Saturday 7 January 2017

காதல்..காமம். ( 19.)

மழை விட்டிருந்தாலும் பன்னீர் தூறல்! முந்தானையை  தலையில் போட்டுகொண்டு  இடது கையில் பிடித்துக்கொண்டாள். வலது கையினால்  சேலையை  தூக்கிப் பிடித்துக் கொண்டு தேங்கிக் கிடந்த தண்ணீரை  கடந்து  சென்றாள். பாதகத்தி! சேலை நனைந்து விடக்கூடாது என்று  நினைக்கிற  அந்த சிறுக்கி  தன மானத்தை ஒரு வீட்டுக்காக வித்துட்டாளே! நத்தம் போகிற  பஸ்சை பிடிப்பதற்காக  எட்டி நடந்தாள்.அவளை அறியாமல் கண்களில் கண்ணீர்.
"இப்படி சீப்பட்டு ...சீரழிஞ்சு போறியே...எதை நம்பிடி வாழப்போறே? ஒரு பய வேலை  கொடுப்பானா? மானங்கெட்டவளேன்னு  ஊரு பேசாதா? " என்று  மனசு கேட்டுக்கிட்டே இருக்கு! அதான் விம்மலும் வேதனையுமா போகிறாள்.

இங்கிட்டு வடிவேலுக்கு வேற பிரச்னை. "பிள்ளையும் மதிக்கல. மாயக்காளும் முந்தியே காரி துப்பிட்டா. ஆத்தாளும் வெளக்கமாத்தால அடிக்காத குறைதான்! அந்த வீட்டில கவுரதையா வாழ முடியுமா? நாய்க்கு  வைக்கிற மாதிரிதானே சோத்தை வைப்பாளுக..பேசாம  நாண்டுக்கிட்டு செத்துரலாமா?" இப்படி துடிக்கிது மனசு. ஆனாலும் அந்தாளு அப்படியெல்லாம்  சாகமாட்டார். கூத்தியாளுக்கு கூசாம காரை வீட்டை எழுதி வச்சவராச்சே!  அந்த தூறலிலும்  உடம்பு  சூடா  இருக்கு.மனசு  வேகும்போது  உடம்பு நடுங்கத்தானே  செய்யும்!கார், சைக்கிள் எல்லாம் மழைத்தண்ணீர் ,சேற்றையும் கலந்து அந்த ஆள் மீது  அடிக்கிது. சொரணை இல்லாமல்தான் நடக்கிறார்.

அங்கிட்டு பஸ்சை பிடிச்சு  ஏறி உட்கார்ந்தவளை முக்காடு போட்டிருந்த  ஆம்பளை ஒருத்தன் ரகசியமா  பார்த்து ரசிக்கிறான். ஈர ரவுக்கையில்  எடுப்பாக இருந்த இளமையை கள்ளத்தனமாக பார்க்கிறானோ என்னவோ! ஆம்பளையின்  கண்கள்  முதலில் மேய்வது அங்குதானே!

பஸ் நத்தம்  நெருங்குகிறது.. கண்டக்டர்  செல்லத்தாயி பக்கமாக வந்தான்.

"என்னத்தா...டேசனுக்கு போனியே...என்னாச்சு?" இளக்காரமாகத்தான் கேட்கிறான்.." அவுக  காசு பணம் உள்ள செல்வாக்கான ஆளுக. அந்தாளு கிட்ட போகும்போது யோசிச்சிருக்கவேணாமா?"

"பொத்திட்டு போடா! ஒன் பொண்டாட்டி ஊர் மேயாம பாத்துக்க!"--அவள் போட்ட சத்தத்தில் பஸ் சடன் பிரேக்  அடித்தது. அத்தனை பேரும் இடி விழுந்த எபெக்ட்டில்.!

அதே நேரத்தில் கண் இமைக்கும் நேரத்தில் முக்காடு போட்டிருந்த அந்த ஆளு  சாமியாடி மாதிரி  அருவாளுடன் கத்துகிறான்.

"ஆமாடி ..என் பொண்டாட்டிய  ஊர் மேயாம பாக்கலேடி" என்றபடியே  செல்லத்தாயின் கழுத்தில் அருவாளை வீசினான்.

மொத்த பஸ்சும் காலி...செல்லத்தாயியும் சில வினாடி உடல் துடித்தபடி காலி!

அவன்  செல்லத்தாயிக்கு தாலி கட்டியவன்! பெயர் அடைக்கன்.

ரத்தம் சொட்டும் அருவாளுடன் போலீஸ் ஸ்டேஷன் நோக்கி  நடக்கிறான்.!

உண்மை  சம்பவத்தை  அடிப்படையாக வைத்து  புனையப்படும் தொடர்,.அடுத்த வாரம்  வரும்!

No comments:

Post a Comment