Monday 27 February 2017

காதல்..காமம். ( 26.)

"... ஏட்டி  ராசு...?" மனைவி ராசம்மாவை இப்படித்தான்  சிவனாண்டி கூப்பிடுவார். பொன்னியின் அப்பா அம்மாதான் இவர்கள்.

"கூப்பிட்டிங்களா" என்றவாறே  அடுப்பங்கரையில் இருந்து வந்தாள் ராசம்மா.
"மொச்சக்கொட்டையும்  நெய்மீன்கருவாடும் போட்டு கொழம்பு வச்சு ரொம்ப நாளேச்சின்னு  பிச்ச ராவுத்தர் கடைக்குப் போயி கருவாடு வாங்கியாந்தேன்.எதுக்கு கூப்பிட்டிங்க?" என்ற படியே முந்தானையில் கையை துடைத்துக் கொண்டாள்.

புருசனின் பக்கத்தில் நிற்கிறாள்  மகள் பொன்னி. அப்பனுக்கும் மகளுக்கும் என்ன பஞ்சாயத்தோ? அவர்கள் இருவரும் முறைத்துக்கொண்டிருக்கிற  போதுதான் சம்சாரத்தை சிவனாண்டி கூப்பிடுவார்.

'என்னங்க?எதுக்கு கூப்பிட்டிங்க ?அடுப்படியில வேல கெடக்கு!"

"உம் மவ  பொன்னி என்ன சொல்லுதுன்னு கேளு. உனக்கு  புரியிதின்னான்னு பாரு?".

அம்மாவுக்கு பேச இடம் கொடுக்கவில்லை மகள்.!

"எனக்கு சுத்தி வளச்சு பேசத் தெரியாது ! ஆத்தா! தெளிவா சொல்லிடுறேன். எனக்கு வயசாயிடிச்சின்னு படிப்பு  முடிஞ்சதும் மாப்ளய தேடுவீங்கள்ல.. அந்த  கவலை வேணாம்னு அய்யாகிட்ட சொன்னேன்.அது அவருக்கு புடிபடலயாம் , உன்னய  கூப்பிட்டு அருத்தம்  கேக்கிறாரு,நான் என்ன சொன்னேன்னு உனக்காச்சும் வெளங்குனா சரி!?"

அதுவரை தன்னுடைய மகள் அப்படி பேசி  ராசம்மா கேட்டதில்லை.

"என்னலா...என்னத்த சொல்ற? புருசன இப்பவே தேடிக்கிட்டேன்னு சொல்ல வர்றியா...துளுத்துப் போச்சா?என்னடி கருமாயம் இது? எவன்டி சொக்குப்பொடி  போட்டான்?"

"அய்யாவுக்கு நீ போட்ட சொக்குப்பொடியிலதான்  இப்படி  ஆடுறாரா?அப்படி ஒரு பொடிய நான் இதுவரை பாத்ததில்ல ஆத்தா? நீயே செஞ்சுக்குவியா? அப்படி என்னென்ன சரக்கு சேர்த்துக்கனும் ..சொல்லு! நானும் கத்துக்கிறேன்" என்றவள்  ராசம்மாவை நெருங்கினாள். " பெத்த மகள் கிட்ட இப்படி கேக்கிறியே..நாக்கு கூசல.? என்னை பெத்தியா..இல்ல தவுட்டுக்கு வாங்கினியா ...வெத்தல பாக்கு பொகையில போட்டு போட்டு நாக்கு தடிச்சிப் போச்சு?"என்று  அம்மாவின் தண்டட்டியை ஆட்டிவிட்டபடியே பேச ஆரம்பிக்கிறாள்.

ராசம்மாவும்,சிவனாண்டியும் என்ன பேசுவது என்பது புரியாமல் திகைத்து மகளையே பார்க்கிறார்கள்.

