Saturday 31 December 2016

காதல்..காமம். ( 18.)

"தம்பி..யாரு?"

உள்ளே வந்த வெள்ளிங்கிரியைப் பார்த்து கேட்டார் எஸ்.ஐ.

''நான் இவனோட பிரண்டு சார்"---தங்கராசுவை  கை காட்டினான்.

"நீ எதுக்கு வந்தே? ஒன்னை நாங்க கூப்பிடலியே?" - ஆசனத்தை விட்டு எழுந்து வந்தார்.

"எனக்கு இவங்க மேட்டரு தெரியும் சார். செல்லத்தாயி நல்ல பொம்பள இல்ல  சார்."

"இத சொல்லத்தான் வந்தியா? அந்த பொம்பள கொடுத்திருக்கிற கேசு  கொலை முயற்சி கேசு ! "

"தெரியும் சார்.! என்னிக்கு எங்கய்யா அப்படி செஞ்சார்னு அந்த  பொம்பள ய
சொல்லச்சொல்லுங்க ....?"

ஹெட்கான்ஸ்டபிளை பார்த்தார்   எஸ்.ஐ.. " எந்த தேதியில அக்கரன்ஸ்  நடந்ததா சொல்லிருக்கா? தம்பி கேக்கிறார்ல..சொல்லுங்க ஏட்டய்யா?"

"பிராதுல சொல்லல சார்! சும்மா மொட்டையாத்தான்  எழுதிருக்கு!"

எஸ்.ஐ.யின் கோபம் ஏட்டு மேல திரும்புகிறது.. "என்னய்யா ...கேசு பாக்கிறிங்க. கட்ட பஞ்சாயத்தா ?பிராத புல்லா படிக்கமாட்டிங்களா? உங்கள கவனிக்கிறதா சொல்லிட்டாளா? வடிவேலு சொல்றத வச்சு பாத்தா அவ அப்படிப்பட்ட ஆளு மாதிரிதான் தெரியிது" என்றவரின் ஆத்திரம் இப்போது  செல்லத்தாயி மீது  திரும்பியது.

"என்னடி...வெளையாடப் பாக்கிறியா? பொய்யா புகார் பண்ணி  அந்தாள் கிட்ட என்னத்த எதிர்பாக்கிறே? அதான் வீட்டை எழுதி வச்சிருக்காரே அந்த ஏமாளி!அப்பறம் என்ன..பேசாம ஒன் புருசனோடு  சேந்து வாழவேண்டியதுதானே?"

அதுவரை  வாயில் முந்தானையை வைத்து அமுக்கிக்கொண்டிருந்த செல்லத்தாயின் கண்களில் கண்ணீர் பொங்க ஆரம்பித்தது.

"என் புருஷன் மானஸ்தன். அந்தாளு என்ன ஏத்துக்க மாட்டாரு..இந்தாளும் நிரந்தரமா  இருக்கப்போறதில்ல. பொண்டாட்டி புள்ளன்னு போயிருவாரு. நான் சாகுறவரை எனக்கு என்ன ஆதரவு ? யாரு கொடுப்பா?  ஆதரவு கெடைக்கனும்னா இந்தாளு மூலமா எனக்கு ஒரு பிள்ள வேணும்னுதான்  எஜமான்.  இப்படி  புகார் கொடுத்தேனுங்க!"

"தப்பா நெனச்சிருக்கே..அந்தாள  ஜெயிலுக்கு அனுப்பிட்டா கடேசிவரை ஒனக்கு எப்படி சப்போர்ட் இருக்கும்.?பொய்யா கொடுத்திட்ட. "என்ற  எஸ்.ஐ. ஓரமாக நின்றிருந்த வடிவேலுவை பார்த்தார்.

''உண்மையில ஒரு குடும்பத்தை கெடுத்திருக்கேய்யா!.சாதி திமிரு!,களை எடுக்கிறவதானேன்னுஎளக்காரமா நெனச்சு  கையை வச்சிட்டே! உன்னோட பொம்பள பசிக்கு இவள தின்னிருக்கே! இவளும் எதோ ஆசையில சபலபட்டிருக்கா! தப்புதான். வீட்டை எழுதிகொடுத்திருக்கிறவன்செல்லத்தாயி கடேசிவரை  கண்கலங்காம இருக்கணுங்கிறதுக்கு ஏதாவது பண்ணித்தான் ஆகணும்.! என்ன பண்ண போறே? முடியாது..மாட்ன்னுடே சொன்னா நான் சும்மா விடமாட்டேன்..!"

"ஐயா...வீட்டில கலந்து பேசணும்!" ---வடிவேலுவின் குரலில் பயம் இருந்தது.

"வீட்டை எழுதி கொடுத்தபோது  யாரைய்யா  கன்சல்ட் பண்ணினே? குடும்பத்துக்கு தெரியுமா அது?"

"தெரியாதுங்க!"

"அப்ப எதுக்குய்யா வீட்டில கேட்கணும். இங்கதான் உன் மகன் இருக்கான். சாட்சிக்கு அவனோட பிரண்டு இருக்கான். முடிவ சொல்லிடும்!"

தன்னுடைய மானம் போனதில் ரொம்பவே உடைந்தபோயிருந்த வடிவேலு தனது முடிவை சொன்னார்." மாசம் ஒரு மூட்டை நெல்லு  கொடுத்திர்றேன்."

செல்லத்தாயிக்கும் அது சரி எனப்பட்டது. ஆனாலும் குமுறி அழுகிறாள்.

காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர் முன்னிலையில் எழுத்து மூலமாக  அந்த சிக்கல் முடித்து வைக்கப்பட்டது.

வெளியில் வந்த தங்கராசு  " நீ வெளங்கமாட்டே" என்று அப்பனுக்கு   சாபம் கொடுத்துவிட்டு நண்பனுடன் புறப்பட்டுப் போய்விட்டான்.

இது உண்மை  நிகழ்வை  அடிப்படையாக வைத்து  புனையப்பட்டது.

Sunday 25 December 2016

காதல்..காமம்.( 17.)

வானம் குமுறிக் கொண்டிருந்தது. பலத்த மழை வருவதற்கான  அறிகுறி.

செல்லத்தாயி போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்தாள்.

"ஐயா ,வடிவேலு அவர் பையனுடன் வந்திட்டிருக்காருங்க." கான்ஸ்டபிள் ஸல்யூட் அடித்துவிட்டு அவரின் வேலையைப் பார்க்க போய்விட்டார்.

"வீட்டுல போயி பேயாட்டம் போட்டியா.?" சப்- இன்ஸ்பெக்டர் கேட்டார்.

பதறிப்போனாள் செல்லத்தாயி.

"ஐயோ சாமி...நான் கம்முன்னுதான் இருந்தேன்.அவரு பொண்டாட்டிதான் .மண் அள்ளி தூத்தாத குறையாக வஞ்சு  சாபம் கொடுத்துச்சு!"

"பின்ன... ஆலாத்தி எடுத்து உள்ள வாடின்னா....உன்ன கூப்புடுவாங்க...?" என்று  சப்இன்ஸ்பெக்டர் நக்கலாக சொல்ல ,  அதே சமயத்தில்வடிவேலு  ஸ்டேஷனுக்குள் நுழைந்தார். பின்னாடியே  தங்கராசுவும் வந்தான்.

குமுறிக்கொண்டிருந்த வானம் இடி மின்னலுடன் மழை பெய்ய ஆரம்பித்தது.

"வாங்க..வடிவேலு..." என்ற எஸ்.ஐ. சற்று  கடுமையாகவே விசாரணையை  தொடங்கினார்.

"இந்த பொம்பளை யாருன்னு தெரியிதா?"

"எங்க  வயக்காட்டுல வேலை பார்க்கிற செல்லத்தாயிங்க!"

சிரிக்கிறார் எஸ்.ஐ.

"வேலை பாக்கிறவளா? என்னய்யா சொல்றே. அவ ஒன்னோட  வைப்புன்னு  சொல்றா! வைப்பா? ஒய்பா? சொல்லுமய்யா?"

"..............................!"

"வாயை தொறந்து சொல்லும். அவளும் நீயும் ஒண்ணா படுத்திருந்தப்ப  கொரவளையை நெரிச்சு கொல்ல பாத்ததாக கம்ப்ளெய்ன்ட் கொடுத்திருக்கா. அவ ஒம்மோட வப்பாட்டியாம்.நத்தத்தில இருக்கிற வீட்டை அவ பேருக்கு  எழுதி கொடுத்திருக்கிறீர்.ஆனா வயக்காட்டில வேல பாக்கிறவளா சொல்றீர்?ஒனக்கு இருக்கிற  வசதிக்கு எத்தனை வப்பாட்டியும் வச்சுக்கலாம். ஆனா  அவள ஏன்யா கொலை செய்ய பாத்தே?"

"சத்தியமா  அவள கொல்ல பாக்கலைங்க. பொய் சொல்றா தேவடியா முண்டே!"

"ஏங்கானும்...அந்த பொம்பளைய எந்த உரிமைய்ல அப்படி வய்யிரே? ஒங்கூட  படுத்தவங்கிற திமிர்லதானே ? களை எடுக்க வந்தவ அவ புருசன  விட்டுட்டு  ஒங்கூட வந்திட்டான்னா ....நீ ஆசை காட்டாம அவ்வளவு பெரிய தப்பை  பண்ணிருப்பாளா? சொல்லுய்யா? ஒண்ணை மாதிரி வசதியானவனுங்க ஏழை பாளைகளதான்யா குறி வக்கிறிங்க. களை எடுக்க வந்தவ வசதி இல்லாதவ  அவ புருசனும் அடக்கப்பட்ட சாதிங்கிறதால....காசு பணம் இல்லாதவங்கங்கிற  காரணத்தால ஒண்ணும் பண்ண முடியாதுங்கிற ஒங்க சாதி திமிரை காட்டுறிங்க.அவள கொலை பண்ணிட்டா  பணம் செல்வாக்க பயன் படுத்தி  தப்பிச்சிக்கலாம்கிற எண்ணம்,அவள அனுபவிச்சிதுமில்லாம கொல்லவும் பாத்திருக்கிறே? ஒம்மகன் வளந்து கல்யாணம் பண்றதுக்கு காத்திருக்கான். இந்த வயசில எதுக்குயா எழவெடுத்த காரியத்தை பண்ணிருக்கே?"

"அய்யா...அவ என் தொடுப்புதான். ஒத்துக்கிறேன்.மனசோடு வீட்டை எழுதிக் கொடுத்தவன் எப்படியா கொல்ல மனசு வரும்? அவ வீட்டுக்குப் போயி ரொம்ப நாளாச்சு...பொய்யி சொல்றா. மொட்ட கோபுரத்தான் சாமி மேல சத்தியம் பண்ண சொல்லுங்க..பாண்டி முனி மேல சூடம் அணச்சு சத்தியம் பண்ணுவாளா? கேளுங்க."  ---தலை கவிழ்ந்தபடியே கேட்கிறார் .

"செல்லத்தாயி...சத்தியம் பண்ணச்சொல்றாரு...பண்ணுறியா?" எஸ்.ஐ. அவளிடம் கேட்டார்.

"இனிக்க இனிக்க பேசி என்ன அனுபவிச்சிட்டு இப்ப சத்தியம் பண்ண சொல்றியா?"--செல்லத்தாயி இப்ப வடிவேலுவை பார்த்து நேரடியாக பேச ஆரம்பித்து விட்டாள்." கோழி அடிச்சு போடு...ஒன் கை ருசி அவளுக்கு வராதுன்னு சொல்லி மத்தியானமே வந்து படுத்தியே...அன்னிக்கி ராத்திரி வீட்டுக்குப்  போகாம என் காலடியே கதின்னு அனுபவிச்சியே...அதெல்லாம் பொய்யா? சத்தியம் பண்ணுவியா? நிரோத்து இல்லாம படுக்கிறதுக்கு என்னய்யா  காரணம் சொன்னே? ஞாபகம் இருக்கா? பிச்சிப்பூ வாங்கிட்டு வந்து கொண்டைய்ல வச்சு விட்டுட்டு ....வெக்கத்த விட்டு சொல்றேன்....என் மாருக்கு நடுவுல மொகத்தை வச்சு கொஞ்சுனியே.." என்று அவள் சொல்லியதை கேட்க முடியாமல்  தங்கராசு வெளியே செல்கிறான்.

மழை விட்டபாடில்லை. உள்ளே செல்லத்தாயி வெளிப்படையாக பேச முடியாததை எல்லாம் வெட்கத்தை விட்டு சொல்லிக்கொண்டிருக்கிறாள். வடிவேலுவின் தலை கவிழ்ந்து கிடக்கிறது. மானமோ  ஏலம் போய்க்கொண்டிருக்கிறது.

"செல்லம்...என்ன இருந்தாலும் நீதாண்டி எனக்கு எல்லாமேன்னு ஆயிப்போச்சு.இனி என்னடி தொடுப்பு வைப்புன்னு? என் ராசாத்தி நீதான்னு கண்ணிர் வடிச்சியே இல்லேன்னு சத்யம் செய்வியா...செத்த பெறகு உரிமையோடு வந்து நில்லுடின்னு இந்த மஞ்ச கயிரை கட்டுனியே..பொய்யா?" தாலியை எடுத்துக் காட்டுகிறாள். "இத்தனை மாசம் கழிச்சு  இந்த கயிரை கட்டுறியேன்னு கேட்டதுக்கு 'தப்புத்தாண்டி செல்லம்'னு கொஞ்சுனது மறந்து  போச்சா?" என்று தொடர்ந்து அவள் சொல்லிக்கொண்டே போக எஸ்.ஐ.இடை மறித்தார்.

"ஒங்க ராத்திரி அனுபவத்த சொன்னதெல்லாம் போதும்.சத்தியம் யாரும் பண்ண தேவை இல்ல.கம்ப்ளெயிண்ட் மேட்டருக்கு வாங்க! வடிவேலு ! என்னய்யா சொல்றே? கொரவளையை நெரிச்சியா...ஏன் கொல்ல பாத்தே..சொன்னா மரியாதை ..இல்லன்னா...?"

"சத்தியமா அவள கொல்ல பாக்கல..நெனைக்கவும் இல்ல. அவ பொய் சொல்றா! என் வழியா அவளுக்கு ஒரு பிள்ளை வேணும்னு கேக்கிறா..அதான்  உண்மை. இந்த உண்மை என் வீட்டுக்கும் தெரியும். நான் முடியாதுன்னு சொன்னதுக்குத்தான் என்ன இப்படி சந்தி சிரிக்க வைக்கிறா! அவ கிட்டய கேளுங்க" என்று வடிவேலு சொல்லியபோதுதான் அங்கு வெள்ளிங்கிரி  வருகிறான்.

"ஏண்டா..வெளில நிக்கிற?" என்று தங்கராசுவையும் கூட்டிக்கொண்டு உள்ளே சென்றான்.

மற்றது  அடுத்த வாரம். உண்மை  சம்பவம் இங்கு புனைவுக் கதையாக  தொடர்கிறது.

Sunday 18 December 2016

சசிகலா---சினிமா படத்தின் பெயர்.

இந்தி,தெலுங்கு சினிமாப்பட உலகில் தெளிவான ஆளு ராம் கோபால் வர்மா! காரியவாதி! எது டிரண்டில் இருக்கோ அதை வச்சு பின்னி எடுத்திடுவார். அதனால அவர மத்தவங்களும் பின்னி எடுத்திருக்காங்க. ஆனா  எதை பத்தியும் கவலைப்பட மாட்டார்.பாறை மேல மழை பேஞ்சாலும் இடி  விழுந்தாலும்  யாருக்கு நோகப்போகுது!

இப்ப டிரண்டில் இருப்பது சசிகலாதான். ஜெயலலிதா இல்லாத எடத்தை  இந்த அம்மாதான் பில் அப் பண்ணப்போறாங்கன்னு ஊரு உலகமே பேசிக்கிட்டு இருக்கு.! அதனால சசிகலா பேரை தனது அடுத்த படத்துக்கு வைக்கப்
போறாராம்.

"இது சுத்தமான காதல் படம்"னு சொன்னதுடன் விட்டிருந்தால் கவலைப்பட்டிருக்க மாட்டோம். 'தமிழனின் காதல் கதைன்னு " சொல்லி இருப்பதுதான் கவலையா இருக்கு! உண்மையை சொல்றோம்னு வீரப்பனை கந்தல் கந்தலாக காட்டுன பெரிய மனுசந்தான் இவரு!

தனக்கு ஜெயலலிதாஜி மேல மதிப்பு மரியாதை இருந்தாலும் அதை விட மிக  உயர்வான மதிப்பு மரியாதை சசிகலாஜி மேல இருப்பதாக சொல்லி இருக்கிறார். நல்ல காலம் ஜெயலலிதா மேல பக்தியா இருந்த விசுவாசிகள் இப்ப  தோழி பக்கம் மாறி விட்டதால் யாரும் கண்டிக்கப் போறதில்ல.
சசிகலாவின் கண்கள் வழியாக ஜெயலலிதாவை பார்க்கப்போகிறாராம்.

சிங்கம் இருந்த காட்டில் சிறுநரி ஊளை இடுவதால்  காடு அதிரவா போகுது. ராம்கோபால் ஜி உங்களுக்கு தமிழ்நாடு அரசு விருது கிடைச்சாலும் அதிசயமில்ல. ஆடுங்க!

Saturday 17 December 2016

காதல்...காமம்.( 16.)

செல்லத்தாயியை பார்த்ததும் மாயக்காளுக்கு எங்கிட்டு இருந்து வந்ததோ  தெரியவில்லை. மூலையில் கிடந்த விளக்குமாரை எடுத்துக்கொண்டு  ''வாடி  என் சக்களாத்தி" என்றபடியே பாய, பதிலுக்கு செல்லத்தாயியும் " அதான்  வந்திருக்கேன்டி கெழட்டு சிறுக்கி " என்று எகிற ,கூட வந்திருந்த போலீஸ்காரர் ஒரு நொடி ஆடிப் போய்விட்டார்.

இப்படி ஒரு சிக்கல் வரும் என அங்கிருந்த மற்றவர்கள் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.வடிவேலுவினால் பெண்டாட்டியை  மட்டும்தான்  சத்தம் போட முடிந்தது.

"இந்தாளா...சும்மா கெடக்கிறியா...? நீயும் அவளுக்கு சமமா கூத்தடிக்கிறியா? சாதிமான் வீட்டுக்காரி மாதிரியா நடந்துக்கிறே? ரெண்டு சிறுக்கியும் அடிச்சிக்கிட்டு  நாறுங்கடி! ஊரு சிரிக்கட்டும்." என்ற வடிவேலு மகனை பார்த்து சத்தம் போடுகிறார்.

"டேய்..தங்கராசு...உன் ஆத்தாக்காரி ஆடுற ஆட்டத்த பார்த்தில்ல. செத்த நேரத்துக்கு முன்னாடி என்ன பார்த்து என்னென்னமோ கத்துனியே  ..இப்ப  இதுக்கு என்னடா சொல்றே?" என்று ஆத்திரப்பட்டதும் வந்திருந்த போலீஸ்காரருக்கு கோபம் வந்துவிட்டது.

"நிறுத்துங்கய்யா..." என்று சத்தம் போட்டவர்  செல்லத்தாயியை பார்த்தார்.

"ஏம்மா....ஸ்டேஷன்ல வந்து என்ன சொல்லி கம்ப்ளெய்ன்ட் கொடுத்தே?  இங்க வந்து ரகளை பண்றே..சும்மா கெட." என்றவர் வடிவேலுவை பார்த்தார்.

