Sunday 17 July 2016

குற்றப்பரம்பரை.( பகுதி.7.)

பொட்டக்காடு.மொட்ட வெயில். அனல் காத்து  முகத்தில்  அறைந்து  அப்புகிறது.காக்கா,குருவி  எதையும்  காணாம்.ஆடிப்பட்டம் தேடி வெதைன்னு பெரிசுக சொல்லிட்டு போயிடிச்சிக.ஆனா கம்மா,காடு   எல்லாம் வரண்டு போயி பாளம் பாளமா வெடிச்சிக் கெடக்கு.! இதில எங்க  தேடி வெதைக்கிறது!

இடுப்புல அழுக்கு வேட்டி.கழுத்துல மந்திரிச்சி கட்டுன வெள்ளித் தாயத்து கருப்பு கயித்தில தொங்குது. காடாவில் வி கழுத்து சட்டை, காட்டுப்புழுதி ஏறிக் கெடக்கு.எண்ணெய பாத்து  மாசக்கணக்கில் இருக்கும்போல தல. துண்டை  மடிச்சி தலைக்கு வச்சு படுத்துக் கெடக்கிறான் சடையன்,எப்ப வேணும்னாலும் போலீஸ் புடிக்கலாம். தேவைப்படுகிற கொலை குற்றவாளி.
மறைஞ்சி திரியிரவன் எவன் வயிறார  சாப்பிடுவான்? இருந்தாலும் மாயக்காள் இவனுக்கு கம்மஞ் சோத்தை பெருசா  உருட்டி முந்தானையில்  மறச்சு வச்சு  வழியில பாக்கிறபோது கொடுப்பா!

இவனுக்கும் அவளுக்கும் கள்ளத்தொடர்பா? அத்து விடப்பட்டவதானே? ஆம்பள  துணை இல்லாம  வாழமுடியுமா? அந்த சொகம் கெடைக்கலேன்னுதானே  புருசன் கூட சண்டை போட்டா? ச்சே...நாக்குல பல்லு போட்டு சொல்லமுடியுமா? மந்தையம்மன் துடிப்பான சாமி.குலையறுத்திற மாட்டாளா?மாயக்காள் நெருப்பு மாதிரி.தனக்கு வாய்த்த  வாழ்க்கை இம்பிட்டுத்தான்னு  ஈரத்துணியை இடுப்புல கட்டிக்கிட்டு வாழ்ந்திட்டிருக்கா. அப்படிப்பட்டவ  சடையனுக்காக  ஏன் கஷ்டப்படனும்?ரகசியமா  பகல்லேயும் ராவுலேயும் ஊருக்கு தெரியாம சந்திக்கணும்? ஊர் நெலவரத்தை அவனுக்கு சொல்லணும்?

விஷயம் இருக்கு! அத அப்பறமா பார்க்கலாம். இப்ப சடையனை  கவனிக்கலாம்.இப்பதான் மூக்கன் அங்க வர்றான்.

'வர்ற வழியெல்லாம் நாய்ங்க தொல்லை.அதான் போக்குக்காட்டிட்டு வர்றதுக்கு இம்பிட்டு நேரமாயிடிச்சி!" என்று  போலீசு நெருக்கடியை சொன்னான்.

'என்னிக்கும் இல்லாம இன்னிக்கி மட்டும் ஏன் நாய்ங்க மோப்பம் பிடிக்கிறது?'

'தலையாரி வீட்லேயே ஒரு தெறமைக்காரன் வேலையை  காட்டிருக்கான் .அஞ்சு பவுன் சங்கிலியாம்.அதான் நாய்ங்க தொல்லை!"

'ஒன்னைய  ஒன்னும் மெரட்டலியே?'

'இந்த மொண்ணைக் கேசுக்கெல்லாம் என்னைய தேட மாட்டானுக. 'என்னடா  உன் வேலைதானான்னு  சும்மா மெரட்டுரதுடன் விட்ருவானுக. அந்த கரட்டு மேட்டு கொலை கேசுக்காகத்தான்  என்னை  நோட்டம் விடுறானுக. தூண்டில்ல  மாட்டுற  புழுன்னு  என்னை  நெனச்சிட்டு  இருக்கானுக,. அதான்  உன்னை பாக்கிறதுக்கு ரொம்பவும் எச்சரிக்கையா  இருக்க வேண்டியிருக்கு சடையா!"

'மூக்கா...ஒன்ன  ஒன்னு  கேப்பேன் .நிசத்தை சொல்லணும்.என்ன தப்பா நெனக்கக்கூடாது.'

குச்சியால் தரையை  கீறிக்கொண்டே  கேட்கிறான்  சடையன்

மூக்கனுக்கு புரியவில்லை.எத மனசில வச்சுக்கிட்டு இப்படி ஒரு கேள்விய  கேக்கிறான்? காட்டிக் கொடுத்திருவோம்னு  நெனக்கிறானா?

'வெளங்கல சடையா... மனசில எதோ  உறுத்துதுன்னா பட்டுன்னு போட்டு   ஒடச்சிடு! ஓடி ஒளிஞ்சிட்டு திரியிறவனுக்கு  இந்த உறுத்தல் பாரமா போயிடும்.இதையும் சேந்து சொமக்க முடியாது..உன் சத்தெல்லாம் இந்த  உறுத்தல்லேயே  கரைஞ்சி  நோஞ்சானாக்கிடும் தயங்காதே. கேட்ரு!"

மூக்கன் நிதானமா உருக்கமாக  கேட்கிறான்.

