Saturday 27 January 2018

ஞானப்பார்வை. ஆர்.கே.நகர்.2

பாபு என்றால் யாருக்கும் தெரியாது. சிங்காரவேலன் காம்பவுண்டு ஆட்களும்  தடுமாறித்தான் போவார்கள். வாஷிங் மெஷின் என்று சொன்னால்போதும்  பச்சா வாண்டுகளும் கைப்பிடித்து கரெக்டாக வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போய் விட்டு விடுவார்கள். ஆர்.கே.நகரில் குக்கரை விட வாஷிங் மெஷின்தான்  பேமஸ். பாபு  சிறிய அளவில் சலவைக் கம்பெனி நடத்துகிறான்.

மெயின் தொழில் சலவை செய்வது கிளைத் தொழில் ரசிகர் மன்றம்.ராஜேஷ் காந்தின் தீவிர ரசிகன்.அவரது படம் வெளிவரும் நாளன்று எல்லோருக்கும்  இலவசமாக சட்டை மட்டும் அயர்ன் பண்ணித் தருவான். அப்படி ஒரு நாளில்தான் ஷீலா அவனுக்கு அறிமுகமாகிறாள்.

" இந்த பிளவுசை அயர்ன் பண்ணிக் கொடுங்க!" என்று காட்டன் பிளவுசை கடைப்பையனிடம்  ஷீலா கொடுக்க கடைக்குள் பாபு வேறு வேலைகளில் இருந்தான்.அவளைக் கவனிக்கவில்லை.

"இருபது ரூபா கொடுங்க!" கடைப்பையன் கேட்டான்.

" இன்னிக்கி தலைவர் படம் ரிலிஸ் பா! சர்ட் , பிளவுஸ்க்கு பிரீ அயர்னு சொன்னாங்களே?"

"அது ஜென்ட்ஸ்க்கு மட்டும்தான்.லேடீஸ்க்கு இல்ல?"

"ஏன் நாங்க பேன்ஸ்சா இருக்கமாட்டமா..மகளிர் அணிதான்பா தலைவர்க்கு சக்சஸ் கொடுக்கிற அணி.!நாங்களும் விசில் அடிப்போம்.குத்தாட்டம் போடுவோம்.போட்டா  பசங்களே மெர்சல் ஆகிடுவானுங்க.தெரியும்ல."

"என்னத்த போடுவீங்க பீரா பிராந்தியா?"

"என்ன நெக்கலா...? மவனே நாறிடுவே!"என்ற ஷீலா கடையில் இருந்த விளம்பர போர்டை ஆத்திரமுடன் தள்ளிவிட,கடைப்பையனுக்கு கோபம்!

 "இந்த வெட்டி வெவகாரம்லாம் இங்க வேணாம்.வேறெங்கேயாவது போயி வெச்சுக்க"என்றபடியே பிளவுசை வீசி ஏறிய அது கடைக்கு  வந்த ரசிகனின் முகத்தில் போய் விழுந்தது.அவனும் கலாய்ப்பதில் கில்லாடி. ரசிகர் மன்றத்தலைவரின் கடையில் ஒருத்தி ரகளை செய்கிறாள் என்றால் அவன் எப்படி சும்மா இருப்பான்?

"என்னடா இப்படி கப்படிக்கிது. பாடி ஸ்பிரே, பெர்ப்யூம்லாம்  அடிக்க மாட்டா ளுக  போலிருக்கே? " என்று அவனும் தூக்கி வீச தரையில் விழுகிறது பிளவுஸ்.

ஷீலாவுக்கு செம கோபம். மொத்த தொண்டையையும் திறந்து கத்துகிறாள்.

"காட்டுப்பயல்களே!கம்மினாட்டிகளா...ப்ரீயா அயர்ன் பண்ணுவோம்னு சொல்லி ஏமாத்துறாய்ங்க.தலைவர் பேரை சொல்லி டிக்கெட் வாங்கி வித்து காசு சேக்கிற பிராடு பயலுக."என்கிறபோதே கூட்டம் சேர்ந்து விட்டது. பதட்டமுடன் கடையை விட்டு வெளியில் வந்த பாபு "என்னம்மா என்ன பிரச்னை பண்ற?"என்றான். டி சர்ட்டில்  தலைவர் ராஜேஷ் காந்த்  படம்.

