Friday 23 June 2017

காதல்...காமம்.( 39.) எல்லா ஆம்பளையும் ஒரே மாதிரிதானே...

மறுநாள் அன்னத்தின் வீடு..அவளின் அய்யா ராசாங்கம் ஊரில் இருந்து  திரும்பி இருந்தார்.மகளும் பொண்டாட்டியும் நடந்தவைகளை அப்படியே சொன்னார்கள்.

"அந்தப் பய உள்ளூர்தானா?"

' ஆமாம்' என்று  தலை ஆட்டினாள். "எம்பிட்டோ சொல்லியும் கேக்கல .வஞ்சும் பாத்திட்டேன்.செருப்ப எடுத்துக் காட்டியும் எம்பின்னாடியே சுத்தி  வந்தான்." என்றாள் சன்னக்குரலில்!

 சுயநிலை விளக்கம் சுருக்கமாக இருந்தது. அவளுக்கு அய்யனிடம் பயம்.கோபம் வந்தால் இடுப்பு வார் கைக்கு போய்விடுமே!

"பின்னாடி சுத்துன பயபிள்ளைய பத்தி உன் ஆத்தாக்கிட்ட சொன்னியா?"

".............!"

"ஏன்லா சொல்லல.?பயந்திட்டியா...இல்ல அவன் மேல நோக்கமா?"

"அப்பிடியெல்லாம் இல்ல.ஆத்தா ஊர கூட்டி ஒப்பாரி வச்சா எம்மானம்தானே  போகும்னு  பயந்துகிட்டு சொல்லல!"

"இப்ப கச்சேரி( போலீஸ்.) வரை போயிருக்கே!  நீயே டாம்டாம் அடிச்சுட்டியே! கோயில்ல வச்சு மானத்த வாங்கிருக்கான்.இனி கேசு விசாரணை கோர்ட்டுன்னு போகணும். சொந்தக்காரன் பூரா ராசாங்கம் பொட்டப்புள்ளைய  வளர்த்த லட்சண மொகரைய பாருன்னு காரி துப்புவாய்ங்களே! நம்ம  பண்ணக்காரய்ங்க கூட மதிக்கமாட்டாய்ங்க. கம்புக்கூட்டுக்குள்ள கிடக்கிற துண்டை எடுத்து உருமா கட்டிக்கிட்டு எதுக்க வந்து நிப்பாய்ங்க.காரை வீட்டுக்குன்னு இருந்த மானம் மருவாதை எல்லாம் போச்சு. எவன் வாசலேறி  வந்து பொண்ணு கேப்பான்?"

''நடந்தது நடந்து போச்சு. எந்த தப்பைய வச்சு கட்டுனாலும் நேரா நிக்கப்போகுதா என்ன..எதுக்கு வெசனப்பட்டுக்கிட்டு ...எந்திரிங்க.வந்ததும்  வராததுமா நோகனுமா? குளிச்சிட்டு வாங்க. யோசிப்போம்." என்று புருசனை  கிளப்பினாள் செவனம்மா.

அன்னத்துக்கு சற்று ஆறுதல். 'இவ்வளவு ஆனபிறகு எதுக்கு பயப்படனும்? ஆம்பள பயலுக்கு அம்புட்டு திமிர் இருந்தா ஆம்பளையின் திமிர தாங்குற பொம்பளைக்கு எம்பிட்டு சக்தி இருக்கணும்.அவன் அருவா எடுத்தா பொம்பளை அருவாமனைய எடுக்க வேண்டியதுதானே?பார்த்திருவோம். அவனா நானாங்கிறத?" மனசுக்குள் ஒரு முடிவுக்கு வந்துவிட்டாள் அன்னம்.

ராசாங்கம் குளிக்கப் போனார். செவனம்மா அடுப்பங்கரைக்கு சென்றாள். அன்னம் அவளது அறைக்கு போனாள்.

இந்த சிக்கலில் இருந்து வெளியேற அவளுக்கு ஒரே வழிதான் தெரிந்தது. சீக்கிரத்தில் கல்யாணம் .!

 'அப்பன் ஆத்தா பார்த்து வைக்கிற கல்யாணத்தில் பிள்ளை பிறக்காதா என்ன?  ஆம்பளையா ,பார்க்கிறதுக்கு லட்சணமா ,படிச்சவனா இருந்தால் போதும். காதல்  வெங்காயம் என்பதெல்லாம்  நாம்ப  சொல்லிக்கிற பேருதானே? ராத்திரி ஆனா எல்லா ஆம்பளையப் போலத்தானே புருசனா வர்றவனும் கட்டி  புடிக்கப்போறான் ?எல்லா எழவும் அந்த  ராத்திரி நேரத்துக்குத்தானே ஏங்குது? ஊருக்குப் போயி திரும்பி இருக்கிற நம்ப அய்யனுக்கு பொண்ணை பத்துன கவலை இருந்தாலும் பக்கத்தில ஆத்தா கிடகும்போது  பாயாம விட்ருவாரா? அய்யன் குளிச்சிட்டு வரட்டும் .கல்யாணத்தை பண்ணி வை சாமின்னு சொல்லிருவோம்"

இப்படி மனமெல்லாம் கல்யாண நினைவில் இருக்கிறாள் அன்னம்.

