Saturday, 11 February 2017

காதல்...காமம்.( 24.)

வீட்டை  விட்டு வெளியில் வந்த தங்கராசு,பொன்னி இருவரும் பொடிநடையாக நடந்தார்கள்.

"நெறைய பேசணும் போல இருக்கு பொன்னி.!..சந்தோசமா இருக்கு. எங்கய்யாவும்.ஆத்தாளும் நம்ம கல்யாணத்துக்கு இவ்வளவு வெரசா சரி  சொல்லுவாங்கன்னு நெனக்கல.! நீ எதிர்பாத்தியா? ஒங்க வீட்லயும் இப்படி  சம்மதம் கெடச்சிருச்சுன்னா ...." நடந்து கொண்டே  கேட்டான் தங்கராசு,

"அத நான் பாத்துக்கிறேன். எனக்கும் மனசு நெறஞ்சு இருக்கு!இப்ப . கோயிலுக்கு போலாமா...மீனாட்சிக்கு அர்ச்சனை பண்ணனும்னு ஆசைப்படுறேன் ராசு!"

" போலாமே   உனக்கு தாய் மாமன்னு யாரும் இருக்காங்களா?" பயலுக்குள் பதுங்கிக்கிடந்த பயம் மெதுவாக   தலையை காட்டியது.

சிரித்தபடியே  அவனை ஏறிட்ட  பொன்னி. ." வெவகாரம் பண்ணுவாய்ங்கன்னு  பயப்படுறியா? எளந்தாரிக ரெண்டு பேரு ...பயில்வானுக மாதிரி...?"என்றாள்.

பயலுக்கு மனசுக்குள் பந்து உருளுது..ஆனாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல்  " இருக்கட்டுமே...எனக்கென்ன பயம்? நீ இருக்கில்ல!"

"அதான பார்த்தேன். ஆம்பளைக ஏன் பொம்பளைக பின்னாலய பதுங்குறிங்க?
எதுத்து நிக்க துப்பு இருக்கணும் மச்சான்.! மீச இருந்தா மட்டும் போதுமா?" ரோடு என்றும் பார்க்காமல் அவனை தோளில் இடிக்கிறாள்!

"இந்தாரு புள்ள. எனக்கொன்னும் பயமில்ல.வெவகாரம்னு வந்தா ஒம்பாடு ஒன் மாமனுங்க பாடுன்னு வேடிக்கை பாத்திட்டு நிக்கப்போறேன்..வருங்கால எம்மா மனும் அத்தையும் அத பாத்துக்கப்போறாங்க..பந்தல்ல உக்காந்து தாலி கட்டப்போறது நான்தானே...தாய்மாமன் சடங்கு  ஒனக்கு செய்யணுமே...கெட வெட்டி சோறு போடனுமே  அதுக்காகத்தான் நான் கேட்டேன்."

"நல்லாத்தான் சமாளிக்கிறே.!அ ந்த கவலை ஒனக்கு  வேணாம் மாப்ள!. என் மாமனும் அத்தக்காரிகளும் செய்மொறைகள்ல  குறை வைக்க மாட்டாங்க!" என்று பொன்னி சிரித்த பிறகுதான் நம்ம ஹீரோவுக்கு  மூச்சு சீராகிறது.
.'அப்பாடா."என்று ராசுவும் சிரிக்க  மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் நுழைந்தனர் !

தரிசனம் முடிந்தது.!அர்ச்சனை செய்த தேங்காய் பழத்தை பொற்றாமரைக் குளக்கரையில்   .உட்கார்ந்து பங்கு போட்டுக்கொண்டிருந்தபோது  எதிர்பாராத விதமாக வெள்ளிங்கிரி அங்கு வந்து சேர்ந்தான் .. இருவருக்கும் ஆச்சரியம். பின் தொடர்ந்து வந்திருப்பானோ? கிரியின் முகத்தில் அப்பியிருந்த சோகத்தை இருவருமே உணரவில்லை.

"வெள்ளிக்கிழமைதானே  ஜாரிகளை பாக்க வருவே..இன்னிக்கி வியாழன்டா ..?" என்று வழக்கம்போல  நக்கலடித்தான்  தங்கராசு.

"உஷ்,,,சும்மா இரு ராசு!"என்று அவனை அதட்டிவிட்டு வெள்ளிங்கிரிக்கு பழம் கொடுத்தாள் பொன்னி."என்னண்ணே...வீட்ல சண்டை போட்டிங்களா.
.சாமிகிட்ட சொல்லலாம்னு வந்திங்களா ?"

"இல்லம்மா....என்ன ஒரு பொம்பள புள்ள எமாத்திருச்சி! உசிரா நெனச்சு பழகுனேன்..அந்த புள்ளயும் அப்படித்தான் பழகுச்சு."

இடை மறிக்கிறான்! தங்கராசுக்கு கோபம். அது நியாயமும்தான் ." இதுநா வரை எங்கிட்ட இத பத்தி மூச்சு விட்ருப்பியாடா? நாங்க சினேகமா இருக்கிறத  எப்பவாவது  மறச்சமா? நாங்க சொத்தைக. நீ மட்டும் கெட்டி! இப்ப என்ன மயிருக்கு எங்ககிட்ட சொல்ற?"