"அய்யா உங்க மேல இந்தம்மா புகார் கொடுத்திருக்கு. இன்ஸ்பெக்டர் ஐயா உங்களை கூட்டிட்டு வர  சொன்னாரு.வந்திங்கன்னா..." என்கிறபோதே குறுக்கிட்டான் தங்கராசு.

"இந்த தட்டுக்கெட்டவ சொன்னான்னு நம்பி ஒரு பெரிய மனுசனை ஸ்டேஷனுக்கு  கூப்பிடுவிங்களா....?"

"தம்பி வார்த்தையை விடாதிங்க. ஒங்க அய்யாவை பத்தி எங்களுக்கும் தெரியும். ஊருல பெரியமனுசன்.ஆனா இந்த பொம்பள கொடுத்திருக்கிற புகாரு சும்மா அடிதடி மாதிரி இல்ல.வெவகாரம் வேற மாதிரி தம்பி! இந்த பொம்பளைய பார்த்ததும் ஒங்கம்மா குதிச்ச குதியை பாத்திங்கல்ல.ஆனா  அந்த பெரிய மனுசனுக்கு இந்த பொம்பளைய பார்த்ததும் ஒரு மாதிரியா போனதையும் பார்த்தேன் தம்பி...நீங்களும் வேணும்னா ஸ்டேசனுக்கு  வாங்க" என்றவர் வடிவேலுவை பார்த்து "அய்யா போகலாமா?" என்றார்.

"அந்த சிறுக்கியோடு வரமுடியாது. அவளை கூட்டிட்டு போங்க. நான் வந்து சேர்றேன்"

ஒரு சிலுப்பு சிலிப்பிவிட்டு " வாரும்   அங்க வச்சுக்கிறேன் கச்சேரிய" என்றபடி செல்லத்தாயி கிளம்பினாள்.

அங்கம்மா கிழவியின்  வாய் இப்பத்தான் திறக்குது. மகனை பார்த்து " யப்பா ..ஊருக்கு பெரியவன! அந்த சிறுக்கி பேசுனத பார்த்தா அவளுக்கு கைய கால  அமுக்கி விட்ருப்பே போலிருக்கு! இல்ல அதுக்கும் மேல தொண்டூழியம்  பண்ணிருக்கியா? அதான்  நத்தம் வீட்டை அவ பேருக்கு மாத்திருக்கே! ஒம் பொண்டாட்டி ஒனக்கு என்ன கொறை வச்சான்னு அந்த கூத்தியா கிட்ட அடங்கி கெடந்தியோ....வயசான காலத்தில இந்த கண்றாவியை எல்லாம் பாக்கணும்னு எனக்கு தலைல எழுதியிருக்கு!" என்று தனது இயலாமையை  சொல்லி புலம்புகிறாள்..

அதுவரை சும்மா இருந்த மாயக்காள் மறுபடியும் பொங்கினாள். " யத்தே...ஒம் பிள்ளைய அவ முந்தாணியில முடிச்சு வைக்கல.கொசுவத்தில சொருகி வச்சுக்கிட்டா.அதான் சொக்கிப் போயிருக்காரு. வயசான காலத்தில கூத்தியா கேட்டிருக்கு. அனுபவிக்கட்டும்"

எல்லாத்தையும் காதில் வாங்கிக் கொண்ட பெரிசு  துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டது.உள்ளுக்குள் நடுக்கம்.செல்லத்தாயி எதை சொல்லி புகார் கொடுத்திருக்காளோ என்கிற பயம்.அதை வெளிக்காட்டாமல் .......

''ராசு ...வாடா.!" மகனை கூப்பிட்டார் .

ஸ்டேஷனில்  செல்லத்தாயி போட்ட நாடகம் அப்பனையும் மகனையும் வெறி கொள்ள வைத்தது. நல்ல சமயத்தில் வெள்ளிங்கிரி வந்து சேர்ந்தான்!

அதை அடுத்த வாரம் பார்க்கலாம்.  இது உண்மை  சம்பவத்தின்  கற்பனை  கலந்த பதிவு, 


Friday 9 December 2016

காதல்...காமம்...( 15. )

முந்தானையினால் கண்ணை துடைத்துக் கொண்டு மூக்கை சிந்தி வழக்கம் போல சுவரில் தடவினாள்.அது அவளது பழக்கம்.தை மாதம் பொங்கலுக்கு  வெள்ளை அடிக்கும்போது அந்த தடயங்கள் அழிந்துவிடும்.

வடிவேலுவுக்கு சற்றுத் தள்ளியே அமர்ந்தாள்.என்னதான் கோபத்தில் பேசினாலும் புருசனுக்கு மரியாதை கொடுக்கத் தவறுவதில்லை.

"மாயி..." சற்று அச்சமுடன் மனைவியை பார்த்தார்.

"ம்ம்"

"ஒங்களுக்கு  தெரியாம ஒரு காரியத்தை பண்ணிட்டேன். செல்லத்தாயிக்கி நத்தத்தில் உள்ள காரை வீட்டை எழுதி வச்சிட்டேன். அது எங்க ஆத்தாளுக்கு  சொந்தமானது. சும்மாதானே கெடக்கிதுன்னு விக்கிறதா சொல்லி  ஆத்தா கிட்ட பொய் சொல்லி பத்திரம்  மாத்தி கொடுத்திட்டேன். அத எங்க ஆத்தா முன்னாடி சொல்லி ....அதுக்கு என்ன தண்டனையோ கொடுங்க. ஏத்துகிறேன்."

"என்ன மனுசன்யா ....அந்த தட்டுவாணி என்னய்யா மருந்து வச்சா? இப்படி  கேடு கேட்ட காரியத்தை பண்ண எப்படிய்யா தைரியம்  வந்தது? ஆத்தாளும்  பேரனும் இப்ப வருவாங்க. அவங்களுக்கு சொல்லும்!"

"தப்புத்தான் மாயி!  கிறுக்குத்தனமா தப்பு பண்ணிட்டேன். என்னை பித்து  பிடிக்க வச்சிட்டாடி! இப்ப பிள்ளைய கொடுக்க வாய்யான்னு  வம்பு பண்றா!
என்ன பண்றதுன்னு தெரியல. தீர்த்துக் கட்டிடலாம்னு .......! ஆத்தாகிட்ட  சொல்லிட்டு  ஆக வேண்டியதை பார்க்கலாம்னுதான்....."

சொல்லி முடிப்பதற்குள் ஆத்தா அங்கம்மாவும் மகன் தங்கராசுவும் வந்து விட்டார்கள்.

"என்னப்பு  எதுக்கு ஆத்தாளை கூட்டிட்டு வரச்சொன்னே? பதறிப்போயி வந்திருக்கேனப்பு!" தூண் ஓரமாக உட்கார்ந்தாள்  "மகமாயி!" என்றபடி!

"இப்பத்தான் ஒன் மருமக கிட்ட சொன்னேன். அவ கிட்டயே கேட்டுக்க. மறுபடியும் சொல்றதுக்கு எனக்கு தைரியம் இல்ல!"

மறுபடியும் தோமுத்ரா கட்டிலில் ஏறி படுத்துவிட்டார்.

மாமியார்,மகனிடம் சொன்னதும் ஏகப்பட்ட  சண்டை! எதையும்  வடிவேலு காதில் வாங்கியதாக இல்லை. அவரை அறியாமலேயே  கண்ணீர் வடிகிறது.

''என்ன பாவம் பண்ணினேனோ இந்தாளுக்கு வந்து பிள்ளையா பெறந்திருக்கேன். கொன்னுட்டு ஜெயிலுக்கு போனாலும் தப்பில்ல. மனுசனா.? மாடுதான் எந்த பசுன்னு பாக்கிறதில்ல. இந்தாளும் அந்த ஜென்மம்தான்! கண்ட எடத்தில வாயை வச்சிருக்காரே! அப்பத்தா ஒன்னையும் ஏமாத்தி ஒன் சொத்தை  கூத்தியாளுக்கு எழுதி வச்சிருக்காரு..என்ன பண்ணலாம்னு சொல்றே?" எரிச்சலில் கத்துகிறான் தங்கராசு.

வந்து சேருகிறான் வெள்ளிங்கிரி!

"என்னடா...தெரு வரைக்கும் சத்தம் கேக்கிது. அப்படி ஏன்னடா குடி முழுகிப் போச்சு. கூத்தியா... சொத்துன்னு  கத்துறே? ஒங்க அய்யா  செல்லத்தாயியை வச்சிருக்காருங்கிறது ஊருக்கே தெரியுமே..அதை இப்ப ஏன் தலையில சொமக்கப்பார்க்கிரே? அவருக்கும் வயசாகிப்போச்சு.விடு கழுதைய! வெளையாடிட்டுப் போகட்டும்!" என்கிறான்.

"வெவரம் தெரியாம பேசாதடா! வீடே தீ பத்தி எரியிது. ஒன்னு இந்தாளு சாவனும். இல்லேன்னா அந்த பன்னாடை சிறுக்கி சாவனும். அதான் எங்க வீட்டு வெவகாரத்துக்கு தீர்வு" கொதிக்கிறான் தங்கராசு.

மற்றவர்கள் என்ன சொல்வது என்பது தெரியாமல்  தங்கராசுவை பார்க்கிறபோதுதான் வாசலில் வந்து நிற்கிறாள் தொடுப்பு செல்லத்தாயி! கூடவே போலீஸ்!

ஏடாகூடமாக ஏதோ நடக்கப்போகிறது என்பது மட்டும் தெரிந்தது!

உண்மைச்சம்பவத்தை  அடிப்படையாகக் கொண்டு  புனையப்படும்  தொடர். இனி அடுத்த வாரம்,



Sunday 4 December 2016

காதல்...காமம். ( 14.)

அப்பனுக்கும் ஆத்தாளுக்கும் அப்படி ஒரு சண்டை நடக்கும் என்பதை தங்கராசு எதிர்பார்க்கவில்லை.

 பொன்னியை அவளது வீடு அருகில் விட்டுவிட்டு ஒரு முடிவுடன்தான் வீட்டுக்கு  வந்து கொண்டிருந்தான் .காலடி வைத்ததும் அவனின் காதில்  விழுந்ததது.......

"நாண்டுக்கிட்டு போகவாய்யா!"

அம்மா மாயக்காள் அதிர்ந்து பேசாதவள். இன்னும் சொல்லப்போனால்  புருசனின் முகம் பார்த்துக்கூட பேசமாட்டாள். பொதுவாக அந்தக்காலத்து மனுஷிகள் அப்படித்தான் வாழ்ந்தார்கள்.

மகன் வந்தபிறகும் அவர்களது சண்டை தீரவில்லை.

"வயக்காட்டுக்கு போன ஆளு களை புடுங்க வந்தவ மேல ஆசைப்பட்டு கையை வச்சுப்பிட்டே...ஊர்ல நடக்காததா நடந்து போச்சுன்னு நானும்  சும்மா விட்டுட்டேன். சிறுக்கி மவ ஒன்னை சேலைக்குள்ள  சிக்க வச்சுருக்காங்கிறது  இப்பல்ல தெரியிது.! மூணு செண்டு நிலத்த வீடு கட்டிக்கன்னு கொடுத்த பாரு  அப்பவே ஒமரு கெரன்ட காலு  நரம்ப அறுத்து விட்டிருந்தா சவாரி கேட்டிருக்குமா? என்னத்தையா அவகிட்ட காணாதத கண்டுபிட்டே?"

மழையும் இடியும் ஒரு சேர தாக்கியதைப்போல்  கண்ணீரும் வார்த்தைகளும் கொட்டுகிறது.

தங்கராசுக்கு இப்பதான் கோபம் வந்தது.

'' சின்னாத்தா கொரங்கு பாடி போட்டு லவுக்கை போட்டிருக்கு. நீயும் போட்டிருந்தா வேலி தாண்டிருக்கமாட்டார்.இல்லையா அப்பு?"என்றான் அப்பனை பார்த்து.!

"மானங்கெட்ட பயலே..எவடா சின்னாத்தா? மானங்கெட்ட  அந்த மல்லாரியா ஒனக்கு சின்னாத்தா..வெளக்குமாறு பிஞ்சிரும்."

"பின்னே எப்படி சொல்லனும்ரே? இத்தனை நாளும் விட்டுத்தானே வச்சிருந்தே? அப்ப அவளை மொறை வச்சு நான் கூப்பிட்டதில என்ன தப்பு? தெரு நாயி நடு வீடு வரை வந்து நார வச்சிட்டு போயிடுச்சே!"

இப்பத்தான் திருவாயை திறக்கிறார் வடிவேலு. விட்டத்தையும் பார்க்க தைரியம் இல்லை. முகம் பார்த்து பேசவும் ஆண்மை இல்லை. சுவர்தான் அவரது பார்வையை தாங்கியது. ஆங்காங்கே காரை பெயர்ந்திருந்தது  அப்போதுதான் தெரிகிறது.

மெதுவான குரலில் "வச்சுக்கிட்டவன்னாலும் என் ரத்தமும் சேர்ந்திருக்குள்ள?
அவ்வளவு சீக்கிரமா அத்துவிட்ர முடியுமா?" என்றார்.

தங்கராசு அப்பனுக்கு எதிராக சேரை இழுத்துப்போட்டுக்கொண்டான்.

"உன்னால முடியாதுப்பு! ஒங்க ரெண்டு பேரையும் கொன்னு போட்டுட்டு ஆனை விழுந்தான் பள்ளத்தில போட்டுரவா? என்னால முடியும்.!" என்று கால் மேல் காலை போட்டுக்கொண்டவன் ஆத்தாளைப் பார்த்தான்.

"இந்தாத்தா..இந்த மனுஷன் இந்த அளவுக்கு எறங்கி இருக்கார்னா  பெருசா ஏதோ நடந்திருக்கு.கதவை தாப்பா போடு. சங்கருத்திடுறேன்." என்றபடி கோபமுடன் எழுந்தான்.

ஆத்தாளும் அப்பனும் இப்போது ரொம்பவே  பயப்பட்டனர். அதுவரை ஆவேசமாக இருந்தவள் அடங்கிப்போனாள். நிஜமாகவே  செய்து விடுவானோ?

வடிவேலு  ''வாடா வா. வந்து கொல்லுடா! பெத்த ஆத்தாளை  முண்டச்சி ஆக்கிட்டு ஜெயிலுக்கு போயிடு! செல்லத்தாயி வந்து சொத்தை அமுக்கிட்டு போகட்டும்!" என்று சுவரிடமே பேசுகிறார்.

"அப்ப ஒனக்கும் அவளுக்கும் என்ன பிரச்னை? அத சொல்லு. தீர்த்து வைக்கிறோம்." என்கிறான் மகன்.

"அவளோடு வந்து ஒரு மாசம் குடும்பம் நடத்த சொல்றா...வவுத்தில வாரிசு  வளரனுமாம்.அதுக்குத்தான் அம்புட்டு சண்டை போட்டா!"

ஆத்தாளுக்கு முகம் சிவந்து போச்சு.

"பெத்த பிள்ள வளந்து மீசை முளைச்ச ஆம்பளையா நிக்கிறான். அவனை அந்த தட்டுவாணி கிட்ட அனுப்பி வைக்கவா. அவன் தருவான்யா பிள்ளையை! வெக்கமா இல்ல.இத சொல்ல ? அவ புருசன் கிட்ட படுத்து பிள்ள பெத்துக்க முடியாத பொட்டச்சிக்கு நீ பிள்ள வரம் கொடுக்க போறியாக்கும்! மொண்ணை  அருவாமனையில ...." என்றவளுக்கு  அதற்கு மேல் சொல்ல வார்த்தை வரவில்லை. பெத்த பிள்ளை பக்கத்தில நிக்கிறான்.

இப்போது ஒரு தீர்மானத்துக்கு வந்தவளாக  " நீ என்ன செய்வியோ ஏது செய்வியோ அந்த கேடு கெட்ட எடுபட்டவளை  வெளக்கி விட்டு பஞ்சாயத்து பண்ணிவிட்டுட்டு வீட்டுக்குள்ள காலை வையி. இல்லையா நிரந்தரமா அவ புருசன்கூட நீயும் ஒரு புருசனா  அவ கூடவே இரு.நானும் தாலிய அறுத்திட்டு நிம்மதியா என் பிள்ளைக்கு ஒருத்தியை தேடி கல்யாணம் பண்ணி வச்சிடுறேன்!" என்கிறாள்.

அதுநாள் வரை அவள் ஒருமையில் புருஷனை பேசியதில்லை.

தங்கராசுவுக்கு அம்மாவின் கோபம் புரிந்தது. ஆனால் அதுவே தீர்வாகிவிடுமா? குடும்பத்தின்  மானம் மரியாதை என்ன ஆவது? செல்லத்தாயியை வைத்துக் கொண்டிருப்பது ஊருக்கே தெரியும்.ஆனால்  அது பெருந்தனக்கார வீடுகளில் சகஜம்தான் என அன்றைய கால கட்டத்தில்  அறியப்பட்டிருப்பதால் அது கவுரவமாகவும் கருதப்பட்டது.

வடிவேலு  வேர் இழந்த மரம் மாதிரி பட்டென தரையில் உட்கார்ந்துவிட்டார்.
முழங்கால் மீது கையை வைத்தபடி !

"மாயி...பக்கத்தில வாடி! " என்று மனைவியை பக்கமாக வந்து அமர ஜாடை  காட்டிவிட்டு  மகனை பார்க்கிறார்.

"அப்பத்தாளை கூட்டிட்டு வா!" என்கிறார்.

அங்கம்மா வருங்கால சம்பந்தி செவனம்மாவின்  வீட்டுக்கு போயிருந்தாள்.

இன்னும்  வரும். ஒரு  உண்மை  நிகழ்வை  அடிப்படையாகக்கொண்டு புனையப்படும்  கற்பனை  கதை. 

கருத்துகள்  சொல்லலாமே! 

Sunday 27 November 2016

வாழ நினைத்தால் வாழவா முடியாது?

கவர்ச்சிக்காக  இந்த பெண்ணின் படத்தை  இங்கு  பதிவு செய்யவில்லை.

அல்லது...

பார்,,பார் ,,இவ்வளவு அழகற்ற பெண்ணுக்கு  அழகு ராணி பட்டம்  சூட்டி  கிரீடம் அணிவித்திருக்கிற  அநீதியைப் பார் என்பதற்காகவும்  இந்த கர்ப்பிணிப் பெண்ணின் படத்தை காட்டவில்லை.

கவர்ச்சியோ, அழகு ராணி விருதோ  எதற்கும் இங்கு  இடம் இல்லை. இங்கு வலியுறுத்தப்படுவது  திண்மை.

சிங்கமே எதிர்வந்தாலும் மன வலிமையும்,சாதுர்யமும் இருந்தால் தப்பிக்கவும்  வழி கிடைக்கும் என்பதை சொல்வதற்கும்தான் இந்த பெண்மணியின் படத்தை வெளியிட்டிருக்கிறேன்.

ஆண்ட்ரியா கிராண்ட்ஸ் .இவளின் பெயர்.ப்ளோரிடா வை சேர்ந்தவள்.

2001-ல் இவளும் சகோதரன் கெண்டலும் பள்ளியில் இருந்து வீட்டுக்கு திரும்பினர், அம்மா அலுவலகம் சென்றுவிட்டதால் கையில் இருந்த சாவியினால்  வீட்டை திறந்து தம்பியுடன் சென்றுவிட்டாள்.

வீட்டுக்குள் ஒருவித வாசம்.மணம்.அது இன்னதென அறியவில்லை அந்த எட்டு வயது சிறுமி.

