Tuesday, 17 May 2016

குற்றப் பரம்பரை. (பகுதி.4,)

சிகப்பி  என்று சொன்னாலும்  அவள் மாநிறம்தான். திருச்சுழி சொந்த ஊர் .பெரிய படிப்பு  இல்லேன்னாலும் கணக்கு  வழக்கு, எழுதப் படிக்கத் தெரிஞ்சவ. சடங்கானதும் அப்பனும் ஆத்தாளும் ஊர் வழக்கப்படி  படிப்பை  நிறுத்திட்டாங்க. வயசுக்கு  வந்தப்பிறகு  அவ வாழ்க்கை  வீட்டுக்குள்ளேயே  முடங்கிப் போச்சு.முறைப்பயலுக,வயசு ஆம்பளைக யார் வந்தாலும் கதவுக்கு பின்னாடி நின்னு முகம் காட்டாமதான் சேதி கேட்டுக்குவா!

அவளை மாதிரி வயசுக்கு வந்த பொண்ணுக வெள்ளென வெடுக்குன்னு சூரியன் வருவதற்கு முன்னாடியே கம்மாய்க்கு போயிட்டு காலைக்கடனை  முடிச்சுக்கிட்டு  திரும்பிடுவாங்க.மந்தை ஆடுகள் மாதிரிதான் கூட்டமாக போவாங்க,வருவாங்க.தனியா விட மாட்டாங்க.  தனியா போகிற  மாதிரி இருந்தால் ஆத்தா, மதினின்னு உறவுல யாராவது வருவதும் உண்டு.

'செவப்பி!அன்னியத்துல கண்ணாலமா, இல்ல அத்த, மாமான்னு  உறவுல யாரையாவது பெத்து வச்சிருக்காங்களா? வயசு ஏறிக்கிட்டே போகுதடி! '

'உனக்கு அவசரம்னா உன் ஆத்தாக்கிட்ட சொல்லு? இல்லேன்னா  செந்தட்டிய  எடுத்து தடவிக்கிடி!"

மொத்த எளவட்ட சிறுக்கிகளும்  சிரிக்கிறாளுக.!.இப்படி சிலுப்பட்டத்தனமாக  பேசுவதில்  அவளுகளுக்கு  ஒரு சந்தோசம்.

'எனக்கெதுக்கிடி செந்தட்டி! அத்த மவன் ரெடியா இருக்கான். சாடை காட்டுனேன்னு வையி, மருதவீரசாமி தூக்கிட்டு போன மாதிரி  என்னைய  தூக்கிட்டு போயிடமாட்டான்?"

'அப்படி சொல்லுடி சிலுப்பட்ட சிறுக்கி!எப்படா கதவு  திறப்பான்னு  காத்திட்டு தான்  கெடக்கிறியா?"

"அடியேய்...நான் சொல்றத  சுருக்குன்னு கேட்டுக்குங்க.குமரு இல்லாம கண்ணாலம் பண்ணிக்கிட்டு மலடு இல்லாம பெத்துறனும். இதான் பொண்ணா  பெறந்தவளுக்கு மருவாதி. எங்காத்தாளுக்கு பத்து வயசிலேயே  கண்ணாலம்  நடந்திருச்சாம்.".

"உங்காத்தாளுக்கு  பத்து வயசிலேயே கண்ணாலம்னா அவளுக்கும் உன்ன  மாதிரியே அவசரம்னு சொல்லு"- செவப்பி சொன்னதும் எல்லோரும் மறு படியும் சிரிக்கிறாளுக. '' த ... பாருங்கடி எனக்கு மாப்ள எந்த சீமையில,நாட்ல
 இருக்கான்றது  தெரியாது.ஆனா ஏர பிடிச்சிக்கிட்டு இந்த கருசக்காட்டை  உழுகிறவனா  மட்டும் இருக்கக்கூடாது.அரை காசுன்னாலும் அது  சர்க்கார் கொடுக்கிறதா இருக்கணும்.'என்கிறாள்  சிகப்பி.

''எழுத படிக்கத் தெரிஞ்சவங்ற  கொழுப்புடி! அதான் பேசுறா. கலெக்டரே  வருவான்டி!கவுரு பாடியும் கவுனும் போட்டுக்கிட்டு உன் திமிர காட்டு. திம்சு  கட்ட மாதிரி இருக்கில்ல நல்லா மிதிப்பான்."