"யார்யா பிரச்னை பண்றது? ஆம்பளன்னா ப்ரீ  பொம்பளன்னா காசுன்னு கேக்கிற கசமாலம்லாம் தலைவருக்கு விழா கொண்டாடுனா வெளங்குமா? முடியாதுன்னா மரியாதையா பிளவுஸ கைல கொடுக்க வேண்டியதுதானே ..அந்த நாதாரி ஏன்யா தரைய்ல தூக்கி வீசுனான்? இன்னொருத்தனுக்கு 'கப்' அடிக்கிதாம்.மழை பேஞ்சாதான் குளிப்பான் போலிருக்கு!அந்த வெங்காயம் சொல்றான் பெர்ப்யும் அடிக்கலியாம்! சாணிப்பய!"

"தா...தா.  நிறுத்தும்மா ..அடிக்கிட்டே போறே?   லேடீஸ்க்கு பிளவுஸ் தேச்சுக்கொடுக்கிறதில எங்களுக்கு நஷ்டம் வந்திறப்போறதில்ல. ஆனா  அவங்க வீட்டுல அத விரும்ப மாட்டாங்க.அதுலயும் இப்ப யாரும்மா பிளவுஸ் போடுரா? "

"யோவ்?"

"சுடிதார்னு சொல்ல வந்தேன்மா!ஒரு சுடிதார் அயர்ன் பண்றதுக்குள்ள நாலு சட்டை அயர்ன் பண்ணிடுவோம்.இப்ப புரியிதா?"

''இந்த ஈர வெங்காயத்த அப்பவே சொல்லிருக்கலாம்ல?"

"தப்புத்தான்.அந்த பையனை அடக்கி வைக்கிறேன்.அவனைத்தான் அடக்க முடியும்!"

"அப்ப என்னை அடக்க என் புருசன் வருவான்னு இன்டைரக்டா சொல்றியா?"

"அப்படி சொல்லலம்மா..வம்பு இழுக்காதே ..மன்னிச்சிடு"

"அது!" என்றபடியே அங்கிருந்து கிளம்பினாள் ஷீலா,

-----இன்னும் வரும்.



Saturday 20 January 2018

ஞானப் பார்வை. ஆர்.கே.நகர்.1

ராதாகிருஷ்ணன் நகர்.சென்னையின் அடர்த்தியான பகுதி. பஞ்சை பராரியில்  இருந்து கோடிகளில் கொழிக்கும் கோமான்கள் வரை இங்கு  வாழ்கிறார்கள். கோபம் வந்தால் கொலைதான் தீர்வு என்கிற நம்பிக்கையுடன் வாழ்கிற 'குடிமகன்'கள் கோலோச்சும் அரசியலுக்கும் பஞ்சம் இல்லை.. மாநகரத்தின் மரியாதையான 'காதலர்கள், பக்தர்கள்,ஓடிவந்தவர்கள்,ஓடிப்போக காத்திருப்பவர்கள்,என பலப் பல அடையாளங்கள்.

" என்ன இன்னிக்கி 'ப்ரீ'யா?"

"இன்னாய்யா,நெக்கலா? காசு இருந்தா எப்பவுமே உள்ளாற வா. இல்லேன்னா  பீச்சாண்ட போ.பிரியாமே ..ப் ரீ.?"

"என்ன ஜக்கு இப்படி கோச்சுக்கிரே...சும்மா இர்ந்தேன்னா மாபலிபுரம்  போலாமேன்னுதான் கேட்டேன்.நீ என்ன பொடவையா, ஆடித் தள்ளுபடிலே  வாங்கறதுக்கு.!ஒந்தொளிலுக்கு இவ்ளோ  கோவம் வேணாம் புள்ளே!"

"சாரிய்யா! குஜாலா பேசிட்டு வர்றவனுக செல பேமானிங்க அவுத்ததும்  கத்திய காட்டிடறானுங்க.என்னோட வலி எனக்குத்தான்யா   தெரியும்! விக்ஸ்  தேச்சு போற நோவில்ல சாரு!"

இப்படி சில உரையாடல்.

இன்னும் சில வீட்டுக்குள்...

"இன்னிக்கி வெளில போலாமா? அஞ்சு நாள் கிச்சன்.ஒருநாள் வெள்ளி மட்டும்  அத்தை கிச்சனுக்குள் விட மாட்டாங்க! சென்னை எப்படி இருக்குன்றத இந்த ஞாயித்துக்கெழமையாவது காட்டுங்களேன்?"