"ராசு...இது கோயிலு. அசிங்கமா பேசாதே,!" என அவனை அடக்கப்பார்த்தாள் பொன்னி.."நெறையப்பேரு வந்து போகிற எடம்.  வாய விடாதே,,படிச்சவன் மாதிரி நடந்துக்க! எதுக்கு இப்படி கத்துறே? " என்றதும் . விருட்டென எழுந்த தங்கராசு பத்து படி எறங்கி போய் உட்கார்ந்துவிட்டான்

"பொன்னி..ஒனக்கு தெரியாதது இல்ல. நான் வேற சாதி. அந்த புள்ள வேற சாதி.அதுவும் . ராசுக்கு சொந்தக்காரபுள்ள. இத சொன்னா அவன் வெடச்சுக்குவானா மாட்டானா? .தயவு செஞ்சு  இப்பவும் அவன்கிட்ட இத சொல்லாதே.

 இந்த மீனாட்சி மீது சத்தியம்!.

 பழகுறது வேற. சிநேகம் வேற. ராசு வீட்டில என்னை அவங்க வீட்டுப்புள்ள மாதிரி நினைக்கிறாங்கன்னா அவங்க குணம் உசத்தியா இருக்கு,!என்னை விரும்புனவளுக்கு  அவங்க வீட்டை பகைச்சிக்கிட்டு வெளியே வர தைரியம் இல்ல. எப்படியும் சம்மதம் வாங்கிடலாம்னுதான் என்கிட்டே பழகினாளாம்.கொன்னுபோட்றுவோம்னு இப்ப பயமுறுத்துறாங்கன்னு அழுகுறா! பார்க்காதேன்னு சொல்றா! எப்படி பொன்னி தாங்குவேன்.?"

தலை குனிந்தபடி சொன்னான் .கண்ணீர்த்துளிகள் மட்டும் படி மீது விழுகிறது.

"ஐயோ கிரி...நீ இப்படி பேசுறத பார்த்து யாராவது நம்மள   தப்பா நெனச்சுக்க ப்போறாங்க.  மனச தேத்திக்கிட்டு அந்த மீனாட்சி கிட்ட போயி சொல்லு! அவ பார்த்துக்குவா!"

கிரியின் பதிலைக்கூட எதிர்பார்க்கவில்லை .மடமடவென இறங்கியவள்  தங்கராசுவின் பக்கத்தில் போய் உட்கார்ந்தாள் . அவனின் தோள் ஒட்டி  உட்கார்ந்தவளுக்கு  இப்போதுதான் பயம் வருகிறது.

"நம்முடைய வீட்டிலே காதலுக்கு இடம் இருக்குமா?"

அவனது நெருக்கம் ஆதரவாக இருந்தது.

உண்மை நிகழ்வின்  புனைவு  இது. தொடராக  வந்து கொண்டிருக்கிறது.




Tuesday, 7 February 2017

குருவம்மாளும் செங்காந்தள் பூவும்!

"குருவம்மாள்னு பேரு வச்சிருக்காங்களே ...குலதெய்வத்தின் பேரா?"

வகுப்பிலிருந்து வெளியேறியதும் ஸ்ரீதர் கேட்டது இதைத்தான். என்னமோ  தெரியவில்லை. இத்தனை நாள் பழகி இருந்தும் இன்றுதான் அப்படி கேட்டான்..

ஒரு நொடி அவனை ஏறிட்டுப் பார்த்துவிட்டு " எதுக்காக இப்ப இந்த கேள்வியை  கேக்குறே?" என்று மெலிதாக சிரித்தாள். மேலே போட்டிருந்த சால்வையை முன்பக்கமாக நன்றாக விரித்து விட்டுக் கொண்டாள்.அவள்  வழக்கமாக அப்படி செய்வதுதான். இருந்தாலும் அந்த நேரத்தில் தன்னுடைய  கேள்வி அவளை டிஸ்டர்ப் பண்ணிவிட்டதோ? அவளுக்கு தன்னை எந்த வகையிலும் கவர்ச்சியாக காட்டிவிடக்கூடாது என்பதில் அக்கறை உண்டு.

"சும்மாதான்..!" இழுத்தான் ஸ்ரீதர்.

"ஏன் இழுக்கிறே...காலேஜில் படிக்கிறவ இப்படியொரு  பேரை  வச்சிருக்காளே..
பட்டிக்காட்டுத்தனமா இருக்கேங்கிற டவுட்தானே ?"

"அல்ட்ரா மாடர்னா டிரஸ் பண்றே..இங்க்லிஸ்ல ப்ளுயன்ஷி..காலேஜ்ல  நீதான் அழகி. எல்லோரும் உன் மருதாணி போட்ட விரல்களை பார்த்து  கவிதை படிக்கிரானுக.செங்காந்தள் விரல்கள்னு புகழ்றானுக. நீயோ குருவம்மா குப்பம்மான்னு சேரி ரேஞ்சுக்கு பேரு வச்சிருக்கியே...பேரை  மாத்தி இருக்கலாமேன்னு தோணுச்சு! ஸ்டைலிஷா பேரு இருந்தா  உன் பியூட்டிக்கு இன்னும் தூக்கலா இருக்குமே....அதான் குரு அப்படி கேட்டேன்?"

"செங்காந்தள்  பூவை பார்த்திருக்கியாடா?"

"இல்ல,! தமிழ் வாத்தியார் சொல்ல கேட்டிருக்கேன். அவ்வளவு செவப்பா இருக்குமாம்.!"

"கரெக்ட். ஆனா அந்த பூ ..ஒற்றை விதை தாவரத்தை சேர்ந்தது. ரோடு சைடில, வேலி ஓரம்னு இருக்கும்.விரல்களை மாதிரியே நீளம் நீளமா இருக்கும்.!.கார்த்திகை மாசம்தான் மலரும். அந்த பூவிலிருந்து  தண்டு ,வேர்னு எல்லா பார்ட்ஸ்சுமே பாய்சன்! அந்த மாதிரிதான்  என் விரல்களும் பாய்சன்னு சொல்றியா?"

ஸ்ரீதர் ஆடிப்போனான்..

