Saturday 25 March 2017

ஞாயித்துக் கெழமையாச்சும் வீட்டோடு கெட!

"விடிஞ்சி போனா அடைஞ்சுதான் வீட்டுக்கு வர்ற. இன்னிக்கி ஞாயித்துக் கிழமைதானே..... வீட்டோடு கெடக்க வேண்டியதுதானே..வாய்க்கு ருசியா  கெளுத்தி மீனு கொளம்பு.தின்னுட்டு கெடக்கவேண்டியதுதானே. .சினிமாவுக்கு கூட்டிட்டு போக முடியல.டிவி.ல வர்ற படத்தையாவது சேந்து பார்ப்பமே"

அவ ஆசையை தப்புன்னு சொல்ல முடியாது.என் வேல அப்பிடி.காலம்பர 8 மணிக்கி இருக்கலேன்னா ஆப்சென்ட் தான் .சம்பளத்தில் பாதிய பிடிச்சிருவான் .ராத்திரி எத்தன மணிக்கு காண்ட்ராக்ட்காரன் விடுவான்கிறது  தெரியாது.பெரும்பாலும் பத்து மணிக்கு வீட்டுக்கு போயி நாலு வாய் தின்னிட்டு  அலுப்பில கண்ண அசந்திருவேன். எத்தன நாளு அவ ஆசையா  பூ  வாங்கி அந்த சின்ன கொண்டைக்குள்ள சொருகி இருப்பா.அந்த சந்தோசத்துக்கு ஆச பட்டது தப்புன்னு சொல்ல முடியுமா? ஆனா  அவளுக்கு கொடுக்க முடியல.வேல பாத்து களச்சிப்போன ஒடம்பு  படுடான்னு எனக்கு வசப்படுறது இல்ல. அதான் இன்னிக்காவது  வீட்டோடு கெடன்னு சொல்றா!

ஆனா ஆர்.கே. நகர் தேர்தலுக்கு தொப்பி வச்சிட்டு தெரு தெருவா கத்திட்டு போனா பிரியாணி,குவாட்டரு ,கையில ஆயிரம்னு தருவாங்கன்னு  சொல்றாங்க. இது எக்ஸ்ட்ரா வருமானம்தானே.குடும்ப செலவுக்கு  ஒதவுமே!
நாம்ம அதிகமா கத்துன்னா கூலி கூட கொடுப்பாங்களாம்.இத விட மனசு இல்ல..

ஆனாலும் அவளின் ஆசைய நிறைவேத்தலேன்னா  நான் நல்ல புருசனா  இருக்க முடியுமா? யாருக்கோ கொடி பிடிச்சி தொப்பி வச்சிக்கிட்டு சுத்துறதினால காசுதான் கிடைக்கும்.நான் அந்த கட்சியும் இல்ல.என் பொண்டாட்டி சொன்னத கேட்டு வீட்டோடு கெடக்கலேனா  நான் என்ன மனுசன்?

"கொஞ்சம் பொறு புள்ள ! தெரு முக்கு வரை போயிட்டு வந்திறேன் " என்று அவளின் கன்னத்தில செல்லமா தட்டிட்டு புறப்பட்டுப் போனேன்.

வீடு திரும்பிய போது கை நெறைய மல்லிப்பூ.!

இன்னிக்கி எங்க வீட்ல மாட்னி ஷோ!

No comments:

Post a Comment