"பாவம்தான் சரசு! பூட்டிக்கெடக்கிற கடைய பாத்து என்ன தெரிஞ்சிக்கப் போற? எனக்கும் ஒன்னோட சுத்தனும்கிற ஆசை இருக்காதா? கோவிலுக்கு போகணும்.காம்ப்ளக்ஸ்  தியேட்டர் போகணும்.பீச் போகணும்னு எவ்வளவோ  இருக்கு சரசு.( பெருமூச்சு.) துணிக்கடையில் கிளார்க் வேல.!என்னால என்னம்மா பண்ணமுடியும்? ஞாயித்துக்கெழமை ராத்திரி சந்தோசம் மட்டும் வாழ்க்கைன்னு நெனைக்கிற ஆம்பள நானில்ல?"

"என்னங்க .. ? நா அப்டி நெனக்கிறவளா? அருப்புக்கோட்டைய்ல பெறந்தவ இன்னிக்கி பட்டணத்து மருமக.விடுங்க.இன்னொரு நாளைக்கு சினிமாவுக்கே  போலாம். இன்னிக்கி டி.வி.போதும்!"

மற்றொரு குடும்பம். அல்ட்ரா மாடல்.கணவன் ஒரு ஆபிசில்.மனைவி மற்றொரு ஆபிசில். லஞ்ச் டைமில் போனில் உரையாடல்!

"என்னடி ரம்யா! இன்னிக்கி மாம்யா மருமக 'பைட்'டா? லஞ்ச் படு சொதப்பல். காரம் தூக்கல்! அம்மாவ அட்ஜஸ்ட் பண்ணிட்டு போயேன்?"

"இத உங்க ஆத்தா கிட்ட நீ சொல்லேன்? இன்னிக்கி காலம்பர என நடந்தது தெரியுமா? உங்கிட்ட சொல்லலாம்னுதான் நெனச்சேன் ! பட் ஆபீஸ் கெளம்பற நேரத்தில கரச்சல் வேணாமேன்னுதான் விட்டுட்டேன் .நைட் ஒரு மணி வரை  ஏன் கூத்தடிக்கிறிங்க,அப்டி  அடிச்சும் என்ன கெயின்னு கேட்கிறாங்க.?என்ன டைப் டா உங்கம்மா?"

"என்ன ரம்யா சொல்ற? இப்ப பக்கத்தில யாரும் இல்லியே?"

"நா  தனியா வந்துதான் பேசறேன்?  படுக்கிறத பத்தி உங்கம்மா என்னடா கொஸ்டின்  பண்றது ? இங்க கிள்ளுனான் அங்க கிஸ் பண்ணுனான்னு சொல்லனுமா ?ஏன் கூத்தடிக்கிறேன்னு கெழவி கேக்கிறா......பிள்ள எப்ப பெத்துக்கறதுன்னு எனக்கு தெரியாதா?.

"பொங்காதே ரம்யா...கூல்! அம்மாட்ட நான் பேசறேன்."

இப்படியும் சில..மேலும் பல.ஆனாலும் நம் கதை இது அல்ல.

அதோ தெரிகிறதே ஒரு காம்பவுண்டு..அந்த காம்பவுண்டுக்கு பொதுப் பெயர் உண்டு.சிங்காரவேலன் காம்பவுண்டு. அந்த காம்பவுண்டில்தான் கதை தொடங்குகிறது.
-------இன்னும் வரும்.


Monday 15 January 2018

ரஜினியை வளைக்கிறது பாஜக.!