கிச்சனில் இருந்து வந்த அந்த வாசம் சமையல் கியாசிலிருந்து லீக் ஆகியதால் நுகரப்பட்ட மணம். சிறுவனும் சிறுமியும் அதை அறிந்திருக்கவில்லை.

அறைக்குள் சென்றதும் ஆண்ட்ரியா மின்சார சுவிட்சை போட்டாள்!

மறுநொடியே குண்டு வெடித்தைதைப்போன்ற பயங்கர சத்தம்!

இருவரும் தூக்கி வீசப்பட்டனர், ஆண்ட்ரியாவுக்கு மூன்றாவது டிகிரி தீக்காயம். அதாவது உடலில் எண்பத்திஐந்து சதவிகிதம் வெந்து போய்விட்டது.உயிர் பிழைக்க முடியாது என டாக்டர்கள் கை விரித்து விட்டனர். மாதக்கணக்கில் போராடினர். மரணவலியில் அனுதினமும்  அழுது கதறினாள். ஆனால் தாங்கிகொண்டாள். உயிர் பிழைப்போம் என நம்பினாள். அதுதான் அவளது தினசரி பிரேயராக இருந்தது.

கல்யாணம் செய்யக்கூடாது. செய்து கொண்டாலும் கர்ப்பம் தரிக்கக்கூடாது. அது உயிரை கொன்று விடும் என கடுமையாக எச்சரித்து அனுப்பினார்கள்  டாக்டர்கள்.

உயிர் மீது படுத்திருந்த யானையையே புரட்டிப்போட்டுவிட்ட ஆண்ட்ரியாவுக்கு முன்னை விட மன வலிமை அதிகமாகி இருந்தது. தன்னைப் போன்ற தீக்காயம் பெற்றவர்களுக்காக ஒரு காப்பகத்தை ஆரம்பித்தாள். கல்யாணமும் செய்துகொண்டு கரு தரித்தாள். தானும் தனது  கருவறையில் இருக்கும் குழந்தையும் நலமே என்பதை உணர்த்த இத்தகைய புகைப்படங்களை எடுத்து வெளியிட்டாள். விதம் விதமாக!

மருத்துவ உலகம் அவளை வியப்புடன் பார்க்கிறது!

வாழ நினைத்தால் வாழவா முடியாது?

அன்புடன்,
உங்களது,
குரங்கு.

Saturday 26 November 2016

காதல்....காமம்..( 13.)

தங்கராசுவும் பொன்னியும் பஸ்ஸில் பக்கம் பக்கமாக அமர்ந்திருந்தனர்.

சிலைமான் செல்லும் பஸ். சிலைமானில் இறங்கி அப்படியே காலாற வைகை கரை ஓரமாக நடந்து ,,,கரையோரம் ஓடும் ஆற்று நீரில் கால் நனைத்து பிறகு மணலில் நடந்தால் குருமணலில் நடப்பது  சுகமாக இருக்கும்.!

இருவரும் ஆற்றின் நடுப்பகுதியில் அப்படியே படுத்து விட்டனர்.

"ராசு...ஆயுசு முழுசும் இப்படி சொகமாக இருக்க முடியுமா?"

"ம்..."

"சாயங்கால வெயில்..மணல் சூடு...ஒடம்புக்கு ஒத்தடம் கொடுக்கிற மாதிரி இருக்குல்ல?"

"ம்ம்"

" ஒன் நெஞ்சு மேல சாஞ்சு படுக்கணும் போல இருக்கு.,,! சுருட்ட முடியை  கோதணும்..மெல்ல ஒதட்டை கடிக்கணும்....இப்படி எவ்வளவோ  மனசில  இருக்கு...கல்யாணத்துக்கு முன்னாடியே இப்படியெல்லாம் ....தப்பா ராசு?"

இது வரை ம்ம் கொட்டிவந்த தங்கராசுக்கு இப்போதுதான் சுருக்கென இருந்தது.

"பொன்னி..இம்பிட்டு நேரம் என்ன சொன்னே?"--உண்மையிலேயே அவனது நினைப்பு எல்லாம் அங்கு இல்லை. வீட்டை சுற்றியே இருந்தது. பொன்னி 'தப்பா ராசு?' என்று கேட்டதும்தான்  சூழலை உணர்கிறான்.

பொன்னி கோபப்பட்டதிலும் தப்பில்லை.

"நாசமா போறவனே....இம்பிட்டு நேரமும் என் ஆசைகளை மனசு விட்டு சொல்லிருக்கேன்.அதெல்லாம் காதுல ஏறலியா...எந்த நெனப்புலடா...இங்க  என்ன கூட்டிட்டு வந்தே? கல்யாணத்துக்கு பெறகும் இப்படித்தான் இருப்பியா..உனக்கு என் நெனப்பே இல்லியா...? ஒன் வயசுக்கு இப்படி ஒருத்தி  தனியா வந்தா என்னன்ன தோணனும்? எனக்கே என்னவோ..எவ்வளவோ  தோணுது..ஒனக்கு அந்த ஆசையே வரலியா? மரக்கட்டையாடா நீ?"

இப்படியெல்லாம் பேசுகிறாள். அவனோ முதுகில் ஒட்டியிருந்த  மணலை தட்டிக்கொண்டு அமர்கிறான்.

"நெறைய இருக்கு பொன்னி! சத்தியமா சொல்றேன்.நான் நல்லா தூங்கி ரொம்ப நாளாச்சு." என்றதும் அவளும் எழுந்து உட்கார்ந்தாள்!அவன் எதையோ  நினைத்து மனதை குழப்பியபடி படுத்திருந்திருக்கிறான் என்பது புரிகிறது.

பாசமுடன் கன்னங்களை கைகளால் தாங்கிக்கொண்டு அவனை உற்றுப் பார்க்கிறாள்.''என்ன ஆச்சு ராசு? பிரச்னையா?"

"ப்சு...!"

அவனுடைய உதடுகளில் அழுத்தி முத்தமிட்டாள்.  அப்படியே மணலில் சாய்ந்துவிட்டனர். முதன் முதலாக அவளது மார்பின் மென்மையின் சுகம்!

அவளது மூச்சுக்காற்றின் வெப்பம். யாரும் பார்க்கவில்லை என்கிற தைரியம். அவள் வெகு நேரம் உதடுகளை விடவில்லை.

விருப்பமில்லாமல் அவளது பிடியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்ட தங்கராசு தயங்கியபடியே பேசுகிறான்.

"பொன்னி..உன்னை இங்கே கூட்டியாந்ததுக்கு காரணம் இருக்கு....ஆனா சொல்றதுக்கு தைரியம் வரல! அதான் ஊமைச்சாமியாரா கெடக்கிறேன்!"

"நம்ம கல்யாணத்துக்கு எதிர்ப்பு சொல்றாங்களா?"

"இல்ல. எங்கப்பனின் தொடுப்பு  செல்லத்தாயி நேத்து வீட்டுக்கு வந்து எங்கத்தாளை அடிச்சுப்போட்டு போயிட்டா...எங்கப்பன் பேச்சு மூச்சு காட்டல. எதுக்காக அவ வந்தா..என் ஆத்தாள அடிச்சா...ஒண்ணுமே புரியல பொன்னி!"

"கூத்தியாளுக்கு அம்புட்டு தைரியம்னா ....பெருசா ஏதோ ஒன்னு இருக்கு ராசு.
கண்டுபிடிக்கலாம்...! கவலைப்படாதே...நானும் தொணையா இருக்கேன்.
எந்திரி.."

தங்கராசுவும் பொன்னியும் கரையை நோக்கி நடந்தனர்.!

இன்னும் வரும். உண்மைச்சம்பவத்தின்  புனைவு.

Thursday 10 November 2016

காதல்...காமம்.( 12.)

"என்னத்த சொன்னாரு...எல்லாம் பழைய குப்பைதான்" என்றபடியே திருப்பி  படுத்துவிட்டார்  வடிவேலு.

"என்னமோ பண்ணுங்க. என் வாழ்க்கை இப்படித்தான் சிரிப்பா சிரிச்சி  சீரழியனும்னு எழுதி வெச்சிருக்கு. அத மனுசப்பயலால மாத்த முடியுமா? என் நெஞ்சுக்குள்ள கிடக்கிற தீயை அவ்வளவு சீக்கிரமா  அணைச்சிரமுடியுமா ..அதுக்கு நான்தான் தண்ணிய ஊத்தணும்!"

வெடுக்கென்று சொல்லிவிட்டு அவளின் ரூமுக்குள் சென்று கதவை தாழ் போட்டுக் கொண்டாள்.

"பாத்தியாடி ...மாயி. அந்த குட்டி எப்படி சிலுப்பிட்டு போகுதுன்னு! மட்டு மரியாதை தேஞ்சுக் கிட்டே போகுதுடி!" என்று அங்கு வந்த மாயக்காளிடம் சொல்ல , அவளது குறையை சொல்ல ஆரம்பிக்கிறாள் மெதுவான குரலில்!

"இன்னிக்கி வெள்ளென எந்திரிச்சதும்  அந்த சிறுக்கி பச்ச மெளகாயை அப்படியே கடிச்சி தின்னுட்டு தண்ணிய குடிக்கிறா! கண்ணுல இருந்து அம்புட்டு தண்ணி கொட்டுது. பதறிப்போயி பாவி மகளே ஏண்டி இப்படி பண்றேன்னா  பதிலுக்கு வாயாடுரா! நீ ஆண்டு அனுபவிச்சிட்டவ.போயி  அடுப்படியிலே கெடன்னு சொல்றா! இந்த கொடுமைய எங்கே போயி சொல்வேன்?"

"சரி..அந்த புள்ள காதுல விழுந்துரபோகுது.. போயி .சொம்பு நெறய தண்ணி  கொண்டு வா! வயிறாவது குளிரட்டும்!" எழுந்து உட்கார்ந்து கொண்டார்.

தல்லாகுளம் போலீஸ் ஸ்டேஷனில்.....

அழகிரி என்கிற வெள்ளிங்கிரி  கையை கட்டிக் கொண்டு நிற்கிறான்.

"சொல்லு ..உனக்கும் தங்கராசுக்கும் எப்படி பழக்கம்? அப்படியே  சினிமா கதை  மாதிரி சொல்லணும். அதுக்காக உண்மையை மறச்சி பொய்யை சொல்லக்கூடாது. ஆரம்பி?"

"பொய் சொல்லி  என்ன சார் ஆகப்போகுது? " என்று சொல்ல ஆரம்பித்தான்.

"பக்கத்துபக்க வீடு ! காலேஜ் வரை ஒன்னாதான் படிச்சோம். அமெரிக்கன் காலேஜ்ல படிக்கிறப்ப அடிக்கடி குமுளிக்கு போவோம்.     எனக்கு இழுவை  பழக்கம்......"

இடை மறித்த இன்ஸ்பெக்டர் ராம்குமார் " கஞ்சான்னு தெளிவா சொல்லு" என்று திருத்தினார். " சரி  ...அது மட்டும்தானா?  அப்ப   பொம்பள பழக்கம் இருக்கணுமே...உன் நண்பனுக்கும் அனுபவம் உண்டா?"

"அவனுக்கு எந்த பழக்கமும் இல்ல சார். நான்தான் ......"

"வேற?''

"நான் காதலிச்ச பொண்ணு மேல அவனுக்கும் ஆசை இருந்தது எனக்கு தெரியாது. தங்கராசுவை அவளும் காதலிச்சா!"

"என்னடா  குழப்புற...?"

"நான்தான் அவள லவ் பண்ணுனேன். அவ ஜாடை கூட காட்டல! ஒரு நாள் சாமி கும்பிட மீனாட்சியம்மன் கோவிலுக்கு போனேன்! பொற்றாமரை குளம் படியில் ரெண்டு பேரும் உக்காந்திருந்தாங்க.பேசுனதை கேட்டேன்.

பிளாஷ்பேக்....
-------------------

"வீட்டில சொல்லிட்டியா பொன்னி? எங்க வீட்டில யாரும் எதிர்ப்பு சொல்லமாட்டாங்க!"

"எங்க வீட்டில பச்சை விளக்கு காட்டியாச்சு. நோ அப்ஜெக்சன்  ."

"அப்பறம் என்ன  சினிமாவுக்கு  வெளியூருக்குன்னு  கெளம்பவேண்டியதுதான்"

"பெறகு  நேரா 'அதுக்கும்' போகலாம்னு கேப்பியே? அதெல்லாம் வேணாம்பா! சந்திச்சமா பேசுனமான்னு  இருப்போம்.வேணும்னா சினிமாவுக்கு போகலாம். இங்கிலீஷ் படம் மட்டும் வேணாம். கையை வெச்சிட்டு சும்மா இருக்க மாட்டே?"

"என்ன பொன்னி இப்படி வாருறே...பிக்காளிப்பயன்னு நெனச்சிட்டியா? எங்கப்பா அம்மா என்னை பொறுக்கியா வளக்கல!"

தலை கவிழ்ந்தபடி சொன்னான்.

"ராஜ்... கழுத்து நெரிச்ச கோழி மாதிரி தொங்கிட்ட. ஆம்பள  தலை கவுரக் கூடாது. சரியா? வா கெளம்பலாம்." இருவரும்  எழுந்து புறப்பட்டார்கள்.

இனி அடுத்தவாரம். இது உண்மை நிகழ்வின் சிறு தொகுப்பு.
--------------------------------------------------------------------                                                                                                                                                             

Sunday 6 November 2016

காதல்...காமம்..(பகுதி 11.)

தயை கூர்ந்து இந்த குரங்கை மன்னித்து விடுங்கள். இது நாள் வரை தட்டச்சு செய்தவரின் பிழையினால் கேரக்டர்களின் பெயர்கள் மாறி விட்டன.அதை தவிர்க்க நானே தட்டச்சு செய்ய தொடங்கி இருக்கிறேன்.
தங்கராசு.;வடிவேலு,மாயக்காளின் மகன்.
அன்ன மயிலு :தங்கராசுவின் மனைவி.
அங்கம்மா:வடிவேலுவின் அம்மா,
செவனம்மா:அன்னமயிலுவின் அம்மா.
அழகிரி என்கிற வெள்ளியங்கிரி: தங்கராசுவின் நண்பன்.
ராம்குமார்: இன்ஸ்பெக்டர்.சிதம்பரம் :சப்-இன்ஸ்பெக்டர்
செங்கமலம்:போலீஸ் ஆள்.
----------------------------------------------------------------------------------------------------------------------
 மதுரை  வண்டியூர் தெப்பக்குளத்தில் புது மாப்பிள்ளை தங்கராசு தற்கொலை செய்து கொள்கிறான்.ஏன் செய்துகொண்டான் என்பதுதான் முன்கதை சுருக்கம்
---------------------------------------------------------------------------------------------------------------
இன்ஸ்பெக்டர் ராம்குமார் வந்ததும் வடிவேலு மெதுவாக எழுந்து வரவேற்றார்.மாயக்காள் முந்தானையை இழுத்துப் போர்த்திக்கொண்டு உள்ளே சென்று விட்டாள். கிழவி அங்கம்மா மட்டும் காலை நீட்டி வெத்திலைய  இடித்தபடி...."போனதுதான் போனான் போக்கத்த பய. இப்படி  வம்பு தும்புலையா இழுத்து விட்டிருக்கணும். சென்ம சனி"என்று சத்தமாகவே சொன்னாள்.

"எதுக்கு இப்படி சலிச்சு புளிச்சிக்கிரே ! சும்மா கெட ஆத்தா!"

அம்மாவை வைதபடி  அதிகாரியை தனி அறைக்கு கூட்டிப்போனார்
வ டிவேலு. அறைக்கதவை  சாத்திக்கொண்டார்..

அன்னமயிலு  இருந்த அறைக்கதவு திறக்கிறது. அங்கம்மாளின் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள். உள்ளே பேசுவது ஏதாவது காதில் விழாதா?

"என்னத்தா..உம் புருசனை சனின்னு வஞ்சதுக்கு கோபமா?" கன்னத்தை தடவிவிட்டபடி கேட்கிறது கிழவி.

"கோவப்பட்டு என்ன ஆகப் போகுது?களைன்னு அறுக்கப்போனா பாம்பு வந்து கொத்துது. நானும் நாலு பேரைப்போல சோடி போட்டுக்கிட்டு புருசனோட  போகணும்னுதான் ஆசைப்பட்டேன். பாதகத்திக்கு அமையலியே ஆத்தா ,அமையலியே! என்ன பாவம் செஞ்சேனோ தாலி அறுத்து முண்டச்சியா  நிக்கிறேன்! தனி மரமா நிக்கிற வயசா எனக்கு? சொல்லுத்தா! மாரு சொறக்காம ...மடிப்பிள்ளை இல்லாம மலடியா வாழணும்கிறது விதியா?"

கண்ணீர் பொலபொலவென வடிகிறது அன்னத்துக்கு.

கிழவிக்கு நெஞ்சு படபடக்கிறது. அன்னத்தை அப்படியே தன் மடியில் சாய்த்துக் கொள்கிறாள்.

''மருத மீனாச்சி...உன்னோட சீமையில இப்படி ஒரு அக்கிரமம் நடக்கலாமா?கட்டுன மறுநாளே தாலியை அறுத்து விட்டுட்டியே...நீயெல்லாம் ஒரு சாமின்னு இத்தனை நாளா கும்பிட்டதுக்கு இதான் பலனா?"

கிழவியினால் இப்படித்தான் ஆறுதல் சொல்ல முடியும்!

அறைக்குள் சென்ற இன்ஸ்பெக்டர் ராம்குமாரும் வடிவேலுவும் அரைமணி நேரத்துக்குப் பின் கதவைத் திறந்தார்கள்.

வடிவேலு முகத்தில் இனம் புரியாத சோகம். கை குவித்து அதிகாரியை அனுப்பிவைத்தார். எதுவும் பேசாமல் தோமுத்ரா கட்டிலில் ஏறி சாய்ந்து படுத்துவிட்டார்.

''என்னங்க மாமா சொன்னாரு...இன்ஸ்பெக்டரு?"

கிழவியின் மடியில் படுத்திருந்த அன்னம் விட்டத்தை பார்த்தபடியே கேட்டாள்.
இனி அடுத்தவாரம். உண்மைச்சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதப்படும் சிறு தொடர்.

Sunday 30 October 2016

தீப ஆவலி முடிஞ்சு போச்சு....

"என்னங்க.....அதான் தீவாளி முடிஞ்சிருச்சுள்ள...என்னிக்கி ஊருக்கு?"

"என்னடி ..நீயே இப்படி கேக்கிறே? நாம்ப என்ன டேரா போடுறதுக்கா வந்திருக்கோம்..உங்க அம்மா இப்படி கேக்க சொன்னாங்களா? இருக்காதே  என்  மாமியா ரொம்பவும் நல்லவங்களாச்சே? உனக்கு என்னடி பிரச்னை? வீட்டுக்கு கெளம்புறதிலேயே இருக்கே?"

"என் தம்பி காலம்பர இருந்தே தீவாளி தமிழர் பண்டிகை இல்ல.திருமலை நாயக்கர் காலத்திலேயே எறக்குமதி பண்ணுன பண்டிகை.இதை சாக்கா வச்சுக்கிட்டு என்னென்னமோ பண்றாங்க.புது டிரஸ்,தலை தீவாளி,வகை வகையா ஸ்வீட்ஸ்னு வெட்டி செலவுன்னு போன்ல பேசிட்டிருந்தான். எனக்கு  ஒரு மாதிரியா இருக்கு.தலைமுறை தலைமுறையா தலை தீவாளிக்கு புது மாப்பிள்ளை பொண்ணை  கூட்டி வந்து மாமியார் வீட்டுல விருந்து உபசாரமெல்லாம் நடக்கிறதுதானே?"

