Sunday 3 July 2016

குற்றப்பரம்பரை.(6.)

'நாந்தாண்டி  மாயி. சத்தம் கித்தம் போட்டு  ஊரை கூட்டிராதே!!" -கையை  வாயிலிருந்து  எடுத்தாள்.

 படபடவென அடித்துக்கொண்ட  சிவப்பியின்  நெஞ்சு துடிப்பு வெளியில்  கேட்டது. வியர்த்து கொட்டுகிறது,அந்த குளிர்ந்த முன்னிரவு நேரத்திலும்.! பதட்டத்திலிருந்து தன்னை முழுமையாக விடுவித்துக் கொள்ள சற்று நேரமாகியது.

'இப்ப எதுக்காக என்னை இப்படி மடக்கிப் போட்டு கொடைய  பாக்கிறே..நீதான்  வேலையத்துப் போய் கெடக்கிறேன்னா என்னையும் அப்படி நெனக்கிறியா?"உடம்பில் இருந்த வைக்கோலை எடுத்தபடியே 'சனியன் இது வேற அரிக்கிது!'

'இல்லடி...அந்த  ஊளமூக்கனுடன்  சினேகமா  இருக்கியாமே..அவன்  கெட்ட பயடி! அவனுக்கு  செவனம்மா .மேல ஒரு கிறுக்கு. குடுத்துணி  வாங்க வக்கத்த அந்த களவாணிப் பயலோட உனக்கென்னடி ஓரப்பார்வை.?"

'அத நீ பாத்தியா? எத நெனச்சு இப்படி சொல்ற? வம்பா வாய்ல பச்சனாவிய தடவிட்டு பேசாதே!'---எரிச்சல் அவளுக்கு.! அதே நேரத்தில்  தெரிஞ்சுதான்  பேசுறாளா.இல்ல வாயப் புடுங்கப்பாக்கிறாளா என்கிற  சந்தேகமும்  இருந்தது.

'உன் வேசாடு  தாங்கல..என்னை என்ன வெவரம் கெட்ட சிறுக்கின்னு  நெனச்சிட்டியா? அப்படியெல்லாம்  சிநேகம் இல்ல...." என்று  மாயக்காளிடம் இருந்து  விடுபடபார்த்தாள்.

அவளோ அவ்வளவு லேசா  விடுவதாக இல்லை.

'சங்கிலி கருப்பன் கோவிலில் உனக்கு தேங்கா சில்ல ஊட்டி விட்டானேடி
..ஏண்டி என்னை கொங்கா சிறுக்கி  கூறு கெட்டு திரியிறான்னு நெனச்சிட்டியா? நீ எக்கேடு கெட்டா எனக்கென்னடி ? அவன்  கெட்டலையிறான்னு  .சொல்றேன்.கேட்டா கேளு. கேக்காட்டி  சீரழி.!ஆத்தா இல்லாதவளுக்கு   பச்சதாபபட்டு சொல்லவந்தா சொரிஞ்சிட்டுபோறேன்னு தள்ளுறே.எனக்கென்ன போச்சு." என்றபடி சிவப்பியை தள்ளிவிட்டு கிளம்பிவிட்டாள்.

சிகப்பிக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

மாயக்காள் அறுத்துக்கட்டியவள் என்றாலும்  இன்னொரு ஆம்பளைய அவ தேடி அலையவில்லை.நல்லது பொல்லது தெரிஞ்சு நடக்கிறவ..அவளுக்கு  இதுனால என்ன லாபம் கிடைக்கப்போகுது?நாம்ப மூக்கனுடன்  பழகுறது  எதுக்காக என்பதை சொல்லிவிடலாமா? சொன்னா நம்புவாளா?

சொல்லவேனாம்....என்னதான் ஆவுதுன்னு பார்க்கலாம்னு  வைக்கோல் போரை விட்டு எழுந்தாள்.சுத்திப் பாக்கிறா. ..யாரும் இல்ல..பின்கொசுவத்தை தட்டிவிட்டு வீட்டை நோக்கி நடந்தாள்.

கொட்டத்தில் ஒளிந்திருந்த மாயக்காள்  அவளை பின் தொடர்கிறாள்,
சிவப்பிக்கு தெரியாமல்.!

'நேத்து ஆளான பொட்டச்சி எனக்கே காது குத்தப்பாக்கிறாளா ? பாக்கிறேண்டி  உன் சமத்தை !"என்று  மனசுக்குள் சிரித்தபடி பின் தொடர்ந்தாள்.

மூக்கனும் சிவப்பியும் அன்று சந்திப்பதாக  திட்டமிட்டிருப்பது அவளுக்கு  தெரியும்...தலைமறைவாக திரிகிற சடையன்தான் சொல்லியிருந்தான்.சடையனும் சிவப்பியை  விரும்புகிறான். கொலையை  பண்ணியதாக  தேடப்படுபவன்!.அவனுக்கு ஒவ்வொரு வியாழனும்  சேதி சொல்லிவந்தவள்தான் மாயக்காள்.

அதற்கு காரணமும் இருக்கிறது.

வெளக்குமாறு  விக்கவந்த ஒருத்தியை ஊளமூக்கன் வச்சிருந்தான்!

--இன்னும்  வரும்.



No comments:

Post a Comment