Saturday 27 August 2016

காதல்.....காமம்...கல்யாணம்.( பகுதி .3.)

தல்லாகுளம் போலீஸ் ஸ்டேசன்  இன்று  இருப்பதைப் போல  அன்று  இருந்ததில்லை. கள்ளழகர் மண்டகப்படியில் தான் காவல் நிலையம் இயங்கி வந்தது. ஆற்றில்  அழகர்  இறங்கும்போது மண்டகப்படியாகவும்  மற்ற காலங்களில்  போலீஸ் ஸ்டேஷனாகவும் இருந்தது.

அன்று ஸ்டேஷனில்  ஏகப்பட்ட  பரபரப்பு. இன்ஸ்பெக்டர் ராம்குமாரின்  முன்பாக கைதிகளை  வரிசையாக நிறுத்தி இருந்தார் ஏட்டைய்யா.

துண்டை கக்கத்தில் இடுக்கியபடி சட்டை இல்லாமல் நிறுத்தப்பட்டவர்களின்    குற்றப்பட்டியலை  பெயர் விவரங்களுடன்  சொன்னார்.

'அய்யா...இவன் பேரு நரிமேடு  கொன்னவாயன்..! ராத்திரி பன்னெண்டு மணி  வாக்கில  அய்யர் பங்களா பக்கம்  முக்காடு போட்டுக்கிட்டு  சந்தேகப்படும்படி  இருட்டுக்குள்ள  ஒளிஞ்சிட்டிருந்தான். சந்தேகப்படுபடியாக நடந்ததை  நைட்  ரவுண்ட்ஸ் போன பெட்ரோல் பார்ட்டி கையும் களவுமா பிடிச்சிட்டாங்க. முக்காடு  கேஸ் போட்டிருக்கு."( அந்த காலத்தில்  முக்காடு கேஸ் பிரபலம். இதை ஒழித்தவர் காமராஜர்.)

'பெரிய பத்தினி மாதிரி மொகத்தை மறைச்சிட்டு நிக்கிறாளே ...அவ  என்ன பிராத்தலா? ரொம்பவும்தான் நடிக்கிறா?

"இல்லிங்க ஐயா...அம்மன் சந்நிதி ரூபி ஸ்டோர்ல ரெண்டு சேலையை  முந்தானைக்குள் ஒளிச்சு வச்சு  லாவிட்டு வந்தவ."

''இவள்லாம் திருந்த மாட்டாளுங்க.பிராத்தல் கேஸ்ல  போடு!.ஜெயிலுக்குள்ள போயி களி தின்னுட்டு வரட்டும் .கொழுப்பு  கொறையும்."

"மூஞ்சியை திருப்பிக்கிட்டு  நிக்கிற நாயே.. நேரா நில்லுடா "என்று  லங்கோடுடன்  நின்றவனை  பார்த்து இன்ஸ்  கத்தியதும் பரட்டை தலை  ரொம்பவும் பயந்து விட்டான்

  'உத்தரவுங்க எஜமான்" .

என்னவோ தெரியவில்லை. அவனை செல்லில் வைத்து புடைத்து எடுத்திருக்கிறார்கள்.உடம்பெல்லாம் கன்றிப் போயிருந்தது.

"என்னய்யா...பூஜையை  பெருசா  போட்டிருக்கிங்க.பய செத்து கித்து போயிருந்தா  நாம்ப நாய் பட்ட பாடாஅலையனுமேய்யா! " என்று சத்தம் போட்டவர்  அந்த அக்யூஸ்ட்டை பார்த்து   "  எலேய்...என்னடா பண்ணித்தொலஞ்சே.இவ்வளவு  அடி தின்னிருக்கே" என்றபடியே  எழுந்து  அவனிடம் சென்றார்.

அவனுக்கோ பயம்தான்  அதிகமாகியது.

மிகவும் குனிந்தபடியே "சினிமா  தியேட்டர்ல  டிக்கெட்டு வித்தேன்  எஜமான்! வேற தப்பு தண்டா  எதுவும் பண்ணலிங்கய்யா!"என்று  அழுதான்.

