Saturday 28 January 2017

காதல்....காமம்.( 22,)

தங்கராசு மட்டும் விடுவிடுன்னு அவனுடைய அறைக்குள் போகிறான்..

வெள்ளிங்கிரி பட்டாசாலையிலேயே நின்றுவிட்டான்.

"என்னப்பா எங்கிட்டோ கெளம்பராப்ல தெரியிது...மைனர் வெரசா ரூமுக்குள்ள போறத பார்த்தா சீமைக்கு போற மாதிரில்ல தெரியிது? எங்கிட்டு நோக்கம்?" --வடிவேலு கண்ணாடியை தூக்கிவிட்டுக்கிட்டு வெள்ளிங்கிரிய பார்த்து  கேட்கிறார்..

"தூரமா போகலைய்யா....சும்மா நத்தம் பக்கமாதான் போறோம். சிநேகிதனுக்கு  கல்யாணம். அதான்.ரெண்டு நாள்ல திரும்பிடுவோம்."

"ஊருப்பயலுக்கெல்லாம் நடக்கிது.இந்த கெடா மாடுக்குதான் இழுத்துக்கிட்டு திரியிது!" என்று வடிவேலு வஞ்சு முடியிற சமயமா கையில் பெட்டியுடன் வந்தான் தங்கராசு. "வாடா...பஸ்சுக்கு நேரமாச்சு." என்று வெள்ளிங்கிரியை கூட்டிக்கிட்டு புறப்பட்டு விட்டான்.

சத்திரப்பட்டியில் வெள்ளிங்கிரியின் வீடு....

வெள்ளிங்கிரியும் தங்கராசும் கயித்துக்கட்டிலில் உட்கார்ந்திருக்கிறார்கள். எதிரில் அடைக்கன் கையை கட்டிக்கொண்டு அடக்க ஒடுக்கமுடன் நிற்கிறான்.

"ஒன்ன காப்பாத்துனது யார்னு இப்பத் தெரியிதாடா? நாங்க நெனச்சத நீ முடிச்சிட்டே..நல்லது நடந்துருச்சு. மாட்டிருந்தா சென்மமோ தூக்கோ ..? ஒரு கேடுகெட்ட சிறுக்கிக்காக நீ ஏண்டா தண்டனை  அடையணும்? அதான் காப்பாத்தி அழகர்மலையில வச்சிருந்தோம். ஒனக்கு ஒரு கலியாணத்தை  பண்ணி வச்சுடுறோம். பொண்ணும் ரெடிதான். அவளுக்கும் இஷ்டம்தான். மலையில ஒனக்கு தொணையா இருந்தவனோட தங்கச்சிதான். இன்னிக்கி மொத ராத்திரிய  அவ வீட்டில முடிச்சிட்டு விடியிறதுக்குள்ள  ஆந்த்ரா பக்கமா போய்டுங்க.ஒனக்கு தொணையா இருந்தவனும் ஒங்களோடுதான் வாரான். சின்ன ஊரா பாத்து கூலி வேல செஞ்சு  பொளச்சுங்கங்க,. சம்மதமாடா அடைக்கா?"

"நீங்க இந்த நாயிக்கி என்ன செஞ்சாலும் சம்மதம்தான் எசமான்!"

மேளதாளமில்லாம.பேச்சியாயி கழுத்தில் தாலியை கட்டுகிறான்  அடைக்கன்!.கூரைப்பொடவை தங்கத்தாலி அவளுக்கு. எட்டு மொள வேட்டி,மல்லுத்துணி சட்டை .கையில ஐயாயிரம் என அவனுக்கு! மொத ராத்திரி  குடிசைக்குள்ள,.

நாக்கை துருத்தியபடி காளியாத்தா படம்.

மதுரைவீரன்,மாரியம்மன் இப்படி துடியான சாமி படங்களை மாட்டியிருந்தார்கள் குடிசைக்குள்.! கிராமத்து சாமிகள். அவை தவிர நிறைய  டப்பாக்கள். மருந்துகள்! வைத்தியர் வீடு மாதிரி இருக்கு! ..முதலிரவுக்கான  அடையாளம்னு சொன்னா அல்வா சிலேபி பால் பூ..ஊதுவத்தி இவ்வளவுதான் அங்கிருந்தன.

