Sunday 19 February 2017

காதல்...காமம்..( 25. )

"மனசு ஆறல..பொன்னி.,உசிருக்கு உசிரா பழகின எங்கிட்டய மறச்சிருக்கான். எதுக்கு மறைக்கணும்.? அவன் ஆசைப்பட்ட பிள்ளக்கிட்ட பழகுறான். பழகிட்டுப்போ ! கல்யாணம் பண்ணு..இல்ல பண்ணாமப்போ!அது அவனோட  இஷ்டம்...நான் குறுக்கே விழுந்து மறிக்கப் போறனா? அது என் வேல இல்லியே.! எதுக்காக மறைக்கனும்கிறேன்?"

தங்கராசு சரியாகத்தான் பேசுகிறான் ஆனால் வெள்ளிங்கிரி தரப்புக்கு எதிராக அல்லவா இருக்கு! சொந்த சாதிக்காரி.. அதுவும் ராசுவின்  உறவுக்காரப் பொண்ணு. சுருக்கென குத்தாமல் இருக்குமா?   அவன் பேசிக்கொண்டே போக  பொன்னியின் மனசில் இப்படியெல்லாம் ஓடுகிறது,

"இதப்பாரு ராசு. அவன் பக்கத்து நியாயம் என்னன்னு தெரியாம கோவிக்காத. அது  சரி  இல்ல.! அவனோட சொந்த விசயம்.இத்தோடு விட்ரு! அத கிண்டி கிளறி பெருசாக்காத.!"---பொன்னி சமாளிக்கிறாள் . வாய் தவறி எதுவும் வந்துவிடக்கூடாதே என்கிற பயமும் இருக்கிறது.

"சரி...அதப்பத்தி பேசினனா ஏன்டா எருமைன்னு கேளு..இத்தோட அவன் சங்காத்தமே வேணாம்.பொன்னி.! எங்கிட்ட பேசவேணாம்கிறத நீயே அவன்கிட்ட சொல்லிரு.மீறி வந்தான்னா மரியாதை கெட்டிரும்.என்ன வேணும்னாலும் நடக்கும்கிறதையும் சொல்லிரு!"

"ராசு.  இது சின்ன விசயம்.இதப்போயி பூதக்கண்ணாடி வச்சா பார்ப்பே! ?"

"உனக்கு தெரியாது பொன்னி.அவன் மனசில பெருசா திட்டம் இல்லாம அவன்  என்கிட்டே மறைச்சிருக்கமாட்டான்.எங்கேயோ கைய வச்சிருக்கான்." என்றதும்  பொன்னிக்கு  கட்டெறும்பு கடித்த மாதிரி கடுக்கிறது. ராசுவின் சொந்தக்கார பெண்ணைத்தான் காதலித்திருக்கிறான் என்பது தெரிந்து விடுமோ என்கிற பயம் வந்துவிட்டது.

தெரிந்திருந்தும் தன்னிடம் பொன்னி சொல்லாமல் மறைத்து விட்டாள் என்று  ராசு நாளை  ஆத்திரம் அடைந்தால் என்ன பண்ணுவது என்கிற பயமும் வந்துவிட்டது.

"வீணா மனசை குழப்பிக்காதே..கோவிலுக்கு வந்திட்டு சங்கடத்தோடவா வீட்டுக்கு திரும்புவாங்க. நான் வெள்ளிங்கிரிகிட்ட சொல்லிடுறேன். உன் வீட்டுப்பக்கம்  இனிமே வரமாட்டான்.எந்திரி. காப்பி கிளப்ல சாப்பிட்டிட்டு  போகலாம்"

********************
சொ ன்னமாதிரியே  மறுநாள் கிரியை சந்தித்து  பேசினாள் பொன்னி.

 நண்பனை பிரியப்போகிறோம் என்கிற கவலையை விட  காதலித்து  கழுத்தறுத்து விட்டாளே என்கிற கோபம்தான் அவனிடம் மேலோங்கி இருந்தது.

"விடு பொன்னி! அவனை நீ ஏமாத்தினால்  தாங்குவானா? துடிப்பான்ல. அவனுக்கு நெஞ்சு கருகும்ல..அத மாதிரிதான் எனக்கும் பொன்னி...என்னை ஏமாத்தினவள சும்மா விடப்போறதில்ல. காலம் முழுக்க அவ நெனச்சு நெனச்சு அழுவனும்! "

"கிரி நீ பேசுறது சரியில்ல.அவ உன்னை காதலிச்சிட்டு இப்ப வேணாம்கிறாள்னா அவளுக்கு என்ன நெருக்கடியோ! மனசில உன்னையே  வச்சு பழகிட்டு வந்தவ ஏன் மாறுனாங்கிறது  உனக்கு தெரியுமா? நீ ஆம்பள.  உங்களுக்கெல்லாம் ஒத்த பொண்ணு பத்தாது. கல்யாணம் கட்டிக்கிட்டு வேற  பொண்ணுங்களை பார்க்காம இருக்கிங்களா? எங்கேயோ ஒரு சத்தியவான் உத்தமனா இருப்பான். நான் உன்னை மட்டும் குத்தம் சொல்லல.உன்னோட சிநேகிதனையும் சேர்த்துதான் சொல்றேன்.  காலேஜ்ல படிக்கிறப்ப தப்பான வீட்டுக்கு நீங்க போகலேன்னு சொல்லு?அதெல்லாம்  தெரிஞ்சிதான்பா பழகிட்டு வரேன்"

நெரிஞ்சி முள்ளை நெஞ்சில் வைத்து அழுத்துவதைப்போலஇருக்கிறது,. இதுக்கும் மேல அவளை பேச விடுவதை கிரி  விரும்ப வில்லை. படக்கென இரு கையும் சேர்த்து கும்பிட்டான்   "பொன்னி. வேணாம் இதுக்கும் மேல நீ பேசாதே. அவனை இனிமே பார்க்க மாட்டேன்,பேச மாட்டேன். உன் ஆளுகிட்ட போயி  சொல்லிடு! அவன் சோறு போட்டு நான் வாழல. நான் சோறு போட்டு அவனும் வாழல..எனக்கும் வயக்காடு இருக்கு.வசதி இருக்கு."

வேகமுடன் கிளம்பி சென்றுவிட்டான்.

பொன்னி பெருமூச்சு விட்டாள்.

தங்கராசு---வெள்ளிங்கிரி இருவரும் அதற்கு பிறகு சந்திக்கவும் இல்லை .பேசவும் இல்லை.

ஆனால் அது நிரந்தரம் இல்லை என்பது போகப்போகத்தான் தெரிந்தது..

உண்மை  நிகழ்வின் புனைவு, தொடராக  வருகிறது, அடுத்து நடந்ததை  பின்னர் பார்ப்போம்.

 ,.

No comments:

Post a Comment