங்க. என் வாழ்க்கை இப்படித்தான் சிரிப்பா சிரிச்சி  சீரழியனும்னு எழுதி வெச்சிருக்கு. அத மனுசப்பயலால மாத்த முடியுமா? என் நெஞ்சுக்குள்ள கிடக்கிற தீயை அவ்வளவு சீக்கிரமா  அணைச்சிரமுடியுமா ..அதுக்கு நான்தான் தண்ணிய ஊத்தணும்!"

வெடுக்கென்று சொல்லிவிட்டு அவளின் ரூமுக்குள் சென்று கதவை தாழ் போட்டுக் கொண்டாள்.

"பாத்தியாடி ...மாயி. அந்த குட்டி எப்படி சிலுப்பிட்டு போகுதுன்னு! மட்டு மரியாதை தேஞ்சுக் கிட்டே போகுதுடி!" என்று அங்கு வந்த மாயக்காளிடம் சொல்ல , அவளது குறையை சொல்ல ஆரம்பிக்கிறாள் மெதுவான குரலில்!

"இன்னிக்கி வெள்ளென எந்திரிச்சதும்  அந்த சிறுக்கி பச்ச மெளகாயை அப்படியே கடிச்சி தின்னுட்டு தண்ணிய குடிக்கிறா! கண்ணுல இருந்து அம்புட்டு தண்ணி கொட்டுது. பதறிப்போயி பாவி மகளே ஏண்டி இப்படி பண்றேன்னா  பதிலுக்கு வாயாடுரா! நீ ஆண்டு அனுபவிச்சிட்டவ.போயி  அடுப்படியிலே கெடன்னு சொல்றா! இந்த கொடுமைய எங்கே போயி சொல்வேன்?"

"சரி..அந்த புள்ள காதுல விழுந்துரபோகுது.. போயி .சொம்பு நெறய தண்ணி  கொண்டு வா! வயிறாவது குளிரட்டும்!" எழுந்து உட்கார்ந்து கொண்டார்.

தல்லாகுளம் போலீஸ் ஸ்டேஷனில்.....

அழகிரி என்கிற வெள்ளிங்கிரி  கையை கட்டிக் கொண்டு நிற்கிறான்.

"சொல்லு ..உனக்கும் தங்கராசுக்கும் எப்படி பழக்கம்? அப்படியே  சினிமா கதை  மாதிரி சொல்லணும். அதுக்காக உண்மையை மறச்சி பொய்யை சொல்லக்கூடாது. ஆரம்பி?"

"பொய் சொல்லி  என்ன சார் ஆகப்போகுது? " என்று சொல்ல ஆரம்பித்தான்.

"பக்கத்துபக்க வீடு ! காலேஜ் வரை ஒன்னாதான் படிச்சோம். அமெரிக்கன் காலேஜ்ல படிக்கிறப்ப அடிக்கடி குமுளிக்கு போவோம்.     எனக்கு இழுவை  பழக்கம்......"

இடை மறித்த இன்ஸ்பெக்டர் ராம்குமார் " கஞ்சான்னு தெளிவா சொல்லு" என்று திருத்தினார். " சரி  ...அது மட்டும்தானா?  அப்ப   பொம்பள பழக்கம் இருக்கணுமே...உன் நண்பனுக்கும் அனுபவம் உண்டா?"

"அவனுக்கு எந்த பழக்கமும் இல்ல சார். நான்தான் ......"

"வேற?''

"நான் காதலிச்ச பொண்ணு மேல அவனுக்கும் ஆசை இருந்தது எனக்கு தெரியாது. தங்கராசுவை அவளும் காதலிச்சா!"

"என்னடா  குழப்புற...?"

"நான்தான் அவள லவ் பண்ணுனேன். அவ ஜாடை கூட காட்டல! ஒரு நாள் சாமி கும்பிட மீனாட்சியம்மன் கோவிலுக்கு போனேன்! பொற்றாமரை குளம் படியில் ரெண்டு பேரும் உக்காந்திருந்தாங்க.பேசுனதை கேட்டேன்.

பிளாஷ்பேக்....
-------------------

"வீட்டில சொல்லிட்டியா பொன்னி? எங்க வீட்டில யாரும் எதிர்ப்பு சொல்லமாட்டாங்க!"

"எங்க வீட்டில பச்சை விளக்கு காட்டியாச்சு. நோ அப்ஜெக்சன்  ."

"அப்பறம் என்ன  சினிமாவுக்கு  வெளியூருக்குன்னு  கெளம்பவேண்டியதுதான்"

"பெறகு  நேரா 'அதுக்கும்' போகலாம்னு கேப்பியே? அதெல்லாம் வேணாம்பா! சந்திச்சமா பேசுனமான்னு  இருப்போம்.வேணும்னா சினிமாவுக்கு போகலாம். இங்கிலீஷ் படம் மட்டும் வேணாம். கையை வெச்சிட்டு சும்மா இருக்க மாட்டே?"

"என்ன பொன்னி இப்படி வாருறே...பிக்காளிப்பயன்னு நெனச்சிட்டியா? எங்கப்பா அம்மா என்னை பொறுக்கியா வளக்கல!"

தலை கவிழ்ந்தபடி சொன்னான்.

"ராஜ்... கழுத்து நெரிச்ச கோழி மாதிரி தொங்கிட்ட. ஆம்பள  தலை கவுரக் கூடாது. சரியா? வா கெளம்பலாம்." இருவரும்  எழுந்து புறப்பட்டார்கள்.