"உன் தம்பி தமிழ் படிச்சவன்.அதான் நெஜத்த சொல்றான். ஆனா  காலம் காலமா இருக்கிற இதை மாத்த முடியாது. நாளைக்கு கல்யாணம் நடந்து அவன் தலை தீவாளிக்கு மாமனார் வீட்டுக்கு  போவான் பாரு. அப்ப தெரியும்.அவன் வேணாம்னு சொன்னாலும் பெண்டாட்டி சும்மா இருக்க மாட்டா.சண்டைய  இழுத்திடுவா?"

"என்ன தீவாளி நம்ம பண்டிகை இல்லையா?"

"நெஜம்தான்! மதுரையை  ஆண்ட நாயக்கர் நெறைய மாறுதலை செஞ்சிட்டு போயிட்டார்.திருமலை நாயக்கருக்கு முன்பு மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் தேரோட்டம் மாசி மாதம்தான் நடந்திருக்கு.இதை சித்திரை  மாதத்துக்கு மாத்தி நடத்தினார்.மன்னர் சொல்லை யாராவது மீற முடியுமா? நரகாசுரன் கதைக்கும் தீவாளிக்கும் சம்பந்தமே இல்லை.மதுரை நாயக்கர்களாலும்,செஞ்சி,தஞ்சை நாயக்கர்களாலும் புகுத்தப்படதுதான் தீவாளி. தீபம்னா விளக்கு, ஆவலின்னா தொடர்ச்சி, ஒழுங்குன்னு அர்த்தம். தொடர்ச்சியா விளக்கு ஏத்தி வழிபாடு நடத்துறது..இதான் தீபாவலி. இதுதான் தீபாவளின்னு புழக்கத்துக்கு வந்திருக்கு. நியாயமா பாத்தா இது சமணர்கள் கொண்டாடிவந்த விழான்னு பேராசிரியர் அ.கி.பரந்தாமனார் எழுதிய 'மதுரை நாயக்கர் வரலாறு' என்கிற ஆராய்ச்சி புத்தகத்தில் தெளிவா சொல்லிருக்கார்.. அதனால உன் தம்பி சொன்னதில் தப்பே இல்லை. அதுக்காக நாம்ப உடனே  ஊருக்கு கெளம்பனும்கிறது அவசியமில்ல."

"என் தம்பி என்ன அர்த்தத்தில சொன்னானோ ....அதெல்லாம் தெரியாது. நான் சொல்றேன் இன்னிக்கி கெளம்பியாகனும்" என்று சொல்லி முடிக்க அடுப்பங்கரையில் இருந்து அம்மாவின் அழைப்பு.

"மாப்ள கிட்ட என்னடி வம்படிக்கிறே....வா மிளகா அரைச்சு கொடு! வெரா மீனுக்கு மிளகாயை அரச்சு
ப் போட்டாதான் ருசியா இருக்கும். வா"

இதை கேட்ட பின்னரும் அவன் ஊருக்கு கிளம்புவானா?

Saturday 22 October 2016

மு.க. அழகிரி பலவீனமா , பலமா?

தென் தமிழகத்தில் தனக்குத்தான் செல்வாக்கு என்கிற  ஒரு தோற்றத்தை  மு.க. அழகிரி உருவாக்கி இருந்தது உண்மைதான்!

அது உரு சிதைந்து போய்விட்டதும் உண்மைதான்!

சலனமற்ற குளத்தில் கல் எறிந்தால் அது எழுப்பும் அலைகள் கரையைத் தாண்டாது என்பதைப் போல ஒரு வட்டத்துக்குள் அடங்கி விட்டார் அழகிரி! குளம் நிரம்பி கரை உடைப்பது என்பது இனி நிகழாது என்கிறார்கள் உடன்பிறப்புகள்.

மு.க.ஸ்டாலின்தான் எதிர்கால திமுக என்பதைப்போல நாட்டு நிகழ்வுகளும்  இருக்கின்றன. 

கடந்த தேர்தலில் கணிசமான இடங்களைப் பெற்று வலிமையான எதிர்க்கட்சி என்கிற  தகுதியைப் பெறுவதற்கு ஸ்டாலினின் ஓய்வறியாத உழைப்பு  உதவியது என்பதை அனைத்துக் கட்சிகளுமே அறியும்.

கடந்த காலங்களில் கூட்டணியாக இணைந்திருந்த விடுதலை சிறுத்தைகள், பாமக போன்ற கட்சிகளின் ஆதரவு இல்லாத நிலையிலும்  அவர்களையும்  வீழ்த்தியதற்கு  ஸ்டாலினின் வியூகம்தான் காரணம்.

மதிமுக,சிறுத்தைகள்,பொதுவுடமை கட்சிகள் இணைந்து  ஓரணியாக நின்றும் ஒற்றை இலக்கத்தில் கூட  வெற்றி பெற வில்லை.

எதிர்கட்சி என்கிற தகுதியை இழந்ததுடன்  விஜயகாந்தின் தே.மு.தி.க. பல இடங்களில் பொறுப்புத்தொகையை இழந்தது.

அழகிரியின் துணை இல்லாமலேயே  நிகழ்ந்தவைதான் இவையெல்லாம்!

கட்சிப் பணி அழகிரிக்கு வழங்கப்படவில்லை. அவருக்கு பொறுப்புகள்  கொடுக்கப்பட்டிருந்தால் தி.மு.க வை ஆட்சி பீடத்தில் அமர்த்தி இருப்பார் என்பதெல்லாம் காற்றில் வரைந்த சித்திரம் மாதிரிதான்!

திமுக படுதோல்வி அடையும் என்று ஜோதிடம் சொன்னவர் அழகிரி. அவரின் மன நிலை  ஸ்டாலினுக்கு எதிராக இருந்ததே தவிர கழகத்தின் வெற்றியை  குறி வைத்து இருக்கவில்லை. அவருக்கு எப்படி கலைஞர் பொறுப்பு கொடுப்பார் என எதிர்பார்க்கமுடியும்?

கழகத்தில் இப்போது அழகிரி இல்லை. அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தவர்களும்  கழகம் மீண்டும் ஆட்சி பொறுப்புக்கு வந்தால்தான் தங்களின் எதிர்காலம் என்பதை உணர்ந்து காத்திருக்கிறார்கள்.

இப்படித்தான் நினைக்கத்தோன்றுகிறது!  

Sunday 16 October 2016

லாரன்ஸ் மாஸ்டருடன் நடிகை மோதினாரா?

பரபரப்புக்கு பஞ்சமில்லாத ஊருதான் கோலிவுட்.

இங்கே இடுப்பு வேட்டி அதுவா அவுந்து விழுந்திட்டாலே 'ஐயோ  என்னை கெடுத்துப்பிட்டான்" னு சவுண்டு விடுவாங்க.

எல்லாம் முன் எச்சரிக்கையாம்! அதான் அலர்ட்டா இருக்காங்களாம்.!

இப்படி முன் எச்சரிக்கை முனிம்மாக்கள் நிறைஞ்ச ஊர்ல  நம்ம ஊரு  லாரன்ஸ்  மாஸ்டரை பத்தி  கலவரமான  செய்தி.

பிழைக்கப்போன ஆந்திராவ்ல இவருக்கும் நடிகை கேத்தரின் தெரசாவுக்கும்  விவகாரம். அந்த பெண்ணை டிஸ்மிஸ் பண்ணிட்டார்னு ஒரே பேச்சு!

விவரம் என்ன..விரிவா பார்ப்போம்.

தெலுங்கு மேக ஸ்டார் சிரஞ்சீவியின் 150 வைத்து படம்தான் கைதி நம்பர் 150. இதில ஒரு அயிட்டம் டான்ஸ். பெரிய நடிகை குத்தாட்டம் போட்டால்  படத்துக்கு சிறப்பா இருக்கும்னு படத்தின் தயாரிப்பாளர்  ராம் சரண் நினைக்க சிரஞ்சீவி ஓகே சொல்லிவிட்டார்.

பிரமாண்டமான படம் என்பதால் மகள் சுஷ்மிதாவை  காஸ்ட்யூம் டிசைனர் ஆக நியமித்திருந்தார்கள். . இவர்  வடிவமைத்த  காஸ்டியூம் சரியா இல்லேன்னு கேத்தரின் கேவலமாக  பேச  பிரச்னை வெடிச்சிருக்கு. இதுக்கும் லாரன்ஸ் மாஸ்டருக்கும்  எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது. கேத்தரின்  சும்மாவே  சுஷ்மிதாவை  வேலைக்காரி மாதிரிதான் பேசுவாராம். தயாரிப்பாளர் ராம்சரணின் தங்கச்சி, ஹீரோ சிரஞ்சீவியின் மகள் என்கிற  மரியாதை கூட இல்லாமல் கேத்தரின் பேசினால் சகோதரனுக்கு கோபம் வருமா வராதா?

"மாஸ்டர்...வேற ஆளை வச்சு அயிட்டம் டான்சை எடுங்க" என்பது  மேலிடத்து  உத்தரவு.

லாரன்ஸ் மாஸ்டருக்கு வேண்டிய நடிகை  ராய் லட்சுமி!

கவர்ச்சி களைகட்டி கம்பீரமாக நிக்கிது.

இதுதான் உண்மையில் நடந்தது  என்றாலும் கோலிவுட்டில் மாஸ்டர்தான் காரணம் என்று  சொல்லி பார்ட்டி கொடுக்கிறார்கள்.

எதுக்காக பார்ட்டி என்கிற விவஸ்தை வேணாமா சாரு?

Saturday 15 October 2016

காதல்...காமம். ( பகுதி பத்து.)

பதினாறாவது  நாள் விஷேசம் நடந்து முடிந்து வீடு பளிச்சென இருந்தது.

பட்டாசலையில் கிழக்கு பார்த்த சுவரில் படமாக தொங்கிக்கொண்டிருந்தான்  தங்கராசு.பிரேமை சுற்றி சின்ன சைசில் சீரியல் பல்புகள்.

அவனுக்கு அவ்வளவுதான் மரியாதை. இனி வருஷா வருஷம் திதிதான். அமாவாசைக்கு ஏழை எளியவர்களுக்கு சாப்பாடு. ஒரு பத்து பேருக்கு ராமவிலாசில் சாப்பிட சீட்டுகள் கொடுக்கப்பட்டுவிடும்.

வடிவேலு  அந்த காலத்து தோமுத்ரா கட்டிலில் படுத்திருந்தார்.கணவன் மனைவி படுத்துக்கொள்ளலாம்.உருண்டு விழுந்து விடாதபடி பக்கவாட்டுகளில் சன்னல் மாதிரி வேலைப்பாடு. பர்மா தேக்கில் செய்தது. பரம்பரையாக இருந்து வருகிறது. வடிவேலுவின் அய்யா வாங்கிப் போட்டிருந்தார் மகனுக்காக. அவர் அதை தனது மகன் தங்கராசுக்காக.! ஆனால் பாவி மகன் அல்பாயுசில் போய் சேர்ந்து விட்டான்.

அதுநாள் வரை போலீஸ் விசாரணையும் இல்லாமல் இருந்தது.

அவளுக்கென ஒதுக்கப்பட்டிருந்த அறையில் கட்டிலில் தலையணைகளை  அடுக்கிவைத்து சாய்ந்தபடி படுத்திருக்கிறாள் அன்ன மயிலு. கையில் எதோ பழைய புத்தகம்

அத்தைக்காரி அங்கம்மா கிழவி பாசமாக " ஆத்தா அன்னம் ..சித்தே அந்த வெத்தில செல்லபொட்டிய கொண்டாந்து தாரியாத்தா?" என்று கேட்கிறாள்.

சாவி கொடுத்த பொம்மை மாதிரி வந்து போனவள்..மெதுவான குரலில்  ''குடிக்க தண்ணி  கொடுக்கவாத்தே?"

"வேண்டான்டி...மவராசி...ரூம்ல போயி இரு தாயி!"

அன்னத்தின் செவந்த மேனிக்கு கட்டியிருந்த ரோசாப்பூ கலர் சேலை எடுப்பாக இருந்தது.வெள்ளை நிற ரவிக்கைக்குள்  இளமை ஒடுங்கிப் போயிருந்தது. பெருமூச்சு  விடுகிறாள் இப்போது அடிக்கடி! அதற்கு  ஆயிரம் அர்த்தம்.!

"அடி  அங்கு!" வடிவேலுதான் படுத்தபடியே கிழவியிடம் பேச்சு கொடுத்தார்.

''அன்னத்த எத்தன நாளைக்குத்தாண்டி ரூமுக்குள்ளேயே அடச்சு வைக்கிறது. வெளியே, தெருன்னு கூட்டிட்டு போவக்கூடாதா?  கூட்டம் இல்லாத நாளா பாத்து  கோவிலுக்கு கூட்டிட்டு போவலாம்ல? அந்த புள்ளைக்கும் ஒரு மாறுதலா இருக்கட்டுமே?"

"நல்லாத்தான் இருக்கும். அவள யாரு கூட்டிட்டு போவா? நானே  ஆத்தமாட்டாம கெடக்கிறேன்.முனங்காலு முட்டி செத்துப் போயி கெடக்கு!செங்கமலம் வந்த பெறவு அவளோடு  அனுப்பி வைக்கலாம். அவளும் சின்னவதான்.மனசு விட்டு பேசிக்குவாளுக! என்ன சொல்றிக?"

''சரியாத்தான் இருக்கும்.அந்த புள்ளைய கூட்டியாரச்சொல்லு! புலுவனை அனுப்பு.!"

புலுவன் பண்ணையாள். செங்கமலத்தை கட்டிக்க போகிறவன்.

வடிவேலு சொல்லி முடித்ததும் அறைக்குள்ளிருந்த அன்ன மயிலு அங்கு
 வந்தாள்.

'' கோயிலுக்கு வேணாம்தே! வேணும்னா சினிமாவுக்கு போறேன். பாரம் எறங்கின மாதிரி இருக்கும்?"

மாமனாரும் மாமியாரும் ஒரே குரலில்..... ''என்னாத்தா சொல்றே?"

"சினிமாவுக்கு போறேன்னு சொன்னேன்!"

அதுநாள் வரை இல்லாத அழுத்தம் அன்று அவள் குரலில் இருந்தது.

அந்த நேரம் பார்த்துத்தானா இன்ஸ்பெக்டர் ராம்குமார் அங்கு வர வேண்டும்?

சட்டென்று அறைக்குள் போய் கதவை சாத்திக் கொண்டாள் அன்ன மயிலு!

இன்னும் இருக்கிறது. அடுத்த வாரம் சந்திக்கலாம். உண்மை சம்பவத்தை  அடிப்படையாக கொண்டு புனையப்படுகிற தொடர் இது.




Thursday 6 October 2016

காதல்...காமம்..(பகுதி.9.)

செத்தவனை நினைத்து எத்தனை நாட்கள்  அழுது  கொண்டிருக்க முடியும்?
மனதில் வலி இருந்தாலும் அது நாளடைவில் பழகி போய் விடுகிறது.தங்கராசுவும் பெயிலில் வந்து விட்டான்!

 மகளை  பார்ப்பதற்காக சம்பந்தி வீட்டுக்கு வந்திருந்தாள் மாயக்காள்.

அன்னமயிலு இப்போது ஓரளவுக்கு நார்மல்.தனியாக அவளை உட்கார வைத்திருந்தார்கள்.கலைந்த கூந்தல்.பொட்டில்லாத நெற்றி. விபூதி கீற்று சிறிதாக,

அங்கம்மாளை அவள் கண்டு கொள்ளவில்லை.யாரையோ நாலாவது மனுஷியை பார்ப்பது போல் பார்க்க அங்கம்மாள் நொறுங்கிப் போனாள். வந்ததும் சம்பந்தியை கட்டிப்பிடித்து ஒப்பாரி வைத்தாள். அது ஒரு வழக்கமாக  இருக்கிறது. இன்றும் மதுரையில் பார்க்கலாம். அழுது விட்டுதான்  துக்கம் விசாரிப்பார்கள்.

"அன்னம் எப்படிடி இருக்கே?"-துக்கம் தாங்காமல்தான் கேட்டாள் மாயக்காள்!

"இன்னமும் செத்துப் போகலியான்னு பாக்கிறதுக்கு வந்தியா? பாத்திட்டில்ல! கெளம்பு! மொட்ட மரத்தில எல மொளைக்கப் போறதில்ல.நானும் பூவும் பொட்டுமா  வாழப்போறதில்ல! போ... ! ஒரு நா கூத்தோடு என் வாழ்க்கை  முடிஞ்சிருச்சு. அத நெனச்சால காளி கூத்து ஆடணும்னு வெறியா வருது!"

"எதுக்கும்மா  ஆத்தாள  வய்யிரே! அதுவே வெசனப்பட்டு துக்கத்த எங்க எறக்கிவைக்கிறதுன்னு தெரியாம தெசை தெரியாம இருக்கு! " என்று சம்பந்திக்கு  சாதகமா பேசினாள்.

எகிறுகிறாள் அன்னம்.!

''என் ஆத்தாளுக்கா ஒன்னும்  தெரியாது,? விட்டா இந்த மீனாட்சி பட்டணத்தையே வித்திட்டு வந்திரும்." என்று கத்தியவள் அம்மாவை கண் சிவக்க பார்த்து கேட்கிறாள்.

''பொருத்தம் பாத்துதான் இந்த கலியாணத்த நடத்துனிங்களா? இல்ல நா  ஆம்பள சொகத்துக்கு அலையிறேன்னு நெனச்சு ஓட்டி விட்டுட்டிங்களா? குத்த வச்சு அஞ்சு வருசமா கெடந்தேனே..எவனையாவது  ஏறிட்டிருப்பேனா? அவன் மேல ஆசை இவன் மேல ஆசைன்னு சொல்லிருப்பேனா? எனக்கு  அரிப்பெடுக்குதுன்னு உங்கிட்ட சொன்னேனா? எதுக்கு கல்யாணத்த பண்ணி வச்சு தாலிய  அறுத்து தீயில போட்டிங்க? வெளங்கவே மாட்டிங்க!"

ஆத்திரத்தில் எப்படியெல்லாம் பேசுகிறோம் என்கிற நினைப்பே இல்லாமல்  பேசினாள் அன்னம்.

இரண்டு கிழவிகளும் வாயடைத்து போய்விட்டார்கள். அப்பாவியாக இருந்தவளுக்கு இவ்வளவு ஆங்காரம் எங்கிருந்து வந்தது?

"வாயில வந்தத பேசாதே அன்னம்! பெத்த பொண்ணுக்கு யாராவது அரளி வெதைய அரைச்சு கொடுப்பாங்களாம்மா! பேரன் பேத்திகள பாக்கிற ஆசையில பத்துப் பொருத்தமும் பாத்துத்தான்மா கலியாணத்த பண்ணி வெச்சோம்.வெளாம்பட்டி சோசியன்ல இருந்து  திருச்சி சோசியன் வரை  பார்த்தோம். ஒருத்தன் கூட கொறை சொல்லல.நல்லாத்தான் சொன்னாய்ங்க
எவன் வச்ச கொள்ளியோ என் வீட்டு கூரையில விழுந்திருக்கு. விதிடி, அன்னம்  விதி! எங்களை கொறை சொல்லாதே!" என்று குரலெடுத்து ஒப்பாரி  வைக்கிறாள்  மாயக்காள்!

