Wednesday 27 April 2016

குற்றப்பரம்பரை.( பகுதி.2.)

'சொத்' என சுள்ளிக்கட்டுவை கரம்பை  மண் பூமியில் போட்ட மாயக்காள்தான் அவனை முதலில் பார்த்தாள். இந்த பயபிள்ளை எதுக்கு  இந்நேரம் இந்த பக்கம்  அலையிது என்று  மனதுக்குள்  நினைத்தபடி ' ஏலே....ஊலமூக்கா ...இந்த  பொட்ட வெயில்ல சேவ கூட  கேறாது.நீ  எங்கடா  இங்கிட்டு...? எந்த  சிறுக்கி மகளுக்கு சுருக்கு போட்டிருக்கே?"-சாதாரணமாக கேட்டவள்  'புழுச்'சென புகையிலை சாற்றை துப்பினாள்.

அவன் அந்த பகுதியிலேயே  ஜெகஜால கில்லாடி.வாழ்வாதாரங்கள்  அற்றுப் போய் விட்ட அந்த கரம்பக் காட்டில் வயசுப்பயல்கள்  பெரும் பாலும் பட்டணம் பக்கத்தில் இருந்த நகரங்கள் என புலம் பெயர்ந்து போய்விட்டனர்.அப்படி  கள்ள ரெயில் ஏற முடியாதவர்கள்தான்  கிராமம் ,கிராமமாக போய்  கைவரிசையை காட்டிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவன்தான் ஊளமூக்கன்  என்கிற மூக்கன். சின்ன வயதில் மூக்கிலிருந்து  எப்பவுமே  சளி  வழிந்தபடி இருக்கும்.அதனால் எல்லோருக்கும் அவன் ஊளமூக்கன்தான். எளந்தாரி.பயம் அறியாதவன்.அவனை பெத்தவர்கள் வசதியானவர்கள்தான். பங்காளிகளின் பிள்ளைகள் பட்டணம் போய் படித்து கவர்மெண்டு  உத்தியோகத்தில்  இருக்கிறார்கள்.பங்காளிகளின் துரோகத்தினால்  மூக்கனின் அய்யா தவசி சொத்தை பறி  கொடுத்துவிட்டு அதே ஏக்கத்தில் சிவலோகம் சேர்ந்துவிட்டார். ஆத்தா  பேச்சியக்கா மட்டும்தான் இப்போது  மூக்கனுக்கு ஆதரவு.பேச்சிக்கு  அவன் ஆதரவு என்று வாழ்கிறார்கள்.

'என்னத்தா..இந்த  சிறுக்கியோடு எங்கிட்டு போயிட்டிருக்கே? கெட்ட சிறுக்கியாச்சே இவ.! ஈர முந்தானையில்  சண்டை சாவலையே  ஊமையாக்கி  கொண்டு போயிருவாளே..இவளோட சகவாசத்தை  அத்துப்போட்ரு. இல்லேன்னா உன்னையே வித்துருவா!' என கேலி பேசினான் மூக்கன்..

செவனம்மா  சும்மா இருப்பாளா?  கல்லூரணியே இவளைக் கண்டால் பம்மிக்கொள்ளும். கெட்ட வாயாடிச்சிறுக்கி. கருத்த மேனி என்றாலும்  மதர்த்த மார்புகள். உள்பாடி அணிவதில்லை.அவள் மட்டுமல்ல அந்த பகுதி பெண்கள் அதை பெரிதாக நினைப்பதில்லை. சீலையை  இழுத்து இறுக்கமாக  சுற்றிக்கொண்டுதான் வயக்காட்டிலேயே கால் வைப்பார்கள். வயசுப்பயல்கள் கண்கள்தான் யாருடைய சீலை முந்தாணி  ஒதுங்கிகிடக்கு என்று கண்களை  மேயவிடுவார்கள். கருத்த மேனியில் வெயில்படாத மார்பகங்களை பார்க்கிறபோது வளைக்குள் இருந்து  முயல் எட்டிப்பார்ப்பது போலிருக்கும்,
இவளைத்தான்  சீண்டினான்.

"ஆமா.. சீமைத்தொரை  செவப்புக் குதிரையேறி சில்லாவை  சுத்தி வர்ற வேலை  பாக்கிறாரு.களவாணிப்பயலெல்லாம் கதியத்துப் போயிக் கெடக்கானுகளாம்
.முடிச்சவிக்கி, மொள்ளமாரி ,கூட்டிக்கொடுக்கிரவய்ங்க,கூத்தியா  வச்சிருக்கிறவய்ங்கல்லாம் தொரை  வந்திட்டார்னு  எறும்புக் குழிகுள்ள  பதுங்கி இருக்காய்ங்களாம்.வக்கத்தவனுக்கு வாயைப்பாரு!"என்று  பதிலடி  கொடுத்தாள் ,

மாயக்காளுக்கு  ஒரு வகையான அச்சம். இந்த சிறுக்கி  இப்படி வாயடிக்கிறாலே  நாளைக்கு ஒத்த செத்தையில பயகிட்ட  மாட்டிக்கிட்டால்  அவன் சும்மா விட்ருவானா? வாயைப் பொத்தி  வரப்பு மேலேயே  வாழ்ந்திருவானே என்கிற பயம்..

அவள் அப்படி நினைத்ததிலும்  ஒரு உண்மை இல்லாமல் இல்லை.

அது  என்ன அடுத்த புதன் வரை பொறுத்துக்கொள்க. உங்கள் கருத்துகளை  பதிவிடக் கூடாதா? எனக்கு  உற்சாகமாக இருக்கும்.

No comments:

Post a Comment