Saturday 4 February 2017

காதல்...காமம்.( 23.)

இன்னும்  சேவல் கூவவில்லை. அடைக்கனின் பிடியிலிருந்து  மெதுவாக  தன்னை விடுவித்துக் கொண்டாள் பேச்சி. கலைந்த கூந்தலை  அள்ளி முடிந்து கொண்டாள். அவள் மனம் சொல்கிறது."கருவாயன்..காரியத்தில கெட்டிதான்.! "
 மண்ணெண்னை விளக்கை ஏற்றிவைத்து விட்டு மற்ற காரியங்களில் வேகமுடன் இருந்தாள்.குளிப்பதற்கு குளிர்ந்த தண்ணீர் சுகமாகவே இருந்தது.

கன்றிப் போயிருந்த  மாரை பார்த்தாள். இடுப்பு வலி இருந்தது. ஆனாலும்  அது  அவளுக்கு ரொம்பவே பிடித்துஇருக்கிறது.ஆங்காங்கே சற்று எரிச்சல் இருக்கிறது. அதுவும் அவளுக்கு சுகம்தான்!. படுத்திருந்த பாயை  அந்த இருட்டிலும்  தண்ணீரை விட்டு நன்றாக கழுவி சுவர் ஓரமாக சாத்தினாள்.

"மச்சான்..மச்சான்! "மெதுவாக அவனை எழுப்புகிறாள்.

"எந்திரி மச்சான்...விடியறுதுக்குள்ள வெளியேறி பஸ்சு பிடிக்கணும். அண்ணனும் வந்துரும்,எந்திரி!"

அவனுக்கு களைப்பாக இருந்தது. அந்த மெல்லிய வெளிச்சத்தில் பேச்சியை பார்க்கிறான்.

"அதுக்குள்ளே குளிச்சிட்டியா..?"

"எந்த நோக்கத்தில கேக்கிறேங்கிறது புரியிது. அதுக்கெல்லாம் இது நேரமில்ல. மிச்சம் சொச்சமேல்லாம் புது எடத்தில போயி வச்சிக்கலாம். முதல்ல குளி. நான் எங்கண்ணனை உசிப்பிவிட்டு வந்திறேன். சாமான் சட்டெல்லாம் கட்டியாகணும். ஒரு பய கண்ல பட்ற கூடாது. கரித்தூளு இருக்கு. பல்ல வெளக்கிட்டு குளி"

அரை மணி நேரத்தில் மூவரும் ரெடி. அவர்கள் பயணப்பட்டு விட்டார்கள்.

"அய்யா! இவ பேரு பொன்னி. பழக்கம்.நானும் அவளும் ரொம்ப நாளா பழகிட்டிருக்கோம்.!" என்று  வடிவேலுவிடம்  அறிமுகம் செய்கிறான்  தங்கராசு.

அவளை மேலும் கீழும் பார்க்கிறார்  வடிவேலு, " இங்க வர்றது அந்த பொண்ணு வீட்டுக்கு  தெரியுமா...ஒங்காத்தா கிட்ட சொன்னியா?" என்று  மகனிடம் கேட்டவர்  அப்படியே பொன்னியிடம்  பேச்சுக் கொடுக்கிறார்

"எந்தாயி...இந்த பயல நல்லா புரிஞ்ச்சிக்கிட்டுத்தான் பழகிறியா...உங்கம்மா அப்பனுக்கு தெரியுமா? உங்கய்யா என்னத்தா பண்றாரு?"

"வெவசாயம். நான்  சிவனாண்டி மக.!ஒங்கள  எங்கய்யாவுக்கு  தெரியும்.!"

"இப்ப வெவரம் புரியிது  தாயி, ஒங்கய்யாவையும் தெரியும். ஒங்கண்ணன் ஒருத்தன் மாடு குத்தி செத்துப்போனான்ல? நல்ல குடும்பம்தான்.. ஆண் வாரிசு இல்லாம போச்சேன்னு ஒங்கய்யா ரொம்ப வெசனப்பட்டான்."

 பேசி கொண்டிருக்கும்  போது தங்கராசுவின் அம்மா மாயக்காள்  பேச்சு சத்தம் கேட்டு அங்கு  வந்தாள். பொன்னியை அவள் இதற்கு முன்பு பார்த்ததில்லை.

