Thursday 13 April 2017

காதல்...காமம்.( 33.) 'பொன்னி தற்கொலை பண்ணிக்கல"

மதுரை பெரிய ஆஸ்பத்திரியை அந்த காலத்தில் .எர்ஸ்கின் ஆஸ்பத்திரி என்று சொல்வார்கள்.தற்போது அது ராஜாஜி மருத்துவமனை.ஆனாலும் ஜனங்களுக்கு இன்றும் பெரிய ஆஸ்பத்திரிதான்!

.சிவனாண்டியின் கையில் எட்டு தையல் .வெட்டு ஆழமாக இருந்ததால் புண் இன்னும் ஆறவில்லை.

"ஒத்தப்புள்ளன்னு ஊட்டி ஊட்டி வளத்தில்ல. அதாண்டி! என்னயும் வெட்டிட்டு  நாண்டுக்கிட்டு செத்துருக்கா !.இந்நேரம் பொணத்த அறுத்து கூறு போட்டு பாத்திருப்பாய்ங்கள்ல!புருசன் பாக்க வேண்டிய ஒடம்புடி ! கண்ட பயலும் பாத்திருப்பாய்ங்க !நெனச்சு பாக்கிறதுக்கே கூசுதுடி! தாலி கட்டுனவனையே முழுசா பாக்க விடமாட்டாளுங்க. நான் பெத்த மவளை டாக்டரு பயலுக எங்கங்க தொட்டாய்ங்களோ!என்னன்ன நெனச்சாய்ங்களோ!"

சிவனாண்டி குமுறி குமுறி அழுகிறார். படுக்கையின் ஓரமாக உட்கார்ந்திருந்த  ராசம்மாவுக்கு தாங்க முடியவில்லை.

"சும்மா இருக்கமாட்டிங்களா?  நானே நொம்பலப்பட்டு கெடக்கிறேன்..நம்ம புள்ளைய பத்தி நாமே அசிங்கமா பேசலாமா? நாய் திங்க போவுதோ..நரி தின்னப் போவுதோ!மண்ணு தின்னப்போற ஒடம்புதானே.! அத விடுங்க! புள்ளைய பறி கொடுத்துட்டு நாம்ப நாதியத்து கெடக்கிறோம். சொந்தம்னு  சொல்லிட்டு கறிச்சோறுக்கு வந்து நிக்கப்போறாய்ங்க.ஒத்த பொம்பள  நான் என்ன பண்ணப்போறோம்னு புரியல சாமி!"

"என்ன சொல்ல வரேன்னு புரியிது ராசு. பொண்ண நாம்ப  வாழத்தான் விடல. செத்தவ காரியத்த அவ வாழ ஆசைப்பட்ட தங்கராசுவே செய்யட்டும்.! பொட்டச்சிக நம்ம சாதியில சுடுகாட்டுக்கு போறதில்ல.நீ போகவேணாம். ரெண்டாம் நாள் சாத்திரத்தை நம்ம வீட்ல பண்ணிட்டு. கருமாதின்னு நாளை  இழுத்திக்கிட்டு போகவேணாம்.மூணாம் நாளே மொத்த சோலியையும் செஞ்சிரு!"

சொல்லி முடிப்பதற்கும் வார்டு பாய் வந்ததற்கும் சரியாக இருந்தது.

"ஆத்தா! போஸ்ட் மார்ட்டம் முடிஞ்சிருச்சி.பாடியை எடுத்திட்டு போகச்சொல்லிட்டாய்ங்க. கை நாட்டு வச்சிட்டு எடுத்திட்டு பொணத்த கொண்டு போயிடலாம். ஏத்தா..வீட்டுக்கா..இல்ல தத்தநேரிக்கா?"

"அந்த தம்பி அங்க இருக்காப்பூ?"

"எந்த தம்பி ஆத்தா?"

பொண்ணு கேட்டு வந்த அந்த வீட்டுத் தம்பியத்தான் சொல்றனப்பூ!"

"அங்க இல்லாத்தா.! டேசன்ல இருக்காராம். அந்த வடிவேலு அய்யாதான் பொணம் அறுக்குற எடத்தில இருந்தாரு,.அவருதான் காசெல்லாம் கொடுத்து சரி கட்டுனாரு.தாராள மனசு தாயி! நம்ம பொண்ணுக்குத்தான் வாழக் கொடுத்து வைக்கல!"

"வெட்டியா இங்க என்னடி பேச்சு. அவனோடு போயி கை நாட்ட வச்சிட்டு பொன்னிய கொண்டு போற வேலைய பாரு!"---சத்தம் போட்டார் சிவனாண்டி. கடைசியாக கூட மகளின் முகத்தை பார்க்க முடியலியே என்கிற வேசாடு!

"சூதானமா இருந்துக்குங்க! அவசரத்துக்கு  பக்கத்தில இருக்கிறவங்களை  கூப்புட்டுக்குங்க." ---வார்டு பையனை கூட்டிக்கொண்டு கிளம்பினாள் பொன்னியின் அம்மா ராசம்மா!
--------------------------
ஸ்டேசனில்..

தங்கராசுவை விசாரிக்கிறார் இன்ஸ்பெக்டர் ராஜதுரை. வெளிப்படையான கேள்வியாக இல்லை.அவனும் அதை புரியாமல்தான் பதில் சொல்கிறான்.

"எத்தன வருசமா பொன்னியோட பழக்கம்.?"

"காலேஜில் இருந்துதான் சார் !"

"உன்னை முழுசா நம்புச்சா?"

"எதுக்கு  இப்படி கேக்கிறிங்கன்னு புரியல சார்!"

"தனியா எங்கெல்லாம் போவிங்க,...... லாட்ஜ்?"

"கோவிலுக்குப் போவோம்.சிலைமான் ஆத்துக்குப் போவோம்.மத்தபடி வேறெங்கும் போறதில்ல.எதுக்கு சார் இப்படியெல்லாம் கேக்கிறீங்க?'

"இப்படியெல்லாம் கேப்பம்பா! உனக்கும் அந்த புள்ளைக்கும் சண்டை சச்சரவுன்னு வந்துருக்கா?"

"இல்ல.!"

"ம்ம்ம்! பொன்னி தற்கொலை பண்ணிக்கல!" என்று இன்ஸ்பெக்டர் சொல்ல  "என்ன சார் சொல்றீங்க.?"என்று அந்த அறையே எதிரொலிக்கிறது!

இது  உண்மை நிகழ்வு .புனை கதையாக தொடர்கிறது..


No comments:

Post a Comment