"அய்யோ  அப்படியெல்லாம் இல்ல.குரு! தெரியாம சொல்லிட்டேன்.பசங்க கவிதை படிச்சப்ப அது மல்லிகை, முல்லை மாதிரி இருக்கும்னு நெனச்சிட்டேன். சாரி..குரு!"

"நீ எதுக்குடா பீல் ஆகுறே? ஆனால் அந்த பூவின் கிழங்கு ஆயுர்வேதம், யுனானி வைத்தியங்கள்ல மருந்தா பயன்படுது.! அதனால் பேரை வச்சு எதையுமே ஜட்ஜ் பண்ணக்கூடாது ஸ்ரீதர். சரி என் பேரை பத்தி இப்படியெல்லாம் ஆராய்ச்சி பண்ணினதுக்காக நீதான் காப்பி ஷாப் கூட்டிட்டு போறே? ஓகே?"

"வித் பிளஷர்."
.

Saturday, 4 February 2017

காதல்...காமம்.( 23.)

இன்னும்  சேவல் கூவவில்லை. அடைக்கனின் பிடியிலிருந்து  மெதுவாக  தன்னை விடுவித்துக் கொண்டாள் பேச்சி. கலைந்த கூந்தலை  அள்ளி முடிந்து கொண்டாள். அவள் மனம் சொல்கிறது."கருவாயன்..காரியத்தில கெட்டிதான்.! "
 மண்ணெண்னை விளக்கை ஏற்றிவைத்து விட்டு மற்ற காரியங்களில் வேகமுடன் இருந்தாள்.குளிப்பதற்கு குளிர்ந்த தண்ணீர் சுகமாகவே இருந்தது.

கன்றிப் போயிருந்த  மாரை பார்த்தாள். இடுப்பு வலி இருந்தது. ஆனாலும்  அது  அவளுக்கு ரொம்பவே பிடித்துஇருக்கிறது.ஆங்காங்கே சற்று எரிச்சல் இருக்கிறது. அதுவும் அவளுக்கு சுகம்தான்!. படுத்திருந்த பாயை  அந்த இருட்டிலும்  தண்ணீரை விட்டு நன்றாக கழுவி சுவர் ஓரமாக சாத்தினாள்.

"மச்சான்..மச்சான்! "மெதுவாக அவனை எழுப்புகிறாள்.

"எந்திரி மச்சான்...விடியறுதுக்குள்ள வெளியேறி பஸ்சு பிடிக்கணும். அண்ணனும் வந்துரும்,எந்திரி!"

அவனுக்கு களைப்பாக இருந்தது. அந்த மெல்லிய வெளிச்சத்தில் பேச்சியை பார்க்கிறான்.

"அதுக்குள்ளே குளிச்சிட்டியா..?"

"எந்த நோக்கத்தில கேக்கிறேங்கிறது புரியிது. அதுக்கெல்லாம் இது நேரமில்ல. மிச்சம் சொச்சமேல்லாம் புது எடத்தில போயி வச்சிக்கலாம். முதல்ல குளி. நான் எங்கண்ணனை உசிப்பிவிட்டு வந்திறேன். சாமான் சட்டெல்லாம் கட்டியாகணும். ஒரு பய கண்ல பட்ற கூடாது. கரித்தூளு இருக்கு. பல்ல வெளக்கிட்டு குளி"

அரை மணி நேரத்தில் மூவரும் ரெடி. அவர்கள் பயணப்பட்டு விட்டார்கள்.

"அய்யா! இவ பேரு பொன்னி. பழக்கம்.நானும் அவளும் ரொம்ப நாளா பழகிட்டிருக்கோம்.!" என்று  வடிவேலுவிடம்  அறிமுகம் செய்கிறான்  தங்கராசு.

அவளை மேலும் கீழும் பார்க்கிறார்  வடிவேலு, " இங்க வர்றது அந்த பொண்ணு வீட்டுக்கு  தெரியுமா...ஒங்காத்தா கிட்ட சொன்னியா?" என்று  மகனிடம் கேட்டவர்  அப்படியே பொன்னியிடம்  பேச்சுக் கொடுக்கிறார்

"எந்தாயி...இந்த பயல நல்லா புரிஞ்ச்சிக்கிட்டுத்தான் பழகிறியா...உங்கம்மா அப்பனுக்கு தெரியுமா? உங்கய்யா என்னத்தா பண்றாரு?"

"வெவசாயம். நான்  சிவனாண்டி மக.!ஒங்கள  எங்கய்யாவுக்கு  தெரியும்.!"

"இப்ப வெவரம் புரியிது  தாயி, ஒங்கய்யாவையும் தெரியும். ஒங்கண்ணன் ஒருத்தன் மாடு குத்தி செத்துப்போனான்ல? நல்ல குடும்பம்தான்.. ஆண் வாரிசு இல்லாம போச்சேன்னு ஒங்கய்யா ரொம்ப வெசனப்பட்டான்."

 பேசி கொண்டிருக்கும்  போது தங்கராசுவின் அம்மா மாயக்காள்  பேச்சு சத்தம் கேட்டு அங்கு  வந்தாள். பொன்னியை அவள் இதற்கு முன்பு பார்த்ததில்லை.

"வந்திட்டியா...காப்பி ஆத்திட்டு வாடி. நமக்கு ரொம்பவும் வேண்டிய பொண்ணு. தங்கராசுதான் கூட்டிட்டு வந்திருக்கான். போயி வெரசா கொண்டா!".சம்சாரத்திடம் சொல்ல அவளும் கிளம்பி சென்றாள்.

