Sunday 6 November 2016

காதல்...காமம்..(பகுதி 11.)

தயை கூர்ந்து இந்த குரங்கை மன்னித்து விடுங்கள். இது நாள் வரை தட்டச்சு செய்தவரின் பிழையினால் கேரக்டர்களின் பெயர்கள் மாறி விட்டன.அதை தவிர்க்க நானே தட்டச்சு செய்ய தொடங்கி இருக்கிறேன்.
தங்கராசு.;வடிவேலு,மாயக்காளின் மகன்.
அன்ன மயிலு :தங்கராசுவின் மனைவி.
அங்கம்மா:வடிவேலுவின் அம்மா,
செவனம்மா:அன்னமயிலுவின் அம்மா.
அழகிரி என்கிற வெள்ளியங்கிரி: தங்கராசுவின் நண்பன்.
ராம்குமார்: இன்ஸ்பெக்டர்.சிதம்பரம் :சப்-இன்ஸ்பெக்டர்
செங்கமலம்:போலீஸ் ஆள்.
----------------------------------------------------------------------------------------------------------------------
 மதுரை  வண்டியூர் தெப்பக்குளத்தில் புது மாப்பிள்ளை தங்கராசு தற்கொலை செய்து கொள்கிறான்.ஏன் செய்துகொண்டான் என்பதுதான் முன்கதை சுருக்கம்
---------------------------------------------------------------------------------------------------------------
இன்ஸ்பெக்டர் ராம்குமார் வந்ததும் வடிவேலு மெதுவாக எழுந்து வரவேற்றார்.மாயக்காள் முந்தானையை இழுத்துப் போர்த்திக்கொண்டு உள்ளே சென்று விட்டாள். கிழவி அங்கம்மா மட்டும் காலை நீட்டி வெத்திலைய  இடித்தபடி...."போனதுதான் போனான் போக்கத்த பய. இப்படி  வம்பு தும்புலையா இழுத்து விட்டிருக்கணும். சென்ம சனி"என்று சத்தமாகவே சொன்னாள்.

"எதுக்கு இப்படி சலிச்சு புளிச்சிக்கிரே ! சும்மா கெட ஆத்தா!"

அம்மாவை வைதபடி  அதிகாரியை தனி அறைக்கு கூட்டிப்போனார்
வ டிவேலு. அறைக்கதவை  சாத்திக்கொண்டார்..

அன்னமயிலு  இருந்த அறைக்கதவு திறக்கிறது. அங்கம்மாளின் அருகில் வந்து அமர்ந்து கொண்டாள். உள்ளே பேசுவது ஏதாவது காதில் விழாதா?

"என்னத்தா..உம் புருசனை சனின்னு வஞ்சதுக்கு கோபமா?" கன்னத்தை தடவிவிட்டபடி கேட்கிறது கிழவி.

"கோவப்பட்டு என்ன ஆகப் போகுது?களைன்னு அறுக்கப்போனா பாம்பு வந்து கொத்துது. நானும் நாலு பேரைப்போல சோடி போட்டுக்கிட்டு புருசனோட  போகணும்னுதான் ஆசைப்பட்டேன். பாதகத்திக்கு அமையலியே ஆத்தா ,அமையலியே! என்ன பாவம் செஞ்சேனோ தாலி அறுத்து முண்டச்சியா  நிக்கிறேன்! தனி மரமா நிக்கிற வயசா எனக்கு? சொல்லுத்தா! மாரு சொறக்காம ...மடிப்பிள்ளை இல்லாம மலடியா வாழணும்கிறது விதியா?"

கண்ணீர் பொலபொலவென வடிகிறது அன்னத்துக்கு.

கிழவிக்கு நெஞ்சு படபடக்கிறது. அன்னத்தை அப்படியே தன் மடியில் சாய்த்துக் கொள்கிறாள்.

''மருத மீனாச்சி...உன்னோட சீமையில இப்படி ஒரு அக்கிரமம் நடக்கலாமா?கட்டுன மறுநாளே தாலியை அறுத்து விட்டுட்டியே...நீயெல்லாம் ஒரு சாமின்னு இத்தனை நாளா கும்பிட்டதுக்கு இதான் பலனா?"

கிழவியினால் இப்படித்தான் ஆறுதல் சொல்ல முடியும்!

அறைக்குள் சென்ற இன்ஸ்பெக்டர் ராம்குமாரும் வடிவேலுவும் அரைமணி நேரத்துக்குப் பின் கதவைத் திறந்தார்கள்.

வடிவேலு முகத்தில் இனம் புரியாத சோகம். கை குவித்து அதிகாரியை அனுப்பிவைத்தார். எதுவும் பேசாமல் தோமுத்ரா கட்டிலில் ஏறி சாய்ந்து படுத்துவிட்டார்.

''என்னங்க மாமா சொன்னாரு...இன்ஸ்பெக்டரு?"

கிழவியின் மடியில் படுத்திருந்த அன்னம் விட்டத்தை பார்த்தபடியே கேட்டாள்.
இனி அடுத்தவாரம். உண்மைச்சம்பவத்தை அடிப்படையாக வைத்து எழுதப்படும் சிறு தொடர்.

No comments:

Post a Comment