சட்டசபை தேர்தல்  வரும்போது கட்சியை ஆரம்பிப்பேன்  என உத்தேசமாக  சொன்னதற்கே தமிழ்நாட்டில் பலர் தலைகீழாக நடக்க ஆரம்பித்து விட்டார்கள். அடுத்த சி.எம். தலைவர்தான் என்கிற அளவுக்கு ரசிகர்கள் பொங்கல் வைத்துக் கொண்டாடிவிட்டார்கள்.ஆனால்
பஸ்கள் ஓடாமல் தமிழ்நாட்டு மக்கள் மூச்சு முட்டிக்கிடந்தபோது ரஜினி வாயை திறக்கவில்லை. விவசாயத்துக்கு தண்ணீர் திறந்து விட முடியாது என்று கர்நாடக முதல்வர் சொல்லிவிட்டார்.இதற்கும் வாயைத் திறக்கவில்லை. இப்படி தமிழ்நாட்டு பிரச்னை பற்றி எதுவுமே சொல்லாமல்  மன்றத்தை விஸ்தரித்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால்
அவருடைய இரண்டு படங்களையும்  ஓட வைப்பதற்குத்தான் அரசியல் பிரவேசம் என சிலர் சொல்லி வருவதை  குருமூர்த்தியின் கூற்று பொய்யாக்குகிறது.ரஜினியின் பிரவேசம் உறுதியாக நடக்கும் என நம்பலாம்.
      ரஜினியின் அரசியல் பிரவேச ஐடியாவுக்கு மூளையே மோடி தான் என்பது  தற்போது வெட்ட வெளிச்சம் ஆகிஇருக்கிறது .பிஜேபியின் மதவாத அரசியலுக்கு  கவுரவ தூதராக இருக்கப்போகிறார் ரஜினி என்பது உண்மையாகிவிடும் போலிருக்கிறது.
வரப்போகிற தேர்தலில் ரஜினியுடன் பிஜேபி கூட்டு சேரவேண்டும் என்று குருமூர்த்தி சொல்லியிருக்கிறார்.
அப்படியானால் அதிமுக மேலும் பிளவு அடையப்போகிறது.அவர்களுக்கு எதிரான வழக்குகள் வலு பெறப்போகிறது என்றுயூகிக்கலாம்இப்படி பாஜக தங்களை பலவீனப்படுத்தினால் பிளவுண்ட அதிமுக ஓரணியில் நிற்க வேண்டிய நிலைவரும் என்பதாகவும்  கருதலாம்
.

Thursday 4 January 2018

ரஜினி யார் ?தோழரா, உ.பி .யா,ர.ர.வா, ஜி யா ?

நடிகர் ரஜினி அரசியல்வாதியாகி விட்டார்.அதுவும் ஆன்மீக அரசியல்வாதி.! உலகத்திலே  இப்படிப்பட்ட அரசியலும்  இருக்குய்யான்னு யாரும்சொல்லி இருக்காங்களான்னும்தெரியல.விவரமான ஆளு யாராவது சொன்னாத்தான்  இந்த வெங்கனத்திப் பயலுக்கு புரியும்?

காலத்தை ஆள்கிற அறிவுதான்டா ஆன்மீகம்னு ஒரு பெரிசு சொல்லுச்சு. "அட..முண்டம்,  அறிவும் ஆன்மீகமும் மனுசனுக்குத் தேவை."ன்னு  இன்னொரு பெரிசு சொன்னுச்சு.

"வெளங்கல அய்யா..வெவரமா சொல்லுங்க"ன்னேன். "ஆத்து வெள்ளம்   கரையத் தாண்டாம இருக்கிறதுக்கு சொவரு கட்டுனா அது அறிவு. அந்த வெள்ளத்தில மாட்டிக்கிட்டா நீந்த கத்துக்கிறது ஆன்மிகம்"னு சொன்னாரு.
புரிஞ்சது. ஆனா ஆன்மீக அரசியல்னா?

"டே..வெட்டிப்பயலே! ஆர்.கே.நகர்ல லம்ப்பா ஆறாயிரம் கொடுத்து ஓட்டு  வாங்குனாஅது கெட்ட அரசியல். ஜெயிச்சதும் பத்தாயிரம் தரேன். அதுக்கு இந்த இருபது ரூபாய் தாளை டோக்கனா வெச்சுக்கன்னு நம்பர் எழுதிக் கொடுத்தா அது ஏமாத்துற கேடு கெட்ட அரசியல். இது ரெண்டும் இல்லாம உன்கிட்டய காசு வாங்கிட்டு உனக்கு நாமம் போட்டா ஆன்மீக அரசியல்."

"சுத்தமா புரியலிங்க?"

"ரஜினி படத்துக்கு நூத்தியிருபது ரூபா டிக்கட்னா நீ ஆயிரம் ரூபா வரை  கொடுத்து சிரிச்சிட்டு வரேல்ல.அதான் ஆன்மிக அரசியல்.இப்ப புரியிதா?"

"புரியுதுங்க. ரசிகர்கள்லாம் காவலர்கள்னு சொன்னாரே அப்படின்னா வாட்ச்மேன் மாதிரியா? இப்ப செங்கொடி கட்சிக்காரங்க தோழர்னு சொல்றாங்க. திமுகவில உடன்பிறப்பே, அதிமுகவில ரத்தத்தின் ரத்தமே. காங்கிரஸ்ல தொண்டரே.பிஜேபியில ஜி. ரஜினி கட்சியிலே என்ன சொல்வாங்க?"