அடுப்படிக்கு வேகமாக போன மாயக்காள் சொம்பு நிறைய  கருப்பட்டி காப்பியுடன் வந்தாள்! லோட்டாவில் ஊற்றி கொடுத்துவிட்டு  பொன்னியை  ஒரு வித ஏக்கமுடன் பார்க்கிறாள். அந்த பார்வை அவளது உள்ளத்தில் உறங்கி கிடக்கும் ஆசையை  உணர்த்தியது.

'"மகராசி,  வாக்கப்பட்டு வந்தா லட்சுமி  குடி வந்தா மாதிரிதான் இருக்கும்! நல்லது நடந்தா சரி."

இப்போது  பொன்னியிடம் பேச்சு கொடுத்தாள்.

"படிக்கிறியா தாயி! தங்கராசுவ ஒனக்கு பிடிக்குதா, ஆசைப்பட்டுத் தானே  பழகிட்டு  வர்றீக?"

கோபம் வருகிறது தங்கராசுக்கு.!

"ஆத்தா செத்த சும்மா இருக்கியா,,,ஆசை இல்லாமலா வீட்டுக்கு வந்திருக்கும் " என்று மாயக்காளை  அடக்கிவிட்டு பொன்னியை பார்த்து  "சாரி" சொன்னான்.

"விடு  ராசு.! இதையெல்லாம் பெரிசாக்காதே! பெரியவங்க மனச புரிஞ்சி நாமதான் நடக்கணும்"!

பொன்னியை அவர்களுக்கு ரொம்பவே பிடித்துப் போய்விட்டது.

வடிவேலு ஒரு தீர்மானத்துக்கு வந்தவராக." தாயி...எங்க வீடு  ரொம்ப நாளாவே  நிம்மதி இல்லாம கெடக்கு. ஒரு கொலை கேசு  இன்னும் முடியல. எம் பேரும் ஊர்ல கெட்டு கெடக்கு! இந்த சமயத்தில  ஒங்கப்பன்  நாங்க வந்து பொண்ணு கேட்டா  என்ன நெனப்பானோ...பயமா கெடக்கு தாயி.! அவசரப்படாம  ஆறப்போட்டு  பண்றதுதான் நல்லதுன்னு படுது! படக்குன்னு  ஒங்கப்பன் இஷ்டமில்லன்னு சொல்லிட்டானு வச்சுக்க.அப்புறம்  என்ன பண்ண முடியும்னு நெனக்கிறே?"

இப்பத்தான் முதன் முதலாக  வடிவேலுவை  முறை வைத்து பேச ஆரம்பித்தாள்.

"மாமா! நாங்க ரெண்டு பேருமே கல்யாணம் பண்ணிக் கொள்றதுங்கிறதில ஒரே மனசோடுதான் இருக்கிறோம். ரெண்டு குடும்பமும் சம்மதம் சொல்றவரை  காத்திருப்போம். அத ஒங்க கிட்ட இப்ப சொல்லிட்டேன். இதை எங்கய்யா அம்மாவிடமும் சொல்லிடுவேன்..ஒங்க கிட்ட  நீயே சொல்லிடுன்னுதான் ராசு என்னை இங்க கூட்டிட்டு வந்தார், அதான் வந்தேன். தப்பா நெனச்சுக்காதிங்க மாமா..வரேன் அத்தே" என்று  மாயக்காளிடமும்  சொல்லிவிட்டு  தங்கராசுவை அழைத்துக்கொண்டு  புறப்பட்டாள்.

வடிவேலுவுக்கு சந்தோசம்.

உண்மை சம்பவத்தை  அடிப்படையாக கொண்டு  புனையப்படுகிற  தொடர்,!

Saturday, 28 January 2017

காதல்....காமம்.( 22,)

தங்கராசு மட்டும் விடுவிடுன்னு அவனுடைய அறைக்குள் போகிறான்..

வெள்ளிங்கிரி பட்டாசாலையிலேயே நின்றுவிட்டான்.

"என்னப்பா எங்கிட்டோ கெளம்பராப்ல தெரியிது...மைனர் வெரசா ரூமுக்குள்ள போறத பார்த்தா சீமைக்கு போற மாதிரில்ல தெரியிது? எங்கிட்டு நோக்கம்?" --வடிவேலு கண்ணாடியை தூக்கிவிட்டுக்கிட்டு வெள்ளிங்கிரிய பார்த்து  கேட்கிறார்..

"தூரமா போகலைய்யா....சும்மா நத்தம் பக்கமாதான் போறோம். சிநேகிதனுக்கு  கல்யாணம். அதான்.ரெண்டு நாள்ல திரும்பிடுவோம்."

"ஊருப்பயலுக்கெல்லாம் நடக்கிது.இந்த கெடா மாடுக்குதான் இழுத்துக்கிட்டு திரியிது!" என்று வடிவேலு வஞ்சு முடியிற சமயமா கையில் பெட்டியுடன் வந்தான் தங்கராசு. "வாடா...பஸ்சுக்கு நேரமாச்சு." என்று வெள்ளிங்கிரியை கூட்டிக்கிட்டு புறப்பட்டு விட்டான்.

சத்திரப்பட்டியில் வெள்ளிங்கிரியின் வீடு....

வெள்ளிங்கிரியும் தங்கராசும் கயித்துக்கட்டிலில் உட்கார்ந்திருக்கிறார்கள். எதிரில் அடைக்கன் கையை கட்டிக்கொண்டு அடக்க ஒடுக்கமுடன் நிற்கிறான்.