பாவாடை ரவுக்கையுடன் பாய் ஓரமா உட்கார்ந்திருந்தாள் பேச்சி..அவனை நிமிர்ந்து பார்க்க கூச்சம்.

"என்னலா...மொத ராத்திரி அதுவுமா பயமுறுத்துரமாதிரி சாமி படமா வச்சிருக்கே.! சினிமாக்காரிக படமா வச்சிருந்தா சாராயம் குடிச்ச மாதிரி இருக்கும்ல.நெறைய டப்பா டப்பாவா இருக்கே..அதில .என்ன இருக்கு?" பயலுக்கு சந்தேகம்.

"எங்கண்ணன் நமக்காக லேகியம் வாங்கிட்டு வந்திருக்கு.. எல்லாம் பழனில வாங்கியாந்தது......அசதியா இருந்தா அதுல கொஞ்சம் தின்னுட்டு படுத்தம்னா  நல்லதாம்."வெட்கத்துடன் இப்பதான் அவனை ஏறிட்டு பார்த்தாள்.அவனோ கடுப்புடன் பேசினான்.

"கெழட்டு பயன்னு நெனச்சிட்டானா ஒங்க நொண்ணன். ? ஒன் இடுப்ப பத்திரமா பாத்துக்கடி..கலப்ப புடிச்சு உழுத கையி. காச்சுப்போயி கெடக்கு."

அண்ணனை குத்தம்  சொன்னா  தங்கச்சிக்கு பொறுக்குமா?

''பேச்சுல காட்டாத மச்சான். செஞ்சு காட்டு. மூச்சு வாங்கப்போறது நீயா நானாங்கிறத மூணாம் சாமத்துல பாத்துறலாம்..இப்ப சிலேபி வேணுமா அல்வா வேணுமா?"---அவ அவசரம் அவளுக்கு!

"அதெல்லாம் வாணாம்  மொதல்ல .லவுக்கைய அவுத்துப்போடு!"

"அதென்ன சீமைய்ல இல்லாததா? அளந்தா பார்க்கப் போற. மொதல்ல வெளக்க  அமத்து. நான் லவுக்கைய  அவுக்குறேன்."

"கருப்பா இருந்தாலும் கெட்டியாதான்லா இருக்க.! கருவ மரம் மாதிரி."

"அய்யாமாருக சொன்னத மறந்துட்டியா மச்சான்.கருக்கல்ல எந்திரிச்சி போகணும்னு சொன்னாகள்ல. நீ பேசியே .....! ஒன்னால முடியுமா முடியாதா..இல்ல நான் ஆரம்பிக்கவா?"

பய வேகமாக வெளக்க அமத்திட்டு  அவ மேல படர்கிறான் .

அவ மென்னுட்டிருந்த வெத்தல செல்லம் இப்போது அவனது வாயில்!

இன்னும் வரும். உண்மை நிகழ்வை  புனைந்து  எழுதப்பட்டு வரும்  தொடர் இது. 



Saturday 21 January 2017

காதல்...காமம். ( 21.)

அழகர் மலை அருகே இருக்கிற சத்திரப்பட்டியில்  வெள்ளிங்கிரிக்கு சொந்தமாக ஒரு காரை வீடு.! கொல்லைப்புறத்தில் மாடுகளை கட்டிப் போட்டிருக்கிறார்கள். பின்கொசுவம் கட்டிய வேலைக்காரப் பொண்ணுகள் அங்கும் இங்குமாக திரிகிறார்கள். அந்த வீடு வெள்ளிங்கிரிக்கு பரம்பரையாக  இருக்கிற வீடு.

