Saturday 1 July 2017

காதல்...காமம்.( 40.) சமஞ்ச புள்ளய எத்தன நாள் சொமக்க முடியும்?

உடம்பெல்லாம் வலி. போலீஸ் அடி . வீக்கம் தெரியாமல் அடிக்கிற வித்தைய
எப்படித்தான் கண்டு பிடித்தார்களோ!இருந்தாலும் அங்கங்கு தோல் கிழிந்து   ரத்தம்  உறைந்து  இருந்தது.வெள்ளிங்கிரி முதன் முதலாக பயப்படுகிறான். இனி என்னென்ன  செய்வார்களோ...! அன்னம் மீது வைத்த ஆசை இந்த அளவுக்கு நம்மை  கேவலப் படுத்தி விட்டது.. ஊரில் ஒருத்தனும் மதிக்கப் போவதில்லை. பேசாமல் காலில் விழுந்து விடவேண்டியதுதான் பகையாளியை  உறவாடிக்  கெடுன்னு  மூதாதையர்கள் சும்மாவா சொல்லியிருக்கிறார்கள்.?

" அன்னத்துக்கு  அடுத்த ஜென்மத்திலும் என் ஞாபகம் இருக்கணும்.அதுக்கு என்ன செய்யணுமோ அத நான் செஞ்சாகனும்.அதுக்காக குத்தத்தை ஒத்துக்கிட்டு பணிஞ்சு போவோம்.அதனால நம்ம கிரீடம் இறங்கிடாது .காரியம்தான் பெரிசு.வீரியம் வேணாம்.முதலில் வெளியில் போகவேண்டும்.இந்த கேசிலிருந்து விடுபட வேண்டும்."

வெள்ளிங்கிரியின் மனதில் பயங்கரமான திட்டம் உருவாகியது.
*************************************************

ராசாங்கம்தலையை துவட்டியபடியே குளியல் அறையை  விட்டு வெளியில் வந்தார்.

'செவனு.?" மனைவியை அழைத்தார். வெட்கத்துடன் வந்து நின்றாள். வயதுக்கு வந்த மகள் இருந்தாலும் கணவன் மீது கொண்ட காமம்  குறைவதில்லை.அத்தனை நாள் கழித்து வந்திருக்கிற புருசனுக்கு  எவ்வளவு  ஆசை இருந்திருக்கும்.? கூப்பிட்டால் இணங்காமல் இருக்க முடியுமா? அன்றைய இரவு ராசாங்கத்துக்கும் அவளுக்கும் முதல் இரவு மாதிரிதான்  இருந்தது.

"சொல்லுங்க?'

முகம் பார்க்க வெட்கம் !

"வாய்க்கு ருசியா சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு. வெரா,இல்லேன்னா கெளுத்தி கிடைச்சா வாங்கிட்டு வந்து கொழம்பு வையேன்! வெரா கிடைச்சா  கொழம்புக்கும்  ஆச்சு.கொஞ்சம் வறுத்து வை.தின்னுட்டு வடிவேலு வீட்டுப் பக்கமா போயி  பேசிட்டு வாரேன். உறவு முறை இருக்கு.அந்த வீட்டு சம்பந்தம்  கிடைச்சா  அன்னம் கொடுத்து வச்சதுதான்.பார்ப்பம்.அந்த மீனாச்சி நல்ல வழி காட்டமாட்டாளா?"

"சரிங்க.!நான் வெள்ளனவே எந்திரிச்சு பாய் கடைக்குப் போயி குடலு வாங்கிட்டு வந்து கொழம்பு வச்சிட்டேன்."

"இட்லிக்கு நல்லா இருக்கும்! நானே எடுத்து வச்சு  சாப்பிட்டுக்குறேன். நீ போயி  மீனு வாங்கிட்டு வந்திரு. காலாகாலத்துல போகலேன்னா வித்துரும்."என்று செவனம்மாவை கடைக்கு அனுப்பி வைத்தார்.

அவளும் கொண்டையில் சுற்றி இருந்த ஈரத்துண்டை கழற்றிவிட்டு பையை  எடுத்துக் கொண்டாள்.

அம்மா அங்கிட்டு கிளம்பியதும் அன்னமயிலு  அறையிலிருந்து  வெளியில்  வந்தாள்.

"அய்யா...நீங்க ஊஞ்சல்ல உக்காருங்க.நான் எடுத்துட்டு வாரேன்." என்று  அடுப்படிக்கு போனாள்.பெரிய தட்டில் ஆறு இட்லி .கூடவே குடல் . பெரிய அகப்பையில் எடுத்து வைத்தாள்.அய்யன் மாமிச பிரியர் என்பது அவளுக்கு  நல்லாவே தெரியும். "உழைக்கிறது எதுக்கு நல்லா சாப்பிடுறதுக்குத்தான்" என்று அவர் அடிக்கடி சொல்வார்.

இட்லியில் குழம்பை ஊற்றி நன்றாக பிசைந்துஅதனுடன்குடலையும் கலந்து வாய்க்குள் வைத்ததும் அவருக்கு எல்லாமே மறந்து விடும் .ரசித்து மென்று  சாப்பிடுவார்.அப்படி ஒரு பழக்கம்.

"ஏத்தா...நீ சாப்பிடல.?"

"அப்புறமா சாப்பிட்டுக்கிறேன்யா!" என்று சொன்னவள் மெதுவாக தனது  விருப்பத்தையும் சொன்னாள்.."எத்தனை நாளுதான் இங்கனயே இருக்க முடியும்? கோவில் குளம்னு போனா நாலு இளவட்ட பயலுக பார்க்கத்தான்  செய்வாய்ங்க.அவிய்ங்களை மிரட்டிக்கிட்டே இருக்க முடியுமா...?ஒரு எடுபட்டபய வம்படியா போலீஸ்ல மாட்டிக்கிட்டான்.கச்சேரிக்கும் கோர்ட்டுக்கும் நாம  அலைய முடியுமா. நாம பொழப்பு தளப்ப பார்க்க வேணாமா...? சொல்லுங்க"

"புரியிது தாயி. சமஞ்ச புள்ளைய நாங்களும் எத்தனை நாளுதான் சொமக்க முடியும்.? கடைக்கு போயிருக்கிற ஆத்தா வந்திரட்டும்.மத்தத நான் பாத்துக்கிறேன். இன்னும் நாலு இட்லி வைம்மா.!"

வயிறுக்கு வஞ்சகம் செய்யாமல் சாப்பிட்டு முடித்தார்.

No comments:

Post a Comment