"ஒன்ன காப்பாத்துனது யார்னு இப்பத் தெரியிதாடா? நாங்க நெனச்சத நீ முடிச்சிட்டே..நல்லது நடந்துருச்சு. மாட்டிருந்தா சென்மமோ தூக்கோ ..? ஒரு கேடுகெட்ட சிறுக்கிக்காக நீ ஏண்டா தண்டனை  அடையணும்? அதான் காப்பாத்தி அழகர்மலையில வச்சிருந்தோம். ஒனக்கு ஒரு கலியாணத்தை  பண்ணி வச்சுடுறோம். பொண்ணும் ரெடிதான். அவளுக்கும் இஷ்டம்தான். மலையில ஒனக்கு தொணையா இருந்தவனோட தங்கச்சிதான். இன்னிக்கி மொத ராத்திரிய  அவ வீட்டில முடிச்சிட்டு விடியிறதுக்குள்ள  ஆந்த்ரா பக்கமா போய்டுங்க.ஒனக்கு தொணையா இருந்தவனும் ஒங்களோடுதான் வாரான். சின்ன ஊரா பாத்து கூலி வேல செஞ்சு  பொளச்சுங்கங்க,. சம்மதமாடா அடைக்கா?"

"நீங்க இந்த நாயிக்கி என்ன செஞ்சாலும் சம்மதம்தான் எசமான்!"

மேளதாளமில்லாம.பேச்சியாயி கழுத்தில் தாலியை கட்டுகிறான்  அடைக்கன்!.கூரைப்பொடவை தங்கத்தாலி அவளுக்கு. எட்டு மொள வேட்டி,மல்லுத்துணி சட்டை .கையில ஐயாயிரம் என அவனுக்கு! மொத ராத்திரி  குடிசைக்குள்ள,.

நாக்கை துருத்தியபடி காளியாத்தா படம்.

மதுரைவீரன்,மாரியம்மன் இப்படி துடியான சாமி படங்களை மாட்டியிருந்தார்கள் குடிசைக்குள்.! கிராமத்து சாமிகள். அவை தவிர நிறைய  டப்பாக்கள். மருந்துகள்! வைத்தியர் வீடு மாதிரி இருக்கு! ..முதலிரவுக்கான  அடையாளம்னு சொன்னா அல்வா சிலேபி பால் பூ..ஊதுவத்தி இவ்வளவுதான் அங்கிருந்தன.

பாவாடை ரவுக்கையுடன் பாய் ஓரமா உட்கார்ந்திருந்தாள் பேச்சி..அவனை நிமிர்ந்து பார்க்க கூச்சம்.

"என்னலா...மொத ராத்திரி அதுவுமா பயமுறுத்துரமாதிரி சாமி படமா வச்சிருக்கே.! சினிமாக்காரிக படமா வச்சிருந்தா சாராயம் குடிச்ச மாதிரி இருக்கும்ல.நெறைய டப்பா டப்பாவா இருக்கே..அதில .என்ன இருக்கு?" பயலுக்கு சந்தேகம்.

"எங்கண்ணன் நமக்காக லேகியம் வாங்கிட்டு வந்திருக்கு.. எல்லாம் பழனில வாங்கியாந்தது......அசதியா இருந்தா அதுல கொஞ்சம் தின்னுட்டு படுத்தம்னா  நல்லதாம்."வெட்கத்துடன் இப்பதான் அவனை ஏறிட்டு பார்த்தாள்.அவனோ கடுப்புடன் பேசினான்.

"கெழட்டு பயன்னு நெனச்சிட்டானா ஒங்க நொண்ணன். ? ஒன் இடுப்ப பத்திரமா பாத்துக்கடி..கலப்ப புடிச்சு உழுத கையி. காச்சுப்போயி கெடக்கு."

அண்ணனை குத்தம்  சொன்னா  தங்கச்சிக்கு பொறுக்குமா?

''பேச்சுல காட்டாத மச்சான். செஞ்சு காட்டு. மூச்சு வாங்கப்போறது நீயா நானாங்கிறத மூணாம் சாமத்துல பாத்துறலாம்..இப்ப சிலேபி வேணுமா அல்வா வேணுமா?"---அவ அவசரம் அவளுக்கு!

"அதெல்லாம் வாணாம்  மொதல்ல .லவுக்கைய அவுத்துப்போடு!"

"அதென்ன சீமைய்ல இல்லாததா? அளந்தா பார்க்கப் போற. மொதல்ல வெளக்க  அமத்து. நான் லவுக்கைய  அவுக்குறேன்."

"கருப்பா இருந்தாலும் கெட்டியாதான்லா இருக்க.! கருவ மரம் மாதிரி."

"அய்யாமாருக சொன்னத மறந்துட்டியா மச்சான்.கருக்கல்ல எந்திரிச்சி போகணும்னு சொன்னாகள்ல. நீ பேசியே .....! ஒன்னால முடியுமா முடியாதா..இல்ல நான் ஆரம்பிக்கவா?"

பய வேகமாக வெளக்க அமத்திட்டு  அவ மேல படர்கிறான் .

அவ மென்னுட்டிருந்த வெத்தல செல்லம் இப்போது அவனது வாயில்!

இன்னும் வரும். உண்மை நிகழ்வை  புனைந்து  எழுதப்பட்டு வரும்  தொடர் இது. 



Saturday, 21 January 2017

காதல்...காமம். ( 21.)

அழகர் மலை அருகே இருக்கிற சத்திரப்பட்டியில்  வெள்ளிங்கிரிக்கு சொந்தமாக ஒரு காரை வீடு.! கொல்லைப்புறத்தில் மாடுகளை கட்டிப் போட்டிருக்கிறார்கள். பின்கொசுவம் கட்டிய வேலைக்காரப் பொண்ணுகள் அங்கும் இங்குமாக திரிகிறார்கள். அந்த வீடு வெள்ளிங்கிரிக்கு பரம்பரையாக  இருக்கிற வீடு.

