Saturday 1 April 2017

காதல்....காமம்.(31.)

எல்லாம் சொடக்குப் போடும் நேரத்தில்....!

பொன்னிக்கு   பளார்  என அறை விழுகிறது ! தங்கராசு இப்படி அடிப்பான் என்று    அவள்   எதிர்பார்க்கவில்லை !  பொறி கலங்கிவிட்டது. அறைந்த வேகத்தில் கையில்  இருந்த அருவாமனை  சுவரில் மோதி விழுகிறது. பொன்னியை அணைத்தவன் வேகமுடன்  அவளை அறைக்குள் தள்ளினான்.  கதவை சாத்தி வெளியில் தாழ் போட்டான் .

"சார்.! பொன்னிய ஸ்டேசனுக்கு கூட்டிட்டு வர்றது என் பொறுப்பு. என்னை நம்பி நீங்க போகலாம்.!" என்று கெஞ்சினான் !   தங்கராசுவை ஏளனமாக
பார்த்தார்   எஸ்.ஐ.!

" ஏப்பு! எங்களை பார்த்தா அள்ளி முடிஞ்சு கோடாங்கி அடிக்கிறவன் மாதிரி தெரியிதா? எங்களை அனுப்பிட்டு அவள நீ அள்ளிட்டு எங்கேயாவது போயி  குடும்பம் நடத்தலாம்னு திட்டமா? அவளோடு இப்ப நீயும் என்னோடு ஸ்டேஷனுக்கு வர்றே! உன்ன மாதிரி எத்தன பயலுகள பார்த்திருப்பேன்." என்ற எஸ்.ஐ. வாசலில் இருந்த கான்ஸ்டபிளை பார்த்து  "எயிட் நாட் த்ரி....இந்த சாரை ஜீப்பில் ஏத்துய்யா."என்று தங்கராசுவை தள்ளி விட்டார்.

என்னதான் கத்தி கதறினாலும் அவனை போலீஸ் விடுவதாக இல்லை.

தாழை நீக்கிவிட்டு  கதவை ஓங்கி மிதித்தார் எஸ்.ஐ.!.

நினைப்பதெல்லாம் நடப்பதில்லையே!

மின்விசிறியில் தூக்குப்போட்டுக் கொண்ட பொன்னி ஆவி அடங்கி  பிணமாக  தொங்குகிறாள்.! இதை அவர் எதிர்பார்க்கவில்லை .அப்படியே நாற்காலியில் சாய்ந்தவர்  முகத்தை துடைத்துக் கொண்டார் "இன்னிக்கி முழிச்ச முகத்துலதான்யா  தேடித்தேடி முழிக்கணும்."

"ஐயோ..ஐயோ ! என் ராசாத்தி!" என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு  ராசம்மா.தரையில் விழுந்து புரள்கிறாள்.

ஜீப்பிலிருந்த தங்கராசு கதறியபடி   வீட்டுக்குள் பாய்ந்தான். நிமிட நேரத்தில் எல்லாமே தலை கீழாக மாறி விட்டது.காவல் துறைக்கு இப்போது இரட்டை தலைவலி.!

"விசாரிக்கிறேன்னு வந்து என் பொண்ணு உசிரை வாங்கிட்டேயடா பாவி! ஒனக்கெல்லாம் கஞ்சி போட்ட உடுப்பு ஒரு கேடாடா ..நாசமாப் போறவனே! எம்பொண்ணு உசிர திருப்பி தருவியாடா...பூவும் பொட்டும் மஞ்சளும் குங்குமத்தோடு தாலி கட்டி அனுப்பவேண்டிய பொன் அரசிய இப்ப பச்ச தென்ன ஓலையில பாடை கட்டி அனுப்ப வச்சிட்டியேடா..ஒங்குடும்பம் வெளங்குமா?"

இப்படி துக்கமும் துயரும் கொப்பளிக்க ராசம்மா  ஒப்பாரி வைக்க ,அறைக்குள்  சென்ற தங்கராசு கதறி அழுகிறான். "பாவி! இப்படி சாவுறதுக்கா மாஞ்சு மாஞ்சு  காதலிச்சே!.காலரா..காச்சல்ல போயிருந்தாலும் மனச ஆத்திக்கலாம். இத சாகுற வரை எப்படிடி மறக்கிறது."இப்படியே பழைய நினைவுகளை எல்லாம்  நினைத்துக் கொண்டு  குமுறுகிறான் .

முன்னை விடமொத்த  தெருவும் அந்த வீட்டுக்கு முன்பாக கூடி விட்டது.

உண்மை நிகழ்வை  அடிப்படையாக கொண்டு புனையப்படும் தொடர், படம் .இணையத்தில் சுட்டது.

.

No comments:

Post a Comment