"இவங்களும் ஜி தான்.பிஜேபியின் பிராஞ்ச் ஆபீஸ்தானே. ஜி போட்டுக் கூப்பிட்டா வித்தியாசமா இருக்குல்ல?"

"நல்லது ஜி!"
 

Sunday 26 November 2017

காதல்..காமம்.( 48.) அடைக்கன் சரண்டர்.

                                     "யாருங்க.? யாருன்னு சொல்லாம சும்மா இருந்தா என்னங்க அர்த்தம்? வேல, வெட்டி இல்லேன்னா மீனாச்சி கோவில் வாசல்ல உக்காந்து  திருவோடு தூக்கவேண்டியதானே?"
                                   மறுமுனையில் எந்த அரவமும் இல்லாததால் அன்னத்துக்கு கடுப்பாகிவிட்டது. அன்னத்தின் ஆத்திரம் பார்த்த செவனம்மாவுக்கும் மாயக்காளுக்கும் பயம் .
                                   "என்னத்தா மயிலு? யார்த்தா போன்ல? ஆம்பளையா ,பொம்பளையா ..நம்ம சொந்தக்காரகளா இருந்துறப் போறாய்ங்கடி .வம்புக்கு  அலைய்ற சாதிடி! கொழம்புல ஒரு எலும்புத்துண்டு கொறஞ்சாலும்  பூமிக்கும் ஆகாசத்துக்கும் குதிப்பாய்ங்க கொணம் கெட்ட பயலுக.! " என்று சிரிக்கிறாள்  செவனம்மா.
                              "யார்னே தெரியலம்மா!" என்றபடி ரிசிவரை வைத்து விட்டு அத்தை மாயக்காள் பக்கமாக வந்தமர்ந்தாள். எலி அழுதா பூனை விட்டுருமா என்பது மாதிரி மறுபடியும் போன் கத்தியது.
                              "சனியன்..... கொரவளையை பிடிச்சி கொல்லுடி! எந்த நாயா இருந்தா என்ன? பேசாம உக்காரு.கத்திட்டு ஓயட்டும்!"
                                 "இல்ல செவனு! கல்யாண வீடுன்னா நாலு பேரு கூப்புடத்தான் செய்வாய்ங்க.மொதவாட்டி என்ன ரிப்பேரோ..பேச முடியாம இருந்திருக்கும். இப்ப போய் பாரு. " மருமகளை எழுப்பி விட்டாள் மாயக்காள். சலித்துக் கொண்டு எழுந்தாள் அன்னம்.
                                   "அலோ" என சொல்லுவதற்குள் "அன்னமா பேசறது?" என்று கேட்டது எதிர்முனை.  
                                    "ஆமா...யாரு நீங்க? என்ன வேணும்?"
                                    "தாயி...போனை வெச்சிராதேம்மா! நானு அடக்கன் பேசுறன் மா!செத்துப்போனாலே செல்லத்தாயி.! அவ புருசன். நாந்தாம்மா அவள கொன்னேன்.போலீஸ்ல உண்மைய சொல்லி என்ன ஒப்படைக்க  வந்திருக்கன் தாயி! இப்ப வக்கீல்சாமி ஆபீஸ்லேர்ந்து பேசுறன்.  ஒரு நெசத்த சொல்லணும்.சின்ன அய்யாவும்  அய்யாவும் வந்தா சொல்லிருவன் தாயி! " என்று  சொன்னவன் வக்கீல் பெயரையும் சொன்னான். வக்கீல் புதுத் தெருவில் இருக்கிறது அவன் சொன்ன வக்கீல் ஆபீஸ்.
                                  அன்னத்தின் மனசு இப்பத்தான் டிக் டிக் அடிக்கிறது.! இருவரிடமும் சங்கதியை சொன்னாள்.மாயக்காளுக்கு பதட்டம். "அடி ஆத்தி! ஊருக்கு போன சனியன் தோமாலை போட்டுக்கிட்டுல வந்திருக்கு. என்ன செய்வேன். அடி ஆத்தி!" என்று கண்ணை கசக்கினாள்.அதுவரை ஊமைச்சாமி மாதிரிபத்திரிக்கை படித்துக்கொண்டிருந்த  இருந்த தங்கராசுக்கு அவள் சொன்னதை கேட்டதும் புது ரத்தம் பாய்ந்தது மாதிரி இருக்கிறது.
                               வருங்கால மாமியாருக்கு ஆறுதல் சொல்கிறாள் மருமகள்!
                              "அத்தே..எதுக்கு வெசனம்?அவன் வந்தது நல்லதுக்குத்தான்! மாமன் மேல உள்ள சந்தேகம் போயிரும்.போலீஸ்ல அவன்  நெஜத்த சொல்லிட்டா  மாமன் தப்பு பண்ணலேங்கிறது தெரிஞ்சிரும்ல அவங்களும் .நிம்மதியா கல்யாண வேலைகள பாப்பாக.அத்தான கூட்டிட்டு மாமன போக சொல்லுங்க.எல்லாம் நல்லதுக்குத்தான்!" என்றாள் அன்னம்.
                          வேகமாக எழுந்த
மாயக்காள் முந்தானையை வேகத்துடன்  ஒரு உதறு உதறி இடுப்பில் சொருகிக்கொண்டாள்..
                           அவர்களிடம் சொல்லிவிட்டு மகனுடன் வெளியேறினாள்.
                           "எந்த எடுபட்டபய வெச்ச சூனியமோ இன்னியோடு தொலையட்டும்.நான் வாக்கப்பட்ட நாள்லேர்ந்து ஒருநா கூட என் ராசா கண்ல  தண்ணி வந்ததில்ல.அர்ச்சுனன் மாதிரில்ல திரிஞ்சாக,அவுகள மொடக்கிப்  போட்ட விதிக்கும் ஒரு முடிவ ஆத்தா மீனாச்சி காட்டிட்டாளே......!" வழி நெடுகிலும் இதே மாதிரியாக  புலம்பல்தான்.!
                    
