Tuesday 12 September 2017

காதல்..காமம்..(46.) ஊர் மெச்ச கல்யாணம்.

வெள்ளிங்கிரி மீது பதிவு செய்யப்பட்ட கொலை வழக்கு இன்னும் முடியவில்லை. வக்கீல்களின் சாமர்த்தியத்தினால் வெவ்வேறு வடிவம் எடுத்தது என்றுதான் சொல்லலாம்.

"எப்படியும் ஆயுள் தண்டனையாவது வாங்கிக் கொடுத்துவிடவேண்டும் " என்று பிராசிகியூசன் தரப்பு  தீவிரம் காட்டியதைப் போல வெள்ளிங்கிரி தரப்பு அவனுக்கு விடுதலை வாங்கிக்கொடுக்க வேண்டும் என்பதில்  முனைப்புக் காட்டியது.

பட்டணம் போயாவது மகனை மீட்க வேண்டும் என்கிற உறுதியுடன் வெள்ளிங்கிரியின் பெற்றோர்  இருந்தனர் .

இது ஒரு பக்கம் போய்க் கொண்டிருக்கிறது.

இன்னொரு பக்கம்  ......

பொன்னியின் அப்பா சிவனாண்டி முழுமையாக  குணம் அடைந்து வீடு  திரும்பி விட்டார். கட்டிலில் முதுகுக்கு வாகாக தலகாணியை அண்டக் கொடுத்து சாய்ந்திருந்தார்.

மகள் இல்லாத வீடு வெறிச்சோடி கிடக்கிது.

"என்ன பண்ணலாம்னு ரோசனை?"---சுவரில் சாய்ந்தபடி கேட்கிறாள் ராசம்மா.

"என்னத்தலா பண்ணச்சொல்றே?.ஒத்தப் புள்ளைய தூக்கிக்கொடுத்தாச்சு. ஆசைப்பட்டவனுக்கு புள்ளைய  புடிச்சு கொடுத்திருந்தா நானும் கவுரதையா  தோள்ல துண்ட போட்டுக்கிட்டு நடமாடியிருப்பேன்.அஞ்சு வயசில போயிருந்தாலும்  அற்ப வயசுன்னு மனச தேத்திக்கலாம்.வளந்து ஆளாகி  வம்சம் தளைக்கப்போற காலத்தில போயி சேர்ந்திட்டாளே பாவி மக. எனக்கு  இன்னும் ஆறலடி ராசு."

புருசனும் பொண்டாட்டியும் தினமும் இப்படித்தான் பேசிக்கொண்டு நாட்களை  தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்..கேட்டுக்கேட்டு சுவர்களும் அழுக்கடைந்து விட்டது.
**************************************************

 தங்கராசுவின் அப்பா வடிவேலு, அம்மா மாயக்காள் இருவரும் கல்யாண வேலைகளில்...!

"பொண்ணுக்கு வேண்டிய நகை நட்டு எல்லாம் வாங்கியாச்சு. பொண்ணு வீட்டுக்காரங்க அத செய்வாங்க  இத செய்வாங்கன்னு நாம்ப எதிர்பாக்கக்கூடாதுல்ல. நம்ம மருமகளுக்கு நாம்ப செய்றோம். தங்கராசுக்கு வேண்டியதையும் நானே வாங்கிட்டேன்.சம்பந்தகாரக வீட்லேர்ந்து எதையும்  எதிர்பாக்கக்கூடாதுடி மாயி.!"

"நான் ஏதும் சொல்லலிங்க.நடக்கப்போறது மொத விசேசம்.தல கல்யாணம். ஊரே மெச்சனும்.மூணு நாள் நடக்கணும். என்னோட ஆசை இம்பிட்டுதான்!"

"மாட்டேன்னு சொல்லல.நடத்திடுறேன். நீ ஒரு எட்டு போயி சம்பந்தி வீட்டுப்பக்கம் போயி மருமகளை பாத்து பேசிட்டு வாயேன் ?"

"என்னத்த பேசறது?"

"உனக்கு வெவரம் பத்தலியா..இல்லே எப்படி கேக்கிரதுன்னு தயங்கிரியா?"

"இப்படி பூடகமா சொன்னா எப்பிடிங்க.என்னத்த கேக்க சொல்றீங்க?"

"அடி போடி கேனசிறுக்கி! வயசில வைக்கப் படப்பு பக்கமா நாம்ப ஒதுங்கிப் பேசுனத மறந்திட்டியா? அந்த மாதிரியெல்லாம் பயப்படாம நம்ம மகனோடு தைரியமா பேசிப்பழக சொல்லு.வீட்டில போனு சும்மாதானே கெடக்கு.  இவனுக்கு ஒரு ஆறுதலா இருக்கும்ல?"

"அதுவும் சரிதான்!அந்த பொண்ணு தப்பா நெனச்சிட்டா ?"

"அப்படியெல்லாம் நெனைக்காது.நம்ம வயசுக்கு படப்பு துணையா இருந்துச்சி . இந்த காலத்துக்கு போனு."

தங்கராசு தன் மனைவியிடம் இப்படி சொல்லி அனுப்பினால் ...

நடந்ததோ வேறு!

( உண்மை நிகழ்வு. ஆனால் புனைவுத் தொடர்.கற்பனை கலந்து.)


No comments:

Post a Comment