Saturday 11 February 2017

காதல்...காமம்.( 24.)

வீட்டை  விட்டு வெளியில் வந்த தங்கராசு,பொன்னி இருவரும் பொடிநடையாக நடந்தார்கள்.

"நெறைய பேசணும் போல இருக்கு பொன்னி.!..சந்தோசமா இருக்கு. எங்கய்யாவும்.ஆத்தாளும் நம்ம கல்யாணத்துக்கு இவ்வளவு வெரசா சரி  சொல்லுவாங்கன்னு நெனக்கல.! நீ எதிர்பாத்தியா? ஒங்க வீட்லயும் இப்படி  சம்மதம் கெடச்சிருச்சுன்னா ...." நடந்து கொண்டே  கேட்டான் தங்கராசு,

"அத நான் பாத்துக்கிறேன். எனக்கும் மனசு நெறஞ்சு இருக்கு!இப்ப . கோயிலுக்கு போலாமா...மீனாட்சிக்கு அர்ச்சனை பண்ணனும்னு ஆசைப்படுறேன் ராசு!"

" போலாமே   உனக்கு தாய் மாமன்னு யாரும் இருக்காங்களா?" பயலுக்குள் பதுங்கிக்கிடந்த பயம் மெதுவாக   தலையை காட்டியது.

சிரித்தபடியே  அவனை ஏறிட்ட  பொன்னி. ." வெவகாரம் பண்ணுவாய்ங்கன்னு  பயப்படுறியா? எளந்தாரிக ரெண்டு பேரு ...பயில்வானுக மாதிரி...?"என்றாள்.

பயலுக்கு மனசுக்குள் பந்து உருளுது..ஆனாலும் வெளிக்காட்டிக்கொள்ளாமல்  " இருக்கட்டுமே...எனக்கென்ன பயம்? நீ இருக்கில்ல!"

"அதான பார்த்தேன். ஆம்பளைக ஏன் பொம்பளைக பின்னாலய பதுங்குறிங்க?
எதுத்து நிக்க துப்பு இருக்கணும் மச்சான்.! மீச இருந்தா மட்டும் போதுமா?" ரோடு என்றும் பார்க்காமல் அவனை தோளில் இடிக்கிறாள்!

"இந்தாரு புள்ள. எனக்கொன்னும் பயமில்ல.வெவகாரம்னு வந்தா ஒம்பாடு ஒன் மாமனுங்க பாடுன்னு வேடிக்கை பாத்திட்டு நிக்கப்போறேன்..வருங்கால எம்மா மனும் அத்தையும் அத பாத்துக்கப்போறாங்க..பந்தல்ல உக்காந்து தாலி கட்டப்போறது நான்தானே...தாய்மாமன் சடங்கு  ஒனக்கு செய்யணுமே...கெட வெட்டி சோறு போடனுமே  அதுக்காகத்தான் நான் கேட்டேன்."

"நல்லாத்தான் சமாளிக்கிறே.!அ ந்த கவலை ஒனக்கு  வேணாம் மாப்ள!. என் மாமனும் அத்தக்காரிகளும் செய்மொறைகள்ல  குறை வைக்க மாட்டாங்க!" என்று பொன்னி சிரித்த பிறகுதான் நம்ம ஹீரோவுக்கு  மூச்சு சீராகிறது.
.'அப்பாடா."என்று ராசுவும் சிரிக்க  மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் நுழைந்தனர் !

தரிசனம் முடிந்தது.!அர்ச்சனை செய்த தேங்காய் பழத்தை பொற்றாமரைக் குளக்கரையில்   .உட்கார்ந்து பங்கு போட்டுக்கொண்டிருந்தபோது  எதிர்பாராத விதமாக வெள்ளிங்கிரி அங்கு வந்து சேர்ந்தான் .. இருவருக்கும் ஆச்சரியம். பின் தொடர்ந்து வந்திருப்பானோ? கிரியின் முகத்தில் அப்பியிருந்த சோகத்தை இருவருமே உணரவில்லை.

