Wednesday 22 November 2017

காதல்.,காமம்.( 47.) வெத்தல போட்ட ஷோக்குல

                                        "வாங்க...வாங்க..!" வெத்திலை மணக்க செவனம்மா  வரவேற்கிறாள் மாயக்காளை! "என்ன சம்பந்தியம்மா இம்புட்டு தூரம்.? மருமகென இங்ஙன வெரசா  அனுப்பிட்டு நீங்க  சாவகாசமா வர்றிக"? எனக் கேட்டதும் மாயக்காளுக்கு  திக்கென்றாகிவிட்டது.
                          "தங்கராசு உள்ளயா இருக்கான்?"
                          " நீங்க மொதல்ல உள்ள வாங்க! " என்று சம்பந்தியம்மாவை பட்டாசலைக்கு அழைத்துச்சென்றாள் செவனு.!
                           ஊஞ்சலில் உட்கார்ந்திருக்கிறான் தங்கராசு.சற்று தள்ளி நிற்கிறாள் அன்னமயிலு.இருவரிடமும்  எவ்வித பதட்டமும் இல்லை.                       "என்னத்தா...அய்யா சேதி எதுவும் சொல்லி அனுப்பி இருக்காரா?"
                      "இல்லப்பே..நான் சும்மாதான் மருமவள பாக்கனும்னு வந்தேன்.நீ எப்பய்யா வந்தே?"
                       "நீங்க பேசிட்டிருங்க..நான் காப்பித்தண்ணி ஆத்தியாறேன்?" என்று  செவனம்மா அடுப்படிக்கு சென்றதும் சற்று தள்ளி நின்று கொண்டிருந்த அன்னமயிலு " வாங்கத்தே.." என்றபடி அருகில் வந்து உட்கார்ந்து விட்டாள்.
கொண்டுவந்திருந்த மல்லிகைச்சரம் அவளது சடையில் அமர்ந்து கொண்டது. மதுரை மல்லிகைக்கு தனி மணம். அது பிரம்மச்சாரியையும் சபலப் படுத்திவிடும். மேனகையிடம் விசுவாமித்திரன் மயங்கியதற்கு மலரின் மணம்
கூட ஒரு காரணமாக இருக்கலாம்.வனத்தில் பலவகையான மலர்கள் பூத்துக்  குலுங்குமல்லவா!
                   "அன்னம்...அத்தான் என்ன சொன்னான்? ரொம்ப நேரமா பேசின மாதிரி தெரியிதே ? பேசனும்னா வீட்லதான் போன் இருக்கே ..பேசுத்தா..அதுல பேசு.நாள் முச்சூடும்பேசுங்க.இப்படிசம்பந்தகார வீட்டுக்கு மாப்ளையா வரப்போறவன் தாலி கட்டுறதுக்கு முன்னாடியே வந்து போனா ஊர் சிறுக்கிக  நாலு பேரு நாலு விதமா பேசுவாளுக.ஊர் கண்ணு படும்தா! என்ன .அத்தக்காரி  இப்பவே இப்படி சொல்றாளேன்னு பாக்கிறியா? உங்க மாமன் நாமெல்லாம் படப்பு பக்கம் ஒதுங்கலியா..அவங்களையும் அப்படி பழகசொல்லுன்னுதான் இங்க என்ன அனுப்புனாரு.எங்க காலம் வேற அன்னம். வெலகி நின்னுதான் பேசுவோம். இப்ப அப்படியா?  இந்த சினிமா வந்துதான்  கெடுத்து வெச்சிருக்கு. 
 அந்த "ஒன்ன"தவிர எல்லாத்தயுமே காட்டுறான் கொள்ளியில போறவன்."
             இப்படி அத்த சொன்ன அறிவுரைகளை எல்லாம் அன்னத்தின் காதுகள் மட்டுமே கேட்டுவிட்டு வெளியே தள்ளிவிட்டன.அத்த அந்த காலத்து மனுஷி  அப்படித்தான் பேசுவாள். சரியாக காப்பி வந்தது. மூணு    லோட்டா.ஒரு சொம்பு நிறைய கருப்பட்டி காப்பி.தனி மணம். அதில் கருப்பட்டி வாசம் கலந்திருந்தது.
                "அத்தாச்சி!  மருமகனுக்கும் மருமகளுக்கும் உங்க கையால ஊத்திக் கொடுங்க.நீங்களும் ஊத்திக்கிங்க." என்று செவனம்மா  ஒதுங்கிவிட்டாள்.
              "ஒங்களுக்கு? நீங்க காப்பித்தண்ணி குடிக்கிறதில்லயா? இன்னொரு லோட்டாவ எடுத்தாங்களேன்?"மாயக்காள் சொன்னதை செவனம்மா கேட்கவில்லை.
               "வெத்தல போட்ருக்கன் அத்தாட்சி! வாய்க்கு ருசியா இருக்காது"
                மாயக்காளின் பார்வை மறுபடியும் அன்னம் மீது.!
               "ஏத்தா மருமவளே! நீ வெத்தல போடுவியாம்மா?"
               தலையை இடது வலமாக திருப்பி இல்லை என்பதை உணர்த்தினாள்.
               அங்கு மகனும் இருக்கிறான் என்பதை மறந்தவளாக மாயக்காள் பேசிவிட்டாள்."தப்பும்மா...புருசன் ஆசையா இருக்கானா இல்லயாங்கிறத வாய் செவப்பு காட்டிரும்தா.!ஒடம்புக்கும் நல்லதும்மா!  ஆம்பள ஆசயும் அதிகமாயிரும்."
               "க்ளுக்"கென சிரித்த அன்னம் "அத்தக்கி அனுபவம் பேசுது" என்றதும் அங்கிருந்த எல்லோருக்கும் சிரிப்பு தாங்கவில்லை.
                   அப்போது போன் மணியும் சிரிப்பில் கலந்து கொண்டது.
                   அன்னம்தான் ரிசிவரை எடுத்து ஹலோ சொன்னாள்.
( உண்மை நிகழ்வின் கற்பனை தொடர்,)


No comments:

Post a Comment