''என்னோட ஆசய சொன்னா  இவளுக்கேன்டி எங்கங்கேயோ  எரியிது.!"

'பின்னே...வேசையா போறதுக்கும்  ஒரு மொகம் வேனும்டி" என்கிறாள்  இன்னொருத்தி.

இப்படி வம்படித்தபடியே  வந்தவர்கள்  பொதுச்சாவடி வந்ததும்  தனித்தனியாக  பிரிந்து அவரவர் வீடுகளுக்கு நடையை கட்டினார்கள். ஆனால் சிகப்பியை  மட்டும் காணவில்லை. மினுக் மினுக் என எரிந்த கல்தூண் எண்ணை விளக்கு வெளிச்சத்தில் நிழல் கூட மங்கலாகத்தான்  இருந்தது.

சிகப்பிக்கு என்ன ஆனது என்பதை அடுத்த புதன் பார்க்கலாம்.


.

Tuesday, 3 May 2016

நடிக்க மறுத்த நயன், காஜல், இலியானா...என்னடா சோதனை!

சின்னதாக  உறுமினாலும் அந்த காடே  அலறி நடுங்குமாம். அப்படி ராஜாவாக  வாழ்ந்த சிங்கத்துக்கு   வயசாகிப் போனதால் எலி கூட  மேலேறி  என்ன மச்சான் என்று உறவு கொண்டாடுமாம். என்.டி.ஆர்.பாலகிருஷ்ணா எப்படியெல்லாம்  வாழ்ந்தவர், அவருடன்  நடிக்க முடியாதுன்னு ஒரு வார்த்தை சொல்ல முடியுமா? மொத்த  தெலுங்கு இண்டஸ்ட்ரியே  அந்த நடிகைகளை  பாய்காட் பண்ணி பார்சல் பண்ணி அனுப்பி விடாதா?

பாவம்தான்! வயசாகிப் போச்சு.முன்னைப்போல வேட்டை ஆட உடம்பில  தெம்பு இல்ல. இருந்தாலும் ஆசை விடல. விடலைப் பொண்ணுகளுக்கு  குறி  வைத்தால் 'சீ யூ லேட்டர் சார்" என்று  சல்யூட் அடித்துவிட்டு  கழன்று கொள்கிறார்கள்.

டைரக்டர் கிரிஷ்  முதலில் நயன்தாராவை  அணுகி கதையை சொன்னார். முழுக்கதையையும் கேட்டுவிட்டு 'தமிழ்ப்படங்களுக்கு  கால்ஷீட்டை பிரிச்சு  கொடுத்திட்டேன்.சாரி சார்!"என்று நழுவிவிட்டார்.

அவர்தான் நம்பர் ஒன் நடிகை.அப்படி சொல்லிவிட்டார்.இந்த காஜலுக்கு  வந்த வாழ்வைப்  பாருங்களேன்.வேணாம் சார்னு  ஓடியே போய்விட்டார், இவராவது  பரவாயில்லை. இலியானாவுக்கு கதை பிடித்துவிட்டது, ஆனால் இளம் ஹீரோயின் வேஷம் இல்லை.சற்று  முதிர்ச்சியான வேஷம் என்றதும்  அவரும் கதவை  மூடிவிட்டார்,

மே மாதம் ஷூட்டிங்! பாரின் போயாக வேண்டும். பாலகிருஷ்ணா என்ன சொல்வாரோ என்று டைரக்டர் கிரிஷ்  தலை கீழாக  நிற்கிறார். வேட்டையில்  சிக்குவதாக இல்லை. ராய் லட்சுமியை  கேட்டுப்பார்க்கலாம். அவர்தான்  ஜூலி பார்ட்  டூ படத்துக்காக  ஜிம் போய் சிக்கென  மாற முயற்சிக்கிறார்.

"உடம்பு காட்டி நடிப்பதில் பிரச்னை இல்லை. ஆனால் ஜூலி இரண்டில் நடிப்பில்   பின்னி எடுக்கப்போகிறேன்" என்று சொல்லியிருக்கிறார்.;

   

குற்றப்பரம்பரை. ( பகுதி.3.)