இன்னும் இருக்கிறது. உண்மைச்சம்பவத்தை  அடிப்படையாக வைத்து புனையப்படும் சிறு தொடர்.

தவறு இருந்தால் சொல்லுங்கள் அய்யாமாரே!

அடுத்தவாரம் சந்திப்போம். . 

Sunday 2 October 2016

காதல்...காமம் !( பகுதி எட்டு )

செங்கமலம்  அங்கு வந்த போது எழவு வீட்டின்  அட்மாஸ்பியர் சற்று  மாறி இருந்தது. மாயக்காளின் சோகம் சற்று குறைந்திருந்தது. குளித்து முழுகி  சேலை மாற்றியிருந்தாள்.

"ஆத்தா...அழுது பொலம்பி இனி ஆகப்போறது எதுவுமில்ல.இனி நடக்கப் போறததான் பாக்கணும்! அன்னமயிலு  என்னென்ன  நெனச்சிட்டிருந்தாளோ
பாவி மகன் இப்படி போயி சேந்துட்டானே...என்ன கொறைய கண்டானாம் அந்த  சொரண கெட்ட பய! .விடுத்தா..அவன் கொடுத்து வச்சது அவ்வளவுதான்
.நம்ம பொண்ணோட வாழறதுக்கு அவனுக்கு கொடுத்து வைக்கல." என்றபடி  மாயக்காளை நெருங்குகிறாள் செங்கமலம்.!

இவளின் நோக்கம் அவளுக்கு தெரியாமல்  வெகுளியாக பேசுகிறாள் மாயக்காள்.

"அன்னத்தை பாத்தியா...அவ எப்படி இருக்கா.? பெத்த மக அத்துப் போட்டுட்டு  அங்க கெடக்கிறா ...சாந்தி கழிச்ச சந்தோசத்தை  பெத்த சிறுக்கி  அனுபவிக்க முடியலையேடி! செக்குல சிக்குன கை மாதிரி ஆகிப் போச்சே எங்க பொழப்பு.!அவ மொகத்த பாக்கிற  தைரியம் இல்ல. சந்தோசமா என் கிட்டவந்து  வெக்கப்படவேண்டிய மகளை    விதி எந்த கோலத்தில விட்ருக்கு! பாத்தியாடி பய மகளே!" என்று செங்கமலத்தை கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள்.

"சரித்தா...அழுது பொறண்டாலும் மாண்டார் திரும்பி வருவாரோன்னு பெரியவங்க சும்மாவா சொன்னாங்க. நடக்கப் போறத நல்லபடியா பாத்துக்கணும் அதான் பெரியவங்க .கடமை .! "

பேசிக்கொண்டே வந்த செங்கமலம் இப்போது நைசாக கொக்கி போடுகிறாள்.

"அந்த ராத்திரியே நீ  இந்த வீட்டுக்கு வந்திருக்கக்கூடாது . அங்கேயே இருந்திருக்கணும் .நீ அங்கே இருந்திருந்தா  அந்த பயல வெளியே விட்ருக்கமாட்டியே!"

மாயக்காள் பெருமூச்சு விட்டபடியே "எந்த சிறுக்கிடி அப்படி  சொன்னா  நான் இங்கே வந்துட்டேன்னு? மச்சுப்படி ஓரமாதான் படுத்துக் கெடந்தேன்.என் மாமியா கோவமா வந்து மிதிச்சபெறகுதானே கண்ணே  முழிச்சேன்.அப்புறமாதான்  மாப்ளைய காணோம்கிறது  தெரிஞ்சிது. மனுசங்களை பாக்கிறத்துக்கு  வெக்கப்பட்டுக்கிட்டு எங்கேயாவது  இருப்பான்னு  வெள்ளந்தியா நெனச்சிட்டோம். இப்படி விட்டுட்டு போவான் பாவிப்பயன்னு யாருடி  நெனச்சா? எங்கேயோ  விழுக வேண்டிய இடி என் வீட்டு விட்டத்திலேயே  விழுந்திருச்சு!"என்றாள் விம்மலை விழுங்கியபடி!

இப்போது மெதுவான குரலில்  செங்கமலம்.."ஏத்தா..அது நல்லபடியா முடிஞ்சிருச்சுன்னு சந்தோஷப்படுறதா துக்கப்படுறதான்னு தெரியலியே ! நீங்கல்லாம் என்ன நெனக்கிறிங்கன்னும் தெரியல."

முதலிரவு பற்றி அவள் கேட்கிறாள் என்பது  அம்மாக்காரிக்கு  தெரியாமல்  போகுமா?

அவள் சாதாரணமாக 'அந்த எழவெல்லாம் நல்லாத்தான் நடந்திருக்கு.ஆனா  அன்னம்தான் சந்தோஷமா இல்ல."என்கிறாள் வெகுளியாக!

"செத்துப்போன பயலுக்கு எதுக்குடி பொண்டாட்டி சொகம்! போறபோக்குல  ஏறிட்டு போகலாம் காசா பணமான்னு நெனச்சிட்டான் காவாலிப் பய"! என கோபத்தை கொட்டினாள் மாயக்காள்! .

செங்கமலத்துக்கு  தெரியவேண்டியது  தெரிந்து விட்டது.

சிறிது நேரம் அங்கிருந்துவிட்டு கிளம்பிவிட்டாள் .

மற்றவை  அடுத்தவாரம்.

Saturday 24 September 2016

காதல்..காமம். ( பகுதி.7.)

"செங்கமலம்...ஏதாவது  கெடைச்சிச்சா...! அங்கம்மா கெழவி சொல்றபடி  பாத்தா  அன்னிக்கி பர்ஸ்ட் நைட்  நடந்திருக்கு,,," என்று  சொல்லிவந்த  இன்ஸ்பெக்டர்  ராம்குமார் என்ன நினைத்தாரோ ...சற்று  தயங்கியபடி  "பொதுவா பர்ஸ்ட் நைட்  பொண்ணு வீட்டில்தானே நடக்கும். இவங்க ஏன் மாப்ள வீட்டில நடத்திருக்காங்க. இந்த ஆங்கிலும் நாம்ப இன்வெஸ்டிகேட் நடத்தனும்?" என்றார்.

எதிரில் இருந்த எஸ்,ஐ. சிதம்பரம் " அந்த ஆங்கில்லேயும் என்கொயரி  பண்ணிட்டேன் சார், அன்னமயிலுவுக்கு ஒரு அக்கா இருக்கா. அவளுக்கு  அம்மை போட்டிருந்ததால சுத்தபத்தமா இருக்கணும்கிறதுக்காக மாப்ள  வீட்டிலேயே பர்ஸ்ட் நைட்டை நடத்திருக்காங்க. அன்னமயிலுவின் அக்கா  ரொம்பவும் நொந்து போயிருக்கு.அன்னமயிலுக்கு தங்கராசுவை ரொம்பவும்  பிடிச்சிருந்ததாலதான் கல்யாணத்தை தடபுடலா நடத்திருக்காங்க."

"வெல்....  பர்ஸ்ட் நைட் நடந்த பெட்ல இருந்த பெட்ஷீட், அந்த பொண்ணோட  இன்ஸ்கர்ட், பிளவுஸ் இதெல்லாம் பாரன்சிக் ரிப்போர்ட்டுக்கு  அனுப்பிச்சிருந்தமே வந்திருச்சா,,அது வந்தாதான்யா .மேக்கொண்டு ஏதாவது  கெடைக்கும்."

"இன்னும் ரெண்டு நாள்ல வந்திரும். நாம்ப இதுவரை விசாரிக்காம இருக்கிறது செத்தவனோட அம்மா மாயக்காளத்தான். எது கேட்டாலும் மயக்கம் போட்ருது. அது டிராமா போடுற மாதிரி தெரியிது. மாயக்காளை அரட்டி மெரட்டி கேட்டாத்தான்  வாயை புடுங்கமுடியும் சார்!"

"சுகர் பேஷண்டா இருந்து தொலச்சிறப் போறாப்பா! செங்கமலத்த அனுப்பி நைசா  விசாரிக்க சொல்லுவோம்."

"செய்றேன் சார்!" அருகில் நின்று கொண்டிருந்த செங்கமலம் சல்யூட்  அடித்தாள்.

''உனக்கு அந்த வீட்டில வேற யாரையாவது தெரியுமா?"என்று கேட்ட ராம்குமாருக்கு அப்படி ஒரு பதில் வரும் என்பது தெரியாது.

"நான் கட்டிக்கபோறவரு அங்கதான் பண்ணை வேலை பார்க்கிறாரு."

ராம்குமாரும் சிதம்பரமும் சேர்ந்து சிரிக்கிறார்கள்." அப்ப ஈசியா போச்சு..மாயக்காளை செங்கமலம் வளச்சி போட்றமாட்டாளா  என்ன.? நீ மொதல்ல கெளம்பு ..."என்று அவளை அனுப்பி வைத்தார்கள்.

இப்போது அந்த அறையில் அவர்கள் இரண்டு பேர் மட்டுமே!

" ஏய்யா..சிதம்பரம்..போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்ல  ரொம்பவும் கிளீயரா  இருக்கு.தங்கராசு உடலுறவு வைக்கல. அதுக்காக அவன் எந்த முயற்சியும் பண்ணியிருக்கமாட்டான். சிங்கிள் டிராப் செமன் கூட வரலன்னு  அழுத்தம் திருத்தமா இருக்கு. ஆனா  அன்னமயிலு  விஷயம் வேற மாதிரி இருக்கு. கன்னி கழிஞ்சிருக்குன்னு  சொல்றாங்க. அந்த பொண்ணும் வாய தெறக்க மாட்டேங்கிது..பாரன்சிக் ரிப்போர்ட் வந்தா கடுமையா  ஆக்சன் எடுக்க முடியும். "

"சார் ..வெள்ளிங்கிரி பய வெளையாடியிருப்பானோ...?

"அதெப்படி சார் பர்ஸ்ட் நைட் ரூமுக்கு அவன் போயிருப்பான்? குடும்பத்தில் உள்ளவங்க சும்மா விட்ருப்பாங்களா? எனக்கென்னமோ வேற மாதிரியான டவுட்  இருக்கு சார்.தங்கராசுக்கும் அன்னமயிலுக்கும் அந்த ரூம்ல சண்டையோ,வாய்த்தகறாரோ நடந்திருக்கலாம்?"

"சரி ..உன் பாயின்ட் படியே டிஸ்கஸ் பண்ணுவோம்.எதுக்காக சண்டை வந்திருக்கும்னு நெனைக்கிறே? சண்டை போடுற மூடே வராதேய்யா. இந்த காலத்து பயலுக போனமா ஜோலியை முடிச்சிட்டு அடுத்த ரவுண்டுக்கு  எப்படா போகலாம்னுதான் இருப்பாங்க. அதான் பழனி டாக்டருங்க லேகியம்  விக்கிறாங்களே?"

சிதம்பரம்  தொப்பியை கழற்றி விட்டு மண்டையை சொறிகிறார்.

 "எதுக்குய்யா அங்க சொறியிற? எதுக்கும் வீடியோவை பார்த்து வைக்கலாம்.ஏதாவது க்ளு கெடைக்காதா?"

"ஒ.கே சார்"

தொப்பியை தலையில் மாட்டிக்கொண்டு கிளம்பினார்.

அடுத்து என்ன நடந்திருக்கும்? வீடியோவில் க்ளு கிடைக்குமா?

( மதிப்பிற்குரிய நண்பர்களே! என்னுடைய பதிவுகள் பற்றி எதுவுமே, சொல்லாமல்  இருந்தால் அறிமுக எழுத்தாளன்( ?) எப்படி திருந்த முடியும்.பாலோ பண்ணுங்க சார், கருத்தை சொல்லுங்க சார்!)

Thursday 22 September 2016

தொடரி. பட விமர்சனம் அல்ல. ஒரு பார்வை.!

டைரக்டர் பிரபுசாலமன் படம் என்றால் விரும்பி பார்ப்பேன்.மனம் விட்டு சிரிக்கலாம். மனதில் உள்ள கவலைகளை சற்று கரைக்க முடியும்.அதை எதிர்பார்த்தே  சென்றேன்.

பல பத்து வருடங்களாக படங்களை பார்க்கிறவன்,எனவே குற்றம் குறைகளை சொல்லக்கூடிய பெரிய புடுங்கி என்கிற புத்தி எல்லாம் எனக்கு கிடையாது.

டில்லியிலிருந்து சென்னை செல்லக்கூடிய  ரயிலில் ( தொடரி .) மத்திய அமைச்சர் ராதாரவி, சினிமா நடிகை அவரது அம்மா மற்றும் நடிகையின் உதவிப்பெண் கீர்த்தி ,பான்ட்ரி காரில் வேலை பார்க்கிற தனுஷ் ,பயணிகள் இவர்கள்தான்  முக்கிய கேரக்டர்கள் .என்றாலும் தம்பி ராமையா,கருணாகரன்  ஆகியோரை  மறக்கவே முடியாது.

 வந்தாரை வாழவைக்கிற  தமிழ்நாடு என்று தனுஷ் தமிழனாகவும் ,திறமைசாலிகள்டா மலையாளிகள்  என்று தமிழ் படங்களால்  வாழ்வு பெற்றவர்களை சொல்லும் மலையாள அதிகாரி ஒருவரையும்  காட்டுவதால் தமிழ்நாட்டில் இருக்கிற மலையாளி விமர்சகர்களுக்கு இந்தப் படம் கசக்கவே செய்யும்.அதிலும் அந்த மலையாளி அதிகாரியை அமைச்சர் ராதாரவி மட்டம் தட்டுவதால்  கோபத்துடன் படத்தை விமர்சனம் செய்வார்கள் என்றே நினைக்கிறேன்.

நான் படத்தில் மிகவும் ரசித்தது  தொலைக்காட்சிகளின் வியாபார புத்தியை  துணிச்சலுடன் தோல் உரித்திருப்பதுதான். விமர்சனம் என்கிற பெயரில் படங்களை மட்டம் தட்டுகிறவர்கள் தங்களை சினிமாக்காரர்கள் விமர்சிக்கிறபோது தாங்கிக் கொள்ளவே வேண்டும் அதிலும் விவாத மேடை என்கிற பெயரில்  சில அறிவுக் கொழுந்துகளை விட்டு நையாண்டி பண்ணுவதையும் ,அதில் உள்ள நியாயங்களையும் மறக்கவே முடியாது.
கட்டுப்பாடு இழந்து வேகம் கடந்து செல்லும் ரயிலின் மேற்கூரையில் தனுஷ்  சர்வசாதாரணமாக நடமாடுவது ஏற்க  முடியாத காட்சி ,கிளைமாக்ஸ் நகைக்கவைக்கிறது என்றாலும்  ஓடும் ரயிலை வைத்து மீடியாக்களும் அரசு அதிகாரிகளும் கதை விடுவது மிக மிக ரசனைக்குரியதாக  இருக்கிறது. அரசியல்,மீடியா,இவைகளின்  அநாகரீக முகத்தை பிரபுசாலமன்  காட்டியிருப்பது  இனி தொடரும் என எதிர்பார்க்கலாம். .

Saturday 17 September 2016

ராமன் தேடிய இலங்கை எது?

இராமாயணம் என்பது கற்பனையே அது வரலாறு இல்லை என்பதாக சொல்வதில்  இரு கருத்துகள் எதிர் எதிராக  நிற்கின்றன.

அந்த கதாபாத்திரங்களை கடவுளாகக்  கருதி வணங்குபவர்கள்  பெரும்பான்மையாக  இருக்கிறார்கள்.

காலம் காலமாக  நாடகமாக நடத்தி அந்தக் கருத்தை  வாழையடி வாழையாக மக்கள் மனதில் விதைத்து வந்திருக்கிறார்கள்.

இதை மறுக்க முடியாது!.

 இராவணனை கடுமையான அரக்கனாகவே மாற்றியிருந்தன .அன்றைய தெருக்கூத்தும்  நாடகமும்.!ஆத்திகர்களுக்கும் இதில்  பங்கு உண்டு.!

இராவணன்  பன்முகம் கொண்ட சிவ பக்தன் மன்னவர் மன்னன்,.மனைவியை மதித்து வாழ்ந்தவன் என்பதை அந்த நாடகங்களும் தெருக்கூத்தும்  மறைத்து கொடியவனாக  வரைந்து விட்டன..

டென்னட் என்கிற  வரலாற்று ஆய்வாளர்   இலங்கையின்  வரலாறு பற்றி  அவரது கருத்தை  பதிவு செய்திருக்கிறார்.

"இராமன்  வாழ்ந்த காலத்தில் தமிழகத்தின் நிலப்பரப்பும் இலங்கையின் நிலப்பரப்பும்  ஒரே நிலமாக இணைந்தே  இருந்தன.அங்கு கடலே இல்லை.கி.மு.2387 -ல் ஏற்பட்ட கடல் கோளின் போது இந்தியாவும் இலங்கையும் கடலால்  பிரிக்கப்பட்டன"

வால்மீகி குறிப்பிடும்  இலங்கை என்பது நிலா நடுக்கோட்டுக்கு அருகில்  அதாவது  குமரி முனைக்கும் தெற்கே உள்ள 'தியாகோ கார்சியா" எனும் சூரியப் பகுதியை சேர்ந்ததாக இருக்கலாம்  என்பது  ஆய்வாளர்கள் கருத்து.!
நூறு யோசனை தொலைவில்  இலங்கை இருந்ததாக வால்மீகி சொல்கிறார்.
( நூறு யோசனை : ஐநூறு மைல்.)

தற்போதைய  இலங்கை  தமிழ்நாட்டுக்கு  மிகவும் அருகில் இருக்கிறது. முப்பது மைல் தொலைவுதானே!

ஆக  நமது நாடு  மிகப்பெரிய பேரழிவு சுனாமியால்  இலங்கையை  துண்டாக  கத்திரித்து போட்டிருக்கிறது.

அது  நமது நாடுதான்!

Tuesday 13 September 2016

பாரதிராஜாவின் எச்சரிக்கை....!

கையறு நிலையில் தமிழகத்தில்  வாழ்கிற  தமிழர்கள்...

பண்ணையார்கள் மாதிரி  அரசியல் கட்சித் தலைவர்கள்...

எவன் செத்தால் எனக்கென்ன என்று  டாஸ்மாக்கிற்கு விலைபோன  அடிமைத் தமிழர்கள்...

அறிக்கைகளில்  குளிர் காயும் சந்தர்ப்பவாதிகள்....

இவர்களுக்கு  மத்தியில்  கூட்டறிக்கை விட்டு  கையை  கழுவிக்கொண்டு விட்ட  திரையுலக சொந்தங்கள்....

இவர்களை விட  எந்த  வகையில்  பாரதிராஜா  உயர்ந்து  நிற்கிறார்?

ஈழ சொந்தங்களை  சிங்கள  இனவெறி  அரசு வேட்டையாடியபோது துணிந்து  பத்ம விருதினை  திருப்பியனுப்பிய இனமான  தமிழன்  பாரதிராஜா!

இதைவிட  வேறு தகுதி  என்ன வேண்டும்?

காங்கிரஸ் ஆட்சியின்  மீது  மக்களுக்கு  வெறுப்பு  ஏற்படவேண்டும் என்பதற்காக  வன்முறைக்கு  பாஜக  துணையாக  கன்னடத்தில்  இருக்கிறது.

அதனால் மத்தியில்  ஆளும் பாஜக அரசு  மவுனமாக  இருக்கிறது. 

பலியாவது  அப்பாவி  தமிழர்களே! உயிர் இழந்து ,சொத்துகள் இழந்து  அகதிகளாக  வாழ்கிறார்கள் !