"யோவ்  ஏட்டு! இவனை விட்ருங்கய்யா! பெருசா என்ன பண்ணிட்டான்னு  இம்பிட்டு அடி அடிச்சிருக்கிங்க?. ஊர்ல எம்பிட்டோ  பெரிய மனுசனுங்க  கண்ணுக்கு முன்னாடியே கொள்ளை  அடிக்கிறானுங்க. அவனுகளை  புடிக்க முடியிதா.? வவுத்துக்கில்லாம டிக்கெட் வித்து  பொளைக்கிறவன் எம்பிட்டு  சம்பாரிச்சிருவான்.? எழுதி வாங்கிட்டு விட்ருங்கய்யா!"

''எஸ் ..சார்." என்றபடி ஒரு சல்யூட்!

''தெப்பக்குளம்  சூசைட்  கேஸ்  விசாரணைக்காக  போறேன்அங்க   எஸ்.ஐ.யை வரச்சொல்லு!"

கிளம்பி சென்றார்.

வி சாரணை  ஆரம்பம்.
தங்கராசுவின்  பிரண்டு வெள்ளிங்கிரி,அய்யா வடிவேலு இருவரும் அன்றைய  ஆடுகள்.

முதல் நாளை விட இன்று இன்ஸ் ராம்குமாரின் விசாரணை  கடுமையாகவே இருந்தது.

"விசாரணைக்கு ஒத்துழைச்சா  ஸ்டேஷனுக்கு வரவேண்டியதாக இருக்காது.  தெரிஞ்ச  சங்கதியை  மறைக்காம சொல்லிடுங்க. உங்க பையன் தங்கராசுக்கு  கல்யாணத்தில  முழு சம்மதம் இருந்துச்சா? ராக்கடி கதையெல்லாம்  நம்ப  முடியாது.நானும் விசாரிச்சேன். உண்மைய சொல்லுங்க?"

"அய்யா எஜமான் ! அவனோட முழு சம்மதத்துடன்தான்  அன்னமயில கல்யாணம் பண்ணி வச்சோம்!"

"அப்ப ஏன்யா சூசைட் பண்ணிக்கிட்டான்?"

"அதான் அய்யா தெரியல.!"

"அப்ப பொண்ணு  அன்னமயிலுக்கு பிடிக்கலியா?"

"அந்த பொண்ணுக்கும் இஷ்டம்தானுங்க.!அவங்களையும்  விசாரிங்க. பொண்ணுக்கு  இஷ்டம்தான். இல்லேன்னா  கட்டி வைப்பாங்களா? எந்த அப்பனாவது  இஷ்டமில்லாதவனுக்கு  கட்டி வைப்பாங்களா? சொல்லுங்கய்யா?"

"அப்ப பர்ஸ்ட் நைட் முடியிறதுக்குள்ள ஏன்யா  செத்தான்? வீணா  அந்த பொண்ணை  மெடிகல் செக் அப் பண்ண வச்சிடாதிங்க.? ரூம்ல இருந்து  சண்டை போடுற சத்தமும் இல்லங்கிறீங்க.நிச்சயம் பொண்ணுக்கோ  உங்க மகனுக்கோ யாரோ ஒருவருக்கு இஷ்டம் இல்ல.அதனால்தான் பேருக்கு  கல்யாணம் பண்ணி வாழ்க்கையை கெடுத்திட்டிங்க. கடைசியா கேக்கிறேன்."என்றவர் இடியை ஏறக்கினார்.

"பையனுக்கு கஞ்சா பழக்கம் இருந்துச்சா. இல்ல லாட்ஜில் ரூம் போட்டு வியாபாரம் பண்றவங்களிடம் லேகியம் வாங்கி சாப்பிடுவானா?"

வடிவேலு வாய்விட்டு கதறிவிட்டார்." சாமீ....எம்புள்ளைக்கு  எந்த கெட்ட  பழக்கமும் இல்ல.தப்பா சொல்லி இந்த அப்பன் மனசில நஞ்ச வெதச்சிடாதிங்க!"

"அப்ப  உண்மைய சொல்லிடுங்க. விசாரனைன்னா  உண்மைய கொண்டார இப்படியெல்லாம் கேட்கத்தான்  செய்வோம்" என்றார் பக்கத்திலிருந்த  சப்- இன்ஸ்பெக்டர்.

"சரி...நீங்க வெளியில் இருங்க. இவனை விசாரிக்க வேண்டியிருக்கு" என்று  வெள்ளிங்கிரியை பார்த்தார்.

அவனும் சட்டைக்காலரை  பின்னுக்கு இழுத்துவிட்டுக்கொண்டு கேள்விகளை  எதிர்நோக்கினான்.
( இன்னும்  இருக்கு.)





















No comments:

Post a Comment