Thursday 1 September 2016

அன்னம்...எத்தனை நாளைக்குத்தான்....!

''அன்னம் ...இன்னும் எத்தனை நாளைக்குத்தான் வவுத்தை  காயப்போடுவே! பட்டினி கெடந்தா செத்தவன்  திரும்பவும்  வந்துருவானா...மனச  தேத்திக்க தாயி! அப்பனும் ஆத்தாளும் கெடந்து நொம்பல படுதுகள்ல! சாப்பிடு தாயி!"
.என்றபடியே  கும்பாவை  கொண்டுவந்தாள் வீட்டுக்கு  பெரிய மனுசி .அங்கம்மாள். வடிவேலுவை பெத்த மகராசி.அவள் பேசுகிறபோது தண்டட்டி அங்கிட்டும் இங்கிட்டுமாக  ஆடும்.காது கழுத்துவரை தொங்குகிறது.! ஒவ்வொரு  தண்டட்டியும் ரெண்டு பவுன் .அந்த காலத்தில் ஒரு பவுன் தங்கம் நூறு ரூபாய்தான்.இருந்தாலும்  அரிசிக்கு பஞ்சம். கல்யாணப் பத்திரிகைகளில் விருந்தினர்களுக்கு வேண்டுகோள் வைத்திருப்பார்கள். 'மறக்காமல் தங்கள் ரேஷன் கார்டை  கொண்டு வரவும்!"

அந்த காலத்து கஷ்டம் இந்த காலத்து மனுஷங்களுக்கு அவ்வளவாக தெரியாது.!பிள்ளைகளுக்கு தங்களது கொடிவழியையே சொல்லிக் கொடுக்காத பெரிய மனுசனுங்க  நாட்டு நிலவரத்தையா சொல்லியிருக்க போறானுங்க. போவட்டும் விடுங்க.நம்ம கதைக்கு வருவோம்.

 அங்கம்மாள்  சொன்னதை  அன்ன மயிலு கேட்டபாடில்லை. விட்டத்தை பார்த்தபடியே கண்ணீர் விடுகிறாள்.முத ராத்திரிக்கி   வச்ச முல்லைப்பூ இன்னும் வாடலய  பய மக்கா!.. சாந்தி  கழிஞ்சிருக்கான்னு  படுக்கையை  நோட்டம் கூட  பார்க்க முடியாதபடி  கலைஞ்ச கூந்தலோடு அந்த எடத்திலேயே  உட்கார்ந்து  இருக்காளே பாவி மக.! சந்தோசமா இருந்தியான்னு கூட கேலி பண்ணவும் முடியாம சிறுக்கி  இப்படி சீரழிஞ்சு கெடக்கிறாலேன்னு   வர்றவ போறவளல்லாம் மூக்கை சிந்தி சுவத்தில தடவி கண்ணீர் விட்டுட்டு போறாளுங்க.!

"ஆத்தா...அன்னமயிலு.....இந்த கோலத்திலேயே  இருந்தா  குடும்பத்துக்கு  ஆகாதுடி! எந்திரிச்சி பல்ல வெளக்கு! குளி!  மாத்து  துணிய கட்டிக்க!. காட்டுக்கு போயிருக்கிறவுங்க வந்திருவாங்க. .  ரெண்டாம் நாளு சடங்கு  நடக்கணும். மனச ஆத்திக்கிறத தவிர வேறு வழியில்ல.! எந்திரி!" என்றபடி அன்னத்தை  தூக்க வந்தாள், சின்னாத்தாக்காரி!

எங்கிட்டு  இருந்து அப்படி பலம் வந்துச்சோ ...சின்னாத்தாளின்  நெஞ்சில் தனது  இரண்டு கையையும் வச்சு  முழு வீச்சுடன்"போங்கடி தட்டுவாணிகளா!" என்று ஆங்காரத்துடன்த ள்ளிவிட்டாள் அன்னம்!கல்யாணம் நடந்த அன்னிக்கே தாலி அறுக்கிறோமே  என்கிற ஆங்காரம்.!. சற்று தள்ளிப்போய்  மல்லாக்க விழுகிறாள் சின்னாத்தா. மடேர் என்ற சத்தம்.! தொடர்ந்து  'எந்த சிறுக்கி எக்கேடு கெட்டா எனக்கென்ன?" என்ற சின்னாத்தாளின்  புலம்பல். !அந்த கலவரத்திலும் பெரியமனுஷி  அங்கம்மாவின் கண்களுக்கு  அது தப்பவில்லை. அன்னம் போட்டிருந்த ரவுக்கை  அவசர கோலத்தில் கிடந்தது. உள்பாடியின்  முன்பக்க முடிச்சு அவிழ்ந்திருந்ததை  பார்த்து விட்டாள்.! அந்த காலத்தில் ப்ராவுக்கு அவ்வளவு கிராக்கி இருக்கவில்லை.!. அன்னம் கையை உயர்த்தியபோது முந்தானை  நழுவி.வெள்ளை நிறத்தில் வெயில் தொடாத  பருவ அடையாளத்தை காட்டிவிட்டது.

'கன்னி  கழிஞ்சிருச்சு !" என்று மனசுக்குள் பொருமுகிறாள் ! என்ன பண்றது  விதின்னு சொல்லி கடனை  கழிக்கிற காரியமா  அது?

"என்னாங்கடி...இப்படி  ஆளுக்காளு  மசமசன்னு இருந்தா   காரியம்  நடந்திருமா..எந்திருச்சி  அவ, அவ  வேலைய பாருங்கடி! "என்று ஒருத்தி  சத்தம் போட்ட பிறகுதான்  சிலர் பெரு மூச்சுவிட்டபடி  எழுந்தார்கள்.

எழவு  வீட்டின் அடையாளம்  அழுத்தமாகவே   வடிவேலுவின் வீட்டில்  பதிந்திருந்தது.!

இன்னும் எவ்வளவோ  இருக்கிறது. அடுத்த வாரம்  படிக்கலாம்.


No comments:

Post a Comment