Thursday 10 November 2016

காதல்...காமம்.( 12.)

"என்னத்த சொன்னாரு...எல்லாம் பழைய குப்பைதான்" என்றபடியே திருப்பி  படுத்துவிட்டார்  வடிவேலு.

"என்னமோ பண்ணுங்க. என் வாழ்க்கை இப்படித்தான் சிரிப்பா சிரிச்சி  சீரழியனும்னு எழுதி வெச்சிருக்கு. அத மனுசப்பயலால மாத்த முடியுமா? என் நெஞ்சுக்குள்ள கிடக்கிற தீயை அவ்வளவு சீக்கிரமா  அணைச்சிரமுடியுமா ..அதுக்கு நான்தான் தண்ணிய ஊத்தணும்!"

வெடுக்கென்று சொல்லிவிட்டு அவளின் ரூமுக்குள் சென்று கதவை தாழ் போட்டுக் கொண்டாள்.

"பாத்தியாடி ...மாயி. அந்த குட்டி எப்படி சிலுப்பிட்டு போகுதுன்னு! மட்டு மரியாதை தேஞ்சுக் கிட்டே போகுதுடி!" என்று அங்கு வந்த மாயக்காளிடம் சொல்ல , அவளது குறையை சொல்ல ஆரம்பிக்கிறாள் மெதுவான குரலில்!

"இன்னிக்கி வெள்ளென எந்திரிச்சதும்  அந்த சிறுக்கி பச்ச மெளகாயை அப்படியே கடிச்சி தின்னுட்டு தண்ணிய குடிக்கிறா! கண்ணுல இருந்து அம்புட்டு தண்ணி கொட்டுது. பதறிப்போயி பாவி மகளே ஏண்டி இப்படி பண்றேன்னா  பதிலுக்கு வாயாடுரா! நீ ஆண்டு அனுபவிச்சிட்டவ.போயி  அடுப்படியிலே கெடன்னு சொல்றா! இந்த கொடுமைய எங்கே போயி சொல்வேன்?"

"சரி..அந்த புள்ள காதுல விழுந்துரபோகுது.. போயி .சொம்பு நெறய தண்ணி  கொண்டு வா! வயிறாவது குளிரட்டும்!" எழுந்து உட்கார்ந்து கொண்டார்.

தல்லாகுளம் போலீஸ் ஸ்டேஷனில்.....

அழகிரி என்கிற வெள்ளிங்கிரி  கையை கட்டிக் கொண்டு நிற்கிறான்.

"சொல்லு ..உனக்கும் தங்கராசுக்கும் எப்படி பழக்கம்? அப்படியே  சினிமா கதை  மாதிரி சொல்லணும். அதுக்காக உண்மையை மறச்சி பொய்யை சொல்லக்கூடாது. ஆரம்பி?"

"பொய் சொல்லி  என்ன சார் ஆகப்போகுது? " என்று சொல்ல ஆரம்பித்தான்.

"பக்கத்துபக்க வீடு ! காலேஜ் வரை ஒன்னாதான் படிச்சோம். அமெரிக்கன் காலேஜ்ல படிக்கிறப்ப அடிக்கடி குமுளிக்கு போவோம்.     எனக்கு இழுவை  பழக்கம்......"

இடை மறித்த இன்ஸ்பெக்டர் ராம்குமார் " கஞ்சான்னு தெளிவா சொல்லு" என்று திருத்தினார். " சரி  ...அது மட்டும்தானா?  அப்ப   பொம்பள பழக்கம் இருக்கணுமே...உன் நண்பனுக்கும் அனுபவம் உண்டா?"

"அவனுக்கு எந்த பழக்கமும் இல்ல சார். நான்தான் ......"

"வேற?''

"நான் காதலிச்ச பொண்ணு மேல அவனுக்கும் ஆசை இருந்தது எனக்கு தெரியாது. தங்கராசுவை அவளும் காதலிச்சா!"

"என்னடா  குழப்புற...?"

"நான்தான் அவள லவ் பண்ணுனேன். அவ ஜாடை கூட காட்டல! ஒரு நாள் சாமி கும்பிட மீனாட்சியம்மன் கோவிலுக்கு போனேன்! பொற்றாமரை குளம் படியில் ரெண்டு பேரும் உக்காந்திருந்தாங்க.பேசுனதை கேட்டேன்.

பிளாஷ்பேக்....
-------------------

"வீட்டில சொல்லிட்டியா பொன்னி? எங்க வீட்டில யாரும் எதிர்ப்பு சொல்லமாட்டாங்க!"

"எங்க வீட்டில பச்சை விளக்கு காட்டியாச்சு. நோ அப்ஜெக்சன்  ."

"அப்பறம் என்ன  சினிமாவுக்கு  வெளியூருக்குன்னு  கெளம்பவேண்டியதுதான்"

"பெறகு  நேரா 'அதுக்கும்' போகலாம்னு கேப்பியே? அதெல்லாம் வேணாம்பா! சந்திச்சமா பேசுனமான்னு  இருப்போம்.வேணும்னா சினிமாவுக்கு போகலாம். இங்கிலீஷ் படம் மட்டும் வேணாம். கையை வெச்சிட்டு சும்மா இருக்க மாட்டே?"

"என்ன பொன்னி இப்படி வாருறே...பிக்காளிப்பயன்னு நெனச்சிட்டியா? எங்கப்பா அம்மா என்னை பொறுக்கியா வளக்கல!"

தலை கவிழ்ந்தபடி சொன்னான்.

"ராஜ்... கழுத்து நெரிச்ச கோழி மாதிரி தொங்கிட்ட. ஆம்பள  தலை கவுரக் கூடாது. சரியா? வா கெளம்பலாம்." இருவரும்  எழுந்து புறப்பட்டார்கள்.

இனி அடுத்தவாரம். இது உண்மை நிகழ்வின் சிறு தொகுப்பு.
--------------------------------------------------------------------                                                                                                                                                             

No comments:

Post a Comment