                  உண்மை  நிகழ்வை  வைத்து  புனையப்படுகிற  தொடர்.

Wednesday 22 November 2017

காதல்.,காமம்.( 47.) வெத்தல போட்ட ஷோக்குல

                                        "வாங்க...வாங்க..!" வெத்திலை மணக்க செவனம்மா  வரவேற்கிறாள் மாயக்காளை! "என்ன சம்பந்தியம்மா இம்புட்டு தூரம்.? மருமகென இங்ஙன வெரசா  அனுப்பிட்டு நீங்க  சாவகாசமா வர்றிக"? எனக் கேட்டதும் மாயக்காளுக்கு  திக்கென்றாகிவிட்டது.
                          "தங்கராசு உள்ளயா இருக்கான்?"
                          " நீங்க மொதல்ல உள்ள வாங்க! " என்று சம்பந்தியம்மாவை பட்டாசலைக்கு அழைத்துச்சென்றாள் செவனு.!
                           ஊஞ்சலில் உட்கார்ந்திருக்கிறான் தங்கராசு.சற்று தள்ளி நிற்கிறாள் அன்னமயிலு.இருவரிடமும்  எவ்வித பதட்டமும் இல்லை.                       "என்னத்தா...அய்யா சேதி எதுவும் சொல்லி அனுப்பி இருக்காரா?"
                      "இல்லப்பே..நான் சும்மாதான் மருமவள பாக்கனும்னு வந்தேன்.நீ எப்பய்யா வந்தே?"
                       "நீங்க பேசிட்டிருங்க..நான் காப்பித்தண்ணி ஆத்தியாறேன்?" என்று  செவனம்மா அடுப்படிக்கு சென்றதும் சற்று தள்ளி நின்று கொண்டிருந்த அன்னமயிலு " வாங்கத்தே.." என்றபடி அருகில் வந்து உட்கார்ந்து விட்டாள்.
கொண்டுவந்திருந்த மல்லிகைச்சரம் அவளது சடையில் அமர்ந்து கொண்டது. மதுரை மல்லிகைக்கு தனி மணம். அது பிரம்மச்சாரியையும் சபலப் படுத்திவிடும். மேனகையிடம் விசுவாமித்திரன் மயங்கியதற்கு மலரின் மணம்
கூட ஒரு காரணமாக இருக்கலாம்.வனத்தில் பலவகையான மலர்கள் பூத்துக்  குலுங்குமல்லவா!
                   "அன்னம்...அத்தான் என்ன சொன்னான்? ரொம்ப நேரமா பேசின மாதிரி தெரியிதே ? பேசனும்னா வீட்லதான் போன் இருக்கே ..பேசுத்தா..அதுல பேசு.நாள் முச்சூடும்பேசுங்க.இப்படிசம்பந்தகார வீட்டுக்கு மாப்ளையா வரப்போறவன் தாலி கட்டுறதுக்கு முன்னாடியே வந்து போனா ஊர் சிறுக்கிக  நாலு பேரு நாலு விதமா பேசுவாளுக.ஊர் கண்ணு படும்தா! என்ன .அத்தக்காரி  இப்பவே இப்படி சொல்றாளேன்னு பாக்கிறியா? உங்க மாமன் நாமெல்லாம் படப்பு பக்கம் ஒதுங்கலியா..அவங்களையும் அப்படி பழகசொல்லுன்னுதான் இங்க என்ன அனுப்புனாரு.எங்க காலம் வேற அன்னம். வெலகி நின்னுதான் பேசுவோம். இப்ப அப்படியா?  இந்த சினிமா வந்துதான்  கெடுத்து வெச்சிருக்கு. 