"வந்திட்டியா...காப்பி ஆத்திட்டு வாடி. நமக்கு ரொம்பவும் வேண்டிய பொண்ணு. தங்கராசுதான் கூட்டிட்டு வந்திருக்கான். போயி வெரசா கொண்டா!".சம்சாரத்திடம் சொல்ல அவளும் கிளம்பி சென்றாள்.

அடுப்படிக்கு வேகமாக போன மாயக்காள் சொம்பு நிறைய  கருப்பட்டி காப்பியுடன் வந்தாள்! லோட்டாவில் ஊற்றி கொடுத்துவிட்டு  பொன்னியை  ஒரு வித ஏக்கமுடன் பார்க்கிறாள். அந்த பார்வை அவளது உள்ளத்தில் உறங்கி கிடக்கும் ஆசையை  உணர்த்தியது.

'"மகராசி,  வாக்கப்பட்டு வந்தா லட்சுமி  குடி வந்தா மாதிரிதான் இருக்கும்! நல்லது நடந்தா சரி."

இப்போது  பொன்னியிடம் பேச்சு கொடுத்தாள்.

"படிக்கிறியா தாயி! தங்கராசுவ ஒனக்கு பிடிக்குதா, ஆசைப்பட்டுத் தானே  பழகிட்டு  வர்றீக?"

கோபம் வருகிறது தங்கராசுக்கு.!

"ஆத்தா செத்த சும்மா இருக்கியா,,,ஆசை இல்லாமலா வீட்டுக்கு வந்திருக்கும் " என்று மாயக்காளை  அடக்கிவிட்டு பொன்னியை பார்த்து  "சாரி" சொன்னான்.

"விடு  ராசு.! இதையெல்லாம் பெரிசாக்காதே! பெரியவங்க மனச புரிஞ்சி நாமதான் நடக்கணும்"!

பொன்னியை அவர்களுக்கு ரொம்பவே பிடித்துப் போய்விட்டது.

வடிவேலு ஒரு தீர்மானத்துக்கு வந்தவராக." தாயி...எங்க வீடு  ரொம்ப நாளாவே  நிம்மதி இல்லாம கெடக்கு. ஒரு கொலை கேசு  இன்னும் முடியல. எம் பேரும் ஊர்ல கெட்டு கெடக்கு! இந்த சமயத்தில  ஒங்கப்பன்  நாங்க வந்து பொண்ணு கேட்டா  என்ன நெனப்பானோ...பயமா கெடக்கு தாயி.! அவசரப்படாம  ஆறப்போட்டு  பண்றதுதான் நல்லதுன்னு படுது! படக்குன்னு  ஒங்கப்பன் இஷ்டமில்லன்னு சொல்லிட்டானு வச்சுக்க.அப்புறம்  என்ன பண்ண முடியும்னு நெனக்கிறே?"

இப்பத்தான் முதன் முதலாக  வடிவேலுவை  முறை வைத்து பேச ஆரம்பித்தாள்.

"மாமா! நாங்க ரெண்டு பேருமே கல்யாணம் பண்ணிக் கொள்றதுங்கிறதில ஒரே மனசோடுதான் இருக்கிறோம். ரெண்டு குடும்பமும் சம்மதம் சொல்றவரை  காத்திருப்போம். அத ஒங்க கிட்ட இப்ப சொல்லிட்டேன். இதை எங்கய்யா அம்மாவிடமும் சொல்லிடுவேன்..ஒங்க கிட்ட  நீயே சொல்லிடுன்னுதான் ராசு என்னை இங்க கூட்டிட்டு வந்தார், அதான் வந்தேன். தப்பா நெனச்சுக்காதிங்க மாமா..வரேன் அத்தே" என்று  மாயக்காளிடமும்  சொல்லிவிட்டு  தங்கராசுவை அழைத்துக்கொண்டு  புறப்பட்டாள்.

வடிவேலுவுக்கு சந்தோசம்.

உண்மை சம்பவத்தை  அடிப்படையாக கொண்டு  புனையப்படுகிற  தொடர்,!

No comments:

Post a Comment