"புருசன தேடிக்கிட்டியான்னு கேட்டில்ல. ..ஆமா ..தேடிக்கிட்டேன். அதுல என்ன தப்பு? மனசுக்கு புடிச்சவனோடு  குடும்பம் நடத்துறது தப்புன்னு நீங்க  ரெண்டு பேரும் சொல்றீங்களா? நீங்க எவனையாவது கட்டி வைப்பீங்க. அவன் சண்டியர்த்தனம் பண்ணுவான்.குடிச்சிட்டு வந்து  குடும்பம் நடத்த கூப்பிடுவான் .நான் அடங்கி  கிடக்கணும்  வெள்ளென எந்திரிச்சி அவன் காலை தொட்டுக் கும்பிட்டு தாலி பாக்கியம் நெலைக்கனும்னு கண்ல தாலிய ஒத்திக்கணும்! உன் தம்பிக்கி வாக்கப்பட்டு வந்தாளே ஒரு மகராசி   ரெண்டாவது மாசமே அத்துக்கிட்டு ஓடல?...திரும்பி வந்தாளா? வாழாவெட்டியா இருந்தாலும் இருப்பேன்னு உன்னோட  குடும்பம் நடத்த முடியாதுன்னு  தாலிய கழத்தி கலனிப்பானையில போட்டுட்டு போனத மறந்திட்டியா?".

ராசம்மா  தலையை விரித்துப்போட்டுக்கொண்டு ஆங்காரமுடன் பேசுகிறாள்..
கண்ணீர் முட்டிக்கொண்டு வருகிறது.

"நாக்கால கெட்ட சிறுக்கி! பெத்தவக கிட்ட பேசுற மாதிரியா பேசுற? வாப்பட்டி நாயே! நீ எக்கேடு கெட்டா எனக்கென்னன்னு விட்ற முடியாதுடி. என் புருசன் குடும்பத்துக்குன்னு ஒரு பேரு இருக்கு. மச்சு வீட்டு மவராசன்டி ! தெருவில இன்னிக்கும் நடந்து போனா வாசல்ல உக்காந்திருக்கிறவளுக எந்திரிச்சி நிப்பாளுகடி.ஆம்பளைக தோள்ல கெடக்கிற துண்டு கக்கத்துக்கு போயிரும்டி .இப்பேர்ப்பட்ட குடும்பத்தில   பொறந்திட்டு இப்படி ஒரு கேடு கெட்ட காரியத்தை பண்ணுவேன்னு சொன்னா ஒன்ன உசிரோடு விட்டு வப்போம்னு நினைக்கிறியா ? உத்திரத்தில தொங்க விட்ருவோம்."

சிவனாண்டியின் கச்சேரி ஆரம்பமாகிறது.

"ஏட்டி  சீவனை விடுறே! நாலெழுத்து படிக்கவச்சது நம்ம தப்பு.! கொட்டத்தில மாட்ட குளிப்பாட்டி சாணிய அள்ள விடாதது நம்ம தப்பு? கெண்டைக்கால்  நரம்ப அறுத்து விட்டு வீட்டோடு கெட நாயேன்னு செஞ்சிருக்கணும்.எப்படி  நெஞ்சழுத்தமுடன் பேசுது கழுத! "

"இப்படியெல்லாம் பேசுனா பயந்து போயிருவேன்னு நெனைக்கிறிங்களா? உங்களுக்கு மாப்ள பாக்கிற கஷ்டம் வேணாம்னு மட்டும் சொன்னதுக்கே  ரெண்டு பேரும் இப்படி ஆடுறீங்களே! நான் யார கட்டிக்கப்  போறேனுன்னு சொன்னா என்னா ஆட்டம் ஆடுவிங்க? அவரும் மச்சு வீடு காரை வீடுன்னு  பண்ணை வச்சு வாழுற குடும்பம்தான்."

"அப்ப ஓடிபோவேன்னு சொல்றியாடி?"

"நான் ஏன் ஓடிப் போவனும்? நீங்க ரெண்டு பேர் தாங்கித்தான்  சாமி தெருவில  ஊர்கோலம் போவுதா? நினைப்புத்தான் பொழப்ப கெடுக்குதுன்னு சொல்வாங்க. உங்க ரெண்டு பேர பாத்துதான் சூரியன் மொளைச்சி வருதாக்கும்?"

வாசலில் ஜட்கா வண்டி வந்து நிற்கிற சத்தம் கேட்டு மூன்று பேரும் சண்டையை நிறுத்திவிட்டு  அவரவர் இடத்துக்கு சென்றார்கள். ராசம்மா  அடுப்படிக்கு போனாள். பொன்னி அவளுடைய அறைக்கு சென்று விட்டாள். சிவனாண்டி மட்டும் வாசலுக்கு போகிறார்.

இது  உண்மைச்சம்பவத்தின்  புனைவு, இன்னும்  தொடரும்.

No comments:

Post a Comment