அதைத்தான்  பாரதிராஜா தனது அறிக்கையில் சொல்லி இருக்கிறார்.

"இன அழிப்பில் ஒன்னரை லட்சம் உறவுகளை  இழந்து  சொல்ல முடியாத சோகத்தில் இருந்தபோது  மரம் வெட்ட வந்ததாக சொல்லி இருபது தமிழர்களை ஆந்திர அரசு  சுட்டுக் கொன்றது. முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம் அணை பிரச்னையில்  தமிழர்களை  தாக்குவது என்கிற நிலையில்......

உடமைகளுக்கும் உயிர்களுக்கும்  உறுதி இல்லாத நிலையில்  கர்நாடகத்தில் தமிழர்கள்!

நாங்கள் இந்த  தேசத்தில்தான்  இருக்கிறோமா? 

கேள்வி எழுகிறது!

இந்திய அரசு  இதுவரை  தலையிடாதது  பெரும் துயரம்.ஐநூறு  ஆண்டுகளுக்கு  முன்பு  இந்த தேசத்தில் உள்ள ஒவ்வொரு  தேசிய இனமும்  தனித்தனியாக  ஆண்டதுபோல நாங்களும் ஏன் எங்களை  ஆண்டு  கொள்ளக் கூடாது என்கிற  கேள்வியை  எங்கள் இளைஞர்களின்  மனதில்  மத்திய அரசு  புகுத்திவிடக்கூடாது!"

இதுதான்  இயக்குநர் பாரதிராஜா  வெளியிட்டிருக்கும்  அறிக்கை.

  

Sunday 11 September 2016

போங்கடா ..நீங்களும் உங்க விமர்சனமும்!

சித்தார்த்  சொன்னதில் தவறு இருக்குமா?

 டிவிட்டரில் இரு வரிகளில் மொத்தப் படத்தையும்  சிலர்  முடித்து வைத்து விடுகிறார்கள்..

அதைப்பற்றி விமர்சிப்பது  குரங்கின்  நோக்கம் இல்லை.

 அப்படி டிவிட்டரில்  பதியும் பலர்  பத்திரிகைகளில்  பணி புரிகிறவர்கள் இல்லை.  ஆனாலும்அ வர்களுக்கு  விமர்சிப்பதற்கு  உரிமை  இருக்கிறது.

இது ஜனநாயக நாடு. எழுத்துரிமை,பேச்சுரிமை எல்லாருக்கும் உண்டு. ஒருவரின் கருத்தை ஏற்பதும் மறுப்பதும் மக்களின் கையில்!

அதைப் போலவே தனது கருத்தை நடிகர் பதிவு செய்திருக்கிறார்.

"படத்தில் அரை மணி நேரம் ஓடி விட்டாலே கையில் இருக்கிற செல்போனில் மொக்கை என்பதாக டிவிட் பண்ணி விடுகிறார்கள்.படத்தில் ஒரு கண்ணும் ,செல்போனில்  இன்னொரு கண்ணும் வைத்து யாரும் படமும் பார்க்க முடியாது.டிவிட் பண்ணவும் இயலாது. டிவிட் தட்டும் நேரத்தில் திரையில் எவ்வளவோ காட்சிகள் ஓடியிருக்கலாம். அத்தகைய நிலையில் ஒரு படத்தின் தலைவிதியை  நிர்ணயிப்பது  நியாயமா?" என கேட்டிருக்கிறார்  நடிகர் சித்தார்த்.

"எத்தனை நடிகர்கள்,நடிகைகள், டெக்னிஷியன்கள் ,நிபுணர்கள் வருடக் கணக்கில் உழைத்து  உருவாக்கிஇருக்கிறார்கள்  அந்த  படத்தை பத்து நிமிடமே பார்த்துவிட்டு  மொத்த படத்தின் ரிசல்ட்டை எப்படி முன்னதாகவே  கணிக்க முடியும்?"

கேட்டிருப்பவர் நடிகர் சித்தார்த்.

"முழுமையாக படத்தை பாருங்கள். பிறகு விமர்சியுங்கள்.அது நேர்மை! நல்லா இருக்கு. நல்லா இல்லை என முடிவை சொல்லுங்கள். அதை விடுத்து  'படத்தை பார்க்காதீர்கள் என மக்களிடம் சொல்வதற்கு  உங்களுக்கு  உரிமை  இல்லை " என்கிறார்.


பாவம்  சித்தார்த்.! டிவிட்டரில்  அப்படி எழுதுவதற்காக  சிலருக்கு தயாரிப்பாளர்கள் சிலர் பல்லாயிரக்கணக்கில்  பணம்  கொடுப்பது  தெரியவில்லை. 

அவர்களை கண்டுபிடியுங்கள் சித்தார்த்!

இது  அறிவியல் உலகம். எல்லாமே நடக்கும்!  அதற்காக  எல்லாவற்றையுமே  டிவிட்டரில்  பதிவிட முடியுமா?

படிப்பவர்களும் புத்திசாலியாகத்தானே  இருக்கிறார்கள் ? இரண்டு வரியை  பார்த்துவிட்டு  முடிவெடுப்பார்கள் என நம்பலாமா? 

இது  இரண்டு தரப்பினரும் முடிவு செய்யவேண்டியது!

Saturday 10 September 2016

பாரதி..உன்னை உண்மையுடன் நேசிப்பவன் எவனும் இல்லை!

செப்டம்பர் 11.

புரட்சி கவிஞன்...அதிலும் உண்மையாகவே  புரட்சி செய்தவன் சுப்பிரமணிய பாரதி.

அந்த அரிமாவை  ஆலயத்து  யானை தூக்கி எறிந்து பலி கொண்ட நாள்.!

எனக்கென்னவோ ....''பார்ப்பானை  அய்யர் என்ற காலமும் போச்சே " என்று  பாடியதற்காக  சிலர் யானையின்  வழியாக  சதி  செய்திருப்பார்களோ  என்றே  தோன்றுகிறது.

அமைச்சர்களும் சில அமைப்புகளும் மரபுக்காக  உனது சிலைகளுக்கும் , படங்களுக்கும்  பளபளப்புடன் வந்து மாலையை அணிவித்து  மவுனம்  காத்து விட்டு திரும்பிவிடுவர்.

ஆனால் காலத்தால் அழிக்கமுடியாத பாட்டு வரிகளை  உனது அடிப்பொடி பாவேந்தன் பாரதிதாசன் பாடிவிட்டு மறைந்துவிட்டான்.

அதைவிட  வேறு நினைவஞ்சலி  எதுவுமில்லை. அவைகளுக்கு நிகராக  இன்னும்  எவனும் எழுதவில்லை.

அதையே  உனக்கு  காணிக்கை ஆக்குகிறேன்.

பாரதி...ஏற்றுக்கொள்!

"பைந்தமிழ்த் தேர்ப் பாகன் .அவனொரு
செந்தமிழ்த் தேனீ,சிந்துக்குத் தந்தை.!
குவிக்கும் கவிதைக்  குயில்! இந்நாட்டினைக்
கவிழ்க்கும் பகையை கவிழ்க்கும் கவிமுரசு!
நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா!
காடு கமழும் கற்பூரச் சொற்கோ!
கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்!
திறம் பாட வந்த மறவன்.புதிய
அறம் பாட வந்த அறிஞன்.நாட்டிற்
படரும் சாதிப்  படைக்கு மருந்து.!
மண்டும் மதங்கள்  அண்டா நெருப்பவன்:
அயலார் எதிர்ப்புக்  கணையா விளக்கவன்.
என்னென்று சொல்வேன்.என்னென்று சொல்வேன்!
தமிழால் , பாரதி தகுதி பெற்றதும்
தமிழ், பாரதியால் தகுதி  பெற்றதும்
எவ்வாறென்பதை எடுத்துரைக்கின்றேன்!"

என  அயலார் நடுங்க சொன்ன  பாரதியே  நீ வாழ்க.!

Friday 9 September 2016

காதல்...காமம். (பகுதி ஐந்து.)

தல்லாகுளம் போலீஸ் நிலையம்.
இன்ஸ்பெக்டர் ராம்குமாருக்கு எதிர்பக்கமாக  சுவரோரம் நின்றபடி  வெள்ளியங்கிரி!

மனசுக்குள் டிராக்டர் ஓடினாலும் அதை மறைக்க எவ்வளவோ முயற்சிக்கிறான். முடியவில்லை. வேர்க்கிது.வேட்டியால் துடைத்துக் கொண்டான்.

ராம்குமார் கவனிக்காதது போல் காட்டிக்கொள்கிறார். அவரின் மனசு தங்கராசுவின் தற்கொலைக்கு இவன் எப்படி  காரணமாக இருக்கமுடியும்  என்பதை பலவிதமாக படம் பிடிக்கிறது. ஆனால் அந்த கோணத்தில்  அவரால்  விசாரிக்க முடியாது. அவன் குற்றம்  செய்தான் என்பதற்கு  எதை மோடிவ்  ஆக சொல்லமுடியும்?

''ஏலேய்! ஏன்டா இப்படி வேர்க்கிது.. அடிக்க கிடிக்க மாட்டேன்.உனக்கும் தங்கராசுக்கும்  என்ன பிரச்னை. அவங்கூட அடிக்கடி சண்ட போடுவியாம்ல?"

போட்டு வாங்கப் பார்த்தார்.

"அப்படியெல்லாம் இல்ல சார்! அவங்கூட சண்ட போட்டதில்ல. யாரோ  மூட்டி விட்ருக்காங்க.அத வச்சுக்கிட்டு  நீங்க கேக்கிறிங்க! அவன் எனக்காக எவ்ளோவோ விட்டுக் கொடுத்திருக்கான்.காசு பணம் பாக்கமாட்டான். நல்லவன் சார்.டூர் போனா என்னோட செலவெல்லாம் அவந்தான் பாத்துப்பான்.அவங்க வீட்ல நானும் செல்லப் பிள்ளயாதான் வளந்தேன்."

"நீதான் அவனோட தற்கொலைக்கு  காரணமாக இருந்திருக்கே! ஸ்ட்ராங்  எவிடென்ஸ்  இருக்கு. ஒழுங்கா ஒத்துக்கிட்டேன்னா  சின்னதா கேஸ போட்டு  தண்டனையை  கொறைக்கலாம்.இல்லேன்னா அடி உத  வாங்கி  வீணா ஒடம்ப ........!"

 "சத்தியமா......  எங்காத்தா மேல சத்தியமா சொல்றேன்   எனக்கும் அவன் சாவுக்கும்  சம்பந்தம் இல்ல எஜமான்!"

அவனது பயம் 'எஜமான்' என சொல்ல வைத்ததோ என்னவோ! படக் கென இன்ஸ்பெக்டர் காலில்  விழுகிறான்

'ச்சிய்! நாயே! எந்திரிடா! ஒன்னமாதிரி எத்தன கேடிப்பயலுகள  பாத்திருப்பேன்.
எங்கிட்டேயே ட்ராமா  போடுறியா? அடிச்சு சாவடிச்சு  ஆனை விழுந்தான் பள்ளத்துல வீசிருவேன். என்ன பொருத்தவர  இன்னொரு  சூசைட் கேஸ்.! மொத  ராத்திரி முடிஞ்சதும்  அவன் சூசைட் பண்றதுக்கு முன்னாடி அவன் உங்கூடதான் பேசிருக்கான்.என்ன சொன்னாங்கிறத மறைக்காம  சொல்லிடு!"

இன்ஸ்பெக்டர் ஒரு ஊகத்துலதான் அப்படி கேள்வியை போட்டிருக்கிறார் என்பது  அவனுக்கு தெரியவில்லை. தன்னை எப்படியாவது மாட்டவைக்கப் பார்க்கிறார் என்பது மட்டும் புரிகிறது.

ராம்குமாரும் அதுவரை அவன் மீது சந்தேகப்படவில்லை. அவரும் தனது திறமைகளை காட்டி எப்படியாவது  ஒரு க்ளு கிடைக்காதா என்றுதான் அடிக்கிறார். விசாரிக்கிறார்.

அப்போதுதான் அங்கு வந்த எஸ்.ஐ. சிதம்பரம் ஒரு வெள்ளைத்தாளை நீட்டினார்.

அதைப் படித்ததும்  ராம்குமாருக்கு கடுமையான கோபம்!

வெள்ளியங்கிரிக்கு. ஓங்கி விட்டார் ஒரு உதை!

'இந்த நாயை லீடிங் செயின் போட்டு லாக்கப்பில் தள்ளுய்யா!"

உதை பட்டவனுக்கு  உலகமே  சுற்றுவதைப் போல் இருந்தது.


.

Wednesday 7 September 2016

ஸ்ருதி, நயனுடன் போட்டியிடும் காஜல் அகர்வால்!

வால்  அறுந்தாலும் உயிர் வாழும்  பல்லி மாதிரி ஆகியிருக்கிறார் காஜல் அகர்வால்.!

எப்படியாவது மார்க்கெட்டை  நயன்தாராவுக்கு சமமாக கொண்டு செல்லவேண்டும் என்கிற  ஆசை அவருக்கு.! பாலிவுட்டில்  ஸ்ருதி ஹாசனை  வீழ்த்துகிற நோக்கத்துடன்  படை எடுத்துச் சென்ற  அவருக்கு பிரபல புத்தகம்  கேடயமாகி  இருக்கிறது.,அதனால்  வாலை இழந்து இருக்கிறார்.!

அரை நிர்வாணமாக  அட்டையில் பளபளக்கிறார். யார் கொடுத்த ஐடியாவோ தெரியவில்லை.

இப்போது  அவருக்கு பாலிவுட்டில் கை சரக்கை  காட்டிவிட வேண்டும் என்கிற ஆசைதான்  அதிகமாகி இருக்கிறது. பிகினியில் கலக்குவதற்கு  பாலிவுட்டிலா பஞ்சம்? இவரை விஞ்சுவதற்கு அழகிகள் அணிவகுத்து  நிற்கிறார்கள்.

ஆனால் காஜலை வைத்து  படம் எடுத்துக் கொண்டிருக்கிற  தமிழ்,தெலுங்கு  படத் தயாரிப்பாளர்கள்  'நாங்கள் என்ன பாவம் செய்தோம். எங்களுக்கும் அந்த  படுகவர்ச்சி காட்சியில் நடித்தாக வேண்டும் 'என்று நிபந்தனைகளை அள்ளிக் கொட்டியிருக்கிறார்கள்.

"ஆங்கில பத்திரிகையில் எந்த அளவுக்கு கவர்ச்சியை  கடை விரித்திருக்கிறிர்களோ  அதே அளவுக்கு சினிமாவிலும் நடிக்க வேண்டும்" என வற்புறுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.

அதை ஏற்றுக்கொண்டு  தமிழகத்தில் நடிக்க ஆரம்பித்தால்  அயிட்டம் டான்ஸ்  ஆடுகிற நடிகை என்கிற பெயர்தான் கிடைக்கும்  ஆபத்து இருக்கிறது.

என்ன செய்வது  ?

படு கவர்ச்சியை  பாலிவுட்டுக்கும் ,போர்த்திக் கொண்டு நடிப்பதை தமிழுக்கும் என  எல்லைக்கோடு  போட்டுக் கொள்ளலாமா  என யோச்சிப்பதாக சொல்கிறார்கள்.

தெலுங்கில் ஏற்கனவே  அயிட்டம் டான்ஸ் ஆடி அரை கோடி  சம்பளம் வாங்கிவிட்டதால்  அங்கு தனது நிபந்தனை  போணி ஆகாது என்பது  தெரியாதா? தமிழ் ரசிகன்தான்  ஏமாந்தவன் மிளகாய்  அரைக்க முடியும். ஏன் மண்டையில் தேங்காயே உடைத்தாலும் சும்மாதான் இருப்பான்.

Sunday 4 September 2016

சூப்பர்ஸ்டார் கர்ணன்.அப்ப துரியோதனன் யாரு?

உலகமே  சினிமாவை சுத்தும் போது  நாமும்  சேந்து சுத்துனாதான் மருவாதி.! இல்லேன்னா  கூடைய போட்டு நம்மை  கவுத்திப் போட்ரும்!அதனால்தான் ஊரோடு நீயும் சேந்துக்கன்னு  எப்பவோ சில பெரிசுக சொல்லிட்டுப் போயிருக்கு, ஓலகத்தொடு ஒத்து போ!

ஒலகத்தில் உள்ள அழகிக  ஆயிரம் பேரை  அமெரிக்காவில்  உள்ள ஒரு பேப்பர் கணக்கு எடுத்திருக்கு, அதில என்ன  சிறப்புன்னா இந்தியாவை சேந்த ஒரு அழகியா  தீபிகா படுகோனே தான் செலக்ட்  ஆகியிருக்கு.

தமிழ்சினிமாவில் நாம்ப எவ்வளவோ பேரை நெனச்சு  ஜொள்ளு உட்ருக்கோம் பகல்லேயும் கனா கண்ட்ருக்கோம்.ஆனா வெள்ளைக்காரனுக்கு வடக்கத்தி பொண்ணுதான் ஒசத்தியா தெரிஞ்சிருக்கா! கஷ்டமா  இருக்குய்யா! நயன்தாரா  அழகியா தெரியலியா. காஜல தெரியலையா,அன்சிகா மொத்வானியை கூட  சேக்கலேங்கிரபோதுதான்  டவுட்டா இருக்கு,ஊழல் நடந்திருக்கும்னு!என்னவோ தெரியல..காமால கண்ணுக்கு  பாக்கிறதெல்லாம் மஞ்சளா  இருக்குமாமே! ஊழல் நமக்கு  பழகிப் போச்சுங்கிறதால இப்படியெல்லாம்   நெனைக்கிறேனோ?

இருக்கலாம்ங்க!

சென்னை தண்ணிய குடிச்சு  வளந்த  ஆந்திரகாரு மோகன் பாபு  நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு திக்  பிரண்ட். .பாபு  படம்  பண சிக்கல்ல  மாட்டிக்கிட்டு முளிச்சபோது  பணம் கொடுத்து  உதவுனவர்  சூப்பர்தான்! அவர்  சென்னைக்கு  வந்து  தன்னுடைய  நெருங்கிய நண்பர் ரஜினிய சந்திச்சு  கட்டித்தழுவி  பாராட்டியிருக்கார். "ரஜினி  இந்த அளவுக்கு வளந்ததுக்கு   மனைவி லதாதான்  காரணம்னு  சொல்லிட்டு  ரஜினிய கர்ணனாகவும் தன்னை துரியோதனன் னு  சொல்லி  சிலித்திருக்கார்  .இந்த காலத்திலேயும்  இப்படிப்பட்ட  ஆளுங்க  இருக்காங்கிற போது  கடவுள்  இருக்கார்னு நம்பித்தான்  ஆகணும்,


Thursday 1 September 2016

அன்னம்...எத்தனை நாளைக்குத்தான்....!

''அன்னம் ...இன்னும் எத்தனை நாளைக்குத்தான் வவுத்தை  காயப்போடுவே! பட்டினி கெடந்தா செத்தவன்  திரும்பவும்  வந்துருவானா...மனச  தேத்திக்க தாயி! அப்பனும் ஆத்தாளும் கெடந்து நொம்பல படுதுகள்ல! சாப்பிடு தாயி!"
.என்றபடியே  கும்பாவை  கொண்டுவந்தாள் வீட்டுக்கு  பெரிய மனுசி .அங்கம்மாள். வடிவேலுவை பெத்த மகராசி.அவள் பேசுகிறபோது தண்டட்டி அங்கிட்டும் இங்கிட்டுமாக  ஆடும்.காது கழுத்துவரை தொங்குகிறது.! ஒவ்வொரு  தண்டட்டியும் ரெண்டு பவுன் .அந்த காலத்தில் ஒரு பவுன் தங்கம் நூறு ரூபாய்தான்.இருந்தாலும்  அரிசிக்கு பஞ்சம். கல்யாணப் பத்திரிகைகளில் விருந்தினர்களுக்கு வேண்டுகோள் வைத்திருப்பார்கள். 'மறக்காமல் தங்கள் ரேஷன் கார்டை  கொண்டு வரவும்!"

