Tuesday 9 May 2017

காதல்...காமம்.( 35.) நண்பனா துரோகியா?

"ஏப்பா ராசு...இம்புட்டு நாளாகியும் குத்தவாளியை கண்டுபிடிக்க முடியலியா? நல்லா தூங்கியே மாசக் கணக்காச்சுப்பா.! செல்லத்தாயியை   வச்சுக்கிட்ட நாள்லயும் நிம்மதி இல்ல. செத்து தொலஞ்ச பெறகும் நிம்மதி இல்ல! உனக்காவது  நல்லது நடக்கட்டுமேன்னு நெனச்சா அந்த புள்ள  நாண்டு  கிட்டு செத்திருச்சி.என்ன பாவம் செஞ்சேனோ அது உன்னையும்  சேத்து அலக்கழிக்கிது!"

மகன் தங்கராசுவின் கைகளை பிடித்துக்கொண்டு கலங்குகிறார் வடிவேலு.

 தூணில் சாய்ந்திருந்தாள் மாயக்காள் .வெத்திலை போட்டு வாரக்கணக்காகி  இருக்கலாம்.உதடுகள் வரண்டு போயிருந்தன.வெடிப்புகள் தெரிந்தது.

மகனை அருகில் வருமாறு கையால் ஜாடை காட்டினாள்!

"அய்யா ராசு..போன புள்ளைய நெனச்சிக்கிட்டு மருகிட்டு நிக்கிறதில எந்த பிரயோசனமும் இல்ல.தாய பிரிஞ்ச கோழிக் குஞ்சுக மாதிரி தெருவில நாங்க  அலைஞ்சுகிட்டு இருக்கோம்.கள்ளப்பிராந்து மாதிரி எமன்  எப்ப தூக்கிட்டுப் போவானோ....  தெரியலய்யா. நாங்க  நல்லது கெட்டத பாத்தாச்சு. நீ வம்சத்து ஒத்த  வாரிசு.பல்கி பெருகனும்யா! அவ நெனப்பிலேயே கரிகிடாதே சாமி!"

"ஆத்தா ...என்னத்த பேசுறே? "

"அந்த பொன்னியையே நெனச்சிக்கிட்டு கிடக்காதே சாமின்னு சொல்றன்யா.! வாழ கொடுத்து  வைக்கல அவளுக்குன்னு தண்ணிய குடிச்சிட்டு தாகத்த தீர்த்துக்கய்யா.!"

"ராசு...ஆத்தா சொல்றதில என்னய்யா தப்பு? உனக்குன்னு எவளோ பொறந்து  காத்திருக்கா.அதனாலதான் பொன்னிக்கு வாழ கொடுத்து வைக்கலன்கிறேன் . பொன்னிய கட்டி வைக்கனும்கிறதுக்குத்தானே வீடு தேடி போய் பேசினோம். என்னாச்சு?லட்சுமி  வீடு மாறி போயிட்டா.இவ மேல போய் சேர்ந்துட்டா.வீடு  மாறிப்போன லட்சுமி உன்னைத்தேடி கட்டாயம்  வருவா."

மகனின் தலையை பாசமுடன் தடவிக் கொடுத்தாள்.

"அப்பா ..ஆத்தா நல்லாருக்கிங்களா " என்று கேட்டபடியே வந்தான் வெள்ளிங்கிரி.

இவனை பார்க்க விரும்பாத தங்கராசு அம்மாவின் கைகளிலிருந்து  விடுவித்துக்கொண்டு  வீட்டுக்குள் போய் விட்டான்.

தங்கராசுக்கும் வெள்ளிங்கிரிக்கும் பேச்சு வார்த்தை இல்லை என்பது அந்த  கிழ தம்பதிக்கு தெரியாது.

"நல்லாருக்கம்பா! உன் சிநேகிதனுக்கு நல்லதா நாலு வார்த்தை சொல்லி  மனச மாத்தப் பாருப்பா! பொன்னிய நினைச்சு மருகிட்டு திரியிறான். "

"விடுங்கப்பா..கஞ்சி போட்ட சட்டை எத்தனை நேரத்துக்கு வெறப்பா இருக்கமுடியும்? அவன நான் பார்த்துக்கிறேன். செத்துப்போன செல்லத்தாயின் புருசன் அடைக்கன் இன்னொரு கல்யாணம் கட்டிக்கிட்டு ஆந்திராவ்ல இருக்கானாம் .நம்ம ஊர் போலீஸ் போயிருக்கு. எப்படியும் பிடிச்சாந்திருவோம்னு  இன்ஸ்பெக்டர் உங்ககிட்ட சொல்லச்சொன்னாரு. அதான்  வந்தேன். பயப்படாம இருங்கப்பான்னு சொல்லலாம்னு!"

"நல்ல சேதி சொன்னப்பா கிரி!தலையில இருந்த பாறைய எறக்கி வச்ச மாதிரி இருக்கு!" என்ற வடிவேலு எழுந்து வந்து மாயக்காளின் பக்கமாக உட்கார்ந்தார்.

"ஏ புள்ள.! சந்தோஷமா இருக்குளா..! வண்டியூர் மாரியம்மன் கோவிலுக்கு  போய் சாமிய கும்பிட்டு வந்திரலாம். எந்திரிச்சி குளிச்சிட்டு வா.  ஒரு எட்டு  போயிட்டு வந்துருவோம்."என்று சொன்னதும் மாயக்காளுக்கு கண்ணீரை  அடக்க முடியவில்லை.

அவரும் அவளும் ஒன்றாக எழுந்தார்கள்.

அதே நேரம் இன்ஸ்பெக்டர் ராம்குமார், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜதுரை  இருவரும் ஒன்றாக உள்ளே நுழைந்தார்கள்.

இவர்கள் எதற்காக இப்போது இங்கு வரவேண்டும்?

கும்பிட்டபடி வரவேற்கிறார் வடிவேலு. மாயக்காளுக்கு நெஞ்சு படபடக்கிறது.

"என்னங்கய்யா ..புதுசா ஏதாவது சொல்ல வந்திருக்கிங்களா?" என்று கேட்டார்  வடிவேலு.

"தங்கராசு வீட்லதானே இருக்காரு? அவரை ஸ்டேஷன் வரை கூட்டிட்டு போகவேண்டியது இருக்கு? அவரை  கூப்பிடுறீங்களா?" என்று சொல்லி  முடிக்க  "நானே வரேன் சார்!" என்று அறைக்குள் இருந்து வந்தான் தங்கராசு.

எதையும் கண்டு கொள்ளாமல் நின்றிருந்தான் வெள்ளிங்கிரி.

ஆனால் இன்ஸ்பெக்டர் ராம்குமார்  அவனிடம் " தேங்க்ஸ்பா!" என்று சொன்னது தங்கராசுவின் காதில்  விழாமல் இல்லை.!

உண்மை  சம்பவத்தின்  அடிப்படையில்  புனையப்படுகிற  தொடர்.

 

No comments:

Post a Comment