அந்த  கிராமத்து பொம்பளைக பெரும்பாலும்  ராத்திரி நேரம்தான்  கம்மாக்கரை  பக்கமாக  ஒதுங்குவார்கள்.அதுவும்  நாலஞ்சு பொண்டுக  சேர்ந்துதான் .போவார்கள்..வழக்கம் போல  ஊர்வம்புகளுக்கு பஞ்சம்   இருக்காது. அதென்னமோ  அடுத்த வீட்டில் அம்மிக்கல்லு சத்தம் கேட்டாலும்  அதுக்கு ஒரு கதை இருக்கும்.உறவு முறை சொல்லித்தான் வம்படிப்பார்கள்.

" அயித்தே..அந்த பேராவூரணிக்காரிக்கு கண்ணாலம்  கட்டி ஒரு மாசம் கூட  ஆகல..புருசன் முத்தையா அப்படி ஆடுறானாம்.வயலுக்கு போற பய மத்தியானமே  ஊட்டுக்கு வந்திரானாம்.அவனோட  ஆத்தா அப்படி இப்படி   சொல்லி பொலம்புரா! ஊட்டுல பெருசுக இருக்கேங்கிற வெவஸ்தை கூடவா இல்லாமப் போகும்?

"வயசில  அவளும் புருசனை கைக்குள்ள வச்சிருந்தவதானே? நாளைக்கு  உனக்கும் கண்ணாலம் நடந்தா அரமுடியை போட்டுமூடிக்குவியா?அவன் தொட்டதுமே அவுத்துப் போட்டிற மாட்டே? வயசுல பண்ணாததை கூனு  விழுந்து  பண்ணிவியாக்கும்,வாடி  சும்மா!  இப்பவே நெஞ்சு முந்தானிய விட்டு திமிரிக்கிட்டிருக்குது..."என்று அயித்த உறவு கொண்டாடும் அரைக்கிழவி சொன்னதும் ஆளாளுக்கு இருட்டுக்குள் புதர் மறைவாக உட்கார்ந்து விட்டார்கள்.. அவர்களில் ஒருத்திதான்  மாயக்காள்.

எப்போதும்போல  அன்றும் ஆள் சேர்ந்துதான்  வயக்காட்டு பக்கமாக  ஒதுங்கினார்கள். மாயக்காள் கொண்டைக்குள்  சொருகியிருந்த  மல்லிகை  அந்த இருட்டிலும் அவளை அடையாளம் காட்டியது. அவளுக்குத்தான்  மல்லிகைக் கொடி குடிசைக்கு பின்பக்கம் இருந்தது.

'என்னடி வெவரம் கெட்ட சிறுக்கியா இருக்கே. உன் வீட்டில மல்லிக்கொடி இருக்குங்கிறது ஊருக்கெல்லாம் தெரியணுமாக்கும்?  நாண்டுக்கிட்டு  செத்தவளுக ஆவியா அலையிற நேரம்டி இது.பூ வாசம்னா பேய்களுக்கு  ரொம்பவும் புடிக்கும் " என்று ஒருத்தி  பயத்தை  கூட்டினாள்.

மாயக்காளா மசங்குவா? "அடி போங்கடி பொசகெட்ட சிறுக்கிகளா?பத்து பேய் வந்தாலும் ஒத்த சிறுக்கியா நின்னு  ஆஞ்சுபுடமாட்டேன்.வந்தா என்கிட்டதானே  வரும்,வரட்டும்  பாத்துக்கிறேன்"என்று  வழக்கத்துக்கு மாறாக  கம்மாய் கரை பக்கமாக ஒதுங்கினாள்.மத்தவளுக்கெல்லாம் பயம்  கவ்விக் கொண்டது. ஆம்பளை,பொம்பளைன்னு தூக்குல தொங்குவது  அந்த  ஆலமரத்தில்தான்! அதனால் பகல் நேரத்திலும்  ஆள் அரவம் அவ்வளவாக இருக்காது,

மாயக்காள் ரொம்பவும் பழக்கப்பட்டவள் போல  ஆலமரத்துப் பக்கமாக  ஒதுங்கி  எல்லா பக்கமும் பார்த்தாள்..

கனைக்கிற சத்தம் மெதுவாக கேட்டது.