"வெள்ளிக்கிழமைதானே  ஜாரிகளை பாக்க வருவே..இன்னிக்கி வியாழன்டா ..?" என்று வழக்கம்போல  நக்கலடித்தான்  தங்கராசு.

"உஷ்,,,சும்மா இரு ராசு!"என்று அவனை அதட்டிவிட்டு வெள்ளிங்கிரிக்கு பழம் கொடுத்தாள் பொன்னி."என்னண்ணே...வீட்ல சண்டை போட்டிங்களா.
.சாமிகிட்ட சொல்லலாம்னு வந்திங்களா ?"

"இல்லம்மா....என்ன ஒரு பொம்பள புள்ள எமாத்திருச்சி! உசிரா நெனச்சு பழகுனேன்..அந்த புள்ளயும் அப்படித்தான் பழகுச்சு."

இடை மறிக்கிறான்! தங்கராசுக்கு கோபம். அது நியாயமும்தான் ." இதுநா வரை எங்கிட்ட இத பத்தி மூச்சு விட்ருப்பியாடா? நாங்க சினேகமா இருக்கிறத  எப்பவாவது  மறச்சமா? நாங்க சொத்தைக. நீ மட்டும் கெட்டி! இப்ப என்ன மயிருக்கு எங்ககிட்ட சொல்ற?"

"ராசு...இது கோயிலு. அசிங்கமா பேசாதே,!" என அவனை அடக்கப்பார்த்தாள் பொன்னி.."நெறையப்பேரு வந்து போகிற எடம்.  வாய விடாதே,,படிச்சவன் மாதிரி நடந்துக்க! எதுக்கு இப்படி கத்துறே? " என்றதும் . விருட்டென எழுந்த தங்கராசு பத்து படி எறங்கி போய் உட்கார்ந்துவிட்டான்

"பொன்னி..ஒனக்கு தெரியாதது இல்ல. நான் வேற சாதி. அந்த புள்ள வேற சாதி.அதுவும் . ராசுக்கு சொந்தக்காரபுள்ள. இத சொன்னா அவன் வெடச்சுக்குவானா மாட்டானா? .தயவு செஞ்சு  இப்பவும் அவன்கிட்ட இத சொல்லாதே.

 இந்த மீனாட்சி மீது சத்தியம்!.

 பழகுறது வேற. சிநேகம் வேற. ராசு வீட்டில என்னை அவங்க வீட்டுப்புள்ள மாதிரி நினைக்கிறாங்கன்னா அவங்க குணம் உசத்தியா இருக்கு,!என்னை விரும்புனவளுக்கு  அவங்க வீட்டை பகைச்சிக்கிட்டு வெளியே வர தைரியம் இல்ல. எப்படியும் சம்மதம் வாங்கிடலாம்னுதான் என்கிட்டே பழகினாளாம்.கொன்னுபோட்றுவோம்னு இப்ப பயமுறுத்துறாங்கன்னு அழுகுறா! பார்க்காதேன்னு சொல்றா! எப்படி பொன்னி தாங்குவேன்.?"

தலை குனிந்தபடி சொன்னான் .கண்ணீர்த்துளிகள் மட்டும் படி மீது விழுகிறது.

"ஐயோ கிரி...நீ இப்படி பேசுறத பார்த்து யாராவது நம்மள   தப்பா நெனச்சுக்க ப்போறாங்க.  மனச தேத்திக்கிட்டு அந்த மீனாட்சி கிட்ட போயி சொல்லு! அவ பார்த்துக்குவா!"

கிரியின் பதிலைக்கூட எதிர்பார்க்கவில்லை .மடமடவென இறங்கியவள்  தங்கராசுவின் பக்கத்தில் போய் உட்கார்ந்தாள் . அவனின் தோள் ஒட்டி  உட்கார்ந்தவளுக்கு  இப்போதுதான் பயம் வருகிறது.

"நம்முடைய வீட்டிலே காதலுக்கு இடம் இருக்குமா?"

அவனது நெருக்கம் ஆதரவாக இருந்தது.

உண்மை நிகழ்வின்  புனைவு  இது. தொடராக  வந்து கொண்டிருக்கிறது.




No comments:

Post a Comment