Wednesday 10 August 2016

வருத்தம்.......கல்யாணம்...காமம்.( பகுதி 1.)

சில நிர்பந்தங்கள்.அதுவும் உறவுகள் வழியாக!

குற்றப்பரம்பரை தொடர்  உனக்கு தேவையா...அதுவும்  உண்மையை  எழுதவேண்டுமா..வேண்டாம்.நிறுத்திவிடு......

இப்படி சில..!   மிரட்டல்கள் பல.!  இதனால் சில கேரக்டர்களை  மாற்றி சொல்லிய  பிழைகளும்  ஏற்பட்டது. !.வேண்டாமே  இந்த குழப்பம்.உண்மையை எழுதி சாதிக்கப் போவது என்ன?

அதனால் அந்த தொடரை  நிறுத்திவிட்டேன்.

மன்னிக்க...!.

புதியது ஒன்று  பூக்காமால்  போகுமா?

முன்னொரு  காலம். ஆவணி  மாதம்.

வண்டியூர் மாரியம்மன் கோவில் தெப்பக்குளத்தில் ஆணின் பிணம்.! வேடிக்கை  பார்க்க சிலைமானிலிருந்தும்  சைக்கிள் கட்டி வருகிறது கூட்டம்.! அந்த காலத்தில் கண்மாய் ,குளம்தான்  தற்கொலை செய்து கொள்வதற்கு  வசதியாக  இருந்தது போலும். குடும்பச்சண்டைகள்தான் பெரும்பாலும் இம்மாதிரி தண்ணீரை தேடி வந்தன .புருசனுடன் சண்டை போட்டு அவசரத்தில்  முடிவெடுக்கும் பெண்கள்  உத்திரத்தில்  தொங்கி  விடுவார்கள்.அல்லது அரளி விதையை அரைத்துக் குடித்து விடுவார்கள்.

ஏட்டையாவும் ஒரு போலீசுக்காரரும்தான் முதலில்  ஸ்பாட்டுக்கு வந்தவர்கள்.

'ஏட்டய்யா! பட்டு வேட்டி பட்டு சட்டையோடு மெதக்கிறான்! அவனுக்கு  என்ன நோக்காடோ?  என்ன வேசாடோ....கொஞ்ச  வயசு மாதிரி  தெரியிது. தரையில போட்டாதான் யாரு என்னங்கிறதுன்னு தெரியும்." என்ற போலீஸ்காரர் சில  இளவட்டப் பயலுகளை  மிரட்டி  பிணத்தை கரைக்கு  கொண்டுவந்தார்.

சட்டைப்பை , இடுப்பு மடிப்பில் கடுதாசி எதுவும் இருக்கிறதா  என்கிற வழக்கமான  சோதனைகளை முடித்த போலீஸ்காரர்  'தடயம் எதுவும் இல்லை ஏட்டையா..பாடில காயமும் கிடையாது.இது கண்டிப்பா தற்கொலைதான்" என்கிற முடிவுக்கு வந்தார்.

'பாக்கிறதுக்கு பெரிய எடத்து பிள்ளையாட்டம் தெரியிது.'என்று பிணத்தை ஒரு பார்வை பார்த்த ஏட்டையா கூட்டத்தையும்அப்படியே ஒரு  நோட்டம் விட்டார்,

''யோவ்...யாருங்கிற  அடையாளம் தெரியிதாப்பா..தெரிஞ்சவங்க தைரியமா  சொல்லுங்கப்பா ...சாட்சி அது ,இதுன்னு டேசனுக்கு  கூப்பிடமாட்டம்." என்று ஊக்கம் கொடுக்கிறார் ஏட்டையா!

'சார்...எங்க பக்கத்து  ஆளு மாதிரி தெரியல.டவுனுக்குள்ளதான்  விசாரிக்கனும்!" என்கிறான் கூட்டத்திலிருந்த ஒருவன்.

'நல்லா பாத்து சொல்லுங்கப்பா...பெரியாஸ்பத்திரிக்கு போயிட்டா  அறுத்து  தச்சுப்பிடுவானுங்க."என்கிற எச்சரிக்கையுடன்   ஆஸ்பத்திரிக்கு எடுத்துப் போகிற வேலைகளில்  எறங்கிவிட்டார் ஏட்டைய்யா.

அப்போது....

வாயிலும் வயிற்றிலும்  அடித்துக் கொண்டு வாடகைக்காரில் வந்து இறங்குகிறது   ஒரு கூட்டம்.

கூட்டத்தை பிளந்துகொண்டு வந்த ஒரு எளந்தாரி "மாப்ளே  இப்படி  மோசம்  பண்ணிட்டியடா..."என்று  கதறி அழ ,கூட வந்திருந்த  உறவுகளும் அங்கேயே வட்டமாக அமர்ந்து  ஒப்பாரியை தொடங்கிவிட்டது.

'நேத்திக்கிதான் கல்யாணம் நடந்துச்சு. மொதலிரவுக்கு பெறவு விடிஞ்சி பாத்தா  மாப்ளைய   காணாம். பொண்ணோ மயங்கிக் கிடக்கு. பொண்ணை  பிரைவேட்  ஆஸ்பத்திரியில  சேத்திருக்கு.மாப்ள இங்க  பொணமா கெடக்கிறான்.என்ன நடந்ததுன்னு  தெரியாம பொண்ணு வீட்ல  ரெண்டு  வீட்டு சனமும் கதறிக்கிட்டு கெடக்கு."

அந்த இளந்தாரிதான்.முதல் தகவலை ஏட்டைய்யாவுக்கு சொல்கிறான்.

'நீ பிள்ளை வீடா,பொண்ணு  வீடா?"

ஏட்டையா விசாரணையை தொடங்கினார்.

'நான்  தங்கராசுவின்  பிரண்டு.! பேரு அழகரு.ரெண்டு பேருக்கும் ஒரே  ஊருதான் .ஊமச்சிகுளம்."

'சரி .. மத்ததை  டேசனுக்கு வந்து ஐயாகிட்ட  சொல்லிடு" என்ற ஏட்டைய்யா  அப்போதுதான்  அங்கு வரும்  எஸ்.ஐ.க்கு  வெறப்பா ஒரு  ஸல்யூட் அடித்தார்.
-----
 வருகிற  ஞாயிறு  இதன் இரண்டாம்  பகுதி.


No comments:

Post a Comment