பதிலுக்கு இவளும் செருமினாள்.

காய்ந்த சருகுகள் மீது பாம்பு  ஊர்கிற மாதிரி   சத்தம். அந்த  இருட்டிலும் அவளுக்கு  அடையாளம் தெரிந்தது.

மடியில் சுருட்டி மறைத்து எடுத்து வந்திருந்த கருப்பட்டி பணியாரங்களை  அந்த ஆளிடம் கொடுத்தாள்.

மாயக்காளும் அந்த ஆளும் எதிர் எதிராக உட்கார்ந்தனர்.

'ஏத்தா..எத்தன ஆபத்து  சுத்தி  வளச்சி நிக்கிதுங்கிறது  தெரிஞ்சும்  இப்படி வர்றியம்மா...சிக்குனா ஒன்னையும்ல இந்த  ஊரு பேசும்!  நான் ஆம்பள.எப்படியும்  இருந்திருவேன்   நீ பொட்டச்சி. அடுத்த ஊட்டுக்கு வாழப்போறவ,இந்த குத்தவாளிய ஒவ்வொரு  விசாழக்கெளமையும்தேடி  வந்து  ஊரு நெலவரத்த சொல்றியம்மா." ரொம்பவும் மெதுவான குரலில்தான் பேசுகிறான்.அவளும் அதே மாதிரி  பேசுகிறாள்.காற்று கூட  கடத்திச்செல்ல முடியாது.அவ்வளவு சன்னக்குரலில்!

'அண்ணே..கூடப் பொறந்தாதான்  உறவா? என்னை வேத்தாளுன்னு  நெனைச்சுப் போடாதே...இப்பவும் கேக்கிறேன்..செவப்பியும் உன்ன  மனசாரத்தான்  விரும்புனாளா? மறைக்காம சொல்லு.!"

சற்று நேரம் கழித்துதான்  பதில் வந்தது.

''மொதல்ல என்னை  கொலைகாரன்னு  நீ நம்புறியா,அத சொல்லும்மா!"என்று கேட்டது  அந்த  ஆண்குரல்.

மாயக்காளுக்கு  என்ன  சொல்றதுன்னு  புரியல.

அடுத்த  புதன் கிழமை  அவனுக்கு  உண்மை தெரியும்.

உங்களால்  யஊகிக்க முடிகிறதா?

Monday, 2 May 2016

பெரிய நடிகருக்கு 'இது 'அழகா?

நமக்குத்தான்  அது தப்புன்னு படுதா?

இல்ல அப்படியெல்லாம் நினைக்காதே  இது  மாடர்ன் கல்ச்சர்  அதெல்லாம் தப்பா அவங்களே  நினைக்கமாட்டாங்க. உனக்கேன்  வயிறு  எரியிதுன்னு  சொல்வாய்ங்களா?

என்.டி.ராமாராவை  ஆந்திராவில  தெய்வமா  கொண்டாடுவாங்க,அவர்  ராமர் ,கிருஷ்ணர்  வேஷம் போட்டா  ஜனங்க  விழுந்து விழுந்து கும்பிடுவாங்க. அப்பேர்ப்பட்ட மகானுக்கு இப்படி ஒரு பிள்ளையான்னு  இப்ப  ஆந்திர சினிமா உலகத்தில  என்.டி.ஆர். பாலகிருஷ்ணாவை  பத்தி பேசாத ஆளே இல்லேங்கிறாங்க. ஆளு  செம ஜாலியானவர். சினிமாவில் இருக்கிறவர்களுக்கு  என்னன்ன  பழக்கங்கள் இருக்கணும்னு  ஒரு எழுதாத  சட்டம் இருக்கோ அதெல்லாம்  இவருக்கும் இருக்கு.நம்ம தமிழ்ச்சினிமா மட்டும் விதி விலக்கா என்ன? அட உலக சினிமாவிலேயே  அந்த பழக்கம்  இருக்கு.ஆனா இந்திய கலாசாரத்துக்கு  சரிப்பட்டு வருமா? இப்படி சிலர்  கேட்கிறாங்க. இந்திய கலாசாரம்னு பொதுவானது ஏதாவது இருக்கா? ஒவ்வொரு மாநிலமும் வெவ்வேறு கலாசாரம்னு  வாழ்கிற பூமி  இது. இதில் என்ன பொதுவானது? ஒரு வெளக்கமாறும் இல்ல. அப்படி இருக்கிறபோது  என்.டி.ஆர் .பாலகிருஷ்ணா 'நாயகி" படத்தின் விழாவில் நம்ம திரிஷாவுக்கு  அசைவ முத்தம் கொடுத்தது  எப்படி தப்பாகும்.?அத அந்த அம்மாவே  தப்புன்னு  சொல்லலே என்கிறபோது  சிலபேருக்கு மட்டும் ஏன் எரியிதுன்னு  கேட்கிறேன்.நமக்கு மட்டும் ஏன் தப்புன்னு படுது? நம்ம சிம்புவும்  திரிஷாவும்  லிப் கிஸ் கொடுத்தாங்களே..அத எல்லோரும்தானே  பார்த்தோம்.