அந்த காலத்து கஷ்டம் இந்த காலத்து மனுஷங்களுக்கு அவ்வளவாக தெரியாது.!பிள்ளைகளுக்கு தங்களது கொடிவழியையே சொல்லிக் கொடுக்காத பெரிய மனுசனுங்க  நாட்டு நிலவரத்தையா சொல்லியிருக்க போறானுங்க. போவட்டும் விடுங்க.நம்ம கதைக்கு வருவோம்.

 அங்கம்மாள்  சொன்னதை  அன்ன மயிலு கேட்டபாடில்லை. விட்டத்தை பார்த்தபடியே கண்ணீர் விடுகிறாள்.முத ராத்திரிக்கி   வச்ச முல்லைப்பூ இன்னும் வாடலய  பய மக்கா!.. சாந்தி  கழிஞ்சிருக்கான்னு  படுக்கையை  நோட்டம் கூட  பார்க்க முடியாதபடி  கலைஞ்ச கூந்தலோடு அந்த எடத்திலேயே  உட்கார்ந்து  இருக்காளே பாவி மக.! சந்தோசமா இருந்தியான்னு கூட கேலி பண்ணவும் முடியாம சிறுக்கி  இப்படி சீரழிஞ்சு கெடக்கிறாலேன்னு   வர்றவ போறவளல்லாம் மூக்கை சிந்தி சுவத்தில தடவி கண்ணீர் விட்டுட்டு போறாளுங்க.!

"ஆத்தா...அன்னமயிலு.....இந்த கோலத்திலேயே  இருந்தா  குடும்பத்துக்கு  ஆகாதுடி! எந்திரிச்சி பல்ல வெளக்கு! குளி!  மாத்து  துணிய கட்டிக்க!. காட்டுக்கு போயிருக்கிறவுங்க வந்திருவாங்க. .  ரெண்டாம் நாளு சடங்கு  நடக்கணும். மனச ஆத்திக்கிறத தவிர வேறு வழியில்ல.! எந்திரி!" என்றபடி அன்னத்தை  தூக்க வந்தாள், சின்னாத்தாக்காரி!

எங்கிட்டு  இருந்து அப்படி பலம் வந்துச்சோ ...சின்னாத்தாளின்  நெஞ்சில் தனது  இரண்டு கையையும் வச்சு  முழு வீச்சுடன்"போங்கடி தட்டுவாணிகளா!" என்று ஆங்காரத்துடன்த ள்ளிவிட்டாள் அன்னம்!கல்யாணம் நடந்த அன்னிக்கே தாலி அறுக்கிறோமே  என்கிற ஆங்காரம்.!. சற்று தள்ளிப்போய்  மல்லாக்க விழுகிறாள் சின்னாத்தா. மடேர் என்ற சத்தம்.! தொடர்ந்து  'எந்த சிறுக்கி எக்கேடு கெட்டா எனக்கென்ன?" என்ற சின்னாத்தாளின்  புலம்பல். !அந்த கலவரத்திலும் பெரியமனுஷி  அங்கம்மாவின் கண்களுக்கு  அது தப்பவில்லை. அன்னம் போட்டிருந்த ரவுக்கை  அவசர கோலத்தில் கிடந்தது. உள்பாடியின்  முன்பக்க முடிச்சு அவிழ்ந்திருந்ததை  பார்த்து விட்டாள்.! அந்த காலத்தில் ப்ராவுக்கு அவ்வளவு கிராக்கி இருக்கவில்லை.!. அன்னம் கையை உயர்த்தியபோது முந்தானை  நழுவி.வெள்ளை நிறத்தில் வெயில் தொடாத  பருவ அடையாளத்தை காட்டிவிட்டது.

'கன்னி  கழிஞ்சிருச்சு !" என்று மனசுக்குள் பொருமுகிறாள் ! என்ன பண்றது  விதின்னு சொல்லி கடனை  கழிக்கிற காரியமா  அது?

"என்னாங்கடி...இப்படி  ஆளுக்காளு  மசமசன்னு இருந்தா   காரியம்  நடந்திருமா..எந்திருச்சி  அவ, அவ  வேலைய பாருங்கடி! "என்று ஒருத்தி  சத்தம் போட்ட பிறகுதான்  சிலர் பெரு மூச்சுவிட்டபடி  எழுந்தார்கள்.

எழவு  வீட்டின் அடையாளம்  அழுத்தமாகவே   வடிவேலுவின் வீட்டில்  பதிந்திருந்தது.!

இன்னும் எவ்வளவோ  இருக்கிறது. அடுத்த வாரம்  படிக்கலாம்.


Saturday 27 August 2016

காதல்.....காமம்...கல்யாணம்.( பகுதி .3.)

தல்லாகுளம் போலீஸ் ஸ்டேசன்  இன்று  இருப்பதைப் போல  அன்று  இருந்ததில்லை. கள்ளழகர் மண்டகப்படியில் தான் காவல் நிலையம் இயங்கி வந்தது. ஆற்றில்  அழகர்  இறங்கும்போது மண்டகப்படியாகவும்  மற்ற காலங்களில்  போலீஸ் ஸ்டேஷனாகவும் இருந்தது.

அன்று ஸ்டேஷனில்  ஏகப்பட்ட  பரபரப்பு. இன்ஸ்பெக்டர் ராம்குமாரின்  முன்பாக கைதிகளை  வரிசையாக நிறுத்தி இருந்தார் ஏட்டைய்யா.

துண்டை கக்கத்தில் இடுக்கியபடி சட்டை இல்லாமல் நிறுத்தப்பட்டவர்களின்    குற்றப்பட்டியலை  பெயர் விவரங்களுடன்  சொன்னார்.

'அய்யா...இவன் பேரு நரிமேடு  கொன்னவாயன்..! ராத்திரி பன்னெண்டு மணி  வாக்கில  அய்யர் பங்களா பக்கம்  முக்காடு போட்டுக்கிட்டு  சந்தேகப்படும்படி  இருட்டுக்குள்ள  ஒளிஞ்சிட்டிருந்தான். சந்தேகப்படுபடியாக நடந்ததை  நைட்  ரவுண்ட்ஸ் போன பெட்ரோல் பார்ட்டி கையும் களவுமா பிடிச்சிட்டாங்க. முக்காடு  கேஸ் போட்டிருக்கு."( அந்த காலத்தில்  முக்காடு கேஸ் பிரபலம். இதை ஒழித்தவர் காமராஜர்.)

'பெரிய பத்தினி மாதிரி மொகத்தை மறைச்சிட்டு நிக்கிறாளே ...அவ  என்ன பிராத்தலா? ரொம்பவும்தான் நடிக்கிறா?

"இல்லிங்க ஐயா...அம்மன் சந்நிதி ரூபி ஸ்டோர்ல ரெண்டு சேலையை  முந்தானைக்குள் ஒளிச்சு வச்சு  லாவிட்டு வந்தவ."

''இவள்லாம் திருந்த மாட்டாளுங்க.பிராத்தல் கேஸ்ல  போடு!.ஜெயிலுக்குள்ள போயி களி தின்னுட்டு வரட்டும் .கொழுப்பு  கொறையும்."

"மூஞ்சியை திருப்பிக்கிட்டு  நிக்கிற நாயே.. நேரா நில்லுடா "என்று  லங்கோடுடன்  நின்றவனை  பார்த்து இன்ஸ்  கத்தியதும் பரட்டை தலை  ரொம்பவும் பயந்து விட்டான்

  'உத்தரவுங்க எஜமான்" .

என்னவோ தெரியவில்லை. அவனை செல்லில் வைத்து புடைத்து எடுத்திருக்கிறார்கள்.உடம்பெல்லாம் கன்றிப் போயிருந்தது.

"என்னய்யா...பூஜையை  பெருசா  போட்டிருக்கிங்க.பய செத்து கித்து போயிருந்தா  நாம்ப நாய் பட்ட பாடாஅலையனுமேய்யா! " என்று சத்தம் போட்டவர்  அந்த அக்யூஸ்ட்டை பார்த்து   "  எலேய்...என்னடா பண்ணித்தொலஞ்சே.இவ்வளவு  அடி தின்னிருக்கே" என்றபடியே  எழுந்து  அவனிடம் சென்றார்.

அவனுக்கோ பயம்தான்  அதிகமாகியது.

மிகவும் குனிந்தபடியே "சினிமா  தியேட்டர்ல  டிக்கெட்டு வித்தேன்  எஜமான்! வேற தப்பு தண்டா  எதுவும் பண்ணலிங்கய்யா!"என்று  அழுதான்.

"யோவ்  ஏட்டு! இவனை விட்ருங்கய்யா! பெருசா என்ன பண்ணிட்டான்னு  இம்பிட்டு அடி அடிச்சிருக்கிங்க?. ஊர்ல எம்பிட்டோ  பெரிய மனுசனுங்க  கண்ணுக்கு முன்னாடியே கொள்ளை  அடிக்கிறானுங்க. அவனுகளை  புடிக்க முடியிதா.? வவுத்துக்கில்லாம டிக்கெட் வித்து  பொளைக்கிறவன் எம்பிட்டு  சம்பாரிச்சிருவான்.? எழுதி வாங்கிட்டு விட்ருங்கய்யா!"

''எஸ் ..சார்." என்றபடி ஒரு சல்யூட்!

''தெப்பக்குளம்  சூசைட்  கேஸ்  விசாரணைக்காக  போறேன்அங்க   எஸ்.ஐ.யை வரச்சொல்லு!"

கிளம்பி சென்றார்.

வி சாரணை  ஆரம்பம்.
தங்கராசுவின்  பிரண்டு வெள்ளிங்கிரி,அய்யா வடிவேலு இருவரும் அன்றைய  ஆடுகள்.

முதல் நாளை விட இன்று இன்ஸ் ராம்குமாரின் விசாரணை  கடுமையாகவே இருந்தது.

"விசாரணைக்கு ஒத்துழைச்சா  ஸ்டேஷனுக்கு வரவேண்டியதாக இருக்காது.  தெரிஞ்ச  சங்கதியை  மறைக்காம சொல்லிடுங்க. உங்க பையன் தங்கராசுக்கு  கல்யாணத்தில  முழு சம்மதம் இருந்துச்சா? ராக்கடி கதையெல்லாம்  நம்ப  முடியாது.நானும் விசாரிச்சேன். உண்மைய சொல்லுங்க?"

"அய்யா எஜமான் ! அவனோட முழு சம்மதத்துடன்தான்  அன்னமயில கல்யாணம் பண்ணி வச்சோம்!"

"அப்ப ஏன்யா சூசைட் பண்ணிக்கிட்டான்?"

"அதான் அய்யா தெரியல.!"

"அப்ப பொண்ணு  அன்னமயிலுக்கு பிடிக்கலியா?"

"அந்த பொண்ணுக்கும் இஷ்டம்தானுங்க.!அவங்களையும்  விசாரிங்க. பொண்ணுக்கு  இஷ்டம்தான். இல்லேன்னா  கட்டி வைப்பாங்களா? எந்த அப்பனாவது  இஷ்டமில்லாதவனுக்கு  கட்டி வைப்பாங்களா? சொல்லுங்கய்யா?"

"அப்ப பர்ஸ்ட் நைட் முடியிறதுக்குள்ள ஏன்யா  செத்தான்? வீணா  அந்த பொண்ணை  மெடிகல் செக் அப் பண்ண வச்சிடாதிங்க.? ரூம்ல இருந்து  சண்டை போடுற சத்தமும் இல்லங்கிறீங்க.நிச்சயம் பொண்ணுக்கோ  உங்க மகனுக்கோ யாரோ ஒருவருக்கு இஷ்டம் இல்ல.அதனால்தான் பேருக்கு  கல்யாணம் பண்ணி வாழ்க்கையை கெடுத்திட்டிங்க. கடைசியா கேக்கிறேன்."என்றவர் இடியை ஏறக்கினார்.

"பையனுக்கு கஞ்சா பழக்கம் இருந்துச்சா. இல்ல லாட்ஜில் ரூம் போட்டு வியாபாரம் பண்றவங்களிடம் லேகியம் வாங்கி சாப்பிடுவானா?"

வடிவேலு வாய்விட்டு கதறிவிட்டார்." சாமீ....எம்புள்ளைக்கு  எந்த கெட்ட  பழக்கமும் இல்ல.தப்பா சொல்லி இந்த அப்பன் மனசில நஞ்ச வெதச்சிடாதிங்க!"

"அப்ப  உண்மைய சொல்லிடுங்க. விசாரனைன்னா  உண்மைய கொண்டார இப்படியெல்லாம் கேட்கத்தான்  செய்வோம்" என்றார் பக்கத்திலிருந்த  சப்- இன்ஸ்பெக்டர்.

"சரி...நீங்க வெளியில் இருங்க. இவனை விசாரிக்க வேண்டியிருக்கு" என்று  வெள்ளிங்கிரியை பார்த்தார்.

அவனும் சட்டைக்காலரை  பின்னுக்கு இழுத்துவிட்டுக்கொண்டு கேள்விகளை  எதிர்நோக்கினான்.
( இன்னும்  இருக்கு.)





















Sunday 14 August 2016

காதல்....காமம்.( இரண்டு.)

தல்லாகுளம் சர்க்கிள் இன்ஸ்பெக்டர்  அலுவலகம்.

செத்துப்போன தங்கராசுவின்  குடும்பத்தினரும் புதுப்பெண் அன்னமயிலு  குடும்பத்தனரும் வெவ்வேறு வேப்ப மரங்களின்  நிழலில்  துக்கத்துடன்  அமர்ந்திருந்தனர்.விம்மி விடக்கூடாது என்பதற்காக சில பெண்கள்  முந்தானையின் சிறுபகுதியை பொட்டலம் போல் சுருட்டி வாயில் வைத்துக்  கொண்டிருந்தார்கள்.

இன்ஸ்பெக்டர்  ராம்குமார் ஜீப்பில் வந்து இறங்கியதும் ஸ்டேஷன்  பரபரப்பாகியது.

நாற்காலியில்  ராம்குமார்  உட்கார்ந்ததும் எஸ்.ஐ.சிதம்பரம்  ஸல்யூட் வைத்துவிட்டு  எதிராக இருந்த  நாற்காலியில் உட்கார்ந்து கொண்டார்.

ஏட்டய்யா பைலை வைத்துவிட்டு  'போஸ்ட்மார்ட்டம்  ரிப்போர்ட் வந்திருக்கு. சூசைடுய்யா" என்றார்.

'ரீசன் என்னன்னு என்கொயரி பண்ணியாச்சா  சிதம்பரம்?"

'பண்ணிட்டேன் சார். டூ சைடிலும் காரணம் தெரியலேன்னுதான்  சொல்றாங்க. மாப்பிள்ளையும் பொண்ணும் மீனாச்சியம்மன்  கோவிலில்  ஒருத்தரை ஒருத்தர்  பார்த்து சம்மதம் சொன்னபிறகுதான்  கல்யாணம் நடந்திருக்கு...."என்றார் எஸ்.ஐ.!

'அப்புறம் எதுக்கு பையன் தற்கொலை பண்ணிக்கணும்? பர்ஸ்ட்  நைட்ல  பிரச்னை இருந்திருக்குமோ? பொண்ணு சைடிலே கேட்டிங்களா? பல  ஆங்கிள்ல நாம்ப  போகணும் சிதம்பரம்?"

'போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்ல ஒரு முக்கியமான  இன்பர்மேஷன்  கெடச்சிருக்கு சார். ..........!"

'தட்  மீன்ஸ்  க்ளு?"

"எஸ் சார்....." என்றவர்  மெதுவான குரலில்  'பர்ஸ்ட் நைட்  நடந்ததுக்கான  சிம்ப்டமே  இல்லை சார்!"

'அப்படின்னா பெண்ணுக்கு  இஷ்டமில்லையா  இல்ல பையனுக்கு  ஆண்மை இல்லையா  இந்த ரெண்டுல  ஒன்னுதானேய்யா ரீசனா இருக்க முடியும்.?

"ஆமா சார்.!'

'பர்ஸ்ட்ல பொண்ணு சைடில விசாரிக்கவேணாம். பையன் வீட்ல விசாரிக்கலாம். இப்ப  மார்ச்சுவரியில  இருந்து  பாடியை  எடுத்திட்டு போகட்டும்."

"ஓகே சார்!"

தல்லாகுளத்தில் இருந்து  எர்ஸ்கின் மருத்துவமனை ( ராஜாஜி  மருத்துவமனை.) பக்கம்தான் என்பதால் அடுத்த அரை மணி நேரத்தில்  எல்லாவேலைகளையும்  விரைவாக  சிதம்பரம்  முடித்துக் கொடுத்தார்.

இரண்டாவது நாள் 

தத்தனேரி சுடுகாட்டிலிருந்து  வீட்டுக்கு வந்து  சேருவதற்கு  மத்தியானம் ஆகிவிட்டது. இன்ஸ்பெக்டர்  ராம்குமார்  மப்டியில்  இழவு   வீட்டில்  காத்திருந்தார். பிள்ளையை  இழந்து  துயரத்தில் இருப்பவர்களை  ஸ்டேஷனில்  வைத்து விசாரிப்பதில்  அவருக்கு விருப்பமில்லை.
துணையாக  எஸ்.ஐ.சிதம்பரம் மற்றும்  ஏட்டய்யா.

தனி அறையில் இருந்த அவர்களை தங்கராசுவின்  அய்யா வடிவேலு வந்து  பார்த்தார்.

"குடிக்கிறதுக்கு  காப்பி, கலரு கொண்டாரச் சொல்லட்டுமா ஐயா?" மகனை இழந்த  துக்கம் நெஞ்சை  அடைத்துக் கொண்டிருந்தாலும்  அதிகாரிகளை  வரவேற்ற பாங்கு  அவரது குடும்பத்தின்  உயர்வை காட்டியது.
 
''அதெல்லாம்  வேணாம்  வடிவேலு. விசாரிச்சோம் .ஒரே பையன்னு  சொன்னாங்க. கொஞ்ச வயசில அதுவும் பர்ஸ்ட் நைட்  முடிஞ்ச தடயமே  இல்லாம  பையன் தற்கொலை பண்ணிக்கிட்டது கொடுமையான  வேதனைதான்.எந்த குடும்பமும் தாங்கிக்க முடியாது.என்ன பண்றது.? எல்லாம் அந்த கடவுள்தான்னு  அவன் மேல  பாரத்தை போட்டு மனசை ஆத்திக்க வேண்டியதுதான்!" என்று ராம்குமார் சொன்னதும்  வடிவேலு உடைந்து போனார்.

''ஏன் ...எதுக்காக  பிள்ளை  இப்படி ஒரு முடிவுக்கு வந்தான்னே தெரியலய்யா! பொண்டாட்டிக்கு  ஆசை ஆசையா ராக்கடி வாங்கிட்டு வந்து எங்ககிட்ட  காமிச்சான். அவ கொண்டை போட்டு  ராக்கடியை  வச்சுக்கனும்னு ஆசைப்பட்டுத்தான்  வாங்கிட்டு வந்ததாக  சொன்னான்.நாங்கெல்லாம் சந்தோசப்பட்டு  கேலி பண்ணினோம். அப்படியெல்லாம்  ஆசைப்பட்ட பிள்ள..." இதற்கு மேல் பேச முடியாமல் கதறியழ ஆரம்பித்து விட்டார்.