"அடைக்கன் எப்படி இருக்கான்.பத்திரமா இருக்கானா..சூதானமா இருக்கனும்டா! நாயிங்க மோப்பம் பிடிச்சிக்கிட்டு திரியிதுக. கொஞ்சம் அசந்தம்னாலும் அள்ளிட்டு போயிருவாய்ங்க" என்று எதிரில் கையைக்கட்டிக்கொண்டு நின்றவர்களை பார்த்து சொல்கிறான் வெள்ளிங்கிரி.. அவன்  நாய்கள் என்றது போலீஸ்காரர்களை.! மதுரைக்காரர்களின் சங்கேத வார்த்தை.அவன்தான் அடைக்கனை கடத்திக்கொண்டு  போயிருக்கிறான்,

செல்லத்தாயி கொலை செய்யப்பட்டு ஒரு வாரமாகிப் போச்சு. வடிவேலுவுக்கு  சந்தோசம்தான் என்றாலும் அவர் மீதும் போலீசுக்கு ஒரு கண்.! அப்பப்ப வந்து  விசாரிச்சிட்டுத்தான் இருக்காங்க..அடைக்கனையும் தேடிட்டுத்தான் இருந்தாங்க.

மகன் தங்கராசுவை பத்தி சம்சாரத்திடம் விசாரிக்கிறார் வடிவேலு..

"ஒம்மவன் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பேசாமத் திரிவான்?.வாய தெறந்து பேசுனாத்தானே மனசுல உள்ளது தெரியும்? பயபிள்ளை அன்னாந்துபாத்துக்கிட்டே திரியிது. அந்த சிறுக்கிதான் செத்துப்
போயிட்டாள்ல.சனியன் தொலஞ்சதுன்னு எண்ணய தேச்சு தல முழுகிட்டுப்
போயிற வேண்டியதுதானே.?"

வடிவேலுவின் அம்மா அங்கம்மா இப்ப  வாய தொறக்கிறாள்..

"பண்றதையும் பண்ணிட்டு பேசுறான் பாரு தட்டுக்கெட்ட பய.! வீட்டுல  ஒரு  குந்தாணிய வச்சுக்கிட்டு தீனி போட முடியாம கண்ட சிறுக்கிட்ட படுத்திட்டு....  சனியனை தோள்ல தூக்கிட்டு வந்திட்டு...."

வடிவேலுக்குசொல்லமுடியாத ஆத்திரம். எந்த இடத்தில் எதை சொல்றதுங்கிற வெவஸ்தை இல்லாம போச்சா?

. " ஆத்தா! வாய மூடிட்டு இரு.!"

" சல்லிக்கட்டு மாடு மாதிரி  பய .வளந்து  நிக்கிறான். அவனுக்கு ஒரு பொட்டச்சிய பிடிச்சு கட்டி வைக்கனும்கிற  நெனப்பு அத்துப் போயி வப்பாட்டி சொகம் தேடுன ஒனக்கு என்னடா ரோசம் ?அதான் ஊரே சிரிச்சுப் போச்சே!"

"அத்தே...?" வடிவேலுவின் மனைவி மாயக்காளுக்கு  கோபம்.." ஏர்க்கால் ஏறி  ரணமாகி போயி கெடக்கிற ஆளுக்கிட்ட போயி எப்படி ஏர் பிடிக்கிறதுன்னு  சொன்ன கத மாதிரி ...புத்தி சொல்ற நேரமா இது? செத்த நேரம்  சும்மா கெடங்களேன்?"

"ஆமாடி...! ஊர்ல போற காளியாத்தா எம்மேல வந்து ஏறுடியாத்தான்னு எம்மேல பாயி! கெழட்டுபயதானேனு வெலகி படுத்தே!..வயசானா ஆசைக்கும்  வயசாகாதுடி.அவன் பாஞ்சிட்டு போயிட்டான். அதது அறிஞ்சு ஆம்பள பயலுகளை கைக்குள்ள  போட்டுக்காதவளுக கத இப்படித்தான் முடியும்! இப்ப  என்ன குத்தம் சொல்றதுல ஒரு எழவும் நடக்கப்போறதில்ல!"

"ஏத்தா ...இதுக்கும் மேல வாய தொறந்தேன்னு வச்சுக்க பெத்தவனு கூட பாக்க மாட்டேன். கொரவளையை  கடிச்சு துப்பிருவேன்."கத்தியது வடிவேலுதான்!

"ஆமாடா இப்படித்தானே வப்பாட்டி கொரவளையை நெரிக்கிறதா சொன்னே?  அதத்தான் டேசன்ல அவளே சொன்னாலாம்ல.?" என்று ஆத்தா அங்கம்மா சொன்னதும் அடங்கிப் போயிட்டார் வடிவேலு.