அதனால சினிமாவில அசைவமுத்தம் என்பது  பழக்கமாகிவிட்டது.அதை  தப்புன்னு சொல்லக்கூடாது  என்பது  என்னுடைய கருத்து.

இப்படிக்கு ,
குரங்கு.
தேவாரம்.

Saturday, 30 April 2016

ஓம்....புல்லட் பாபா நமஹ!!!

 அது உண்மையா,புருடாவா என்பது கூட தெரியாது. ஆனால் சிலருக்கு  கும்பி  கொதித்து குடல் கருகிய வாசம் மட்டும் வந்தது. அதாவது  குஷ்புவுக்கு  கோவில் கட்டப்போவதாக  யாரோ கொளுத்திப் போட்டது  பட்டிமன்ற தலைப்பாகி  ஒவ்வொருத்தர்  வாயிலும் அரை  பட்டதே,. நடிகைக்கு  கோவிலா  என  கேட்டு  பகுத்தறிவு  பொங்கி  ஓடியதே...ஞாபகம் இருக்கா?.

ஆனால் வடக்கே  ஒரு மோட்டார் பைக்குக்கு கோவில் கட்டி நமஹா பாட்டு  கூட போட்டிருக்கிறார்கள் சாமி!. இதையெல்லாம்  பார்க்கிற போது  முட்டாள்த் தனத்தை நாம் மட்டும்  முதலீடாக  வைத்திருக்கவில்லை  என்று   ஆறுதல் பட்டுக்கொள்ளலாம்..!

ஜோத்பூர் மாவட்டம். பாலி என்பது ஊரின் பெயர் . இந்த  ஊரின் வழியாக ஒருவர் மோட்டார்  பைக்கில் சென்று இருக்கிறார்.திடீரென ஒரு இடத்தில்  கட்டுப்பாட்டை  இழந்து அங்கிருந்த மரத்தில் மோதிவிட்டது. பயணம் செய்தவர்  ஆன்  த ஸ்பாட்  அவுட். லோக்கல் போலீசார் வந்து  மோட்டார் பைக்கை  ஸ்டேசனுக்கு கொண்டு போய்விட்டார்கள்.முறைப்படி  என்னவெல்லாம்  செய்யணுமோ  செய்து முடித்துவிட்டார்கள்.

 ஆனால் மறுநாள் பைக்கை காணவில்லை. எவனோ ஸ்டேசனுக்கு வந்து கைவரிசையை காட்டிவிட்டானே என்கிற கோபம் போலிசுக்கு!.

ஆனால் தகவல் வேற விதமாக வந்தது. எந்த இடத்தில் ஆக்சிடென்ட்  நடந்ததோ  அந்த  இடத்தில் பைக் கிடப்பதாக சொன்னார்கள்..என்னடா இது  மாய வேலையாக இருக்கிறது  என்று குழம்பியவர்கள்  பைக்கிலிருந்த பெட்ரோலை காலியாக்கிவிட்டு மறுபடியும்  ஸ்டேசனில் பைக்கை  ஒரு சங்கிலியால் கட்டி வைத்தார்கள்.

மறுநாள்  பைக் மறுபடியும்  ஆக்சிடென்ட் ஸ்பாட்டுக்கே  போய்விட்டது.எப்படி போனது எவன் கொண்டுபோய்  அங்கே போட்டிருப்பான் என்பது  தெரியாமல்  கடவுளின் விளையாட்டுதான் என முடிவு கட்டிவிட்டனர்.