"அடைக்கன் எப்படி இருக்கான்.பத்திரமா இருக்கானா..சூதானமா இருக்கனும்டா! நாயிங்க மோப்பம் பிடிச்சிக்கிட்டு திரியிதுக. கொஞ்சம் அசந்தம்னாலும் அள்ளிட்டு போயிருவாய்ங்க" என்று எதிரில் கையைக்கட்டிக்கொண்டு நின்றவர்களை பார்த்து சொல்கிறான் வெள்ளிங்கிரி.. அவன்  நாய்கள் என்றது போலீஸ்காரர்களை.! மதுரைக்காரர்களின் சங்கேத வார்த்தை.அவன்தான் அடைக்கனை கடத்திக்கொண்டு  போயிருக்கிறான்,

செல்லத்தாயி கொலை செய்யப்பட்டு ஒரு வாரமாகிப் போச்சு. வடிவேலுவுக்கு  சந்தோசம்தான் என்றாலும் அவர் மீதும் போலீசுக்கு ஒரு கண்.! அப்பப்ப வந்து  விசாரிச்சிட்டுத்தான் இருக்காங்க..அடைக்கனையும் தேடிட்டுத்தான் இருந்தாங்க.

மகன் தங்கராசுவை பத்தி சம்சாரத்திடம் விசாரிக்கிறார் வடிவேலு..

"ஒம்மவன் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பேசாமத் திரிவான்?.வாய தெறந்து பேசுனாத்தானே மனசுல உள்ளது தெரியும்? பயபிள்ளை அன்னாந்துபாத்துக்கிட்டே திரியிது. அந்த சிறுக்கிதான் செத்துப்
போயிட்டாள்ல.சனியன் தொலஞ்சதுன்னு எண்ணய தேச்சு தல முழுகிட்டுப்
போயிற வேண்டியதுதானே.?"

வடிவேலுவின் அம்மா அங்கம்மா இப்ப  வாய தொறக்கிறாள்..

"பண்றதையும் பண்ணிட்டு பேசுறான் பாரு தட்டுக்கெட்ட பய.! வீட்டுல  ஒரு  குந்தாணிய வச்சுக்கிட்டு தீனி போட முடியாம கண்ட சிறுக்கிட்ட படுத்திட்டு....  சனியனை தோள்ல தூக்கிட்டு வந்திட்டு...."

வடிவேலுக்குசொல்லமுடியாத ஆத்திரம். எந்த இடத்தில் எதை சொல்றதுங்கிற வெவஸ்தை இல்லாம போச்சா?

. " ஆத்தா! வாய மூடிட்டு இரு.!"

" சல்லிக்கட்டு மாடு மாதிரி  பய .வளந்து  நிக்கிறான். அவனுக்கு ஒரு பொட்டச்சிய பிடிச்சு கட்டி வைக்கனும்கிற  நெனப்பு அத்துப் போயி வப்பாட்டி சொகம் தேடுன ஒனக்கு என்னடா ரோசம் ?அதான் ஊரே சிரிச்சுப் போச்சே!"

"அத்தே...?" வடிவேலுவின் மனைவி மாயக்காளுக்கு  கோபம்.." ஏர்க்கால் ஏறி  ரணமாகி போயி கெடக்கிற ஆளுக்கிட்ட போயி எப்படி ஏர் பிடிக்கிறதுன்னு  சொன்ன கத மாதிரி ...புத்தி சொல்ற நேரமா இது? செத்த நேரம்  சும்மா கெடங்களேன்?"

"ஆமாடி...! ஊர்ல போற காளியாத்தா எம்மேல வந்து ஏறுடியாத்தான்னு எம்மேல பாயி! கெழட்டுபயதானேனு வெலகி படுத்தே!..வயசானா ஆசைக்கும்  வயசாகாதுடி.அவன் பாஞ்சிட்டு போயிட்டான். அதது அறிஞ்சு ஆம்பள பயலுகளை கைக்குள்ள  போட்டுக்காதவளுக கத இப்படித்தான் முடியும்! இப்ப  என்ன குத்தம் சொல்றதுல ஒரு எழவும் நடக்கப்போறதில்ல!"

"ஏத்தா ...இதுக்கும் மேல வாய தொறந்தேன்னு வச்சுக்க பெத்தவனு கூட பாக்க மாட்டேன். கொரவளையை  கடிச்சு துப்பிருவேன்."கத்தியது வடிவேலுதான்!

"ஆமாடா இப்படித்தானே வப்பாட்டி கொரவளையை நெரிக்கிறதா சொன்னே?  அதத்தான் டேசன்ல அவளே சொன்னாலாம்ல.?" என்று ஆத்தா அங்கம்மா சொன்னதும் அடங்கிப் போயிட்டார் வடிவேலு.

சொந்த வீட்டிலேயே அவருக்கு ஆதரவு இல்ல.

"மாயி...ஒங்கத்தகிட்ட சொல்லு. இப்படியே பேசிட்டிருந்தா கொடம் ஒடச்சு கொள்ளி வைக்கிறதுக்கு பிள்ள இருக்கமாட்டான்னு சொல்லிடு.!" இப்போது வடிவேலுவின் ஆத்திரம் சென்டிமென்டாக திரும்புது.

"ஆமாடி...செத்தபெறகு இவன்தான் கொள்ளி வைக்கப்போறான்னு விழிச்சு விழிச்சு பாக்கப்போறன் பாரு! எந்த நாயி எனக்கு தீயை வச்சா என்ன? எரியாம போவுமா?"

அங்கம்மா பேசிட்டிருக்கிறபோதே வெள்ளிங்கிரியும் தங்கராசுவும்  வீட்டுக்குள்  நுழைந்தார்கள்.