சொந்த வீட்டிலேயே அவருக்கு ஆதரவு இல்ல.

"மாயி...ஒங்கத்தகிட்ட சொல்லு. இப்படியே பேசிட்டிருந்தா கொடம் ஒடச்சு கொள்ளி வைக்கிறதுக்கு பிள்ள இருக்கமாட்டான்னு சொல்லிடு.!" இப்போது வடிவேலுவின் ஆத்திரம் சென்டிமென்டாக திரும்புது.

"ஆமாடி...செத்தபெறகு இவன்தான் கொள்ளி வைக்கப்போறான்னு விழிச்சு விழிச்சு பாக்கப்போறன் பாரு! எந்த நாயி எனக்கு தீயை வச்சா என்ன? எரியாம போவுமா?"

அங்கம்மா பேசிட்டிருக்கிறபோதே வெள்ளிங்கிரியும் தங்கராசுவும்  வீட்டுக்குள்  நுழைந்தார்கள்.

இன்னும்  வரும் அடுத்தவாரம். உண்மை நிகழ்வை வைத்து புனையப்படும் தொடர்.

Friday 13 January 2017

காதல்....காமம்.( 20. )

இன்னும் அவனின் வெறி அடங்கல. கண்கள் செம்மண் நிறத்தில  சிவப்பேறிக் கெடக்கு. வரப்பையே விட்டுக்கொடுக்காத  ஊரில்  கட்டின பொண்டாட்டியை  அடுத்தவன்  தட்டிட்டுப் போனா  சும்மா  கெடப்பானா..அத்தன நாளும்  அவன்  அடங்கிக் கெடந்ததே அவ எப்படியும்  அத்துக்கிட்டுதான்  வருவா, அன்னிக்கி  போட்டுத்தள்ளலாம்னுதான்  அடைக்கண்  காத்திட்டிருந்தான்,

காரியத்தை முடிச்சிட்டான் ! அருவாளுடன்  போயிட்டிருக்கான்  போலிஸ் டேசனுக்கு.

 திடீர்னு குறுக்கால வெள்ள நெர அம்பாசடர் கார் வந்து நிக்கிது.. அவன்எதிர்பார்க்கல, சட்டுன்னு  அருவாளை  ஓங்கிட்டான். செல்லத்தாயின் சொந்தக்காரன் எவனோ  வந்து மறிக்கிறான்னு  நெனச்சிட்டான்.எல்லாமே கண் சிமிட்டிற நேரம்தான்!

"அடைக்கா! காருக்குள்ள ஏறு!"

முக்காடு போட்ட நாலுபேரு  அவனை மடக்கி  காருக்குள்ள தள்ளிட்டானுக. வானவெடி வேகத்தில அழகர்கோயில் கோயில்  மலையை நோக்கிப்  பறக்குது!

"வெட்டி தள்ளிட்டு வேலய முடிச்சவன் எதுக்குடா  டேசனுக்கு போறே? நீதான்  அவள போட்டுத்தள்ளினேங்கிறதுக்கு  என்னடா சாட்சி? பஸ்ல போறவன்  வந்து சாட்சி சொல்லப் போறானா? அவள போட்டுத் தள்ளனும்கிறதுக்காகதான் நாங்களே பஸ்சு  பின்னாடி வெரட்டிக்கிட்டு வந்தோம். ஆனா காரியத்த நீ கச்சிதமா  முடிச்சிட்டேடா !"

முக்காடை  எடுக்காம  பேசுறான். அடைக்கன் கொஞ்சம் நிதானத்துக்கு  வந்தான் .

"நீங்கள்லாம் யாரு?"

"ஒன்ன காப்பாத்த வந்தவங்கன்னு  நெனச்சுக்க." என்று எல்லோருமே முக்காடை  எடுத்துட்டு மொகத்தைக் காட்டுறானுங்க. யாரையும் அவனுக்கு  தெரியல.

அடைக்கன் தெளிவாயிட்டான்.