  பைக்கை அந்த  இடத்திலேயே வைத்து பூஜை பண்ணிவிட்டார்கள் .அதை புனித இடமாக்கி  திருவிழாவும்  கொண்டாடி வருகிறார்கள். பஜனை பாட்டும் ரெடி.விபத்தில் செத்தவரின் படத்தையும் மாட்டி வைத்திருக்கிறார்கள்.

இந்து புராணப்படி முப்பத்தி மூணு  மில்லியன் கடவுள்கள்  இருக்கிறார்கள். இதெல்லாம்  அடிசனல் தான். நம்ம சச்சின் டெண்டுல்கருக்கும் பிகார் மாநிலம் கைமூரில் ஒரு கோவில் இருக்குப்பு.!

இன்னும் அலசினால் இப்படி நிறைய பகுத்தறிவு  சமாச்சாரங்கள் கிட்டும்னு  நம்புறேன்.அலசுறேன்.
      

Wednesday, 27 April 2016

குற்றப்பரம்பரை.( பகுதி.2.)

'சொத்' என சுள்ளிக்கட்டுவை கரம்பை  மண் பூமியில் போட்ட மாயக்காள்தான் அவனை முதலில் பார்த்தாள். இந்த பயபிள்ளை எதுக்கு  இந்நேரம் இந்த பக்கம்  அலையிது என்று  மனதுக்குள்  நினைத்தபடி ' ஏலே....ஊலமூக்கா ...இந்த  பொட்ட வெயில்ல சேவ கூட  கேறாது.நீ  எங்கடா  இங்கிட்டு...? எந்த  சிறுக்கி மகளுக்கு சுருக்கு போட்டிருக்கே?"-சாதாரணமாக கேட்டவள்  'புழுச்'சென புகையிலை சாற்றை துப்பினாள்.

அவன் அந்த பகுதியிலேயே  ஜெகஜால கில்லாடி.வாழ்வாதாரங்கள்  அற்றுப் போய் விட்ட அந்த கரம்பக் காட்டில் வயசுப்பயல்கள்  பெரும் பாலும் பட்டணம் பக்கத்தில் இருந்த நகரங்கள் என புலம் பெயர்ந்து போய்விட்டனர்.அப்படி  கள்ள ரெயில் ஏற முடியாதவர்கள்தான்  கிராமம் ,கிராமமாக போய்  கைவரிசையை காட்டிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவன்தான் ஊளமூக்கன்  என்கிற மூக்கன். சின்ன வயதில் மூக்கிலிருந்து  எப்பவுமே  சளி  வழிந்தபடி இருக்கும்.அதனால் எல்லோருக்கும் அவன் ஊளமூக்கன்தான். எளந்தாரி.பயம் அறியாதவன்.அவனை பெத்தவர்கள் வசதியானவர்கள்தான். பங்காளிகளின் பிள்ளைகள் பட்டணம் போய் படித்து கவர்மெண்டு  உத்தியோகத்தில்  இருக்கிறார்கள்.பங்காளிகளின் துரோகத்தினால்  மூக்கனின் அய்யா தவசி சொத்தை பறி  கொடுத்துவிட்டு அதே ஏக்கத்தில் சிவலோகம் சேர்ந்துவிட்டார். ஆத்தா  பேச்சியக்கா மட்டும்தான் இப்போது  மூக்கனுக்கு ஆதரவு.பேச்சிக்கு  அவன் ஆதரவு என்று வாழ்கிறார்கள்.

'என்னத்தா..இந்த  சிறுக்கியோடு எங்கிட்டு போயிட்டிருக்கே? கெட்ட சிறுக்கியாச்சே இவ.! ஈர முந்தானையில்  சண்டை சாவலையே  ஊமையாக்கி  கொண்டு போயிருவாளே..இவளோட சகவாசத்தை  அத்துப்போட்ரு. இல்லேன்னா உன்னையே வித்துருவா!' என கேலி பேசினான் மூக்கன்..

