Showing posts with label காதல் காமம்.பகுதி ஏழு சிறுதொடர். உண்மையான நிகழ்வை ஆதாரமாக கொண்டது.. Show all posts
Showing posts with label காதல் காமம்.பகுதி ஏழு சிறுதொடர். உண்மையான நிகழ்வை ஆதாரமாக கொண்டது.. Show all posts

Sunday, 2 October 2016

காதல்...காமம் !( பகுதி எட்டு )

செங்கமலம்  அங்கு வந்த போது எழவு வீட்டின்  அட்மாஸ்பியர் சற்று  மாறி இருந்தது. மாயக்காளின் சோகம் சற்று குறைந்திருந்தது. குளித்து முழுகி  சேலை மாற்றியிருந்தாள்.

"ஆத்தா...அழுது பொலம்பி இனி ஆகப்போறது எதுவுமில்ல.இனி நடக்கப் போறததான் பாக்கணும்! அன்னமயிலு  என்னென்ன  நெனச்சிட்டிருந்தாளோ
பாவி மகன் இப்படி போயி சேந்துட்டானே...என்ன கொறைய கண்டானாம் அந்த  சொரண கெட்ட பய! .விடுத்தா..அவன் கொடுத்து வச்சது அவ்வளவுதான்
.நம்ம பொண்ணோட வாழறதுக்கு அவனுக்கு கொடுத்து வைக்கல." என்றபடி  மாயக்காளை நெருங்குகிறாள் செங்கமலம்.!

இவளின் நோக்கம் அவளுக்கு தெரியாமல்  வெகுளியாக பேசுகிறாள் மாயக்காள்.

"அன்னத்தை பாத்தியா...அவ எப்படி இருக்கா.? பெத்த மக அத்துப் போட்டுட்டு  அங்க கெடக்கிறா ...சாந்தி கழிச்ச சந்தோசத்தை  பெத்த சிறுக்கி  அனுபவிக்க முடியலையேடி! செக்குல சிக்குன கை மாதிரி ஆகிப் போச்சே எங்க பொழப்பு.!அவ மொகத்த பாக்கிற  தைரியம் இல்ல. சந்தோசமா என் கிட்டவந்து  வெக்கப்படவேண்டிய மகளை    விதி எந்த கோலத்தில விட்ருக்கு! பாத்தியாடி பய மகளே!" என்று செங்கமலத்தை கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள்.

"சரித்தா...அழுது பொறண்டாலும் மாண்டார் திரும்பி வருவாரோன்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க. நடக்கப் போறத நல்லபடியா பாத்துக்கணும் அதான் பெரியவங்க .கடமை .! "

பேசிக்கொண்டே வந்த செங்கமலம் இப்போது நைசாக கொக்கி போடுகிறாள்.

"அந்த ராத்திரியே நீ  இந்த வீட்டுக்கு வந்திருக்கக்கூடாது . அங்கேயே இருந்திருக்கணும் .நீ அங்கே இருந்திருந்தா  அந்த பயல வெளியே விட்ருக்கமாட்டியே!"

மாயக்காள் பெருமூச்சு விட்டபடியே "எந்த சிறுக்கிடி அப்படி  சொன்னா  நான் இங்கே வந்துட்டேன்னு? மச்சுப்படி ஓரமாதான் படுத்துக் கெடந்தேன்.என் மாமியா கோவமா வந்து மிதிச்சபெறகுதானே கண்ணே  முழிச்சேன்.அப்புறமாதான்  மாப்ளைய காணோம்கிறது  தெரிஞ்சிது. மனுசங்களை பாக்கிறத்துக்கு  வெக்கப்பட்டுக்கிட்டு எங்கேயாவது  இருப்பான்னு  வெள்ளந்தியா நெனச்சிட்டோம். இப்படி விட்டுட்டு போவான் பாவிப்பயன்னு யாருடி  நெனச்சா? எங்கேயோ  விழுக வேண்டிய இடி என் வீட்டு விட்டத்திலேயே  விழுந்திருச்சு!"என்றாள் விம்மலை விழுங்கியபடி!

இப்போது மெதுவான குரலில்  செங்கமலம்.."ஏத்தா..அது நல்லபடியா முடிஞ்சிருச்சுன்னு சந்தோஷப்படுறதா துக்கப்படுறதான்னு தெரியலியே ! நீங்கல்லாம் என்ன நெனக்கிறிங்கன்னும் தெரியல."

முதலிரவு பற்றி அவள் கேட்கிறாள் என்பது  அம்மாக்காரிக்கு  தெரியாமல்  போகுமா?

அவள் சாதாரணமாக 'அந்த எழவெல்லாம் நல்லாத்தான் நடந்திருக்கு.ஆனா  அன்னம்தான் சந்தோஷமா இல்ல."என்கிறாள் வெகுளியாக!

"செத்துப்போன பயலுக்கு எதுக்குடி பொண்டாட்டி சொகம்! போறபோக்குல  ஏறிட்டு போகலாம் காசா பணமான்னு நெனச்சிட்டான் காவாலிப் பய"! என கோபத்தை கொட்டினாள் மாயக்காள்! .

செங்கமலத்துக்கு  தெரியவேண்டியது  தெரிந்து விட்டது.

சிறிது நேரம் அங்கிருந்துவிட்டு கிளம்பிவிட்டாள் .

மற்றவை  அடுத்தவாரம்.