 அந்த "ஒன்ன"தவிர எல்லாத்தயுமே காட்டுறான் கொள்ளியில போறவன்."
             இப்படி அத்த சொன்ன அறிவுரைகளை எல்லாம் அன்னத்தின் காதுகள் மட்டுமே கேட்டுவிட்டு வெளியே தள்ளிவிட்டன.அத்த அந்த காலத்து மனுஷி  அப்படித்தான் பேசுவாள். சரியாக காப்பி வந்தது. மூணு    லோட்டா.ஒரு சொம்பு நிறைய கருப்பட்டி காப்பி.தனி மணம். அதில் கருப்பட்டி வாசம் கலந்திருந்தது.
                "அத்தாச்சி!  மருமகனுக்கும் மருமகளுக்கும் உங்க கையால ஊத்திக் கொடுங்க.நீங்களும் ஊத்திக்கிங்க." என்று செவனம்மா  ஒதுங்கிவிட்டாள்.
              "ஒங்களுக்கு? நீங்க காப்பித்தண்ணி குடிக்கிறதில்லயா? இன்னொரு லோட்டாவ எடுத்தாங்களேன்?"மாயக்காள் சொன்னதை செவனம்மா கேட்கவில்லை.
               "வெத்தல போட்ருக்கன் அத்தாட்சி! வாய்க்கு ருசியா இருக்காது"
                மாயக்காளின் பார்வை மறுபடியும் அன்னம் மீது.!
               "ஏத்தா மருமவளே! நீ வெத்தல போடுவியாம்மா?"
               தலையை இடது வலமாக திருப்பி இல்லை என்பதை உணர்த்தினாள்.
               அங்கு மகனும் இருக்கிறான் என்பதை மறந்தவளாக மாயக்காள் பேசிவிட்டாள்."தப்பும்மா...புருசன் ஆசையா இருக்கானா இல்லயாங்கிறத வாய் செவப்பு காட்டிரும்தா.!ஒடம்புக்கும் நல்லதும்மா!  ஆம்பள ஆசயும் அதிகமாயிரும்."
               "க்ளுக்"கென சிரித்த அன்னம் "அத்தக்கி அனுபவம் பேசுது" என்றதும் அங்கிருந்த எல்லோருக்கும் சிரிப்பு தாங்கவில்லை.
                   அப்போது போன் மணியும் சிரிப்பில் கலந்து கொண்டது.
                   அன்னம்தான் ரிசிவரை எடுத்து ஹலோ சொன்னாள்.
( உண்மை நிகழ்வின் கற்பனை தொடர்,)


Tuesday 12 September 2017

காதல்..காமம்..(46.) ஊர் மெச்ச கல்யாணம்.

வெள்ளிங்கிரி மீது பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கு இன்னும் முடியவில்லை. வக்கீல்களின் சாமர்த்தியத்தினால் வெவ்வேறு வடிவம் எடுத்தது என்றுதான் சொல்லலாம்.

"எப்படியும் ஆயுள் தண்டனையாவது வாங்கிக் கொடுத்துவிடவேண்டும் " என்று பிராசிகியூசன் தரப்பு  தீவிரம் காட்டியதைப் போல வெள்ளிங்கிரி தரப்பு அவனுக்கு விடுதலை வாங்கிக்கொடுக்க வேண்டும் என்பதில்  முனைப்புக் காட்டியது.