செவனம்மா  சும்மா இருப்பாளா?  கல்லூரணியே இவளைக் கண்டால் பம்மிக்கொள்ளும். கெட்ட வாயாடிச்சிறுக்கி. கருத்த மேனி என்றாலும்  மதர்த்த மார்புகள். உள்பாடி அணிவதில்லை.அவள் மட்டுமல்ல அந்த பகுதி பெண்கள் அதை பெரிதாக நினைப்பதில்லை. சீலையை  இழுத்து இறுக்கமாக  சுற்றிக்கொண்டுதான் வயக்காட்டிலேயே கால் வைப்பார்கள். வயசுப்பயல்கள் கண்கள்தான் யாருடைய சீலை முந்தாணி  ஒதுங்கிகிடக்கு என்று கண்களை  மேயவிடுவார்கள். கருத்த மேனியில் வெயில்படாத மார்பகங்களை பார்க்கிறபோது வளைக்குள் இருந்து  முயல் எட்டிப்பார்ப்பது போலிருக்கும்,
இவளைத்தான்  சீண்டினான்.

"ஆமா.. சீமைத்தொரை  செவப்புக் குதிரையேறி சில்லாவை  சுத்தி வர்ற வேலை  பாக்கிறாரு.களவாணிப்பயலெல்லாம் கதியத்துப் போயிக் கெடக்கானுகளாம்
.முடிச்சவிக்கி, மொள்ளமாரி ,கூட்டிக்கொடுக்கிரவய்ங்க,கூத்தியா  வச்சிருக்கிறவய்ங்கல்லாம் தொரை  வந்திட்டார்னு  எறும்புக் குழிகுள்ள  பதுங்கி இருக்காய்ங்களாம்.வக்கத்தவனுக்கு வாயைப்பாரு!"என்று  பதிலடி  கொடுத்தாள் ,

மாயக்காளுக்கு  ஒரு வகையான அச்சம். இந்த சிறுக்கி  இப்படி வாயடிக்கிறாலே  நாளைக்கு ஒத்த செத்தையில பயகிட்ட  மாட்டிக்கிட்டால்  அவன் சும்மா விட்ருவானா? வாயைப் பொத்தி  வரப்பு மேலேயே  வாழ்ந்திருவானே என்கிற பயம்..

அவள் அப்படி நினைத்ததிலும்  ஒரு உண்மை இல்லாமல் இல்லை.

அது  என்ன அடுத்த புதன் வரை பொறுத்துக்கொள்க. உங்கள் கருத்துகளை  பதிவிடக் கூடாதா? எனக்கு  உற்சாகமாக இருக்கும்.

Saturday, 23 April 2016

குற்றப்பரம்பரை....பகுதி 1.

மொட்ட வெயில்.. காய்ந்த சுள்ளியோடு  இன்னொரு  சுள்ளி  உரசினாலே  பற்றிக்கொண்டு விடும்.அந்த அளவுக்கு சூரியன் சுட்டெரிக்கிறான்.
.காலில் குத்திய  கருவேல முள் செவனம்மாவை எதுவுமே  செய்யாததைப் போல ஆடுகளை பத்திக் கொண்டுபோகிறாள்.கரடுமுரடான பாதையிலும் பாறைகளிலும் நடந்து நடந்து பாதங்கள் காய்த்துப் போயிருந்தனவோ என்னவோ!.காய்ந்து வரண்டு போய்க் கிடக்கும் பூமியில் ஆடுகளுக்கு  வாயில் பற்றி  இழுக்ககூட  புல்,பூண்டு இல்லை.கருவேலங்காய்களை  தேடின. கிடைக்க வில்லை.  சிறுக்கி மகள் ஒதுங்குவதற்குக் கூட பெரிய மரங்கள் இல்லை. பொட்டக்காடு.அனல் காற்று வீசுகிறது.கழுத்தை அறுத்துப் போட்டாலும் ஒரு பயல் கேட்கமாட்டான்.  எது நடந்தாலும் யாரும் கேள்வி கேட்பார் கிடையாது. அழுக்கேறிய சேலையின் முந்தானையால்  முக்காடு போட்டுக்கொண்டு ஆடுகளின் பின்னாலேயே போகிறாள்.

''த்தே....த்தே "என்றபடி கையிலிருந்த குச்சியால் வலப்புறமும் இடப்புறமுமாய் தரையை தட்டியபடியே சென்றவளை காற்றில் மிதந்து  வந்த குரல் பிடித்து நிறுத்தியது.

