Sunday 26 November 2017

காதல்..காமம்.( 48.) அடைக்கன் சரண்டர்.

                                     "யாருங்க.? யாருன்னு சொல்லாம சும்மா இருந்தா என்னங்க அர்த்தம்? வேல, வெட்டி இல்லேன்னா மீனாச்சி கோவில் வாசல்ல உக்காந்து  திருவோடு தூக்கவேண்டியதானே?"
                                   மறுமுனையில் எந்த அரவமும் இல்லாததால் அன்னத்துக்கு கடுப்பாகிவிட்டது. அன்னத்தின் ஆத்திரம் பார்த்த செவனம்மாவுக்கும் மாயக்காளுக்கும் பயம் .
                                   "என்னத்தா மயிலு? யார்த்தா போன்ல? ஆம்பளையா ,பொம்பளையா ..நம்ம சொந்தக்காரகளா இருந்துறப் போறாய்ங்கடி .வம்புக்கு  அலைய்ற சாதிடி! கொழம்புல ஒரு எலும்புத்துண்டு கொறஞ்சாலும்  பூமிக்கும் ஆகாசத்துக்கும் குதிப்பாய்ங்க கொணம் கெட்ட பயலுக.! " என்று சிரிக்கிறாள்  செவனம்மா.
                              "யார்னே தெரியலம்மா!" என்றபடி ரிசிவரை வைத்து விட்டு அத்தை மாயக்காள் பக்கமாக வந்தமர்ந்தாள். எலி அழுதா பூனை விட்டுருமா என்பது மாதிரி மறுபடியும் போன் கத்தியது.
                              "சனியன்..... கொரவளையை பிடிச்சி கொல்லுடி! எந்த நாயா இருந்தா என்ன? பேசாம உக்காரு.கத்திட்டு ஓயட்டும்!"
                                 "இல்ல செவனு! கல்யாண வீடுன்னா நாலு பேரு கூப்புடத்தான் செய்வாய்ங்க.மொதவாட்டி என்ன ரிப்பேரோ..பேச முடியாம இருந்திருக்கும். இப்ப போய் பாரு. " மருமகளை எழுப்பி விட்டாள் மாயக்காள். சலித்துக் கொண்டு எழுந்தாள் அன்னம்.
                                   "அலோ" என சொல்லுவதற்குள் "அன்னமா பேசறது?" என்று கேட்டது எதிர்முனை.  
                                    "ஆமா...யாரு நீங்க? என்ன வேணும்?"
                                    "தாயி...போனை வெச்சிராதேம்மா! நானு அடக்கன் பேசுறன் மா!செத்துப்போனாலே செல்லத்தாயி.! அவ புருசன். நாந்தாம்மா அவள கொன்னேன்.போலீஸ்ல உண்மைய சொல்லி என்ன ஒப்படைக்க  வந்திருக்கன் தாயி! இப்ப வக்கீல்சாமி ஆபீஸ்லேர்ந்து பேசுறன்.  ஒரு நெசத்த சொல்லணும்.சின்ன அய்யாவும்  அய்யாவும் வந்தா சொல்லிருவன் தாயி! " என்று  சொன்னவன் வக்கீல் பெயரையும் சொன்னான். வக்கீல் புதுத் தெருவில் இருக்கிறது அவன் சொன்ன வக்கீல் ஆபீஸ்.
                                  அன்னத்தின் மனசு இப்பத்தான் டிக் டிக் அடிக்கிறது.! இருவரிடமும் சங்கதியை சொன்னாள்.மாயக்காளுக்கு பதட்டம். "அடி ஆத்தி! ஊருக்கு போன சனியன் தோமாலை போட்டுக்கிட்டுல வந்திருக்கு. என்ன செய்வேன். அடி ஆத்தி!" என்று கண்ணை கசக்கினாள்.அதுவரை ஊமைச்சாமி மாதிரிபத்திரிக்கை படித்துக்கொண்டிருந்த  இருந்த தங்கராசுக்கு அவள் சொன்னதை கேட்டதும் புது ரத்தம் பாய்ந்தது மாதிரி இருக்கிறது.
                               வருங்கால மாமியாருக்கு ஆறுதல் சொல்கிறாள் மருமகள்!
                              "அத்தே..எதுக்கு வெசனம்?அவன் வந்தது நல்லதுக்குத்தான்! மாமன் மேல உள்ள சந்தேகம் போயிரும்.போலீஸ்ல அவன்  நெஜத்த சொல்லிட்டா  மாமன் தப்பு பண்ணலேங்கிறது தெரிஞ்சிரும்ல அவங்களும் .நிம்மதியா கல்யாண வேலைகள பாப்பாக.அத்தான கூட்டிட்டு மாமன போக சொல்லுங்க.எல்லாம் நல்லதுக்குத்தான்!" என்றாள் அன்னம்.
                          வேகமாக எழுந்த
மாயக்காள் முந்தானையை வேகத்துடன்  ஒரு உதறு உதறி இடுப்பில் சொருகிக்கொண்டாள்..
                           அவர்களிடம் சொல்லிவிட்டு மகனுடன் வெளியேறினாள்.
                           "எந்த எடுபட்டபய வெச்ச சூனியமோ இன்னியோடு தொலையட்டும்.நான் வாக்கப்பட்ட நாள்லேர்ந்து ஒருநா கூட என் ராசா கண்ல  தண்ணி வந்ததில்ல.அர்ச்சுனன் மாதிரில்ல திரிஞ்சாக,அவுகள மொடக்கிப்  போட்ட விதிக்கும் ஒரு முடிவ ஆத்தா மீனாச்சி காட்டிட்டாளே......!" வழி நெடுகிலும் இதே மாதிரியாக  புலம்பல்தான்.!
                    
