Sunday 12 June 2016

குற்றப்பரம்பரை.( ஐந்து.)

சட்டென சிகப்பியை  கையைப் பிடித்து  வைக்கோல்போர் பக்கமாக தள்ளியது  வேறு யாருமில்லை. அரைக்கிழவி  மாயக்காள்தான்! சாதி  வழக்கப்படி  அறுத்துக் கட்டியவள்.முதல் புருசன் குடிகாரனாகிப் போனான்.,அவனுக்கு  உழைத்துக்  கொட்டியே  வீணாகிப் போனவள்.வெட்கத்தை விட்டு வலிய கூப்பிட்டாலும் கட்டுன பய கவுந்தடிச்சு படுத்துவிடுவான்.எத்தனை மாதம்தான் கன்னி கழியாமலேயே கிடக்கமுடியும்?

'இந்தாய்யா...நா ஒன்னும்  மலட்டுச்சிறுக்கி இல்ல.வெத போட்டா வெளையுற நெலம்.வீணா போறதுக்கு விட்ரமுடியாது.என்னோட  குத்த வச்சவளுக  எல்லாம்  பிள்ளை குட்டியோடு  திரியிறப்ப நா மட்டும் வெறுஞ்சிறுக்கியா திரியனுமா? ஒன்னு  குடிக்கிறத விட்டு  குடும்பத்த பாரு. இல்லியா என்ன அத்து விட்ரு. "

சுவரோரமா குத்த வச்சு  பீடியை இழுத்துக்கொண்டு இருந்தானே தவிர  வாயை திறக்கவில்ல.

'நா  சொல்றது  காதுல ஏறுதா இல்லியா? தாலிய கட்டுன அன்னிக்கி ராவு  முக்கி  தக்கியும் ஒன்னும் முடியல. ஆசுபத்திரிக்கு போன்னு காசு கொடுத்தா  அதையும் குடிச்சிட்டு  வந்து நின்ன. இந்தா திருந்திருவே அந்தா திருந்திருவேன்னு பாத்தா அதுக்கும் வழியில்ல. ஊருக்கெல்லாம் நொட்டை சொல்றவ வயிறு வீங்காம கெடக்கிறதா பாத்து  நாலு சிறுக்கிக நாலு வார்த்தை பேசத்தான் செய்ராளுக. விதி.வக்கத்துப் போன பயலுக்கு வாக்கப்பட்டதுக்கு  இதுதான் கண்ட பலன்"

'இந்தாளா...என்ன இருந்தாலும்  நா ஆம்பள!"

'வெளியே சொல்லாதே..வெக்கக்கேடு! எதுக்கு  வெட்டிப் பேச்சு.சாதி சனத்த  கூட்டி என்னை அத்து விட்ரு.அம்புட்டுதான்."

'அது எனக்கு கேவலமில்லையா?'

'அப்ப குடிக்காதே..ஆம்பளைன்னு நிருபி.அதத்தான ராசா  கேக்கிறேன். உங்கிட்ட சங்கிலி சரடுன்னா கேக்கிறேன்?'

அவனிடம் பதில் இல்லை. அழுகிறான். கட்டுனவ  அத்து விடு என்கிறாள்.இரண்டு வருசமாச்சு.கண்ணாலம் வேணாம் வேணாம்னு சொல்லியும் வம்படியா ஆத்தா அப்பன் சேர்ந்து மாயக்காளை கட்டி வச்சாங்க. மகன் திருந்துவான்கிற  நம்பிக்கை .ஆனால் திருந்துனபாடா இல்ல.ஒத்த சரம் போட்டிருந்தா.அதையும் வித்தாச்சு.அவதான் காடு கரைன்னு போயி  சம்பாதிச்சு கஞ்சி ஊத்திக்கிட்டிருக்கா..அவளையும் அத்து விட்டுட்டா?கஞ்சி யாரு ஊத்துவா, குடிக்க காசு யாரு கொடுப்பா?"

பயலுக்கு சிந்தனை இப்படி போகுது.

அவன் தன்னைப்பற்றியே  நினைக்கிறானே தவிர மாயக்காளை பற்றிய  கவலையே இல்லை.விளக்கு வைக்கிற நேரம் நெருங்குதே என்கிற பரபரப்பில் அவன். அவளோ  இன்னிக்கி  ரெண்டுல ஒன்னு என்கிற  முடிவு எடுத்தாக வேண்டும் என்கிற வெறியில்.!

'என்னய்யா  சொல்றே?' மிரட்டுகிறாள்.

'என்னத்தலா சொல்றது.? சபையில என்னை ஆம்பள இல்லேன்னு சொல்லச்சொல்றியா? நாண்டுக்கிட்டு  செத்துறலாம்லா!'

அவ்வளவுதான் ...எங்கிருந்து  அந்த தைரியமும் பலமும் வந்ததோ...
உலக்கையை  எடுத்து மண்டையில் போடாமல் வலது பக்க தோளில் ஒரே போடு!.

'கொன்னுட்டாளே "ன்னு உயிர் போகும் அளவு கத்தினான்.

'இது போதும்டா...சபையில சொல்றதுக்கு.!" அவிழ்ந்து போன கூந்தலை  அள்ளி சொருகினாள் .

அந்த மாயக்காள்தான் சிகப்பியை  வைக்கோல்போர் பக்கமாக தள்ளிவிட்டாள். ஏன் அப்படி  தள்ளினாள்?

அடுத்த ஞாயிறு  சந்திக்கலாம். குற்றப்பரம்பரை  ஐந்தாம் பகுதி காலதாமதம்  ஆகியதற்கு  வருத்தப்படுகிறேன்.தயவு செய்து  கருத்துகளை  பதிவிடுங்கள்.