''அடியே...ய்  செவனு....!''

திரும்பி பார்க்கிறாள். அது மாயக்காள். தலையில்  சுள்ளிகட்டு.வேகு வேகு என்று வருகிறாள். இவளுக்கு துணையுமாச்சு.ஊருக்குப்   போய் சேரும்வரை அலுப்பு தெரியாமல் இருக்குமே!

'செத்தெ  நில்லுடி. வந்திர்றேன் !"என்கிறாள் மாயக்காள் .

அருகில் வந்தவள்  மடியில் வைத்திருந்த வெள்ளரிப்பிஞ்சுகளை  எடுத்துக் கொடுத்தாள். இருவருக்கும் சம வயதுதான் என்றாலும் மாயக்காளுக்கு கல்யாணம் நடந்துவிட்டது..

"மாமென்  என்ன பண்றாரு?"என்றாள் செவனு.

"திருந்துற  சென்மமா தெரியலடி...முந்தானைய  விரிச்சுப்போட்டு  ஆம்பள  வாசம் அறிஞ்சதோடு  சரிடி செவனு! அந்த மனுசன் என்ன பண்றான் எங்கே போறான் எவகிட்ட  படுத்தான்கிறதல்லாம் அந்த மந்தவெளி  காளியாத்தாளுக்குதான்  தெரியும்.எந்தலையில  ஏரை  வெச்சு  எழுதிட்டான் ஈசன்!"-கண்களில் பொல பொல வென கொட்டுது கண்ணீர். முந்தானையினால்  துடைத்துக் கொண்டு அப்படியே  மூக்கையும் துடைத்துக் கொள்கிறாள்.

"அடியாத்தி...இம்புட்டு வெசனத்தை நெஞ்சில சொமந்துக்கிட்டுதான்  நடமாடிட்டி திரியிறியா? ஊட்டை விட்டு கெளம்புற மாமென் எப்பதான்  திரும்பும்?"

"செவப்பு தொப்பிக்காரன்  வந்து  என்னை டேசனுக்கு கூப்பிடுவான் பாரு.  அப்ப தெரியும்!"

"களவாணியா?''

"இல்லடி  அப்படியிருந்தா கொஞ்சம்  கவுரதையா இருந்திருக்குமே. கட்சிக்கார பயலுக பண்றத என் மாமெனும் பண்ணுதுன்னு  மனசுக்குள்ள  அழுது தீர்த்துக்கலாம்,எவனவனோடவோ  கூட்டு சேர்ந்துகிட்டு   மயானத்துல  சாராயம்  காச்சி வித்துக்கிட்டு திரியிதுடி! இதுல டேசன்காரய்ங்களுக்கும் பங்கு இருக்கு. இருந்தாலும்  மாமெனை மட்டும்  பிடிச்சிட்டு வந்திராய்ங்க. ஆனா எப்படியோ  தண்டம் கட்டிட்டு  வீட்டுக்கு வந்துருது! காசு எங்கேர்ந்து  வருதுங்கிறதும் தெரியலடி!அந்த தூமச்சீல மட்டும் யாருன்னு தெரியட்டும்.வெலக்குமாறால வெஞ்சாமரம்  வீசிற மாட்டேன்."-மாயக்காளின்  பேச்சில் வெலம் இருந்தது.

''நொம்பலப்படனும்னு விதி.பொட்டச்சிக  விதிய கருகமணி  தாலிக்கயித்தில  தொங்க விட்டிருக்கு.என்ன பண்றது? "என்று வருத்தப்பட்டவள் ஒத்த பூவரச  மரத்தைப் பார்த்ததும் ''சரி..சரி...முச்சூடும் உக்காந்து  பேசிட்டா ...உச்சந்தலையில உக்காந்திருக்கிற சனியன் எறங்கி போயிருமா? சுள்ளிக்கட்டை எறக்கி போடு" என்றபடியே  நிழல் தேட.....

ஆம்பள  நிழல்  தெரியிது.
         -------  வருகிற புதன் கிழமை  அது  யார்னு  தெரியும். அதுக்குள்ளே உங்க  கருத்து என்னங்கிறத எனக்கு சொல்லலாமே!