Saturday 18 March 2017

காதல்...காமம்.( 29.)

"நாசமத்து போவாளே ! என் தாலிய  அக்கவா பொறந்தே!வெட்டிப்பிட்டியேடி என்  ராசாவ! வெளங்காம போவடி...!"

பெருங்குரலெடுத்து ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டாள்.ராசம்மா.

சிவனாண்டி துடிக்கிறார். இடது முழங்கையில் சற்று  கீழாக அருவாமனை வெட்டு.! ஆழமாகத்தான் விழுந்திருக்கும் போல.! ரத்தம் ஒழுகுகிறது. வலி  தாங்காமல் கத்த ஆரம்பித்து விட்டார்.

"ஆம்பள சுகத்துக்கு ஆசப்பட்ட அந்த பொட்ட சிறுக்கிய   வீட்ட விட்டு வெரட்டுடி  ! " வலி, ஆத்திரம், பெத்த மகளே எவனுக்காகவோ சொந்த அப்பனை வெட்டவும்  துணிந்திருக்கிறாள் என்றால் யாரும் நிதானம் இழக்கவே செய்வார்கள் என்கிறபோது சிவனாண்டிக்கு அது பொருந்தாதா என்ன?

அப்படியே தரையில் உட்கார்ந்து விட்டார். ராசம்மா கையில் கிடைத்த  துணியை வைத்துக் கட்டுப் போடுகிறாள். "யாரு மோகத்தில முழிச்சேனோ  என்  வீட்டுலேயே ரத்தக்காவு! வாங்க .பெரிய ஆசுபத்திரிக்கு போவோம்.வாய்யா என் கொலசாமி! வழியிலேயே சட்கா வண்டிய புடிச்சுக்குவோம்."

புருசனின் கவட்டுக்குள் கையை கொடுத்து தாங்கிப்பிடித்து  தூக்குகிறாள். சட்டை வேட்டி எல்லாம் ரத்தம்அவளுக்கும் ரவுக்கை,சேலை எல்லாம் ரத்தம்.
இவ்வளவும் நடக்கிறது. அப்பன் துடிக்கிறான். வாயில் வரக்கூடாத வார்த்தைகளால் அம்மா  வைகிறாள்.

ஆனால் அருவாமனையை கீழே போடவில்லை. வெறித்தபடியே அவர்களை பார்க்கிறாள்  பொன்னி.! ஆவேசம் தணியாத சாமியாடி மாதிரி  மூசு மூசு என்று மூச்சு விடுகிறாள் .. நடந்து விட்ட  விபரீதம் பற்றி  அவள் கவலைப்பட்ட மாதிரி தெரியவில்லை.

அதற்குள் ஊரே கூடி விட்டது. குதிரை வண்டியில் ஏற்றி விட்டு அவர்களுடன் சிலர் சைக்கிளில் பின் தொடர்ந்தார்கள்.

இந்த மாதிரி சம்பவங்களில் பேசுவதற்கென சில ஜன்மங்கள் இருக்குமே... ! வீட்டுக்குள் நுழைந்து அருவாமனையை வாங்கி அங்கிருந்த மேஜையில் வைத்தாள்  ஒருத்தி " ஏன்டி துப்புக்கெட்ட ஈன சிறுக்கி. பெத்த அப்பனையா கொல செய்ய பார்த்தே..அந்த மனுசன் ஒன்ன  கண்ணுக்குள்ளேயே வச்சு வளர்த்தாரடி! "என்று பொன்னியின்  குமட்டில் இடிக்கிறாள்.! பொன்னி எதுவும் பேச வில்லை. அவிழ்ந்து கிடந்த கூந்தலை கோடாலிக் கொண்டையாக போட்டுக் கொண்டாள்.பிரமை பிடித்த மாதிரியே அவர்களை பார்க்கிறாள்.

ஒருத்தி உரிமை எடுத்துக்கொண்டு வாளியில் தண்ணீர் எடுத்து வந்தாள். தரையில் இருந்த ரத்தக்கறை எல்லாம் கழுவுகிறாள்.போலீஸ்காரன் வந்து விசாரிப்பானே என்பதெல்லாம் அங்கிருந்தவர்களுக்கு தெரியவில்லை. பொன்னியை காய்ச்சி எடுக்க அவர்களுக்கு அதுதான் நல்ல சமயம். விட்டால் வேறு வாய்ப்பு வராது.

"வெளங்காத சிறுக்கி. வெட்டிப்புட்டா. எவன் கூட  ஓடி போக நெனச்சாளோ! வெவரம் தெரிஞ்ச மனுசன் கண்டிச்சிருக்காரு. அரிப்பெடுத்த நாய்க்கு  ஆத்திரம்! .போட்டுத் தள்ளிருக்கு. கழுத்துக்கு வச்ச குறி எந்த சாமி புண்ணியமோ  தப்பி கைக்கு எறங்கி இருக்கு!"---அவிழ்ந்த கூந்தலை அள்ளி முடிந்து கொண்டு வீட்டை கூட்டுகிறாள் ஒருத்தி. கிட்டத்தட்ட ஏழெட்டு பேர்.  அவர்களது கற்பனை வளம் வார்த்தைகளில் வலம் வந்து கொண்டிருக்கிறது.

பொன்னிக்கு கொஞ்சம் கொஞ்சமாக அவளுடைய முன் கோபத்தின் விளைவு  இப்பத்தான் புரிய ஆரம்பிக்கிறது.

அழ ஆரம்பிக்கிறாள்.விபரீதம் புரிகிறது. விம்மியவள் 'ஓ" வென குரல் எடுத்ததும் அங்கிருந்த பெண்டுகளுக்கு ஆச்சரியம்.சிலருக்கு பயம், 'கிறுக்குப்  பிடிச்சிருச்சோ?'

மேஜையில் வைக்கப்பட்ட அருவாமனையை ஓடி சென்று எடுத்ததும் மற்றவர்களுக்கு பயம் வந்து விட்டது. கண்டபடி வைததால் நம்மையும் பதம் பார்த்து விடுவாளோ என்கிற பயம்.

"எதுக்குடி அருவாமனைய தூக்குனே...ஒன் நன்மைக்குத்தானேத்தா சொன்னோம். பெத்த அப்பனையே வெட்டிப்புட்டியே நாளைக்கு தாலி கட்டி  போற வீட்டுல ஒனக்கு மருவாதி இருக்குமா?  பொண்ணு கேட்டு எவனாவது வருவானா..?இதுக்காகத்தானத்தா இம்புட்டு பேச்சு பேசுனோம்."

 பொன்னியின் கோபத்துக்கு ஆளாகி விடக்கூடாது என்கிற பயத்தில் அவர்கள்  ஆளாளுக்கு எதையோ சொல்லிக்கொண்டிருக்க  வாசலில் வந்து நிற்கிறது போலீஸ் ஜீப்!

யாருமே எதிர்பார்க்கவில்லை! அப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்பதை.!

உண்மை  நிகழ்வை  அடிப்படையாக  வைத்து  புனையப்படுகிற  தொடர்  இது. அடுத்து  என்ன  நடந்தது என்பதை  பிறகு பார்க்கலாம்.


No comments:

Post a Comment