இன்னும்  வரும் அடுத்தவாரம். உண்மை நிகழ்வை வைத்து புனையப்படும் தொடர்.

Friday, 13 January 2017

காதல்....காமம்.( 20. )

இன்னும் அவனின் வெறி அடங்கல. கண்கள் செம்மண் நிறத்தில  சிவப்பேறிக் கெடக்கு. வரப்பையே விட்டுக்கொடுக்காத  ஊரில்  கட்டின பொண்டாட்டியை  அடுத்தவன்  தட்டிட்டுப் போனா  சும்மா  கெடப்பானா..அத்தன நாளும்  அவன்  அடங்கிக் கெடந்ததே அவ எப்படியும்  அத்துக்கிட்டுதான்  வருவா, அன்னிக்கி  போட்டுத்தள்ளலாம்னுதான்  அடைக்கண்  காத்திட்டிருந்தான்,

காரியத்தை முடிச்சிட்டான் ! அருவாளுடன்  போயிட்டிருக்கான்  போலிஸ் டேசனுக்கு.

 திடீர்னு குறுக்கால வெள்ள நெர அம்பாசடர் கார் வந்து நிக்கிது.. அவன்எதிர்பார்க்கல, சட்டுன்னு  அருவாளை  ஓங்கிட்டான். செல்லத்தாயின் சொந்தக்காரன் எவனோ  வந்து மறிக்கிறான்னு  நெனச்சிட்டான்.எல்லாமே கண் சிமிட்டிற நேரம்தான்!

"அடைக்கா! காருக்குள்ள ஏறு!"

முக்காடு போட்ட நாலுபேரு  அவனை மடக்கி  காருக்குள்ள தள்ளிட்டானுக. வானவெடி வேகத்தில அழகர்கோயில் கோயில்  மலையை நோக்கிப்  பறக்குது!

"வெட்டி தள்ளிட்டு வேலய முடிச்சவன் எதுக்குடா  டேசனுக்கு போறே? நீதான்  அவள போட்டுத்தள்ளினேங்கிறதுக்கு  என்னடா சாட்சி? பஸ்ல போறவன்  வந்து சாட்சி சொல்லப் போறானா? அவள போட்டுத் தள்ளனும்கிறதுக்காகதான் நாங்களே பஸ்சு  பின்னாடி வெரட்டிக்கிட்டு வந்தோம். ஆனா காரியத்த நீ கச்சிதமா  முடிச்சிட்டேடா !"

முக்காடை  எடுக்காம  பேசுறான். அடைக்கன் கொஞ்சம் நிதானத்துக்கு  வந்தான் .

"நீங்கள்லாம் யாரு?"

"ஒன்ன காப்பாத்த வந்தவங்கன்னு  நெனச்சுக்க." என்று எல்லோருமே முக்காடை  எடுத்துட்டு மொகத்தைக் காட்டுறானுங்க. யாரையும் அவனுக்கு  தெரியல.

அடைக்கன் தெளிவாயிட்டான்.

"என்ன காப்பாத்துறதுக்கு நீங்க யாரு? "

"அதான் சொன்னம்ல! அழகர்மலைய்ல ஒனக்கு பாதுகாப்பான எடம் இருக்கு. நேரா நேரத்துக்கு சோறாக்கிப் போடவும் ஆளு இருக்கு. வசதியா இரு. எங்கள  அனுப்பினவரு வருவாரு.அவர் சொல்வாரு. சந்தேகப்பட்டு போலீஸ் ஒன்ன தேடலாம்.அவங்க கிட்ட மாட்டாம இருக்கிறதுக்கு அவரு யோசனசொல்வாரு.
கேட்டு நடந்துக்க.அதுவர அங்கிட்டு இங்கிட்டு போகாம கெட.!"

"நம்மள காப்பாத்துறதால யாருக்கு லாபம்னு" யோசிக்க ஆரம்பிச்சிட்டான். பிடிபடல. சரி வர்றது வரட்டும்னு சும்மா இருந்துட்டான்.

அழகர்மலை அடிவாரம் வந்திருச்சு. இப்ப யாருக்கும் பயமில்ல. அவனை கூட்டிக்கிட்டு அத்தன பேரும் மலை மேல ஏற ஆரம்பிச்சிட்டாங்க. ஆள் அண்டாத எடம். நரி வரும். காட்டுப்பன்னி வரும். சமயங்களில் சிறுத்தையும்  வரும்.அதனால மூலிகை பறிக்க வர்றவங்க கூட அங்க வரமாட்டாங்க. பொதுவா சங்கிலி அறுக்கிறவன்ல இருந்து கொலை பண்றவன் வரை  பதுங்கிறதுக்கு அது  வசதியா இருந்துச்சு. போலீஸ் தேடி வந்தா மேல இருந்து பார்த்தா கீழே வர்றவனுங்களை நல்லா பாக்கமுடியும்.ராத்திரி வந்தாலும்  டார்ச்சு லைட் அடிக்காம மலை ஏறமுடியாது..அதனால பதுங்குறவனுகளுக்கு  அத விட  பாதுகாப்பு  எதுவும் இல்ல,

குனிஞ்சி போற அளவுக்கு ஒரு குடிசை.ஒசரமான புதர்களுக்கு நடுவில்  இருக்கு. அங்க நின்னிட்டாங்க.

"இதான் ஒன்  எடம்.ராத்திரிக்கு ஒதவிக்கு ஒருத்தன் சோறு கொண்டாருவான்  அவன்தான் ஒங்கூட இருக்கப்போறவன். ராத்திரி ஆனா பீடி சிகரெட்டு பிடிக்காதே..குடிசைக்குள்ளய பிடி."