                  உண்மை  நிகழ்வை  வைத்து  புனையப்படுகிற  தொடர்.

Wednesday 22 November 2017

காதல்.,காமம்.( 47.) வெத்தல போட்ட ஷோக்குல

                                        "வாங்க...வாங்க..!" வெத்திலை மணக்க செவனம்மா  வரவேற்கிறாள் மாயக்காளை! "என்ன சம்பந்தியம்மா இம்புட்டு தூரம்.? மருமகென இங்ஙன வெரசா  அனுப்பிட்டு நீங்க  சாவகாசமா வர்றிக"? எனக் கேட்டதும் மாயக்காளுக்கு  திக்கென்றாகிவிட்டது.
                          "தங்கராசு உள்ளயா இருக்கான்?"
                          " நீங்க மொதல்ல உள்ள வாங்க! " என்று சம்பந்தியம்மாவை பட்டாசலைக்கு அழைத்துச்சென்றாள் செவனு.!
                           ஊஞ்சலில் உட்கார்ந்திருக்கிறான் தங்கராசு.சற்று தள்ளி நிற்கிறாள் அன்னமயிலு.இருவரிடமும்  எவ்வித பதட்டமும் இல்லை.                       "என்னத்தா...அய்யா சேதி எதுவும் சொல்லி அனுப்பி இருக்காரா?"
                      "இல்லப்பே..நான் சும்மாதான் மருமவள பாக்கனும்னு வந்தேன்.நீ எப்பய்யா வந்தே?"
                       "நீங்க பேசிட்டிருங்க..நான் காப்பித்தண்ணி ஆத்தியாறேன்?" என்று  செவனம்மா அடுப்படிக்கு சென்றதும் சற்று தள்ளி நின்று கொண்டிருந்த அன்னமயிலு " வாங்கத்தே.." என்றபடி அருகில் வந்து உட்கார்ந்து விட்டாள்.
கொண்டுவந்திருந்த மல்லிகைச்சரம் அவளது சடையில் அமர்ந்து கொண்டது. மதுரை மல்லிகைக்கு தனி மணம். அது பிரம்மச்சாரியையும் சபலப் படுத்திவிடும். மேனகையிடம் விசுவாமித்திரன் மயங்கியதற்கு மலரின் மணம்
கூட ஒரு காரணமாக இருக்கலாம்.வனத்தில் பலவகையான மலர்கள் பூத்துக்  குலுங்குமல்லவா!
                   "அன்னம்...அத்தான் என்ன சொன்னான்? ரொம்ப நேரமா பேசின மாதிரி தெரியிதே ? பேசனும்னா வீட்லதான் போன் இருக்கே ..பேசுத்தா..அதுல பேசு.நாள் முச்சூடும்பேசுங்க.இப்படிசம்பந்தகார வீட்டுக்கு மாப்ளையா வரப்போறவன் தாலி கட்டுறதுக்கு முன்னாடியே வந்து போனா ஊர் சிறுக்கிக  நாலு பேரு நாலு விதமா பேசுவாளுக.