Tuesday 3 May 2016

குற்றப்பரம்பரை. ( பகுதி.3.)

அந்த  கிராமத்து பொம்பளைக பெரும்பாலும்  ராத்திரி நேரம்தான்  கம்மாக்கரை  பக்கமாக  ஒதுங்குவார்கள்.அதுவும்  நாலஞ்சு பொண்டுக  சேர்ந்துதான் .போவார்கள்..வழக்கம் போல  ஊர்வம்புகளுக்கு பஞ்சம்   இருக்காது. அதென்னமோ  அடுத்த வீட்டில் அம்மிக்கல்லு சத்தம் கேட்டாலும்  அதுக்கு ஒரு கதை இருக்கும்.உறவு முறை சொல்லித்தான் வம்படிப்பார்கள்.

" அயித்தே..அந்த பேராவூரணிக்காரிக்கு கண்ணாலம்  கட்டி ஒரு மாசம் கூட  ஆகல..புருசன் முத்தையா அப்படி ஆடுறானாம்.வயலுக்கு போற பய மத்தியானமே  ஊட்டுக்கு வந்திரானாம்.அவனோட  ஆத்தா அப்படி இப்படி   சொல்லி பொலம்புரா! ஊட்டுல பெருசுக இருக்கேங்கிற வெவஸ்தை கூடவா இல்லாமப் போகும்?

"வயசில  அவளும் புருசனை கைக்குள்ள வச்சிருந்தவதானே? நாளைக்கு  உனக்கும் கண்ணாலம் நடந்தா அரமுடியை போட்டுமூடிக்குவியா?அவன் தொட்டதுமே அவுத்துப் போட்டிற மாட்டே? வயசுல பண்ணாததை கூனு  விழுந்து  பண்ணிவியாக்கும்,வாடி  சும்மா!  இப்பவே நெஞ்சு முந்தானிய விட்டு திமிரிக்கிட்டிருக்குது..."என்று அயித்த உறவு கொண்டாடும் அரைக்கிழவி சொன்னதும் ஆளாளுக்கு இருட்டுக்குள் புதர் மறைவாக உட்கார்ந்து விட்டார்கள்.. அவர்களில் ஒருத்திதான்  மாயக்காள்.

எப்போதும்போல  அன்றும் ஆள் சேர்ந்துதான்  வயக்காட்டு பக்கமாக  ஒதுங்கினார்கள். மாயக்காள் கொண்டைக்குள்  சொருகியிருந்த  மல்லிகை  அந்த இருட்டிலும் அவளை அடையாளம் காட்டியது. அவளுக்குத்தான்  மல்லிகைக் கொடி குடிசைக்கு பின்பக்கம் இருந்தது.

'என்னடி வெவரம் கெட்ட சிறுக்கியா இருக்கே. உன் வீட்டில மல்லிக்கொடி இருக்குங்கிறது ஊருக்கெல்லாம் தெரியணுமாக்கும்?  நாண்டுக்கிட்டு  செத்தவளுக ஆவியா அலையிற நேரம்டி இது.பூ வாசம்னா பேய்களுக்கு  ரொம்பவும் புடிக்கும் " என்று ஒருத்தி  பயத்தை  கூட்டினாள்.

மாயக்காளா மசங்குவா? "அடி போங்கடி பொசகெட்ட சிறுக்கிகளா?பத்து பேய் வந்தாலும் ஒத்த சிறுக்கியா நின்னு  ஆஞ்சுபுடமாட்டேன்.வந்தா என்கிட்டதானே  வரும்,வரட்டும்  பாத்துக்கிறேன்"என்று  வழக்கத்துக்கு மாறாக  கம்மாய் கரை பக்கமாக ஒதுங்கினாள்.மத்தவளுக்கெல்லாம் பயம்  கவ்விக் கொண்டது. ஆம்பளை,பொம்பளைன்னு தூக்குல தொங்குவது  அந்த  ஆலமரத்தில்தான்! அதனால் பகல் நேரத்திலும்  ஆள் அரவம் அவ்வளவாக இருக்காது,

மாயக்காள் ரொம்பவும் பழக்கப்பட்டவள் போல  ஆலமரத்துப் பக்கமாக  ஒதுங்கி  எல்லா பக்கமும் பார்த்தாள்..

கனைக்கிற சத்தம் மெதுவாக கேட்டது.

பதிலுக்கு இவளும் செருமினாள்.

காய்ந்த சருகுகள் மீது பாம்பு  ஊர்கிற மாதிரி   சத்தம். அந்த  இருட்டிலும் அவளுக்கு  அடையாளம் தெரிந்தது.

மடியில் சுருட்டி மறைத்து எடுத்து வந்திருந்த கருப்பட்டி பணியாரங்களை  அந்த ஆளிடம் கொடுத்தாள்.

மாயக்காளும் அந்த ஆளும் எதிர் எதிராக உட்கார்ந்தனர்.

'ஏத்தா..எத்தன ஆபத்து  சுத்தி  வளச்சி நிக்கிதுங்கிறது  தெரிஞ்சும்  இப்படி வர்றியம்மா...சிக்குனா ஒன்னையும்ல இந்த  ஊரு பேசும்!  நான் ஆம்பள.எப்படியும்  இருந்திருவேன்   நீ பொட்டச்சி. அடுத்த ஊட்டுக்கு வாழப்போறவ,இந்த குத்தவாளிய ஒவ்வொரு  விசாழக்கெளமையும்தேடி  வந்து  ஊரு நெலவரத்த சொல்றியம்மா." ரொம்பவும் மெதுவான குரலில்தான் பேசுகிறான்.அவளும் அதே மாதிரி  பேசுகிறாள்.காற்று கூட  கடத்திச்செல்ல முடியாது.அவ்வளவு சன்னக்குரலில்!

'அண்ணே..கூடப் பொறந்தாதான்  உறவா? என்னை வேத்தாளுன்னு  நெனைச்சுப் போடாதே...இப்பவும் கேக்கிறேன்..செவப்பியும் உன்ன  மனசாரத்தான்  விரும்புனாளா? மறைக்காம சொல்லு.!"

சற்று நேரம் கழித்துதான்  பதில் வந்தது.

''மொதல்ல என்னை  கொலைகாரன்னு  நீ நம்புறியா,அத சொல்லும்மா!"என்று கேட்டது  அந்த  ஆண்குரல்.

மாயக்காளுக்கு  என்ன  சொல்றதுன்னு  புரியல.

அடுத்த  புதன் கிழமை  அவனுக்கு  உண்மை தெரியும்.

உங்களால்  யஊகிக்க முடிகிறதா?

No comments:

Post a Comment