Sunday 17 July 2016

குற்றப்பரம்பரை.( பகுதி.7.)

பொட்டக்காடு.மொட்ட வெயில். அனல் காத்து  முகத்தில்  அறைந்து  அப்புகிறது.காக்கா,குருவி  எதையும்  காணாம்.ஆடிப்பட்டம் தேடி வெதைன்னு பெரிசுக சொல்லிட்டு போயிடிச்சிக.ஆனா கம்மா,காடு   எல்லாம் வரண்டு போயி பாளம் பாளமா வெடிச்சிக் கெடக்கு.! இதில எங்க  தேடி வெதைக்கிறது!

இடுப்புல அழுக்கு வேட்டி.கழுத்துல மந்திரிச்சி கட்டுன வெள்ளித் தாயத்து கருப்பு கயித்தில தொங்குது. காடாவில் வி கழுத்து சட்டை, காட்டுப்புழுதி ஏறிக் கெடக்கு.எண்ணெய பாத்து  மாசக்கணக்கில் இருக்கும்போல தல. துண்டை  மடிச்சி தலைக்கு வச்சு படுத்துக் கெடக்கிறான் சடையன்,எப்ப வேணும்னாலும் போலீஸ் புடிக்கலாம். தேவைப்படுகிற கொலை குற்றவாளி.
மறைஞ்சி திரியிரவன் எவன் வயிறார  சாப்பிடுவான்? இருந்தாலும் மாயக்காள் இவனுக்கு கம்மஞ் சோத்தை பெருசா  உருட்டி முந்தானையில்  மறச்சு வச்சு  வழியில பாக்கிறபோது கொடுப்பா!

இவனுக்கும் அவளுக்கும் கள்ளத்தொடர்பா? அத்து விடப்பட்டவதானே? ஆம்பள  துணை இல்லாம  வாழமுடியுமா? அந்த சொகம் கெடைக்கலேன்னுதானே  புருசன் கூட சண்டை போட்டா? ச்சே...நாக்குல பல்லு போட்டு சொல்லமுடியுமா? மந்தையம்மன் துடிப்பான சாமி.குலையறுத்திற மாட்டாளா?மாயக்காள் நெருப்பு மாதிரி.தனக்கு வாய்த்த  வாழ்க்கை இம்பிட்டுத்தான்னு  ஈரத்துணியை இடுப்புல கட்டிக்கிட்டு வாழ்ந்திட்டிருக்கா. அப்படிப்பட்டவ  சடையனுக்காக  ஏன் கஷ்டப்படனும்?ரகசியமா  பகல்லேயும் ராவுலேயும் ஊருக்கு தெரியாம சந்திக்கணும்? ஊர் நெலவரத்தை அவனுக்கு சொல்லணும்?

விஷயம் இருக்கு! அத அப்பறமா பார்க்கலாம். இப்ப சடையனை  கவனிக்கலாம்.இப்பதான் மூக்கன் அங்க வர்றான்.

'வர்ற வழியெல்லாம் நாய்ங்க தொல்லை.அதான் போக்குக்காட்டிட்டு வர்றதுக்கு இம்பிட்டு நேரமாயிடிச்சி!" என்று  போலீசு நெருக்கடியை சொன்னான்.

'என்னிக்கும் இல்லாம இன்னிக்கி மட்டும் ஏன் நாய்ங்க மோப்பம் பிடிக்கிறது?'

'தலையாரி வீட்லேயே ஒரு தெறமைக்காரன் வேலையை  காட்டிருக்கான் .அஞ்சு பவுன் சங்கிலியாம்.அதான் நாய்ங்க தொல்லை!"

'ஒன்னைய  ஒன்னும் மெரட்டலியே?'

'இந்த மொண்ணைக் கேசுக்கெல்லாம் என்னைய தேட மாட்டானுக. 'என்னடா  உன் வேலைதானான்னு  சும்மா மெரட்டுரதுடன் விட்ருவானுக. அந்த கரட்டு மேட்டு கொலை கேசுக்காகத்தான்  என்னை  நோட்டம் விடுறானுக. தூண்டில்ல  மாட்டுற  புழுன்னு  என்னை  நெனச்சிட்டு  இருக்கானுக,. அதான்  உன்னை பாக்கிறதுக்கு ரொம்பவும் எச்சரிக்கையா  இருக்க வேண்டியிருக்கு சடையா!"

'மூக்கா...ஒன்ன  ஒன்னு  கேப்பேன் .நிசத்தை சொல்லணும்.என்ன தப்பா நெனக்கக்கூடாது.'

குச்சியால் தரையை  கீறிக்கொண்டே  கேட்கிறான்  சடையன்

மூக்கனுக்கு புரியவில்லை.எத மனசில வச்சுக்கிட்டு இப்படி ஒரு கேள்விய  கேக்கிறான்? காட்டிக் கொடுத்திருவோம்னு  நெனக்கிறானா?

'வெளங்கல சடையா... மனசில எதோ  உறுத்துதுன்னா பட்டுன்னு போட்டு   ஒடச்சிடு! ஓடி ஒளிஞ்சிட்டு திரியிறவனுக்கு  இந்த உறுத்தல் பாரமா போயிடும்.இதையும் சேந்து சொமக்க முடியாது..உன் சத்தெல்லாம் இந்த  உறுத்தல்லேயே  கரைஞ்சி  நோஞ்சானாக்கிடும் தயங்காதே. கேட்ரு!"

மூக்கன் நிதானமா உருக்கமாக  கேட்கிறான்.

'ஒனக்கு  செவப்பி  மேல நோக்கமா ....ஆசைப்படுறியா?"

ஊளமூக்கன் இப்படி ஒரு கேள்வியை  சடையனிடம் எதிர்பார்த்திருக்கவில்லை.

------அடுத்து வரும் ஞாயிறு பதில் கிடைக்கும்,
.
.


No comments:

Post a Comment