ஊர் கண்ணு படும்தா! என்ன .அத்தக்காரி  இப்பவே இப்படி சொல்றாளேன்னு பாக்கிறியா? உங்க மாமன் நாமெல்லாம் படப்பு பக்கம் ஒதுங்கலியா..அவங்களையும் அப்படி பழகசொல்லுன்னுதான் இங்க என்ன அனுப்புனாரு.எங்க காலம் வேற அன்னம். வெலகி நின்னுதான் பேசுவோம். இப்ப அப்படியா?  இந்த சினிமா வந்துதான்  கெடுத்து வெச்சிருக்கு. 
 அந்த "ஒன்ன"தவிர எல்லாத்தயுமே காட்டுறான் கொள்ளியில போறவன்."
             இப்படி அத்த சொன்ன அறிவுரைகளை எல்லாம் அன்னத்தின் காதுகள் மட்டுமே கேட்டுவிட்டு வெளியே தள்ளிவிட்டன.அத்த அந்த காலத்து மனுஷி  அப்படித்தான் பேசுவாள். சரியாக காப்பி வந்தது. மூணு    லோட்டா.ஒரு சொம்பு நிறைய கருப்பட்டி காப்பி.தனி மணம். அதில் கருப்பட்டி வாசம் கலந்திருந்தது.
                "அத்தாச்சி!  மருமகனுக்கும் மருமகளுக்கும் உங்க கையால ஊத்திக் கொடுங்க.நீங்களும் ஊத்திக்கிங்க." என்று செவனம்மா  ஒதுங்கிவிட்டாள்.
              "ஒங்களுக்கு? நீங்க காப்பித்தண்ணி குடிக்கிறதில்லயா? இன்னொரு லோட்டாவ எடுத்தாங்களேன்?"மாயக்காள் சொன்னதை செவனம்மா கேட்கவில்லை.
               "வெத்தல போட்ருக்கன் அத்தாட்சி! வாய்க்கு ருசியா இருக்காது"
                மாயக்காளின் பார்வை மறுபடியும் அன்னம் மீது.!
               "ஏத்தா மருமவளே! நீ வெத்தல போடுவியாம்மா?"
               தலையை இடது வலமாக திருப்பி இல்லை என்பதை உணர்த்தினாள்.
               அங்கு மகனும் இருக்கிறான் என்பதை மறந்தவளாக மாயக்காள் பேசிவிட்டாள்."தப்பும்மா...புருசன் ஆசையா இருக்கானா இல்லயாங்கிறத வாய் செவப்பு காட்டிரும்தா.!ஒடம்புக்கும் நல்லதும்மா!  ஆம்பள ஆசயும் அதிகமாயிரும்."
               "க்ளுக்"கென சிரித்த அன்னம் "அத்தக்கி அனுபவம் பேசுது" என்றதும் அங்கிருந்த எல்லோருக்கும் சிரிப்பு தாங்கவில்லை.
                   அப்போது போன் மணியும் சிரிப்பில் கலந்து கொண்டது.
                   அன்னம்தான் ரிசிவரை எடுத்து ஹலோ சொன்னாள்.
( உண்மை நிகழ்வின் கற்பனை தொடர்,)