பட்டணம் போயாவது மகனை மீட்க வேண்டும் என்கிற உறுதியுடன் வெள்ளிங்கிரியின் பெற்றோர்  இருந்தனர் .

இது ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்கிறது.

இன்னொரு பக்கம்  ......

பொன்னியின் அப்பா சிவனாண்டி முழுமையாக  குணம் அடைந்து வீடு  திரும்பி விட்டார். கட்டிலில் முதுகுக்கு வாகாக தலகாணியை அண்டக் கொடுத்து சாய்ந்திருந்தார்.

மகள் இல்லாத வீடு வெறிச்சோடி கிடக்கிது.

"என்ன பண்ணலாம்னு ரோசனை?"---சுவரில் சாய்ந்தபடி கேட்கிறாள் ராசம்மா.

"என்னத்தலா பண்ணச்சொல்றே?.ஒத்தப் புள்ளைய தூக்கிக்கொடுத்தாச்சு. ஆசைப்பட்டவனுக்கு புள்ளைய  புடிச்சு கொடுத்திருந்தா நானும் கவுரதையா  தோள்ல துண்ட போட்டுக்கிட்டு நடமாடியிருப்பேன்.அஞ்சு வயசில போயிருந்தாலும்  அற்ப வயசுன்னு மனச தேத்திக்கலாம்.வளந்து ஆளாகி  வம்சம் தளைக்கப்போற காலத்தில போயி சேர்ந்திட்டாளே பாவி மக. எனக்கு  இன்னும் ஆறலடி ராசு."

புருசனும் பொண்டாட்டியும் தினமும் இப்படித்தான் பேசிக்கொண்டு நாட்களை  தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்..கேட்டுக்கேட்டு சுவர்களும் அழுக்கடைந்து விட்டது.
**************************************************

 தங்கராசுவின் அப்பா வடிவேலு, அம்மா மாயக்காள் இருவரும் கல்யாண வேலைகளில்...!

"பொண்ணுக்கு வேண்டிய நகை நட்டு எல்லாம் வாங்கியாச்சு. பொண்ணு வீட்டுக்காரங்க அத செய்வாங்க  இத செய்வாங்கன்னு நாம்ப எதிர்பாக்கக்கூடாதுல்ல. நம்ம மருமகளுக்கு நாம்ப செய்றோம். தங்கராசுக்கு வேண்டியதையும் நானே வாங்கிட்டேன்.சம்பந்தகாரக வீட்லேர்ந்து எதையும்  எதிர்பாக்கக்கூடாதுடி மாயி.!"

"நான் ஏதும் சொல்லலிங்க.நடக்கப்போறது மொத விசேசம்.தல கல்யாணம். ஊரே மெச்சனும்.மூணு நாள் நடக்கணும். என்னோட ஆசை இம்பிட்டுதான்!"

"மாட்டேன்னு சொல்லல.நடத்திடுறேன். நீ ஒரு எட்டு போயி சம்பந்தி வீட்டுப்பக்கம் போயி மருமகளை பாத்து பேசிட்டு வாயேன் ?"

"என்னத்த பேசறது?"

"உனக்கு வெவரம் பத்தலியா..இல்லே எப்படி கேக்கிரதுன்னு தயங்கிரியா?"

"இப்படி பூடகமா சொன்னா எப்பிடிங்க.என்னத்த கேக்க சொல்றீங்க?"

"அடி போடி கேனசிறுக்கி! வயசில வைக்கப் படப்பு பக்கமா நாம்ப ஒதுங்கிப் பேசுனத மறந்திட்டியா? அந்த மாதிரியெல்லாம் பயப்படாம நம்ம மகனோடு தைரியமா பேசிப்பழக சொல்லு.வீட்டில போனு சும்மாதானே கெடக்கு.  இவனுக்கு ஒரு ஆறுதலா இருக்கும்ல?"

"அதுவும் சரிதான்!அந்த பொண்ணு தப்பா நெனச்சிட்டா ?"

"அப்படியெல்லாம் நெனைக்காது.நம்ம வயசுக்கு படப்பு துணையா இருந்துச்சி . இந்த காலத்துக்கு போனு."

தங்கராசு தன் மனைவியிடம் இப்படி சொல்லி அனுப்பினால் ...

நடந்ததோ வேறு!

( உண்மை நிகழ்வு. ஆனால் புனைவுத் தொடர்.கற்பனை கலந்து.)