இனி அடுத்தவாரம். இது உண்மை நிகழ்வின் சிறு தொகுப்பு.
--------------------------------------------------------------------                                                                                                                                                             

Sunday, 6 November 2016

காதல்...காமம்..(பகுதி 11.)

தயை கூர்ந்து இந்த குரங்கை மன்னித்து விடுங்கள். இது நாள் வரை தட்டச்சு செய்தவரின் பிழையினால் கேரக்டர்களின் பெயர்கள் மாறி விட்டன.அதை தவிர்க்க நானே தட்டச்சு செய்ய தொடங்கி இருக்கிறேன்.
தங்கராசு.;வடிவேலு,மாயக்காளின் மகன்.
அன்ன மயிலு :தங்கராசுவின் மனைவி.
அங்கம்மா:வடிவேலுவின் அம்மா,
செவனம்மா:அன்னமயிலுவின் அம்மா.
அழகிரி என்கிற வெள்ளியங்கிரி: தங்கராசுவின் நண்பன்.
ராம்குமார்: இன்ஸ்பெக்டர்.சிதம்பரம் :சப்-இன்ஸ்பெக்டர்
செங்கமலம்:போலீஸ் ஆள்.
----------------------------------------------------------------------------------------------------------------------
 மதுரை  வண்டியூர் தெப்பக்குளத்தில் புது மாப்பிள்ளை தங்கராசு தற்கொலை செய்து கொள்கிறான்.ஏன் செய்துகொண்டான் என்பதுதான் முன்கதை சுருக்கம்
---------------------------------------------------------------------------------------------------------------
இன்ஸ்பெக்டர் ராம்குமார் வந்ததும் வடிவேலு மெதுவாக எழுந்து வரவேற்றார்.மாயக்காள் முந்தானையை இழுத்துப் போர்த்திக்கொண்டு உள்ளே சென்று விட்டாள். கிழவி அங்கம்மா மட்டும் காலை நீட்டி வெத்திலைய  இடித்தபடி...."போனதுதான் போனான் போக்கத்த பய. இப்படி  வம்பு தும்புலையா இழுத்து விட்டிருக்கணும். சென்ம சனி"என்று சத்தமாகவே சொன்னாள்.

"எதுக்கு இப்படி சலிச்சு புளிச்சிக்கிரே ! சும்மா கெட ஆத்தா!"

அம்மாவை வைதபடி  அதிகாரியை தனி அறைக்கு கூட்டிப்போனார்
வ டிவேலு. அறைக்கதவை  சாத்திக்கொண்டார்..

அன்னமயிலு  இருந்த அறைக்கதவு திறக்கிறது. அங்கம்மாளின் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள். உள்ளே பேசுவது ஏதாவது காதில் விழாதா?

"என்னத்தா..உம் புருசனை சனின்னு வஞ்சதுக்கு கோபமா?" கன்னத்தை தடவிவிட்டபடி கேட்கிறது கிழவி.

"கோவப்பட்டு என்ன ஆகப் போகுது?களைன்னு அறுக்கப்போனா பாம்பு வந்து கொத்துது. நானும் நாலு பேரைப்போல சோடி போட்டுக்கிட்டு புருசனோட  போகணும்னுதான் ஆசைப்பட்டேன். பாதகத்திக்கு அமையலியே ஆத்தா ,அமையலியே! என்ன பாவம் செஞ்சேனோ தாலி அறுத்து முண்டச்சியா  நிக்கிறேன்! தனி மரமா நிக்கிற வயசா எனக்கு? சொல்லுத்தா! மாரு சொறக்காம ...மடிப்பிள்ளை இல்லாம மலடியா வாழணும்கிறது விதியா?"

கண்ணீர் பொலபொலவென வடிகிறது அன்னத்துக்கு.

கிழவிக்கு நெஞ்சு படபடக்கிறது. அன்னத்தை அப்படியே தன் மடியில் சாய்த்துக் கொள்கிறாள்.

''மருத மீனாச்சி...உன்னோட சீமையில இப்படி ஒரு அக்கிரமம் நடக்கலாமா?கட்டுன மறுநாளே தாலியை அறுத்து விட்டுட்டியே...நீயெல்லாம் ஒரு சாமின்னு இத்தனை நாளா கும்பிட்டதுக்கு இதான் பலனா?"

கிழவியினால் இப்படித்தான் ஆறுதல் சொல்ல முடியும்!

அறைக்குள் சென்ற இன்ஸ்பெக்டர் ராம்குமாரும் வடிவேலுவும் அரைமணி நேரத்துக்குப் பின் கதவைத் திறந்தார்கள்.

வடிவேலு முகத்தில் இனம் புரியாத சோகம். கை குவித்து அதிகாரியை அனுப்பிவைத்தார். எதுவும் பேசாமல் தோமுத்ரா கட்டிலில் ஏறி சாய்ந்து படுத்துவிட்டார்.

''என்னங்க மாமா சொன்னாரு...இன்ஸ்பெக்டரு?"

கிழவியின் மடியில் படுத்திருந்த அன்னம் விட்டத்தை பார்த்தபடியே கேட்டாள்.
இனி அடுத்தவாரம். உண்மைச்சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதப்படும் சிறு தொடர்.