"என்ன காப்பாத்துறதுக்கு நீங்க யாரு? "

"அதான் சொன்னம்ல! அழகர்மலைய்ல ஒனக்கு பாதுகாப்பான எடம் இருக்கு. நேரா நேரத்துக்கு சோறாக்கிப் போடவும் ஆளு இருக்கு. வசதியா இரு. எங்கள  அனுப்பினவரு வருவாரு.அவர் சொல்வாரு. சந்தேகப்பட்டு போலீஸ் ஒன்ன தேடலாம்.அவங்க கிட்ட மாட்டாம இருக்கிறதுக்கு அவரு யோசனசொல்வாரு.
கேட்டு நடந்துக்க.அதுவர அங்கிட்டு இங்கிட்டு போகாம கெட.!"

"நம்மள காப்பாத்துறதால யாருக்கு லாபம்னு" யோசிக்க ஆரம்பிச்சிட்டான். பிடிபடல. சரி வர்றது வரட்டும்னு சும்மா இருந்துட்டான்.

அழகர்மலை அடிவாரம் வந்திருச்சு. இப்ப யாருக்கும் பயமில்ல. அவனை கூட்டிக்கிட்டு அத்தன பேரும் மலை மேல ஏற ஆரம்பிச்சிட்டாங்க. ஆள் அண்டாத எடம். நரி வரும். காட்டுப்பன்னி வரும். சமயங்களில் சிறுத்தையும்  வரும்.அதனால மூலிகை பறிக்க வர்றவங்க கூட அங்க வரமாட்டாங்க. பொதுவா சங்கிலி அறுக்கிறவன்ல இருந்து கொலை பண்றவன் வரை  பதுங்கிறதுக்கு அது  வசதியா இருந்துச்சு. போலீஸ் தேடி வந்தா மேல இருந்து பார்த்தா கீழே வர்றவனுங்களை நல்லா பாக்கமுடியும்.ராத்திரி வந்தாலும்  டார்ச்சு லைட் அடிக்காம மலை ஏறமுடியாது..அதனால பதுங்குறவனுகளுக்கு  அத விட  பாதுகாப்பு  எதுவும் இல்ல,

குனிஞ்சி போற அளவுக்கு ஒரு குடிசை.ஒசரமான புதர்களுக்கு நடுவில்  இருக்கு. அங்க நின்னிட்டாங்க.

"இதான் ஒன்  எடம்.ராத்திரிக்கு ஒதவிக்கு ஒருத்தன் சோறு கொண்டாருவான்  அவன்தான் ஒங்கூட இருக்கப்போறவன். ராத்திரி ஆனா பீடி சிகரெட்டு பிடிக்காதே..குடிசைக்குள்ளய பிடி."

'' மிருகம் ஏதாவது  வருமா?"

"பயப்படாதே. அத மத்தவன் பாத்துக்குவான், ஆயுதம்லாம் இருக்கு"

கடத்திக்கொண்டு வந்தவர்கள் மலையை விட்டு எறங்க ஆரம்பிச்சிட்டாங்க.

அடைக்கனுக்கு இன்னும் எதுவும் புடிபடல. நம்மள காப்பாத்தி அடை காக்கிற  அவசியம் யாருக்கு இருக்க முடியும்? அருவாளை கழுவனும். ஒடம்பில இருக்கிற ரத்தக்கறையை போக்கனும். பக்கத்தில ஓடை எதுவும் ஓடுமா?

அடைக்கனை  கடத்தியது  யாராக  இருக்க முடியும்? உண்மை நிகழ்வை  அடிப்படையாக  வைத்து  புனைகிற  தொடர் இது. அடுத்த வாரம்  மற்றவை  !

Saturday 7 January 2017

காதல்..காமம். ( 19.)

