Sunday 14 August 2016

காதல்....காமம்.( இரண்டு.)

தல்லாகுளம் சர்க்கிள் இன்ஸ்பெக்டர்  அலுவலகம்.

செத்துப்போன தங்கராசுவின்  குடும்பத்தினரும் புதுப்பெண் அன்னமயிலு  குடும்பத்தனரும் வெவ்வேறு வேப்ப மரங்களின்  நிழலில்  துக்கத்துடன்  அமர்ந்திருந்தனர்.விம்மி விடக்கூடாது என்பதற்காக சில பெண்கள்  முந்தானையின் சிறுபகுதியை பொட்டலம் போல் சுருட்டி வாயில் வைத்துக்  கொண்டிருந்தார்கள்.

இன்ஸ்பெக்டர்  ராம்குமார் ஜீப்பில் வந்து இறங்கியதும் ஸ்டேஷன்  பரபரப்பாகியது.

நாற்காலியில்  ராம்குமார்  உட்கார்ந்ததும் எஸ்.ஐ.சிதம்பரம்  ஸல்யூட் வைத்துவிட்டு  எதிராக இருந்த  நாற்காலியில் உட்கார்ந்து கொண்டார்.

ஏட்டய்யா பைலை வைத்துவிட்டு  'போஸ்ட்மார்ட்டம்  ரிப்போர்ட் வந்திருக்கு. சூசைடுய்யா" என்றார்.

'ரீசன் என்னன்னு என்கொயரி பண்ணியாச்சா  சிதம்பரம்?"

'பண்ணிட்டேன் சார். டூ சைடிலும் காரணம் தெரியலேன்னுதான்  சொல்றாங்க. மாப்பிள்ளையும் பொண்ணும் மீனாச்சியம்மன்  கோவிலில்  ஒருத்தரை ஒருத்தர்  பார்த்து சம்மதம் சொன்னபிறகுதான்  கல்யாணம் நடந்திருக்கு...."என்றார் எஸ்.ஐ.!

'அப்புறம் எதுக்கு பையன் தற்கொலை பண்ணிக்கணும்? பர்ஸ்ட்  நைட்ல  பிரச்னை இருந்திருக்குமோ? பொண்ணு சைடிலே கேட்டிங்களா? பல  ஆங்கிள்ல நாம்ப  போகணும் சிதம்பரம்?"

'போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்ல ஒரு முக்கியமான  இன்பர்மேஷன்  கெடச்சிருக்கு சார். ..........!"

'தட்  மீன்ஸ்  க்ளு?"

"எஸ் சார்....." என்றவர்  மெதுவான குரலில்  'பர்ஸ்ட் நைட்  நடந்ததுக்கான  சிம்ப்டமே  இல்லை சார்!"

'அப்படின்னா பெண்ணுக்கு  இஷ்டமில்லையா  இல்ல பையனுக்கு  ஆண்மை இல்லையா  இந்த ரெண்டுல  ஒன்னுதானேய்யா ரீசனா இருக்க முடியும்.?

"ஆமா சார்.!'

'பர்ஸ்ட்ல பொண்ணு சைடில விசாரிக்கவேணாம். பையன் வீட்ல விசாரிக்கலாம். இப்ப  மார்ச்சுவரியில  இருந்து  பாடியை  எடுத்திட்டு போகட்டும்."

"ஓகே சார்!"

தல்லாகுளத்தில் இருந்து  எர்ஸ்கின் மருத்துவமனை ( ராஜாஜி  மருத்துவமனை.) பக்கம்தான் என்பதால் அடுத்த அரை மணி நேரத்தில்  எல்லாவேலைகளையும்  விரைவாக  சிதம்பரம்  முடித்துக் கொடுத்தார்.

இரண்டாவது நாள் 

தத்தனேரி சுடுகாட்டிலிருந்து  வீட்டுக்கு வந்து  சேருவதற்கு  மத்தியானம் ஆகிவிட்டது. இன்ஸ்பெக்டர்  ராம்குமார்  மப்டியில்  இழவு   வீட்டில்  காத்திருந்தார். பிள்ளையை  இழந்து  துயரத்தில் இருப்பவர்களை  ஸ்டேஷனில்  வைத்து விசாரிப்பதில்  அவருக்கு விருப்பமில்லை.
துணையாக  எஸ்.ஐ.சிதம்பரம் மற்றும்  ஏட்டய்யா.

தனி அறையில் இருந்த அவர்களை தங்கராசுவின்  அய்யா வடிவேலு வந்து  பார்த்தார்.