உண்மை நிகழ்வை அடிப்படையாக  வைத்து  புனையப்படுகிற  தொடர்.

Saturday 3 June 2017

காதல்...காமம்.( 38.) "மச்சம் சொன்னானா?"

அன்னமயிலுவின் வீடு.

"உன் பேரென்னம்மா?"----இன்ஸ்.ராம்குமார் கேட்கிறார்.

"அன்னமயிலு....!  அன்னம்னு கூப்புடுவாங்க,!"

"வெள்ளிங்கிரிக்கும் உனக்கும் எவ்வளவு நாளா பழக்கம்?"

"அப்படி யாரும் எனக்குப் பழக்கமில்ல.!"

"பழக்கமில்லாமயா கோயில்ல உன் பின்னால வந்தான்?"

"ரோட்டுல போறபோது நாலு நாயி  திரியிது சார் !"

"உன்ன பாத்துதான் வாலாட்டிருக்கு ஒரு நாயி! நீ பிஸ்கட் போட்டதாலதானே  வால ஆட்டிருக்கு?"

"எச்சக்கல நாயி எல்லார்கிட்டயும்தான் வால் ஆட்டும். அந்த நாயை புடிச்சு  முனிசிபாலிட்டில கொடுக்காம என்கிட்டே என்ன சார் விசாரண?"

"என்னம்மா சின்னப் பொண்ணா இருந்திகிட்டு இப்படி வெடுக் வெடுக்குன்னு  பேசுற?"

"எனக்கும் எவனோ ஒரு எடுபட்ட பயலுக்கும் சம்பந்தம் இருக்கிறதா நெனச்சு  கேள்வி கேட்டா என்னத்த சார் சொல்றது?.பொம்பளக பின்னால சுத்துற சண்டியர்கள்ல அந்த தட்டுகெட்ட பயலும் ஒருத்தனா இருக்கலாம்.அவனை அடிச்சு மிதிச்சு நாலு சாத்து சாத்தாம என்கிட்ட என்ன சார் விசாரண? நானென்ன கம்ப்ளெயின்ட் கொடுத்தேனா?"

"நல்லாத்தான்மா பேசுறே? அவன் உன்ன லவ் பண்றதா சொல்றானேம்மா...?"

"அவனைத்தான் கேக்கணும்.அந்தப் பொண்ணும் உன்ன விரும்புதான்னு ஸ்டேசன்லய  கேட்டிருந்தா இம்புட்டு தூரம் வந்திருக்க வேணாமே?"

"நீயும் விரும்புறியாம்! அவன் வேற சாதிங்கிறதால  பயப்படுறியாம்.எங்கள ஒண்ணு சேத்து வையுங்க சார்னு சொல்றான்.இதுக்கு என்னம்மா சொல்றே ?"

"எனக்கு அங்கங்க மச்சம் கெடக்குன்னு சொன்னா அதையும் நம்பி என்ன விசாரிப்பிங்களா? அவன் யாருங்கிறதே எனக்கு தெரியாதுன்னு சொல்றேன். கேள்வி மேல கேள்வியா கேக்கிறீங்களே? .நானும் நாலு எழுத்து படிச்சிருக்கேன். கல்யாணம் ஆகாத ஒரு பொண்ணுகிட்ட இம்புட்டு கேள்வி கேட்டு விசாரணை பண்றது எங்க சொந்த பந்தங்களுக்கு தெரிஞ்சா  அசிங்கமாகிப் போகாதா? என்ன பெத்தவங்க என்ன நெனப்பாங்க."

பட படவென அன்னம் பேசியதை கேட்ட இன்ஸ்.ராம்குமாருக்கு  அவள் உண்மையைத்தான் சொல்கிறாள் என்பது புரிகிறது. ஒரு பெண்ணின் எதிர்காலத்துக்கு வேட்டு வைப்பதாகிவிடும் என்பதை உணர்ந்தவராக  விசாரணையை அத்துடன் நிறுத்திக்கொண்டார்.

அன்னமயிலுவின் அம்மா செவனம்மாவை அழைத்து  ஆறுதலாக பேசினார்.

அதுவரை  அறைக்குள் அழுதுகொண்டு இருந்த செவனம்மாவின் கண்கள் ரத்த சிவப்பேறி இருந்தது.வசதியான பெரிய குடும்பம்.புருசன் வெளியூரில்! அவரின் காதுகளுக்குப் போனால் என்ன ஆகுமோ என்கிற பயம்.

கையெடுத்து கும்பிட்டு அதிகாரியை அனுப்பிவைத்தவள்  மகளை கட்டிப்பிடித்துக் கொண்டு   ஒப்பாரி வைத்தாள் .

உண்மை  நிகழ்வின் அடிப்படையில் புனையபடுகிற தொடர்.