Friday 9 September 2016

காதல்...காமம். (பகுதி ஐந்து.)

தல்லாகுளம் போலீஸ் நிலையம்.
இன்ஸ்பெக்டர் ராம்குமாருக்கு எதிர்பக்கமாக  சுவரோரம் நின்றபடி  வெள்ளியங்கிரி!

மனசுக்குள் டிராக்டர் ஓடினாலும் அதை மறைக்க எவ்வளவோ முயற்சிக்கிறான். முடியவில்லை. வேர்க்கிது.வேட்டியால் துடைத்துக் கொண்டான்.

ராம்குமார் கவனிக்காதது போல் காட்டிக்கொள்கிறார். அவரின் மனசு தங்கராசுவின் தற்கொலைக்கு இவன் எப்படி  காரணமாக இருக்கமுடியும்  என்பதை பலவிதமாக படம் பிடிக்கிறது. ஆனால் அந்த கோணத்தில்  அவரால்  விசாரிக்க முடியாது. அவன் குற்றம்  செய்தான் என்பதற்கு  எதை மோடிவ்  ஆக சொல்லமுடியும்?

''ஏலேய்! ஏன்டா இப்படி வேர்க்கிது.. அடிக்க கிடிக்க மாட்டேன்.உனக்கும் தங்கராசுக்கும்  என்ன பிரச்னை. அவங்கூட அடிக்கடி சண்ட போடுவியாம்ல?"

போட்டு வாங்கப் பார்த்தார்.

"அப்படியெல்லாம் இல்ல சார்! அவங்கூட சண்ட போட்டதில்ல. யாரோ  மூட்டி விட்ருக்காங்க.அத வச்சுக்கிட்டு  நீங்க கேக்கிறிங்க! அவன் எனக்காக எவ்ளோவோ விட்டுக் கொடுத்திருக்கான்.காசு பணம் பாக்கமாட்டான். நல்லவன் சார்.டூர் போனா என்னோட செலவெல்லாம் அவந்தான் பாத்துப்பான்.அவங்க வீட்ல நானும் செல்லப் பிள்ளயாதான் வளந்தேன்."

"நீதான் அவனோட தற்கொலைக்கு  காரணமாக இருந்திருக்கே! ஸ்ட்ராங்  எவிடென்ஸ்  இருக்கு. ஒழுங்கா ஒத்துக்கிட்டேன்னா  சின்னதா கேஸ போட்டு  தண்டனையை  கொறைக்கலாம்.இல்லேன்னா அடி உத  வாங்கி  வீணா ஒடம்ப ........!"

 "சத்தியமா......  எங்காத்தா மேல சத்தியமா சொல்றேன்   எனக்கும் அவன் சாவுக்கும்  சம்பந்தம் இல்ல எஜமான்!"

அவனது பயம் 'எஜமான்' என சொல்ல வைத்ததோ என்னவோ! படக் கென இன்ஸ்பெக்டர் காலில்  விழுகிறான்

'ச்சிய்! நாயே! எந்திரிடா! ஒன்னமாதிரி எத்தன கேடிப்பயலுகள  பாத்திருப்பேன்.
எங்கிட்டேயே ட்ராமா  போடுறியா? அடிச்சு சாவடிச்சு  ஆனை விழுந்தான் பள்ளத்துல வீசிருவேன். என்ன பொருத்தவர  இன்னொரு  சூசைட் கேஸ்.! மொத  ராத்திரி முடிஞ்சதும்  அவன் சூசைட் பண்றதுக்கு முன்னாடி அவன் உங்கூடதான் பேசிருக்கான்.என்ன சொன்னாங்கிறத மறைக்காம  சொல்லிடு!"

இன்ஸ்பெக்டர் ஒரு ஊகத்துலதான் அப்படி கேள்வியை போட்டிருக்கிறார் என்பது  அவனுக்கு தெரியவில்லை. தன்னை எப்படியாவது மாட்டவைக்கப் பார்க்கிறார் என்பது மட்டும் புரிகிறது.

ராம்குமாரும் அதுவரை அவன் மீது சந்தேகப்படவில்லை. அவரும் தனது திறமைகளை காட்டி எப்படியாவது  ஒரு க்ளு கிடைக்காதா என்றுதான் அடிக்கிறார். விசாரிக்கிறார்.

அப்போதுதான் அங்கு வந்த எஸ்.ஐ. சிதம்பரம் ஒரு வெள்ளைத்தாளை நீட்டினார்.

அதைப் படித்ததும்  ராம்குமாருக்கு கடுமையான கோபம்!

வெள்ளியங்கிரிக்கு. ஓங்கி விட்டார் ஒரு உதை!

'இந்த நாயை லீடிங் செயின் போட்டு லாக்கப்பில் தள்ளுய்யா!"

உதை பட்டவனுக்கு  உலகமே  சுற்றுவதைப் போல் இருந்தது.


.

No comments:

Post a Comment