சத்தம் கேட்டு உறவினர்கள்  கதவை தட்ட ஆரம்பித்து விட்டனர் .போலீஸ்  டார்ச்சர் பண்ணுகிறதோன்னு  பயம்.

ஏட்டய்யா  அவசரமாக கதவை திறந்தார்.

அறைக்குள்  வேகமுடன் பாய்ந்தவன்  வேறு யாருமல்ல  தங்கராசுவின்  பிரண்ட்  . வண்டியூர் தெப்பக்குளம்  வந்து கதறிய  அதே  ஆள்தான்!

"என்ன சார்.. டார்ச்சர் பண்றீங்களா? எழவு வீட்டுல பாடை கட்டுன பச்ச ஓலை வாசம் கூட இன்னமும் இருக்கு. சார்." என கொதித்தான்.

அவனை  அமைதிப்படுத்தி வெளியே தள்ளிய  வடிவேலு " மனுசத்தன்மையோடு  நடக்கிறாங்கடா.. சங்கதி தெரியாம வந்து  வார்த்தையை  கொட்டாதே  .எங்கிட்டாவது போய் தொலை "என்று  கோபத்தை காட்டினார்.

''யாருங்க அந்த பையன். ரொம்பவும்  சொந்தமோ?" இன்ஸ்பெக்டர் கேட்டார்.

"ஐயா பொறுத்துக்கணும். என் மவனோட நண்பன்.பேரு வெள்ளிங்கிரி. ரெண்டு பெரும் ஒன்னு மண்ணாத்தான் திரிவானுங்க! தங்கராசு  செத்துப்போனதை தாங்கிக்க முடியல" .

' சரி சரி  இருக்கத்தானே  செய்யும். இப்ப பொண்ணு  எங்க இருக்கு? "

"இங்கதான்  இருக்கு. அவங்க வீட்டுக்கு  போகமாட்டேன்னு சொல்லிட்டு பச்சத்தண்ணி பல்லுல படாம படுத்த படுக்கையா இருக்கு. பெத்தவங்களை பாக்க முடியாதுன்னு  சொல்லிடிச்சு.என் சம்சாரம்தான் துணையா  இருக்கா!" மறுபடியும்  விசும்பத்தொடங்கினார்.

இதற்கு மேலும்  விசாரிப்பது  முறையாகாது ...சற்று  இடைவெளி விடலாம் என்று ராம்குமார் முடிவெடுத்தார்.

---அடுத்த  ஞாயிறு....

.







Wednesday 10 August 2016

வருத்தம்.......கல்யாணம்...காமம்.( பகுதி 1.)

சில நிர்பந்தங்கள்.அதுவும் உறவுகள் வழியாக!

குற்றப்பரம்பரை தொடர்  உனக்கு தேவையா...அதுவும்  உண்மையை  எழுதவேண்டுமா..வேண்டாம்.நிறுத்திவிடு......

இப்படி சில..!   மிரட்டல்கள் பல.!  இதனால் சில கேரக்டர்களை  மாற்றி சொல்லிய  பிழைகளும்  ஏற்பட்டது. !.வேண்டாமே  இந்த குழப்பம்.உண்மையை எழுதி சாதிக்கப் போவது என்ன?

அதனால் அந்த தொடரை  நிறுத்திவிட்டேன்.

மன்னிக்க...!.

புதியது ஒன்று  பூக்காமால்  போகுமா?

முன்னொரு  காலம். ஆவணி  மாதம்.

வண்டியூர் மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் ஆணின் பிணம்.! வேடிக்கை  பார்க்க சிலைமானிலிருந்தும்  சைக்கிள் கட்டி வருகிறது கூட்டம்.! அந்த காலத்தில் கண்மாய் ,குளம்தான்  தற்கொலை செய்து கொள்வதற்கு  வசதியாக  இருந்தது போலும். குடும்பச்சண்டைகள்தான் பெரும்பாலும் இம்மாதிரி தண்ணீரை தேடி வந்தன .புருசனுடன் சண்டை போட்டு அவசரத்தில்  முடிவெடுக்கும் பெண்கள்  உத்திரத்தில்  தொங்கி  விடுவார்கள்.அல்லது அரளி விதையை அரைத்துக் குடித்து விடுவார்கள்.

ஏட்டையாவும் ஒரு போலீசுக்காரரும்தான் முதலில்  ஸ்பாட்டுக்கு வந்தவர்கள்.

'ஏட்டய்யா! பட்டு வேட்டி பட்டு சட்டையோடு மெதக்கிறான்! அவனுக்கு  என்ன நோக்காடோ?  என்ன வேசாடோ....கொஞ்ச  வயசு மாதிரி  தெரியிது. தரையில போட்டாதான் யாரு என்னங்கிறதுன்னு தெரியும்." என்ற போலீஸ்காரர் சில  இளவட்டப் பயலுகளை  மிரட்டி  பிணத்தை கரைக்கு  கொண்டுவந்தார்.

சட்டைப்பை , இடுப்பு மடிப்பில் கடுதாசி எதுவும் இருக்கிறதா  என்கிற வழக்கமான  சோதனைகளை முடித்த போலீஸ்காரர்  'தடயம் எதுவும் இல்லை ஏட்டையா..பாடில காயமும் கிடையாது.இது கண்டிப்பா தற்கொலைதான்" என்கிற முடிவுக்கு வந்தார்.

'பாக்கிறதுக்கு பெரிய எடத்து பிள்ளையாட்டம் தெரியிது.'என்று பிணத்தை ஒரு பார்வை பார்த்த ஏட்டையா கூட்டத்தையும்அப்படியே ஒரு  நோட்டம் விட்டார்,

''யோவ்...யாருங்கிற  அடையாளம் தெரியிதாப்பா..தெரிஞ்சவங்க தைரியமா  சொல்லுங்கப்பா ...சாட்சி அது ,இதுன்னு டேசனுக்கு  கூப்பிடமாட்டம்." என்று ஊக்கம் கொடுக்கிறார் ஏட்டையா!

'சார்...எங்க பக்கத்து  ஆளு மாதிரி தெரியல.டவுனுக்குள்ளதான்  விசாரிக்கனும்!" என்கிறான் கூட்டத்திலிருந்த ஒருவன்.

'நல்லா பாத்து சொல்லுங்கப்பா...பெரியாஸ்பத்திரிக்கு போயிட்டா  அறுத்து  தச்சுப்பிடுவானுங்க."என்கிற எச்சரிக்கையுடன்   ஆஸ்பத்திரிக்கு எடுத்துப் போகிற வேலைகளில்  எறங்கிவிட்டார் ஏட்டைய்யா.

அப்போது....

வாயிலும் வயிற்றிலும்  அடித்துக் கொண்டு வாடகைக்காரில் வந்து இறங்குகிறது   ஒரு கூட்டம்.

கூட்டத்தை பிளந்துகொண்டு வந்த ஒரு எளந்தாரி "மாப்ளே  இப்படி  மோசம்  பண்ணிட்டியடா..."என்று  கதறி அழ ,கூட வந்திருந்த  உறவுகளும் அங்கேயே வட்டமாக அமர்ந்து  ஒப்பாரியை தொடங்கிவிட்டது.

'நேத்திக்கிதான் கல்யாணம் நடந்துச்சு. மொதலிரவுக்கு பெறவு விடிஞ்சி பாத்தா  மாப்ளைய   காணாம். பொண்ணோ மயங்கிக் கிடக்கு. பொண்ணை  பிரைவேட்  ஆஸ்பத்திரியில  சேத்திருக்கு.மாப்ள இங்க  பொணமா கெடக்கிறான்.என்ன நடந்ததுன்னு  தெரியாம பொண்ணு வீட்ல  ரெண்டு  வீட்டு சனமும் கதறிக்கிட்டு கெடக்கு."

அந்த இளந்தாரிதான்.முதல் தகவலை ஏட்டைய்யாவுக்கு சொல்கிறான்.

'நீ பிள்ளை வீடா,பொண்ணு  வீடா?"

ஏட்டையா விசாரணையை தொடங்கினார்.

'நான்  தங்கராசுவின்  பிரண்டு.! பேரு அழகரு.ரெண்டு பேருக்கும் ஒரே  ஊருதான் .ஊமச்சிகுளம்."

'சரி .. மத்ததை  டேசனுக்கு வந்து ஐயாகிட்ட  சொல்லிடு" என்ற ஏட்டைய்யா  அப்போதுதான்  அங்கு வரும்  எஸ்.ஐ.க்கு  வெறப்பா ஒரு  ஸல்யூட் அடித்தார்.
-----
 வருகிற  ஞாயிறு  இதன் இரண்டாம்  பகுதி.


Sunday 17 July 2016

குற்றப்பரம்பரை.( பகுதி.7.)

பொட்டக்காடு.மொட்ட வெயில். அனல் காத்து  முகத்தில்  அறைந்து  அப்புகிறது.காக்கா,குருவி  எதையும்  காணாம்.ஆடிப்பட்டம் தேடி வெதைன்னு பெரிசுக சொல்லிட்டு போயிடிச்சிக.ஆனா கம்மா,காடு   எல்லாம் வரண்டு போயி பாளம் பாளமா வெடிச்சிக் கெடக்கு.! இதில எங்க  தேடி வெதைக்கிறது!

இடுப்புல அழுக்கு வேட்டி.கழுத்துல மந்திரிச்சி கட்டுன வெள்ளித் தாயத்து கருப்பு கயித்தில தொங்குது. காடாவில் வி கழுத்து சட்டை, காட்டுப்புழுதி ஏறிக் கெடக்கு.எண்ணெய பாத்து  மாசக்கணக்கில் இருக்கும்போல தல. துண்டை  மடிச்சி தலைக்கு வச்சு படுத்துக் கெடக்கிறான் சடையன்,எப்ப வேணும்னாலும் போலீஸ் புடிக்கலாம். தேவைப்படுகிற கொலை குற்றவாளி.
மறைஞ்சி திரியிரவன் எவன் வயிறார  சாப்பிடுவான்? இருந்தாலும் மாயக்காள் இவனுக்கு கம்மஞ் சோத்தை பெருசா  உருட்டி முந்தானையில்  மறச்சு வச்சு  வழியில பாக்கிறபோது கொடுப்பா!

இவனுக்கும் அவளுக்கும் கள்ளத்தொடர்பா? அத்து விடப்பட்டவதானே? ஆம்பள  துணை இல்லாம  வாழமுடியுமா? அந்த சொகம் கெடைக்கலேன்னுதானே  புருசன் கூட சண்டை போட்டா? ச்சே...நாக்குல பல்லு போட்டு சொல்லமுடியுமா? மந்தையம்மன் துடிப்பான சாமி.குலையறுத்திற மாட்டாளா?மாயக்காள் நெருப்பு மாதிரி.தனக்கு வாய்த்த  வாழ்க்கை இம்பிட்டுத்தான்னு  ஈரத்துணியை இடுப்புல கட்டிக்கிட்டு வாழ்ந்திட்டிருக்கா. அப்படிப்பட்டவ  சடையனுக்காக  ஏன் கஷ்டப்படனும்?ரகசியமா  பகல்லேயும் ராவுலேயும் ஊருக்கு தெரியாம சந்திக்கணும்? ஊர் நெலவரத்தை அவனுக்கு சொல்லணும்?

விஷயம் இருக்கு! அத அப்பறமா பார்க்கலாம். இப்ப சடையனை  கவனிக்கலாம்.இப்பதான் மூக்கன் அங்க வர்றான்.

'வர்ற வழியெல்லாம் நாய்ங்க தொல்லை.அதான் போக்குக்காட்டிட்டு வர்றதுக்கு இம்பிட்டு நேரமாயிடிச்சி!" என்று  போலீசு நெருக்கடியை சொன்னான்.

'என்னிக்கும் இல்லாம இன்னிக்கி மட்டும் ஏன் நாய்ங்க மோப்பம் பிடிக்கிறது?'

'தலையாரி வீட்லேயே ஒரு தெறமைக்காரன் வேலையை  காட்டிருக்கான் .அஞ்சு பவுன் சங்கிலியாம்.அதான் நாய்ங்க தொல்லை!"

'ஒன்னைய  ஒன்னும் மெரட்டலியே?'

'இந்த மொண்ணைக் கேசுக்கெல்லாம் என்னைய தேட மாட்டானுக. 'என்னடா  உன் வேலைதானான்னு  சும்மா மெரட்டுரதுடன் விட்ருவானுக. அந்த கரட்டு மேட்டு கொலை கேசுக்காகத்தான்  என்னை  நோட்டம் விடுறானுக. தூண்டில்ல  மாட்டுற  புழுன்னு  என்னை  நெனச்சிட்டு  இருக்கானுக,. அதான்  உன்னை பாக்கிறதுக்கு ரொம்பவும் எச்சரிக்கையா  இருக்க வேண்டியிருக்கு சடையா!"

'மூக்கா...ஒன்ன  ஒன்னு  கேப்பேன் .நிசத்தை சொல்லணும்.என்ன தப்பா நெனக்கக்கூடாது.'

குச்சியால் தரையை  கீறிக்கொண்டே  கேட்கிறான்  சடையன்

மூக்கனுக்கு புரியவில்லை.எத மனசில வச்சுக்கிட்டு இப்படி ஒரு கேள்விய  கேக்கிறான்? காட்டிக் கொடுத்திருவோம்னு  நெனக்கிறானா?

'வெளங்கல சடையா... மனசில எதோ  உறுத்துதுன்னா பட்டுன்னு போட்டு   ஒடச்சிடு! ஓடி ஒளிஞ்சிட்டு திரியிறவனுக்கு  இந்த உறுத்தல் பாரமா போயிடும்.இதையும் சேந்து சொமக்க முடியாது..உன் சத்தெல்லாம் இந்த  உறுத்தல்லேயே  கரைஞ்சி  நோஞ்சானாக்கிடும் தயங்காதே. கேட்ரு!"

மூக்கன் நிதானமா உருக்கமாக  கேட்கிறான்.

'ஒனக்கு  செவப்பி  மேல நோக்கமா ....ஆசைப்படுறியா?"

ஊளமூக்கன் இப்படி ஒரு கேள்வியை  சடையனிடம் எதிர்பார்த்திருக்கவில்லை.

------அடுத்து வரும் ஞாயிறு பதில் கிடைக்கும்,
.
.


Sunday 3 July 2016

குற்றப்பரம்பரை.(6.)

'நாந்தாண்டி  மாயி. சத்தம் கித்தம் போட்டு  ஊரை கூட்டிராதே!!" -கையை  வாயிலிருந்து  எடுத்தாள்.

 படபடவென அடித்துக்கொண்ட  சிவப்பியின்  நெஞ்சு துடிப்பு வெளியில்  கேட்டது. வியர்த்து கொட்டுகிறது,அந்த குளிர்ந்த முன்னிரவு நேரத்திலும்.! பதட்டத்திலிருந்து தன்னை முழுமையாக விடுவித்துக் கொள்ள சற்று நேரமாகியது.

'இப்ப எதுக்காக என்னை இப்படி மடக்கிப் போட்டு கொடைய  பாக்கிறே..நீதான்  வேலையத்துப் போய் கெடக்கிறேன்னா என்னையும் அப்படி நெனக்கிறியா?"உடம்பில் இருந்த வைக்கோலை எடுத்தபடியே 'சனியன் இது வேற அரிக்கிது!'

'இல்லடி...அந்த  ஊளமூக்கனுடன்  சினேகமா  இருக்கியாமே..அவன்  கெட்ட பயடி! அவனுக்கு  செவனம்மா .மேல ஒரு கிறுக்கு. குடுத்துணி  வாங்க வக்கத்த அந்த களவாணிப் பயலோட உனக்கென்னடி ஓரப்பார்வை.?"

'அத நீ பாத்தியா? எத நெனச்சு இப்படி சொல்ற? வம்பா வாய்ல பச்சனாவிய தடவிட்டு பேசாதே!'---எரிச்சல் அவளுக்கு.! அதே நேரத்தில்  தெரிஞ்சுதான்  பேசுறாளா.இல்ல வாயப் புடுங்கப்பாக்கிறாளா என்கிற  சந்தேகமும்  இருந்தது.

'உன் வேசாடு  தாங்கல..என்னை என்ன வெவரம் கெட்ட சிறுக்கின்னு  நெனச்சிட்டியா? அப்படியெல்லாம்  சிநேகம் இல்ல...." என்று  மாயக்காளிடம் இருந்து  விடுபடபார்த்தாள்.

அவளோ அவ்வளவு லேசா  விடுவதாக இல்லை.

'சங்கிலி கருப்பன் கோவிலில் உனக்கு தேங்கா சில்ல ஊட்டி விட்டானேடி
..ஏண்டி என்னை கொங்கா சிறுக்கி  கூறு கெட்டு திரியிறான்னு நெனச்சிட்டியா? நீ எக்கேடு கெட்டா எனக்கென்னடி ? அவன்  கெட்டலையிறான்னு  .சொல்றேன்.கேட்டா கேளு. கேக்காட்டி  சீரழி.!ஆத்தா இல்லாதவளுக்கு   பச்சதாபபட்டு சொல்லவந்தா சொரிஞ்சிட்டுபோறேன்னு தள்ளுறே.எனக்கென்ன போச்சு." என்றபடி சிவப்பியை தள்ளிவிட்டு கிளம்பிவிட்டாள்.

சிகப்பிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

மாயக்காள் அறுத்துக்கட்டியவள் என்றாலும்  இன்னொரு ஆம்பளைய அவ தேடி அலையவில்லை.நல்லது பொல்லது தெரிஞ்சு நடக்கிறவ..அவளுக்கு  இதுனால என்ன லாபம் கிடைக்கப்போகுது?நாம்ப மூக்கனுடன்  பழகுறது  எதுக்காக என்பதை சொல்லிவிடலாமா? சொன்னா நம்புவாளா?

சொல்லவேனாம்....என்னதான் ஆவுதுன்னு பார்க்கலாம்னு  வைக்கோல் போரை விட்டு எழுந்தாள்.சுத்திப் பாக்கிறா. ..யாரும் இல்ல..பின்கொசுவத்தை தட்டிவிட்டு வீட்டை நோக்கி நடந்தாள்.

கொட்டத்தில் ஒளிந்திருந்த மாயக்காள்  அவளை பின் தொடர்கிறாள்,
சிவப்பிக்கு தெரியாமல்.!

'நேத்து ஆளான பொட்டச்சி எனக்கே காது குத்தப்பாக்கிறாளா ? பாக்கிறேண்டி  உன் சமத்தை !"என்று  மனசுக்குள் சிரித்தபடி பின் தொடர்ந்தாள்.

மூக்கனும் சிவப்பியும் அன்று சந்திப்பதாக  திட்டமிட்டிருப்பது அவளுக்கு  தெரியும்...தலைமறைவாக திரிகிற சடையன்தான் சொல்லியிருந்தான்.சடையனும் சிவப்பியை  விரும்புகிறான். கொலையை  பண்ணியதாக  தேடப்படுபவன்!.அவனுக்கு ஒவ்வொரு வியாழனும்  சேதி சொல்லிவந்தவள்தான் மாயக்காள்.

அதற்கு காரணமும் இருக்கிறது.

வெளக்குமாறு  விக்கவந்த ஒருத்தியை ஊளமூக்கன் வச்சிருந்தான்!

--இன்னும்  வரும்.