'ஒனக்கு  செவப்பி  மேல நோக்கமா ....ஆசைப்படுறியா?"

ஊளமூக்கன் இப்படி ஒரு கேள்வியை  சடையனிடம் எதிர்பார்த்திருக்கவில்லை.

------அடுத்து வரும் ஞாயிறு பதில் கிடைக்கும்,
.
.


Sunday 3 July 2016

குற்றப்பரம்பரை.(6.)

'நாந்தாண்டி  மாயி. சத்தம் கித்தம் போட்டு  ஊரை கூட்டிராதே!!" -கையை  வாயிலிருந்து  எடுத்தாள்.

 படபடவென அடித்துக்கொண்ட  சிவப்பியின்  நெஞ்சு துடிப்பு வெளியில்  கேட்டது. வியர்த்து கொட்டுகிறது,அந்த குளிர்ந்த முன்னிரவு நேரத்திலும்.! பதட்டத்திலிருந்து தன்னை முழுமையாக விடுவித்துக் கொள்ள சற்று நேரமாகியது.

'இப்ப எதுக்காக என்னை இப்படி மடக்கிப் போட்டு கொடைய  பாக்கிறே..நீதான்  வேலையத்துப் போய் கெடக்கிறேன்னா என்னையும் அப்படி நெனக்கிறியா?"உடம்பில் இருந்த வைக்கோலை எடுத்தபடியே 'சனியன் இது வேற அரிக்கிது!'

'இல்லடி...அந்த  ஊளமூக்கனுடன்  சினேகமா  இருக்கியாமே..அவன்  கெட்ட பயடி! அவனுக்கு  செவனம்மா .மேல ஒரு கிறுக்கு. குடுத்துணி  வாங்க வக்கத்த அந்த களவாணிப் பயலோட உனக்கென்னடி ஓரப்பார்வை.?"

'அத நீ பாத்தியா? எத நெனச்சு இப்படி சொல்ற? வம்பா வாய்ல பச்சனாவிய தடவிட்டு பேசாதே!'---எரிச்சல் அவளுக்கு.! அதே நேரத்தில்  தெரிஞ்சுதான்  பேசுறாளா.இல்ல வாயப் புடுங்கப்பாக்கிறாளா என்கிற  சந்தேகமும்  இருந்தது.

'உன் வேசாடு  தாங்கல..என்னை என்ன வெவரம் கெட்ட சிறுக்கின்னு  நெனச்சிட்டியா? அப்படியெல்லாம்  சிநேகம் இல்ல...." என்று  மாயக்காளிடம் இருந்து  விடுபடபார்த்தாள்.

அவளோ அவ்வளவு லேசா  விடுவதாக இல்லை.

'சங்கிலி கருப்பன் கோவிலில் உனக்கு தேங்கா சில்ல ஊட்டி விட்டானேடி
..ஏண்டி என்னை கொங்கா சிறுக்கி  கூறு கெட்டு திரியிறான்னு நெனச்சிட்டியா? நீ எக்கேடு கெட்டா எனக்கென்னடி ? அவன்  கெட்டலையிறான்னு  .சொல்றேன்.கேட்டா கேளு. கேக்காட்டி  சீரழி.!ஆத்தா இல்லாதவளுக்கு   பச்சதாபபட்டு சொல்லவந்தா சொரிஞ்சிட்டுபோறேன்னு தள்ளுறே.எனக்கென்ன போச்சு." என்றபடி சிவப்பியை தள்ளிவிட்டு கிளம்பிவிட்டாள்.

சிகப்பிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

மாயக்காள் அறுத்துக்கட்டியவள் என்றாலும்  இன்னொரு ஆம்பளைய அவ தேடி அலையவில்லை.நல்லது பொல்லது தெரிஞ்சு நடக்கிறவ..அவளுக்கு  இதுனால என்ன லாபம் கிடைக்கப்போகுது?நாம்ப மூக்கனுடன்  பழகுறது  எதுக்காக என்பதை சொல்லிவிடலாமா? சொன்னா நம்புவாளா?

சொல்லவேனாம்....என்னதான் ஆவுதுன்னு பார்க்கலாம்னு  வைக்கோல் போரை விட்டு எழுந்தாள்.சுத்திப் பாக்கிறா. ..யாரும் இல்ல..பின்கொசுவத்தை தட்டிவிட்டு வீட்டை நோக்கி நடந்தாள்.

கொட்டத்தில் ஒளிந்திருந்த மாயக்காள்  அவளை பின் தொடர்கிறாள்,
சிவப்பிக்கு தெரியாமல்.!

'நேத்து ஆளான பொட்டச்சி எனக்கே காது குத்தப்பாக்கிறாளா ? பாக்கிறேண்டி  உன் சமத்தை !"என்று  மனசுக்குள் சிரித்தபடி பின் தொடர்ந்தாள்.

மூக்கனும் சிவப்பியும் அன்று சந்திப்பதாக  திட்டமிட்டிருப்பது அவளுக்கு  தெரியும்...தலைமறைவாக திரிகிற சடையன்தான் சொல்லியிருந்தான்.சடையனும் சிவப்பியை  விரும்புகிறான். கொலையை  பண்ணியதாக  தேடப்படுபவன்!.அவனுக்கு ஒவ்வொரு வியாழனும்  சேதி சொல்லிவந்தவள்தான் மாயக்காள்.

அதற்கு காரணமும் இருக்கிறது.

வெளக்குமாறு  விக்கவந்த ஒருத்தியை ஊளமூக்கன் வச்சிருந்தான்!

--இன்னும்  வரும்.