மழை விட்டிருந்தாலும் பன்னீர் தூறல்! முந்தானையை  தலையில் போட்டுகொண்டு  இடது கையில் பிடித்துக்கொண்டாள். வலது கையினால்  சேலையை  தூக்கிப் பிடித்துக் கொண்டு தேங்கிக் கிடந்த தண்ணீரை  கடந்து  சென்றாள். பாதகத்தி! சேலை நனைந்து விடக்கூடாது என்று  நினைக்கிற  அந்த சிறுக்கி  தன மானத்தை ஒரு வீட்டுக்காக வித்துட்டாளே! நத்தம் போகிற  பஸ்சை பிடிப்பதற்காக  எட்டி நடந்தாள்.அவளை அறியாமல் கண்களில் கண்ணீர்.
"இப்படி சீப்பட்டு ...சீரழிஞ்சு போறியே...எதை நம்பிடி வாழப்போறே? ஒரு பய வேலை  கொடுப்பானா? மானங்கெட்டவளேன்னு  ஊரு பேசாதா? " என்று  மனசு கேட்டுக்கிட்டே இருக்கு! அதான் விம்மலும் வேதனையுமா போகிறாள்.

இங்கிட்டு வடிவேலுக்கு வேற பிரச்னை. "பிள்ளையும் மதிக்கல. மாயக்காளும் முந்தியே காரி துப்பிட்டா. ஆத்தாளும் வெளக்கமாத்தால அடிக்காத குறைதான்! அந்த வீட்டில கவுரதையா வாழ முடியுமா? நாய்க்கு  வைக்கிற மாதிரிதானே சோத்தை வைப்பாளுக..பேசாம  நாண்டுக்கிட்டு செத்துரலாமா?" இப்படி துடிக்கிது மனசு. ஆனாலும் அந்தாளு அப்படியெல்லாம்  சாகமாட்டார். கூத்தியாளுக்கு கூசாம காரை வீட்டை எழுதி வச்சவராச்சே!  அந்த தூறலிலும்  உடம்பு  சூடா  இருக்கு.மனசு  வேகும்போது  உடம்பு நடுங்கத்தானே  செய்யும்!கார், சைக்கிள் எல்லாம் மழைத்தண்ணீர் ,சேற்றையும் கலந்து அந்த ஆள் மீது  அடிக்கிது. சொரணை இல்லாமல்தான் நடக்கிறார்.

அங்கிட்டு பஸ்சை பிடிச்சு  ஏறி உட்கார்ந்தவளை முக்காடு போட்டிருந்த  ஆம்பளை ஒருத்தன் ரகசியமா  பார்த்து ரசிக்கிறான். ஈர ரவுக்கையில்  எடுப்பாக இருந்த இளமையை கள்ளத்தனமாக பார்க்கிறானோ என்னவோ! ஆம்பளையின்  கண்கள்  முதலில் மேய்வது அங்குதானே!

பஸ் நத்தம்  நெருங்குகிறது.. கண்டக்டர்  செல்லத்தாயி பக்கமாக வந்தான்.

"என்னத்தா...டேசனுக்கு போனியே...என்னாச்சு?" இளக்காரமாகத்தான் கேட்கிறான்.." அவுக  காசு பணம் உள்ள செல்வாக்கான ஆளுக. அந்தாளு கிட்ட போகும்போது யோசிச்சிருக்கவேணாமா?"

"பொத்திட்டு போடா! ஒன் பொண்டாட்டி ஊர் மேயாம பாத்துக்க!"--அவள் போட்ட சத்தத்தில் பஸ் சடன் பிரேக்  அடித்தது. அத்தனை பேரும் இடி விழுந்த எபெக்ட்டில்.!

அதே நேரத்தில் கண் இமைக்கும் நேரத்தில் முக்காடு போட்டிருந்த அந்த ஆளு  சாமியாடி மாதிரி  அருவாளுடன் கத்துகிறான்.

"ஆமாடி ..என் பொண்டாட்டிய  ஊர் மேயாம பாக்கலேடி" என்றபடியே  செல்லத்தாயின் கழுத்தில் அருவாளை வீசினான்.

மொத்த பஸ்சும் காலி...செல்லத்தாயியும் சில வினாடி உடல் துடித்தபடி காலி!

அவன்  செல்லத்தாயிக்கு தாலி கட்டியவன்! பெயர் அடைக்கன்.

ரத்தம் சொட்டும் அருவாளுடன் போலீஸ் ஸ்டேஷன் நோக்கி  நடக்கிறான்.!

உண்மை  சம்பவத்தை  அடிப்படையாக வைத்து  புனையப்படும் தொடர்,.அடுத்த வாரம்  வரும்!