'' மிருகம் ஏதாவது  வருமா?"

"பயப்படாதே. அத மத்தவன் பாத்துக்குவான், ஆயுதம்லாம் இருக்கு"

கடத்திக்கொண்டு வந்தவர்கள் மலையை விட்டு எறங்க ஆரம்பிச்சிட்டாங்க.

அடைக்கனுக்கு இன்னும் எதுவும் புடிபடல. நம்மள காப்பாத்தி அடை காக்கிற  அவசியம் யாருக்கு இருக்க முடியும்? அருவாளை கழுவனும். ஒடம்பில இருக்கிற ரத்தக்கறையை போக்கனும். பக்கத்தில ஓடை எதுவும் ஓடுமா?

அடைக்கனை  கடத்தியது  யாராக  இருக்க முடியும்? உண்மை நிகழ்வை  அடிப்படையாக  வைத்து  புனைகிற  தொடர் இது. அடுத்த வாரம்  மற்றவை  !

Saturday, 7 January 2017

காதல்..காமம். ( 19.)

மழை விட்டிருந்தாலும் பன்னீர் தூறல்! முந்தானையை  தலையில் போட்டுகொண்டு  இடது கையில் பிடித்துக்கொண்டாள். வலது கையினால்  சேலையை  தூக்கிப் பிடித்துக் கொண்டு தேங்கிக் கிடந்த தண்ணீரை  கடந்து  சென்றாள். பாதகத்தி! சேலை நனைந்து விடக்கூடாது என்று  நினைக்கிற  அந்த சிறுக்கி  தன மானத்தை ஒரு வீட்டுக்காக வித்துட்டாளே! நத்தம் போகிற  பஸ்சை பிடிப்பதற்காக  எட்டி நடந்தாள்.அவளை அறியாமல் கண்களில் கண்ணீர்.
"இப்படி சீப்பட்டு ...சீரழிஞ்சு போறியே...எதை நம்பிடி வாழப்போறே? ஒரு பய வேலை  கொடுப்பானா? மானங்கெட்டவளேன்னு  ஊரு பேசாதா? " என்று  மனசு கேட்டுக்கிட்டே இருக்கு! அதான் விம்மலும் வேதனையுமா போகிறாள்.

இங்கிட்டு வடிவேலுக்கு வேற பிரச்னை. "பிள்ளையும் மதிக்கல. மாயக்காளும் முந்தியே காரி துப்பிட்டா. ஆத்தாளும் வெளக்கமாத்தால அடிக்காத குறைதான்! அந்த வீட்டில கவுரதையா வாழ முடியுமா? நாய்க்கு  வைக்கிற மாதிரிதானே சோத்தை வைப்பாளுக..பேசாம  நாண்டுக்கிட்டு செத்துரலாமா?" இப்படி துடிக்கிது மனசு. ஆனாலும் அந்தாளு அப்படியெல்லாம்  சாகமாட்டார். கூத்தியாளுக்கு கூசாம காரை வீட்டை எழுதி வச்சவராச்சே!  அந்த தூறலிலும்  உடம்பு  சூடா  இருக்கு.மனசு  வேகும்போது  உடம்பு நடுங்கத்தானே  செய்யும்!கார், சைக்கிள் எல்லாம் மழைத்தண்ணீர் ,சேற்றையும் கலந்து அந்த ஆள் மீது  அடிக்கிது. சொரணை இல்லாமல்தான் நடக்கிறார்.

அங்கிட்டு பஸ்சை பிடிச்சு  ஏறி உட்கார்ந்தவளை முக்காடு போட்டிருந்த  ஆம்பளை ஒருத்தன் ரகசியமா  பார்த்து ரசிக்கிறான். ஈர ரவுக்கையில்  எடுப்பாக இருந்த இளமையை கள்ளத்தனமாக பார்க்கிறானோ என்னவோ! ஆம்பளையின்  கண்கள்  முதலில் மேய்வது அங்குதானே!

பஸ் நத்தம்  நெருங்குகிறது.. கண்டக்டர்  செல்லத்தாயி பக்கமாக வந்தான்.

"என்னத்தா...டேசனுக்கு போனியே...என்னாச்சு?" இளக்காரமாகத்தான் கேட்கிறான்.." அவுக  காசு பணம் உள்ள செல்வாக்கான ஆளுக. அந்தாளு கிட்ட போகும்போது யோசிச்சிருக்கவேணாமா?"

"பொத்திட்டு போடா! ஒன் பொண்டாட்டி ஊர் மேயாம பாத்துக்க!"--அவள் போட்ட சத்தத்தில் பஸ் சடன் பிரேக்  அடித்தது. அத்தனை பேரும் இடி விழுந்த எபெக்ட்டில்.!

அதே நேரத்தில் கண் இமைக்கும் நேரத்தில் முக்காடு போட்டிருந்த அந்த ஆளு  சாமியாடி மாதிரி  அருவாளுடன் கத்துகிறான்.

"ஆமாடி ..என் பொண்டாட்டிய  ஊர் மேயாம பாக்கலேடி" என்றபடியே  செல்லத்தாயின் கழுத்தில் அருவாளை வீசினான்.

மொத்த பஸ்சும் காலி...செல்லத்தாயியும் சில வினாடி உடல் துடித்தபடி காலி!

அவன்  செல்லத்தாயிக்கு தாலி கட்டியவன்! பெயர் அடைக்கன்.

ரத்தம் சொட்டும் அருவாளுடன் போலீஸ் ஸ்டேஷன் நோக்கி  நடக்கிறான்.!

உண்மை  சம்பவத்தை  அடிப்படையாக வைத்து  புனையப்படும் தொடர்,.அடுத்த வாரம்  வரும்!