"குடிக்கிறதுக்கு  காப்பி, கலரு கொண்டாரச் சொல்லட்டுமா ஐயா?" மகனை இழந்த  துக்கம் நெஞ்சை  அடைத்துக் கொண்டிருந்தாலும்  அதிகாரிகளை  வரவேற்ற பாங்கு  அவரது குடும்பத்தின்  உயர்வை காட்டியது.
 
''அதெல்லாம்  வேணாம்  வடிவேலு. விசாரிச்சோம் .ஒரே பையன்னு  சொன்னாங்க. கொஞ்ச வயசில அதுவும் பர்ஸ்ட் நைட்  முடிஞ்ச தடயமே  இல்லாம  பையன் தற்கொலை பண்ணிக்கிட்டது கொடுமையான  வேதனைதான்.எந்த குடும்பமும் தாங்கிக்க முடியாது.என்ன பண்றது.? எல்லாம் அந்த கடவுள்தான்னு  அவன் மேல  பாரத்தை போட்டு மனசை ஆத்திக்க வேண்டியதுதான்!" என்று ராம்குமார் சொன்னதும்  வடிவேலு உடைந்து போனார்.

''ஏன் ...எதுக்காக  பிள்ளை  இப்படி ஒரு முடிவுக்கு வந்தான்னே தெரியலய்யா! பொண்டாட்டிக்கு  ஆசை ஆசையா ராக்கடி வாங்கிட்டு வந்து எங்ககிட்ட  காமிச்சான். அவ கொண்டை போட்டு  ராக்கடியை  வச்சுக்கனும்னு ஆசைப்பட்டுத்தான்  வாங்கிட்டு வந்ததாக  சொன்னான்.நாங்கெல்லாம் சந்தோசப்பட்டு  கேலி பண்ணினோம். அப்படியெல்லாம்  ஆசைப்பட்ட பிள்ள..." இதற்கு மேல் பேச முடியாமல் கதறியழ ஆரம்பித்து விட்டார்.

சத்தம் கேட்டு உறவினர்கள்  கதவை தட்ட ஆரம்பித்து விட்டனர் .போலீஸ்  டார்ச்சர் பண்ணுகிறதோன்னு  பயம்.

ஏட்டய்யா  அவசரமாக கதவை திறந்தார்.

அறைக்குள்  வேகமுடன் பாய்ந்தவன்  வேறு யாருமல்ல  தங்கராசுவின்  பிரண்ட்  . வண்டியூர் தெப்பக்குளம்  வந்து கதறிய  அதே  ஆள்தான்!

"என்ன சார்.. டார்ச்சர் பண்றீங்களா? எழவு வீட்டுல பாடை கட்டுன பச்ச ஓலை வாசம் கூட இன்னமும் இருக்கு. சார்." என கொதித்தான்.

அவனை  அமைதிப்படுத்தி வெளியே தள்ளிய  வடிவேலு " மனுசத்தன்மையோடு  நடக்கிறாங்கடா.. சங்கதி தெரியாம வந்து  வார்த்தையை  கொட்டாதே  .எங்கிட்டாவது போய் தொலை "என்று  கோபத்தை காட்டினார்.

''யாருங்க அந்த பையன். ரொம்பவும்  சொந்தமோ?" இன்ஸ்பெக்டர் கேட்டார்.

"ஐயா பொறுத்துக்கணும். என் மவனோட நண்பன்.பேரு வெள்ளிங்கிரி. ரெண்டு பெரும் ஒன்னு மண்ணாத்தான் திரிவானுங்க! தங்கராசு  செத்துப்போனதை தாங்கிக்க முடியல" .

' சரி சரி  இருக்கத்தானே  செய்யும். இப்ப பொண்ணு  எங்க இருக்கு? "

"இங்கதான்  இருக்கு. அவங்க வீட்டுக்கு  போகமாட்டேன்னு சொல்லிட்டு பச்சத்தண்ணி பல்லுல படாம படுத்த படுக்கையா இருக்கு. பெத்தவங்களை பாக்க முடியாதுன்னு  சொல்லிடிச்சு.என் சம்சாரம்தான் துணையா  இருக்கா!" மறுபடியும்  விசும்பத்தொடங்கினார்.

இதற்கு மேலும்  விசாரிப்பது  முறையாகாது ...சற்று  இடைவெளி விடலாம் என்று ராம்குமார் முடிவெடுத்தார்.

---அடுத்த  ஞாயிறு....

.







No comments:

Post a Comment